கிரிக்கெட் (Cricket)

டி20 கிரிக்கெட்டில் மட்டுமல்ல ஒருநாள் போட்டியிலும் இதே ஸ்டைலில் தான்- கவுதம் கம்பீர்

Published On 2025-02-03 15:45 IST   |   Update On 2025-02-03 15:45:00 IST
  • நாங்கள் பேட்டிங் செய்யும்போது 250 முதல் 260 ரன்கள் எடுக்க வேண்டும் என்று நினைத்தோம்.
  • நாங்கள் பயமின்றி கிரிக்கெட் விளையாடப் போகின்றோம்.

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி அதிரடியாக விளையாடி 247 ரன்கள் குவித்தது. இதனையடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 97 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் 4-1 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியது.

இந்நிலையில் இனி இந்தியா இவ்வாறு தான் டி20 கிரிக்கெட்டில் விளையாட போவதாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

இங்கிலாந்து அணி திறமை வாய்ந்த வீரர்களைக் கொண்ட ஒரு அணியாகும். அவர்களுக்கு எதிராக ஒரு போட்டியில் தோற்பது எல்லாம் நாங்கள் பயப்படவில்லை. நாங்கள் பேட்டிங் செய்யும்போது 250 முதல் 260 ரன்கள் எடுக்க வேண்டும் என்று நினைத்தோம். இப்படி நினைத்து அதிரடியாக விளையாடும்போது சில போட்டிகளில் 120 ரன்கள் ஆட்டம் இழக்க கூடும். அதைப்பற்றி கவலை கொள்ளக்கூடாது. நாங்கள் சரியான திசையில் சென்று கொண்டிருக்கின்றோம். இதே ஸ்டைலில் தான் எதிர்காலத்திலும் விளையாட போகிறோம்.

நாங்கள் பயமின்றி கிரிக்கெட் விளையாடப் போகின்றோம். அபிஷேக் ஷர்மா போன்ற இளம் வீரர்களுக்கு நாங்கள் அதிகம் ஆதரவு அளிக்கப் போகின்றோம். சில சமயம் இப்படி அதிரடி காட்டும் வீரர்களிடம் நாம் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும். ஏனென்றால் பயமின்றி கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற சித்தாந்தத்தில் இந்த இளம் வீரர்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.

மணிக்கு 140 முதல் 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசும் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டு இப்படி ஒரு சதத்தை எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் அடித்து நான் பார்த்ததில்லை. ஐபிஎல் தொடரில் இந்த வீரர்களை நமது இளம் வீரர்கள் அதிக முறை எதிர்கொண்டு இருக்கிறார்கள். இதுதான் இனி இந்திய கிரிக்கெட். முடிவுகள் நமக்கு சாதகமாக இருக்கும் போது அனைத்தும் நல்ல விஷயமாக இருக்கும்.

140 கோடி இந்திய மக்களுக்காக நாங்கள் விளையாடுகிறோம் என்பதை எங்களுடைய வீரர்கள் நன்றாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். வருண் சக்கரவர்த்தியும், ரவி பிஷ்னோயும் எங்கள் பந்துவீச்சின் மிகவும் முக்கியமானவர்கள். இருவரும் கூட்டணி அமைத்துக் கொண்டு பந்து வீசுவது எங்களுக்கு மிகவும் முக்கியமாகும். பேட்டிங்கில் நாங்கள் முடிந்த அளவுக்கு அதிரடியாக விளையாட போகிறோம்.

இன்றைய ஆட்டத்தில் துபே நான்கு ஓவர்களை வீசினார். எங்கள் அணியின் பேட்டிங் வரிசையில் தொடக்க வீரர்களை தவிர எஞ்சிய அனைத்து வீரர்களின் பேட்டிங் வரிசையும் மாறிக்கொண்டே இருக்கும். இனி டி20 கிரிக்கெட் இப்படி தான் விளையாடப்படும். ஒருநாள் கிரிக்கெட்டிலும் இதேபோன்று ஆக்ரோஷமான ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்த முயற்சி செய்வோம். ரசிகர்களுக்கு பொழுதுபோக்கை நாங்கள் நிச்சயம் கொடுப்போம்.

என்று கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News