ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: முதல்நாள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த இலங்கை
- ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.
- இலங்கை அணியில் தினேஷ் சண்டிமால் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இலங்கை -ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று கலே மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்செய்வதாக அறிவித்தது.
அதன்படி இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக பதும் நிஷங்கா மற்றும் திமுத் கருணரத்னே களமிறங்கினர். இதில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பதும் நிஷங்கா 11 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் கருணரத்னேவுடன் ஜோடி சேர்ந்த தினேஷ் சண்டிமால் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட திமுத் கருணரத்னே 36 ரன்களில் அவுட் ஆனார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தினேஷ் சண்டிமால் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
ஆனால் மறுமுனையில் களமிறங்கிய ஏஞ்சலோ மேத்யூஸ் 1, கமிந்து மெண்டிஸ் 13, கேப்டன் தனஞ்செயா டி சில்வா 0 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தினேஷ் சண்டிமால் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 74 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த குசல் மெண்டிஸ் - ரமேஷ் மெண்டிஸ் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ரமேஷ் மெண்டிஸ் 28 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய பிரபாத் ஜெயசூர்யா மற்றும் நிஷான் பெய்ரிஸ் ஆகியோர் ரன்கள் ஏதுமின்றியும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தானர்.
இதனால் இலங்கை அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் குசல் மெண்டிஸ் 59 ரன்களுடனும், லஹிரு குமாரா ரன்கள் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.