தென் ஆப்பிரிக்கா டி20 லீக்: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்
- முதலில் ஆடிய பார்ல் ராயல்ஸ் அணி 175 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 177 ரன்கள் எடுத்து வென்றது.
கேப் டவுன்:
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 லீக் தொடரான ஐ.பி.எல். போன்று தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் (எஸ்.ஏ.20) கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இதன் 3-வது சீசன் தற்போது நடந்து வருகிறது.
மொத்தம் 6 அணிகள் பங்கேற்று விளையாடின. இதன் லீக் சுற்று ஆட்டங்கள் கடந்த 2-ம் தேதி நிறைவடைந்தன. லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த பார்ல் ராயல்ஸ், எம்.ஐ.கேப்டவுன், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றன.
தகுதிச்சுற்று 1 ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் அணியை எம்.ஐ.கேப்டவுன் அணி வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நேற்று நடந்த வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியை சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி வீழ்த்தியது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற தகுதிச்சுற்று 2 ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் மோதின. டாஸ் வென்ற பார்ல் ராயல்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய பார்ல் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 175 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ரூபின் ஹெர்மான் 53 பந்தில் 81 ரன்கள் குவித்தார். பிரேடோரியஸ் 59 ரன்கள் சேர்த்தார்.
தொடர்ந்து ஆடிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 19.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 177 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் டோனி டி ஜோர்சி 49 பந்தில் 78 ரன்கள் குவித்தார். ஜோர்டான் ஹெர்மான் 69 ரன்கள் சேர்த்தார். இதன்மூலம் சன்ரைசர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் எஸ்.ஏ.20 தொடரின் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது. ஆட்ட நாயகன் விருது டோனி டி ஜோர்சிக்கு வழங்கப்பட்டது.