செய்திகள்

நந்தம்பாக்கம் அடையாறு ஆற்றுப்பால கம்பியில் மாநகர பஸ் மோதியது - 50 பயணிகள் தப்பினர்

Published On 2016-08-17 17:58 IST   |   Update On 2016-08-17 17:58:00 IST
பூந்தமல்லியில் இருந்து மந்தைவெளி நோக்கி சென்ற மாநகர பஸ் அடையாறு ஆற்றுப்பால கம்பியில் மோதி நின்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ஆலந்தூர்:

பூந்தமல்லியில் இருந்து மந்தைவெளி நோக்கி இன்று காலை மாநகர பஸ் (எண்.54 எப்) சென்று கொண்டு இருந்தது. 50-க்கும் மேற்பட்ட பயணிகள் அதில் இருந்தனர்.

நந்தம்பாக்கம் அடையாறு ஆற்றுப்பாலத்தில் சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பஸ், முன்னால் சென்ற மாற்றுத் திறனாளியின் மூன்று சக்கர சைக்கிள் மற்றும் வாலிபர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது அடுத்தடுத்து மோதி பக்கவாட்டில் இருந்த இரும்பு தடுப்பில் பலத்த சத்தத்துடன் இடித்தது.

மேலும் சிறிது தூரம் சென்ற பஸ் அங்கிருந்த கம்பத்தில் மோதி நின்றது. அதிர்ச்சி அடைந்த பயணிகள் அலறியடித்து கீழே இறங்கினர். சிலர் ஜன்னல் வழியாக கீழே குதித்தனர்.

விபத்து நடந்ததும் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பஸ் மோதியதில் பலத்த காயம் அடைந்த மாற்றுத்திறனாளி ராஜேந்திரன் மற்றும் வாலிபருக்கு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த விபத்தால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பரங்கிமலை போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து கிரேன் மூலம் பஸ்சை அப்புறப்படுத்தினர். சுமார் 3 மணி நேரத்திற்கு பின்னர் போக்குவரத்து சீரானது.

பாலத்தின் தடுப்பு கம்பியில் பஸ் மோதி நின்றதால் அதில் இருந்த 50-க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Similar News