கொலை செய்யப்பட்ட அணிகேட், கைதான உபேந்திரா
வடமாநில தொழிலாளி குத்திக்கொலை- நண்பர் வெறிச்செயல்
- பலத்த காயமடைந்த அணிகேட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
- உபேந்திராவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடையநல்லூர்:
டெல்லி அசோக் பிஹார் பேஸ் ஜெய்லர் லாலாபாக் பகுதியை சேர்ந்தவர் சங்கர் சரோஜ். இவரது மகன் அணிகேட் (வயது 25).
இவரது நண்பர் டெல்லி சாலிமார்பேக் லோகியா கேம் பகுதியை சேர்ந்த உபேந்திரா (24). இவர்கள் இருவரும் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டியை அடுத்த புன்னையாபுரம் முந்தல் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ரைஸ் மில்லில் வேலை பார்த்து வந்தனர்.
இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையில் வேலை செய்வதில் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு வழக்கம் போல் வேலையை முடித்துவிட்டு ரைஸ் மில் அருகே தங்கும் விடுதிக்கு சென்றுள்ளனர்.
அவர்கள் இரவு சமையல் செய்த போது இருவருக்கும் இடையே மீண்டும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த உபேந்திரா, சமையலுக்கு காய்கறிகளை வெட்டிக் கொண்டிருந்த கத்தியால் அணிகேட்டை குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அணிகேட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்ததும் சொக்கம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் உடையார்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அணிகேட்டின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் உபேந்திராவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.