தமிழ்நாடு

'மாநில சுயாட்சி' என்ற வசனத்தை மாற்றுங்கள் - தி.மு.க.-வை சாடிய சீமான்

Published On 2024-09-18 07:59 GMT   |   Update On 2024-09-18 07:59 GMT
  • ஒற்றைக் கட்சி ஆட்சி முறை என்பதுதான் கொடிய சனாதனம்.
  • ஆட்சியில் பங்கு தர முடியாது என்று சொல்லும் கட்சிகள் தனித்து நின்று தேர்தலில் சந்தித்து வெற்றி பெற வேண்டும்.

புதுக்கோட்டை:

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. 100 ஆண்டு ஆட்சியில் இருக்கும் என்கிறார்கள். தமிழ்நாடு இருக்குமா? மாநில சுய ஆட்சி என்று வெற்று வார்த்தையே தவிர வேறு எதையும் வைக்கவில்லை, வசனத்தையும் திரைக்கதையையும் மாற்ற வேண்டும்.

விஜய் அம்பேத்கருக்கும், பெரியாருக்கும் மாலை அணிவித்ததை வரவேற்கிறேன். அதேபோல் முத்துராமலிங்க தேவர், இரட்டை மலை சீனிவாசன், வேலுநாச்சியார், திரு.வி.க. உள்ளிட்டோருக்கும் தொடர்ந்து மாலை அணிவிக்க வேண்டும்.

பெரியாரை தமிழ் தேசியத்தின் எதிரியாக நான் பார்க்கவில்லை. ஆனால் பெரியார் மட்டும் தான் எல்லாம் செய்தார் என்பதை ஏற்க முடியாது. பெரியாரும் போராடினர் என்பது தான் என் கருத்து. ஆனால் இங்கு பெரியார் தான் எல்லாம் என்று சொல்வதை நான் ஏற்கவில்லை.

ஒற்றைக் கட்சி ஆட்சி முறை என்பதுதான் கொடிய சனாதனம். கட்சியிலிருந்து விலகுபவர்கள் அவர்களாக போகிறார்கள். அவர்களை நாங்கள் நீக்கல் கடிதம் கொடுத்து நீக்கவில்லை. அவர்கள் குற்றச்சாட்டை மட்டும் தான் வைக்கிறார்கள். பட்டுப்போன சறுகு கீழ விழுந்தால் சத்தம் கேட்க தான் செய்யும்.

தேசிய இனத்திற்கு தலைமை ஏற்று இருக்க வேண்டும் என்றால் திரைத்துறை மட்டும் பற்றாது, துணிவு வேண்டும். நமது வரலாறு, மொழி உள்ளிட்டவற்றை கற்றுக்கொண்டு விஜய் வரவேண்டும். வருவார் என்ற நம்பிக்கை உள்ளது. விஜய் செய்தியாளர்களை சந்திக்கும்போது தனித்து நிற்பாரா அல்லது சீமானோடு கூட்டணி வைப்பாரா என்று கேட்க வேண்டும்.

நிதிஷ் குமாரும் சந்திரபாபு நாயுடுவும், பா.ஜ.க. ஆதரவை விட்டு விலகினால் தி.மு.க. 22 பாராளுமன்ற உறுப்பினர்களோடு நிச்சயம் பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளிக்கும்.

ஆட்சியில் பங்கு தர முடியாது என்று சொல்லும் கட்சிகள் தனித்து நின்று தேர்தலில் சந்தித்து வெற்றி பெற வேண்டும். 2026 தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டி. விஜய் அரசியலுக்கு வந்ததால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. எங்களால் தான் மற்றவர்களுக்கு பாதிப்பு.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நம் தமிழர் கட்சியுடன் விஜய் கூட்டணி வைப்பாரா? என்ற கேள்விக்கு சீமான் பதில் அளிக்கையில், என்னுடன் கூட்டணிக்கு யாரும் வருவார், போவார் என்று நான் எதிர்பாரக்கவில்லை. விஜய் வந்த பிறகு தான் அவர் கொள்கை என்ன சொல்கிறார் என்று பார்க்க வேண்டும். நான் தமிழ் தேசிய தத்துவத்தில் உள்ளேன் என்றார்.

Tags:    

Similar News