தமிழ்நாடு

ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு மினி ஸ்டேடியம் அமைக்கப்படும்- அமைச்சர் உதயநிதி உறுதி

Published On 2022-12-15 14:10 IST   |   Update On 2022-12-15 14:10:00 IST
  • நான் விளையாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றதும் முதல் நிகழ்ச்சியாக உங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன். உங்களை பார்ப்பதில் மகிழ்ச்சி. உங்கள் அத்தனை பேருக்கும் வாழ்த்துக்கள்.
  • ஒரு மாணவன் கேள்வி கேட்கையில், ‘எங்கள் பள்ளியில் சரியான கிரவுண்ட் இல்லை. அதற்கு நீங்கள் கிரவுண்ட் ரெடி செய்து தர வேண்டும்’ என்றான்.

சென்னை:

தேசிய அளவிலான ஏகலைவா உண்டு உறைவிட பள்ளிகளுக்கிடையே மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டி ஆந்திர மாநிலம் குண்டூரில் டிசம்பர் 17 முதல் 22 வரை நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் தமிழ்நாட்டில் உள்ள 9 மாவட்டங்களில் உள்ள ஏகலைவா உறைவிட பள்ளி மாணவிகள் 177 பேர் பங்கேற்க உள்ளனர்.

இவர்களுக்கு வண்டலூரில் உள்ள விளையாட்டு பல்கலைக்கழகத்தில் கடந்த 1 மாதம் பயிற்சி கொடுக்கப்பட்டது.

இந்த மாணவ-மாணவிகளை வழியனுப்பும் நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இளைஞர் நலன் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அங்கு நேரில் சென்று மாணவ-மாணவிகளை வழியனுப்பி வைத்தார்.

முன்னதாக அங்கு திரண்டிருந்த மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:

நான் விளையாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றதும் முதல் நிகழ்ச்சியாக உங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன். உங்களை பார்ப்பதில் மகிழ்ச்சி. உங்கள் அத்தனை பேருக்கும் வாழ்த்துக்கள்.

உங்களுக்கு ஏற்கனவே விளையாட்டு பயிற்சி கொடுத்திருப்பார்கள். நீங்களும் நன்றாக பயிற்சி எடுத்திருப்பீர்கள். நீங்கள் எந்தெந்த விளையாட்டில் கலந்து கொண்டாலும் அதில் வெற்றி பெறுவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

நீங்கள் என்னிடம் கேள்வி கேட்க விரும்பினால் கேட்கலாம். பேசலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அங்கிருந்த நிருபர்கள் கேள்வி கேட்க கையை உயர்த்தினார்கள். உடனே அமைச்சர் உதயநிதி நான் உங்களை கேட்கவில்லை. மாணவ-மாணவிகளை கேட்டேன் என்றார். அப்போது அங்கிருந்த அனைவரும் சிரித்தனர்.

அப்போது ஒரு மாணவன் கேள்வி கேட்கையில், 'எங்கள் பள்ளியில் சரியான கிரவுண்ட் (மைதானம்) இல்லை. அதற்கு நீங்கள் கிரவுண்ட் ரெடி செய்து தர வேண்டும்' என்றான்.

இதற்கு அமைச்சர் உதயநிதி பதில் அளிக்கையில், 'கண்டிப்பாக அதற்காக முயற்சி எடுப்பேன்' என்றார்.

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் இதை சொல்லி உள்ளோம். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று கூறி இருந்தோம்.

எனது முதல் பேட்டியிலும் இதை கூறி உள்ளேன். எனவே கண்டிப்பாக ஸ்டேடியம் அமைத்து தர போராடுவேன் என்றார்.

இன்னொரு மாணவி கேட்கையில், 'விளையாட்டு நேரத்தில் வேறு பாடம் எடுக்கிறார்கள்' என்றார். இதற்கு அமைச்சர் உதயநிதி பதில் அளிக்கையில் கண்டிப்பாக முதலமைச்சரிடம் சொல்லி, அதிகாரிகளுடன் கலந்து பேசி தீர்க்கப்படும் என்றார்.

நீங்கள் இவ்வளவு ஆர்வத்துடன் கேள்வி கேட்பது எனக்கு பெருமையாக மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

Tags:    

Similar News