டி.ஐ.ஜி. தற்கொலை குறித்து அவதூறு கருத்து: 2 யூடியூபர்களிடம் போலீஸ் விசாரணை
- டி.ஐ.ஜி. தற்கொலை செய்து கொண்ட சம்பவம் போலீஸ் துறையில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- யூடியூப் சேனலில் டிஐஜி விஜயகுமார் குறித்து அவதூறான கருத்துக்களை பதிவிட்ட 2 யூடியூபர்கள் இன்று விசாரணைக்கு ஆஜராகினர்.
கோவை:
கோவை சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வந்தவர் விஜயகுமார்.
இவர் கடந்த 7-ந் தேதி ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
டி.ஐ.ஜி. தற்கொலை செய்து கொண்ட சம்பவம் போலீஸ் துறையில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் டி.ஐ.ஜி விஜயகுமார் தற்கொலை விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்கள் பதிவு செய்த 8 பேருக்கு மாநகர போலீசார் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அளித்திருந்தனர்.
இதில் யூடியூப் சேனலில் டிஐஜி விஜயகுமார் குறித்து அவதூறான கருத்துக்களை பதிவிட்ட 2 யூடியூபர்கள் இன்று விசாரணைக்கு ஆஜராகினர். அவர்கள் 2 பேரிடமும் ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.