ராசிபுரம் அருகே உயிரிழந்த கோவில் காளைக்கு ஊரே கூடி இறுதி மரியாதை
- ராசிபுரம் அருகே உள்ள முத்துக்காளிப்பட்டி கிராமம் புது தெரு பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
- கடந்த சில நாட்களாக கோவில் காளை வயது முதிர்வு காரணமாக நோய் வாய்ப்பட்டு இருந்தது.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள முத்துக்காளிப்பட்டி கிராமம் புது தெரு பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு நரசிம்ம பெருமாள் சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான காளை மாடு ஒன்று ஊர் பொதுமக்கள் சார்பில் கடந்த 25 ஆண்டுகளாக வளர்க்கப்பட்டு வந்தது.
இந்த கோவில் காளையை அதே பகுதியைச் சேர்ந்த கருப்பன் என்பவர் பராமரித்து வந்தார். கோவில் காளையை அப்பகுதி மக்கள் தங்கள் வீட்டுப் பிள்ளையாக வளர்த்து பராமரித்து வந்தனர். திருவிழாக் காலங்களில் இந்த காளைக்கு முதல் மரியாதை அளிக்கப்படுவது வழக்கம்.
கடந்த சில நாட்களாக கோவில் காளை வயது முதிர்வு காரணமாக நோய் வாய்ப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று காளை உயிரிழந்தது. இதையடுத்து கிராம மக்கள் உயிரிழந்த கோவில் காளைக்கு மாலைகள், வேட்டி, துண்டுகள் அணிவித்தும், சந்தனம், ஜவ்வாது, பூசி கண்ணீர் அஞ்சலியை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க, வாண வேடிக்கையுடன் இறந்த காளையை, கோவில்அருகே அடக்கம் செய்தனர்.பின்னர், தங்கள் குடும்பத்தில்ஒருவர் இறந்தால் என்னென்ன சடங்குகள் செய்வார்களோ அதனை கிராம மக்கள் செய்தனர்.
கோவில் காளை மாடு இறந்த சம்பவம் அப்பகுதி கிராம மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.