தடை விலகியதால் தமிழகம் முழுவதும் குட்கா விற்பனை அமோகம்
- தமிழகம் முழுவதும் குட்கா பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது
- ஐகோர்ட்டு உத்தரவுக்கு பிறகு குட்கா விற்பவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை பாயாமலேயே உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் குட்கா, பான் மசாலா விற்பனைக்கு கடந்த 10 ஆண்டுகளாக தடை இருந்து வந்தது.
இது தொடர்பாக உணவு பாதுகாப்பு ஆணையர் உத்தரவின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரம் இல்லை என்று கூறியுள்ள ஐகோர்ட்டு, அது தொடர்பான வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்களை பயந்து பயந்து பதுக்கி விற்பனை செய்து வந்த நபர்கள் தற்போது நடவடிக்கை எடுக்க முடியாது என்பதால் பயமின்றி விற்பனை செய்ய தொடங்கியுள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் குட்கா பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கேட்ட போது வெளியான தகவல்கள் வருமாறு:-
குட்கா விவகாரத்தில் ஐகோர்ட்டு உத்தரவு காரணமாக தற்போது நடவடிக்கை எடுக்க முடியாத சூழலே உள்ளது. உணவு பாதுகாப்பு அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க முடியாத நிலையே உள்ளது.
இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் இருந்து என்ன செய்ய வேண்டும்? என்பது பற்றி உரிய தகவல்கள் எதுவும் வரவில்லை. ஐகோர்ட்டு உத்தரவுக்கு பிறகு குட்கா விற்பவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை பாயாமலேயே உள்ளது.
இதில் அடுத்த கட்டமாக மேல் முறையீடு செய்து அதில் எது மாதிரியான தீர்வு வெளியாகிறது என்பதை பொறுத்தே போலீஸ் நடவடிக்கை மீண்டும் தீவிரமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.