புதுவையில் தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியர்கள் வேலைநிறுத்தம்
- 40 பேர் ஓய்வு பெற்ற நிலையில் தற்போது 110 பேராசிரியர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.
- கடந்த 6½ ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை.
புதுச்சேரி:
புதுவையில் 1986-ல் அரசு என்ஜினீயரிங் கல்லூரி பிள்ளைச்சாவடியில் தொடங்கப்பட்டது.
150 பேராசிரியர்களுடன் செயல்பட்டு வந்த இந்த கல்லூரியில் 2007-ம் ஆண்டுக்குப் பிறகு பேராசிரியர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. 40 பேர் ஓய்வு பெற்ற நிலையில் தற்போது 110 பேராசிரியர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கும் கடந்த 6½ ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை.
பதவி உயர்வு வழங்கப்படாததை தேசிய அங்கீகார குழு ஏற்கனவே சுட்டிகாட்டியும் மாநில அரசு பேராசிரியர்களுக்கான பதவி உயர்வு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாக தேசிய அளவில் 36 -வது இடத்தில் இருந்த அரசு என்ஜினீயரிங் கல்லூரி தற்போது 150 -வது இடத்திற்கு இறங்கி உள்ளது.
இந்த நிலையில் 2021-ம் ஆண்டு என்ஜினீயரிங் கல்லூரி தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது. ஆனால் பேராசிரியர்களுக்கான பதவி உயர்வு வழங்கப்பட வில்லை. இதனை கண்டிக்கும் விதமாக பேராசிரியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இதனால் 9 துறைகளில் பயிலும் பேராசிரியர்கள் பாடம் எடுக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். இதன்காரணமாக 3 ஆயிரத்து 500 மாணவ, மாணவிகளின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை வகுப்பிற்கு செல்ல மாட்டோம் என பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.