தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்
- தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்துகிறீர்கள். பிரதமர் மோடி இதனை ஏற்கிறாரா?
- நாங்கள் மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்துச் செயல்படுகிறோம்!
சென்னை:
மக்களவையில் "தமிழ்நாடு எம்.பி.க்கள் நாகரிகமற்றவர்கள்" என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்த நிலையில், பேசியதை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் திரும்ப பெற்றார்.
இந்த நிலையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசும் ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும்!
தமிழ்நாட்டின் நிதியைத் தராமல் ஏமாற்றும் நீங்கள் தமிழ்நாட்டு எம்.பி.க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்பதா?
தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்துகிறீர்கள். பிரதமர் மோடி இதனை ஏற்கிறாரா?
NEP, மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு அனுப்பிய PM SHRI MoU முற்றிலுமாக நிராகரித்து விட்டது என எனக்குக் கடிதம் எழுதியது நீங்கள் தானே?
பிரதான் அவர்களே, நாங்கள் மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்துச் செயல்படுகிறோம்! உங்களைப் போல நாக்பூரின் சொற்களுக்குக் கட்டுப்பட்டு அல்ல!!
நாங்கள் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவும் இல்லை, அப்படி முன்வராத என்னை யாரும் வற்புறுத்தவும் முடியாது.
தமிழ்நாட்டு மாணவர்களுக்குரிய நிதியை, எங்களிடம் இருந்து வசூல் செய்த வரியை விடுவிக்க முடியுமா முடியாதா என்பதற்கு மட்டும் பதில் கூறுங்கள்! என்று கூறியுள்ளார்.