மீனவர் விவகாரம்: அண்ணாமலை பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் - நவாஸ்கனி எம்.பி.
- மீனவர்களை கடத்தல் காரர்களாக சித்தரிக்க முயலும் அண்ணாமலையின் பேச்சு கண்டனத்துக்குரியது.
- இலங்கை கடற்படையை கூட கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு நமது நாடு பலவீனமாக இருக்கிறதா?
ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியதாவது:
மீனவர்களை கடத்தல் காரர்களாக சித்தரிக்க முயலும் பாஜக மாநில தலைவர் திரு அண்ணாமலையின் பேச்சு கடும் கண்டனத்துக்குரியது.
பாஜக தேர்தலுக்கு முன்பு கடல் தாமரை மாநாடு நடத்துவார்கள், மீனவர்களை சந்திப்பார்கள் தேர்தல் முடிந்த பின்பு ஒட்டுமொத்தமாக மீனவர்களை கைவிட்டு விடுவார்கள்.இதுதான் அவர்களின் வழக்கம்.
தற்போது அனைத்திற்கும் மேலாக பாஜகவில் மாநிலத் தலைவர் திரு அண்ணாமலை மீனவர்களை கடத்தல் காரர்களாக சித்தரிக்க முயல்கிறார்.
பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே அதனை பகிரங்கமாக கூறுகிறார். அவரது எண்ணம் ஆபத்தானது,
ஒன்றிய பாஜக அரசு நினைத்தால் மீனவர்களின் பிரச்சனைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைத்திட முடியும், ஆனால் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காத பாஜக, பிரச்சனையை திசை மாற்றும் வண்ணம், பாதிக்கப்பட்ட மீனவர்களையே குற்றம் சாட்டும் வண்ணம், மீனவர்களையே அவமானப்படுத்துவது கடும் கண்டனத்துக்குரியது.
நம்மை விட சிறிய நாடான இலங்கை கடற்படையை கூட கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பலவீனமாக நம்முடைய நாட்டை பாஜக மாற்றி இருக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது.
தினம் தினம் செத்துப் பிழைக்கும் எங்களின் மீனவர்களின் இன்னல்களை தீர்க்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத பாஜக, தொடர்ந்து ஐந்தாண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் நாங்கள் எழுப்பிய குரலுக்கு செவிமடுக்காத பாஜக, தற்போது போலி நாடகம் போடுகிறது.
பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை ஒட்டுமொத்த மீனவர்களையும் இழிவுபடுத்தும் வண்ணம் அவர்களை கடத்தல் காரர்கள் என்ற போர்வையில் பேசுவது கடும் கண்டனத்துக்குரியது, திரு அண்ணாமலை இதற்கு உடனடியாக பகிரங்க மன்னிப்பு கேட்டிட வேண்டும்.