கல்வித்துறைக்கு வழங்கக்கூடிய ரூ. 2,190 கோடியை உ.பி., குஜராத்துக்கு பிரித்து கொடுத்த மத்திய அரசு: உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு
- இந்தியை திணித்து தமிழ்நாட்டு வரலாற்றை, பண்பாட்டை, தனித்துவத்தை அழிக்கலாம் என நினைக்கிறார்கள்.
- தமிழக மக்களை இரண்டாம் தர மக்களாக மாற்ற பாசிச பாஜக முயற்சி செய்கிறது.
திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் மும்மொழி கொள்கையை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன கூட்டத்தில் தமிழக துணை முதல்வர் உதயநிதி உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இன்று தமிழ்நாடே கொந்தளித்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு மக்கள் அன்பிற்கு கட்டுப்பட்டவர்கள். எந்த காலத்திலும் அடக்குமுறைக்கு பயப்படமாட்டோம். அஞ்சமாட்டோம். அடிபணியமாட்டோம். தமிழ்நாட்டுக்கு எதிரான மத்திய அரசின் பாசிச போக்கை கண்டித்து ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஒரே மேடையில் கூடியிருக்கின்றோம்.
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கான எந்த திட்டமுல் இல்லை. தமிழ்நாட்டின் பெயர் கூட பட்ஜெட் உரையில் இல்லை. பெஞ்சல் புயல் பாதிப்பிற்காக மத்திய அரசு கஜானாவில் இருந்த ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை. தற்போது இந்தியை ஏற்காததால் கல்வித்துறைக்கு வழங்கக்கூடிய 2,190 கோடி ரூபாயை உத்தர பிரதேசம், குஜராத்தில் மாநிலத்திற்கு பிரித்து கொடுத்துள்ளது.
மும்மொழி கொள்கையை அமல்படுத்தினால்தான் நிதியை தர முடியும் என மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் மிரட்டியிருக்கிறார்.
நாங்கள் ஒன்றும் உங்கள் அப்பன் வீட்டு காசை கேட்கவில்லை. நாங்கள் ஒன்னும் உங்களிடம் பிச்சையோ கடனோ கேட்கவில்லை. தமிழக மாணவர்களின் பெற்றோர்கள் கட்டிய வரிப்பணித்தின் உரிமையைத்தான் கேட்கிறோம். எங்களுக்கு தர வேண்டிய நிதி உரிமையை தாருங்கள் என உரிமையோடு கேட்கிறோம்.
தமிழ்நாடு அரசையும் சரி, தமிழ்நாட்டு மக்களையம் சரி ஒருபோதும் மிரட்டி பணிய வைக்க முடியாது. இது திராவிட மண், பெரியார் மண். சுயமரியாதை மண். இதை ஒன்றிய அரசுக்கு அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
இந்தியை திணித்து தமிழ்நாட்டு வரலாற்றை, பண்பாட்டை, தனித்துவத்தை அழிக்கலாம் என நினைக்கிறார்கள். தமிழக மக்களை இரண்டாம் தர மக்களாக மாற்ற பாசிச பாஜக முயற்சி செய்கிறது.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.