இந்தி கட்டாயம் எனில் அதை ஒழிப்பது கட்டாயம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- துன்பம் கொடுக்கவந்த இந்திமொழியே - உன் சூழ்ச்சி பலிப்பதில்லை எம்மிடத்திலே!
சென்னை:
தமிழகத்தில் மும்மொழிக்கொள்கையை திணிக்க முயலும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அதன் ஒருபகுதியாக அயப்பாக்கம் ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள மகளிர் குழுவினர் ஏற்பாட்டில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் கோலமிட்டு மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதில், 'இந்தியை திணிக்காதே! தமிழர்களை வஞ்சிக்காதே! மீண்டும் மொழிப்போரை உருவாக்காதே!' உள்ளிட்ட பல்வேறு வாசகங்களை எழுதி மக்கள் கோலமிட்டனர். இதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், மும்மொழிக்கொள்கையை திணிக்க முயலும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகள் முன் கோலமிட்ட வீடியோவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
இன்பத்திராவிடத்தில் இந்திமொழியே - நீ
இட்டஅடி வெட்டப்படும் இந்திமொழியே
துன்பம் கொடுக்கவந்த இந்திமொழியே - உன்
சூழ்ச்சி பலிப்பதில்லை எம்மிடத்திலே!
அன்பின் தமிழிளைஞர் தாய்அளித்திடும் - நல்
அமுதத் தமிழ்மொழிக்கு வாய்திறக்கையில்
உன்னைப் புகட்டுவது கட்டாயமெனில் - உனை
ஒழிப்பதும் எங்களுக்குக் கட்டாயமன்றோ?
- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.