தமிழ்நாடு
சட்டசபையில் ரூ.19,287.44 கோடிக்கு இறுதி துணை மதிப்பீடு தாக்கல்
- கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்காக ரூ.1,400 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
- மின் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகைக்காக ரூ.1,036 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சட்டசபையில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இறுதி துணை மதிப்பீட்டை இன்று தாக்கல் செய்தார். அதில் மொத்தம் ரூ.19,287.44 கோடிக்கு நிதி ஒதுக்குவதற்கு வகை செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிதிநிலை தன்மையை உயர்த்துவதற்கும், உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் பங்கு மூலதன உதவியாக ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்காக ரூ.1,400 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மின் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகைக்காக ரூ.1,036 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பஸ்கள் வாங்குவதற்காக போக்குவரத்துக் கழகங்களுக்கு கூடுதலாக ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பென்ஜல் புயல் பாதிப்பு துயர் தணிப்பு பணிகளுக்காக ரூ.901.84 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.