தமிழ்நாடு (Tamil Nadu)

ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்வதை காணலாம்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 35 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு- குளிக்க, பரிசல் இயக்க தடைநீடிப்பு

Published On 2024-10-25 05:49 GMT   |   Update On 2024-10-25 05:49 GMT
  • நீர்வரத்தால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
  • பிலிக்குண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

ஒகேனக்கல்:

கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மீண்டும் அதிகரித்து வினாடிக்கு 35 ஆயிரம் கன அடியாக நீடித்து வருகிறது. இதன் காரணமாக இன்று 13-வது நாளாக குளிக்க, பரிசல் இயக்க தடை நீடிக்கப்பட்டது.

கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் குறைக்கப்பட்டதால் தமிழக காவிரி கரையோரப் பகுதிகளில் ஆங்காங்கே பெய்யக்கூடிய மழையைப் பொறுத்து காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நீர்வரத்து குறைந்து வந்தது.

இந்த நிலையில் தற்போது கர்நாடகா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் ஆங்காங்கே பலத்த மழை பெய்து வருவதால், அந்த மாநிலத்தில் உள்ள கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டன.

இதனால் தமிழக-கர்நாடகா எல்லையில் உள்ள பிலிக்குண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு நீர்வரத்து வர தொடங்கியதால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 25 ஆயிரம் கனஅடிக்கு மேல் அதிகரித்தது.

கர்நாடகா மாநில அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீராலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையாலும், ஒகேனக்கல்லில் நேற்று முன்தினம் நீர்வரத்து 31 ஆயிரம் கனஅடியாக வந்தது.

இந்தநிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை அளவு குறைந்ததால் நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 28 ஆயிரம் கனஅடியாக சரிந்தது.

இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்ததால், நேற்று மாலை முதல் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து 31 ஆயிரம் கனஅடியாக வந்தது.

இதனைத்தொடர்ந்து இன்று காலை நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 35 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. இந்த நீர்வரத்தால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

ஒகேனக்கல்லில் அதிகளவு நீர்வரத்து வருவதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவி மற்றும் காவிரி ஆற்றங்கரையோர ப்பகுதிகளில் குளிப்பதற்கும், பரிசல் சவாரி மேற்கொள்வதற்கும் தொடர்ந்து 13-வது நாளாக தடை நீடித்து வருகிறது.

மேலும், நீர்வரத்து அதிகரிப்பால், தடையை மீறி காவிரி ஆற்றங்கரையோரம் பகுதிகளிலும் பொதுமக்கள் குளிக்க கூடாது என்று போலீசார் அறிவித்தப்படி கண்காணித்து வருகின்றனர்.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேலும் காவிரி ஆற்றில நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், பிலிக்குண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News