இந்தி பேசாத மாநிலங்கள் முழுவதையும் மிரட்டுகின்ற வகையில் மத்திய மந்திரி பேசியிருக்கிறார்- கே.பி.முனுசாமி
- கார்ட்டூன் வெளியிட்டதற்காக இணையதளத்தை முடக்குகிறார்கள் என்றால் அது அவர்களது சர்வாதிகாரத்தை வெளிகாட்டுகிறது.
- எங்கள் தலைமை ஏற்றுக்கொண்டு யார் வருகிறார்களோ அவர்களோடு நல்ல முறையில் வலுவான கூட்டணி அமையும்.
சிங்காரப்பேட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் அ.தி.மு.க. சார்பில் பூத்கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அப்போது கே.பி.முனுசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
அமெரிக்காவில் இருக்கின்ற சட்டவிரோதமாக குடியேறியதாக இந்திய மக்களை வெளியேற்றுகின்றபோது, கை, கால்கள் கட்டப்பட்டு அனுப்பப்பட்டதாக செய்தி வந்ததும் உடனடியாக இந்திய அரசு பதில் சொல்லி இருக்க வேண்டும்.
குறிப்பாக வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் சொல்லி இருக்க வேண்டும், மத்திய அரசின் வெளியுறவு துறை அமைச்சர் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். அமெரிக்க விஷயத்தில் பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். கார்ட்டூன் வெளியிட்டதற்காக இணையதளத்தை முடக்குகிறார்கள் என்றால் அது அவர்களது சர்வாதிகாரத்தை வெளிகாட்டுகிறது.
தமிழகம் தேசிய கல்வி கொள்கையை முழுமையாக ஏற்று கொண்டால்தான் தமிழகத்திற்கு முழுமையான நிதி மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் என மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியதற்கு இந்தி பேசாத மாநிலங்களை முழுவதையும் மிரட்டுகின்ற வகையில் கூறியிருக்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என கூறினார்.
அ.தி.மு.க. கொள்கை வேறு, மற்ற கட்சிகள் கொள்கை வேறு, அ.தி.மு.க. மதச்சார்பற்ற கொள்கை உடையது.
அனைத்து மதங்களையும் ஒரு முகமாக பார்க்கின்ற கட்சி, எங்கள் தலைமை ஏற்றுக்கொண்டு யார் வருகிறார்களோ அவர்களோடு நல்ல முறையில் வலுவான கூட்டணி அமையும் என்றார்.