தமிழ்நாடு

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக முதலமைச்சர் பொய் சொல்கிறார்- ராமதாஸ் குற்றச்சாட்டு

Published On 2025-02-13 13:36 IST   |   Update On 2025-02-13 13:36:00 IST
  • இனியாவது தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முன்வர வேண்டும்.
  • அரசு நிர்வாகம் திட்டமிட்டு அறுவடை எந்திர தட்டுப்பாட்டை நீக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

திண்டிவனம்:

திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

தேர்தல் வாக்குறுதிகளில் 98 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக கூறுகிறார்கள். 505 வாக்குறுதிகளில் 328 வாக்குறுதிகள் நிறைவேற்றியதாக முதலமைச்சர் பொய் சொல்கிறார். தமிழகத்தில் காலியாக உள்ள 3.5 லட்சம் வேலைவாய்ப்புகள் நிறைவேற்றப்படும். மாணவர்களின் கல்விக்கடன், நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.

50 லட்சம் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும். மாதம் ஒருமுறை மின் கணக்கீடு செய்யப்படும். சட்டப்பேரவை ஆண்டுக்கு 100 நாட்கள் நடத்தப்பட்டு அவை நேரலை செய்யப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. எனவே இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

ஆந்திராவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடித்த பின் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடை 13 சதவீதம் உயர்த்த முடிவெடுத்துள்ளது. தெலுங்கானாவில் இட ஒதுக்கீட்டு அளவை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த இடதுக்கீடு 66 சதவீதமாக உயரும். இதற்கான சட்ட முன் வரைவு வரும் மார்ச் மாதம் கொண்டுவர உள்ளதாக அம்மாநில துணை முதல்வர் தெரிவித்துள்ளார். இனியாவது தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முன்வர வேண்டும்.

புதிய கல்வி கொள்கையின் ஒரு அங்கமான பி அண்டு சி பள்ளியை திறக்க தமிழக அரசு மறுத்துவிட்டதால் ரூ.2,151 கோடி தொகையை மத்திய அரசு வழங்க மறுத்து விட்டது. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்கிட வேண்டி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும்.

காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்தில் கருத்தொற்றுமை ஏற்பட கூட்டம் நடத்தவேண்டும். கோதாவரி ஆற்றிலிருந்து 1100 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலக்கிறது. இத்திட்டம் நிறைவேறினால் தமிழகத்திற்கு 200 டி.எம்.சி.தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது. காவிரி பாசன மாவட்டங்களில் அறுவடை தீவிரமடைந்துள்ளது. அரசு நிர்வாகம் திட்டமிட்டு அறுவடை எந்திர தட்டுப்பாட்டை நீக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக உள்ள 39 ஆயிரத்து 393 களப்பணியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும். இரண்டாம் நிலை காவலர்கள் 7 ஆண்டுகளில் முதல்நிலை காவலர்களாகவும் 10 ஆண்டுகளில் தலைமை காவலராகவும், 20ஆண்டுகளில் சிறப்பு காவல் ஆய்வாளராக பதவி உயர்வு அளிக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். அடுத்த நிதிநிலை அறிக்கையில் பதவி உயர்வு குறித்து அறிவிப்பு வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News