தமிழ்நாடு

மாசி தெப்ப உற்சவ விழா 27-ந்தேதி தொடக்கம்

Published On 2025-02-24 12:26 IST   |   Update On 2025-02-24 12:26:00 IST
  • தெப்ப உற்சவ திருவிழாவுக்கான ஏற்பாடு பணிகள் கோவிலில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
  • விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.

திருவள்ளூர்:

திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. இந்த கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாத தெப்ப உற்சவம் 3 நாட்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான மாசி மாத தெப்ப உற்சவவிழா வருகிற 27-ந்தேதி அமாவாசை அன்று தொடங்கி 29-ந் தேதி வரை 3 நாட்கள் கோலாகலமாக நடைபெற உள்ளது.

தெப்ப திருவிழாவில் உற்சவர் வைத்திய வீரராகவர் சமேதராக ஸ்ரீதேவி, பூ தேவியுடன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கோவில் குளத்தில் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். தெப்ப உற்சவ திருவிழாவுக்கான ஏற்பாடு பணிகள் கோவிலில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

தெப்பக்குளத்தில் தெப்பம் கட்டும் பணியில் ஊழியர்கள் மும்மரமாக ஈடுபட்டு உள்ளனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் ஊழியர்கள் செய்து வருகிறார்கள். மாசிதெப்ப திருவிழாவுக்கு திரளான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News