உலகம்

ஹமாஸ் விடுவித்த 3 பணயக் கைதிகள் பத்திரமாக ஒப்படைப்பு: இஸ்ரேல்

Published On 2025-02-15 14:48 IST   |   Update On 2025-02-15 14:50:00 IST
  • பயணக் கைதிகளை விடுவிக்கும் வகையில் 6 வார போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
  • இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதால், பணயக் கைதிகளை விடுவிக்கமாட்டோம் என மிரட்டல் விடுத்திருந்தது.

ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 பேர் உயிரிழந்தனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணயக் கைதிகளாக கடத்தி சென்றனர்.

இதையடுத்து ஹமாஸ் மீது போர் அறிவித்த இஸ்ரேல், காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த போருக்கிடையே 2023-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இறுதியில் இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது ஹமாஸ் பிடியில் உள்ள பணயக் கைதிகளில் 100-க்கும் மேற்பட்டோர் விடுவிக்கப்பட்டனர். அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இடைக்கால போர் நிறுத்தம் அமலில் இருக்கும்போது, ஹமாஸ் அமைப்பினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் சுமார் ஒரு வருடத்திற்கு மேலாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.

டொனால்டு டிரம்ப் கடந்த மாதம் 20-ந்தேதி அதிபராக பதவி ஏற்பதற்கு முன் இஸ்ரேல்- ஹமாஸ் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதனடிப்படையில் இஸ்ரேல்- காசா போர் நிறுத்த ஒப்பந்தம் கடந்த மாதம் 19-ந்தேதி அமலுக்க வந்தது. இந்த போர் நிறுத்தம் 6 வாரங்கள் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

போர் நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் தங்கள் வசம் உள்ள பணய கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டது. பணய கைதிகளுக்கு ஈடாக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டுள்ளது.

அதன்படி, முதற்கட்டமாக ஹமாஸ் தங்கள் பிடியில் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகளில் 33 பேரை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டது. இதற்கு ஈடாக தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகளில் 1,904 பேரை விடுதலை செய்ய இஸ்ரேல் ஒப்புக்கொண்டது.

ஒப்பந்தத்தின்படி ஹமாஸ் அமைப்பினர் தங்கள் பிடியில் உள்ள பணயக் கைதிகளில் 21 பேரை விடுதலை செய்திருந்தனர். அதற்கு ஈடாக பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 730 பேரை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது.

இந்த நிலையில் இன்று 3 பேரை விடுதலை செய்ய ஹமாஸ் முடிவு செய்திருந்தது. ஆனால், இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக ஹமாஸ் குற்றம்சாட்டியது. அத்துடன் திட்டமிட்டபடி சனிக்கிழமை (இன்று) பணயக் கைதிகளை விடுவிக்க முடியாது என ஹமாஸ் மிரட்டல் விடுத்தது.

இதற்கிடையே சனிக்கிழமைக்குள் அனைத்து பயணக் கைதிகளையும் விடுவிக்கவில்லை என்றால காசாவில் நரகம வெடிக்கும் என டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிறுத்திவிட்டு காசா மீது தாக்குதல் நடத்துவோம் என இஸ்ரேல் தெரிவித்தது.

இதனால் திட்டமிட்டபடி சனிக்கிழமை (இன்று) 3 பணயக் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என கடந்த வியாழக்கிழமை ஹமாஸ் தெரிவித்திருந்தது.

அதன்படி இன்று 3 பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவித்துள்ளது. லெய்ர் ஹோர்ன் (46), சாகுய் தெகெல் சென் (36), அலெக்சாண்டர் (சஷா) டிரௌபனவ் (29) ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

லெய்ர் ஹோர்ன் இஸ்ரேல் மற்றும் அர்ஜென்டினா குடியுரிமை கொண்டவர். சாகுய் தெகெல் சென் இஸ்ரேல் வாழ் அமெரிக்கர் ஆவார். அலெக்சாண்டர் இஸ்ரேல் மற்றும் ரஷியா குடியுரிமை கொண்டவர். இந்த மூன்று பேருடன் மொத்த 24 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

காசாவில் இன்னும் 73 இஸ்ரேலியர்கள் பணயக் கைதிகளாக உள்ளதாகவும், இதில் 36 பேர் உயிரிழந்திருக்கலாம் எனவும் இஸ்ரேல் நம்புகிறது.

Tags:    

Similar News