உலகம்

பிரதமர் ரிஷி சுனக்-ஐ கலாய்த்த யூடியூபர் - புகைப்படம் வைரல்

Published On 2024-07-05 09:53 GMT   |   Update On 2024-07-05 09:53 GMT
  • பிரிட்டன் பாராளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்பட்டது.
  • தேர்தலில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த 8 பேர் போட்டியிட்டனர்.

பிரிட்டனில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கன்சர்வேடிவ் கட்சியின் ரிஷி சுனக் பிரதமராக இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தான் நிறைவடைகிறது. எனினும், பிரிட்டன் பாராளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதைத் தொர்ந்து கடந்த மே 30 ஆம் தேதி பிரிட்டன் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி பிரிட்டன் பாராளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது. 650 உறுப்பினர்களை கொண்ட பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த எட்டு பேர் களம் கண்டனர்.

இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் தொழிலாளர் கட்சி வெற்றிக்கு தேவையானதை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருக்கிறது. தேர்தலில் போட்டியிட்ட பிரதமர் ரிஷி சுனக் வெற்றி பெற்ற போதிலும், அவரது கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர்கள் பல இடங்களில் தோல்வியை தழுவினர்.

தேர்தல் முடிவுகளை தொடர்ந்து ரிஷி சுனக் செய்தியாளர்களிடம் பேசிய போது, யூடியூபரால் கிண்டலுக்கு ஆளான சம்பவம் அரங்கேறியது. செய்தியாளர்களிடம் ரிஷி சுனக் பேசி வந்த போது, யூடியூபில் பிராங்க் செய்யும் நிகோ ஓமிலனா தனது கையில் L (தோல்வியாளர் என்பதை குறிக்கும் வகையில்) என்ற ஆங்கில எழுத்து கொண்ட காகிதத்தை தூக்கி காண்பித்தார்.

இதைத் தொடர்ந்து தனது சமூக வலைதளங்களில் "இதை பிடித்துக் கொள்ளுங்கள் ரிஷி, உங்களுக்கான நேரம் முடிந்துவிட்டது," என்றும் குறிப்பிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் இவர் 7.49 மில்லியன் ஃபாளோயர்களை வைத்திருக்கிறார்.

நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் இவர் தனித்து போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் என்பதால், பிரதமர் பேசிய மேடை அருகே எளிதில் சென்றுவிட்டார் என்று கூறப்படுகிறது.

Tags:    

Similar News