search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    • நீலகிரி தொகுதியில் வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைத்து சீல் வைக்கப்பட்டன
    • இந்த கல்லூரி சுற்றி 163 சிசிடிவி கேமராக்கள் பொருத்தி 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

    நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் கடந்த 20 ஆம் தேதி உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைத்து சீல் வைக்கப்பட்டன.

    இந்த கல்லூரியை சுற்றி துணை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த கல்லூரி சுற்றியும் 163 சிசிடிவி கேமராக்கள் பொருத்தி 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

    இந்நிலையில், கட்சி பிரமுகர்கள் காணக்கூடிய அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென துண்டிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட நிர்வாகத்தின் தொழிட்நுட்ப கோளாறு வல்லுநர்கள் சிசிடிவி காட்சிகளை சரிசெய்தனர்.

    காட்சி திரையில் மட்டும் கோளாறு ஏற்பட்டதாகவும், அதில் பதிவானது அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நம்பர் பிளேட்டுகளில் தேவையற்ற ஸ்டிக்கர் கூடாது
    • அரசு வாகனங்களை தவிர தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

    வாகனங்களில் தேவையற்ற ஸ்டிக்கர்கள் எதையும் ஒட்ட கூடாது எனவும் நம்பர் பிளேட்டுகளில் தேவையற்ற ஸ்டிக்கர் கூடாது எனவும் போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

    நம்பர் பிளேட்டுகளில் வேலை செய்யும் துறைகள், சின்னங்கள் உள்ளிட்டவை எதுவும் ஒட்டக் கூடாது எனவும் அரசு வாகனங்களை தவிர தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    தமிழ்நாட்டில் மே 2ம் தேதி முதல் இந்த விதிமுறை அமலுக்கு வருகிறது.

    • மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய்
    • ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய்

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:

    "மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய்.

    பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

    ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    • வெள்ள நிவாரண தொகையாக தமிழ்நாடு அரசு கேட்டது ரூபாய் 38,000 கோடி
    • உள்துறை அமைச்சகம் தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரண நிதியாக ரூபாய் 276.10 கோடி நிதி ஒதுக்கியுள்ளது

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வருபெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    "ஒன்றிய உள்துறை அமைச்சகம் மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூபாய் 115.49 கோடியும், டிசம்பர் வெள்ள நிவாரண நிதியாக ரூபாய் 160.61 கோடியும் ஆக மொத்தம் ரூபாய் 276.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    ஆனால், தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட மொத்த தொகை ரூபாய் 682.63 கோடி.

    இதில் மாநில பேரிடர் நிவாரண நிதியில் உள்ள இருப்பு தொகையான ரூபாய் 406.57 கோடியை கழித்தது போக மீதியுள்ள தொகையான ரூபாய் 276.10 கோடி தான் தற்போது தமிழ்நாட்டிற்கு உள்துறை அமைச்சகம் ஒதுக்கியுள்ளது.

    நாம் கேட்ட நிவாரண நிதி ரூபாய் 38,000 கோடி.

    ஆனால், மாநில பேரிடர் நிவாரண நிதியில் ஏற்கனவே இருந்த 406.57 கோடியை விடுவித்து மீதியுள்ள ரூபாய் 276.10 கோடியை தான் தமிழகத்திற்கு நிவாரண நிதியாக ஒன்றிய அரசு வழங்கியுள்ளது.

    தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிதியை ஒதுக்காமல் மாநில பேரிடர் நிவாரண நிதியாக ஏற்கனவே இருக்கிற தொகையை கழித்து விட்டு மீதி தொகையை உள்துறை அமைச்சகம் ஒதுக்கியிருப்பது ஒன்றிய பா.ஜ.க. அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது.

    இதன்மூலம் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் நாம் கேட்ட தொகையை ஒதுக்க ஒன்றிய பா.ஜ.க. அரசு மறுத்தது தெளிவாக தெரிகிறது. இந்த ஒதுக்கீடு யானைப் பசிக்கு சோளப் பொரி போட்டது போல் இருக்கிறது.

    எனவே, தமிழகத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதிய நிவாரண நிதி வழங்காத பிரதமர் மோடி தமிழக மக்களுக்காக பேசுவது அப்பட்டமாக நீலிக் கண்ணீர் வடிப்பதாகத் தான் கருத முடியும்.

    தமிழக மக்கள் மீதோ, தமிழக வாழ்வாதாரத்தின் மீதோ கொஞ்சம் கூட கருணை காட்டாத அணுகுமுறையை தான் பிரதமர் மோடி கையாண்டு வருகிறார் என்பதற்கு உள்துறை அமைச்சகத்தின் நிதி ஒதுக்கீடு மேலும் உறுதி செய்கிறது. இத்தகைய வஞ்சிக்கிற ஒன்றிய பா.ஜ.க.

    அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

    • ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது
    • வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரிக்கும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்

    இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.

    வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரிக்கும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும், அதிகளவில் தண்ணீர் பருகுமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.

    தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இயல்பை விட 2 டிகிரி முதல் 5 டிகிரி வரை கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

    இந்நிலையில் தமிழகம் முழுவதும் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் பொது இடங்களில் ஓஆர்எஸ் பாக்கெட்டுகளை விநியோகம் செய்ய வேண்டும் என சுகாதார அதிகாரிகளுக்கு, பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

    கடும் வெப்பம் காரணமாக மக்களுக்கு உடல் சார்ந்த பாதிப்புகள் ஏற்படக் கூடும். உடலின் நீர் சமநிலையை மேம்படுத்த மாவட்டம் தோறும் பல்வேறு பகுதிகளில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என கூறி ஜூன் 30ஆம் தேதி வரை மாவட்ட வாரியாக பொதுமக்களுக்கான மறுநீரேற்று மையங்களை அமைக்கவும் உத்தரவிட்டுள்ளது.

    • வாக்குவாதம் தீவிரம் அடைந்த நிலையில் அந்த வாலிபர் அந்த பெண்ணை தனது ஹெல்மெட்டால் தாக்கியுள்ளார்.
    • பெண்ணை காப்பாற்றுவது போல் உள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

    சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் இளைஞர் மற்றும் பெண் தோழி இருவரும் இருச்சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். திடீரென்று அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அந்த இளைஞர் அந்த பெண் தோழியை சரமாரியாக தாக்கினார். வாக்குவாதம் தீவிரம் அடைந்த நிலையில் அந்த வாலிபர் அந்த பெண்ணை தனது ஹெல்மெட்டால் தாக்கியுள்ளார். நிலை தடுமாறிய அந்த பெண் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

    இதை அந்த வழியாக வந்த வக்கீல் ஒரு தனது செல்போனில் வீடியோவாக பதிவேற்றினார். இதை கண்ட அந்த வாலிபர் சற்று சுதாரித்து கொண்டு எதுவும் நடைபெறாததது போல், மயங்கிய அந்த பெண்ணை காப்பாற்றுவது போல் நடகமாடினார். சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளையும், வழக்கறிஞரையும் உதவிக்கு அழைப்பது போலும் நாடகமாடினார்.

    இதை செல்போனில் வீடியோ எடுத்த வழக்கறிஞர் மற்றும் அந்த வாலிபர் இருவரும் அந்த பெண்ணை அருகில் உள்ள மருத்துவமனை அழைத்து சென்றனர். அந்த பெண் தற்போது சிகிச்சை பெற்று வரும் நிலையில் பெண்ணை காப்பாற்றுவது போல் உள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

    இந்த சம்பவத்தையடுத்து கோயம்பேடு போலீசார் அந்த வாலிபரின் வண்டி எண்ணை வைத்தும், அங்குள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்தும் விசாரணை நடத்தி வந்த நிலையில் வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த ரோஷன் என்ற இளைஞரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    இதையடுத்து அந்த வாலிபருக்கும், பெண்ணும் இடையே ஏன் வாக்குவாதம் ஏற்பட்டது என்றும், வாலிபர் ஏன் அந்த பெண்ணை தாக்கினார் என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பெண்ணையும் அழைத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். விசாரணையின் போது அந்த வாலிபர் மீது ஏதேனும் தவறு இருந்தால் வழக்குப்பதிவு செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    • கருப்பட்டி சாப்பிட்டவர்கள் அதிக நாட்கள் பலம் உள்ளவர்களாக காணப்படுவார்கள்.
    • அழிந்து வரும் பனை மரம் ஏறும் தொழிலை பாதுகாக்க அரசு பனைமரம் ஏறும் இயந்திரங்களை வழங்க வேண்டும்.

    பொன்னேரி:

    பனைமரம் தமிழ்நாட்டின் மாநில மரம் ஆகும். பனை மரத்தை ஏழைகளின் கற்பக விருட்சம் என அழைப்பதுண்டு.

    நிலத்தடி நீர்மட்டத்தை குறையாமல் பாதுகாக்கவும் பனை மரம் உதவுகிறது. இது வளர்ச்சி அடைய 15 ஆண்டு முதல் 20 ஆண்டு வரை ஆகும். பனைமரம் முழுமையும் பயனுள்ளதாகும். காலப்போக்கில் பனைமரங்கள் குறைந்து தென் மாவட்டங்களில் மழை இல்லாமல் காய்ந்து பட்டு போய் காணப்படுகின்றன.

    செங்கல் சூளை மற்றும் எரிப்பதற்கு பனை மரம் வெட்டப்பட்டு அழிந்து வருவதை கண்டறித்து தமிழக அரசு பனை மரத்தினை பாதுகாக்க நலவாரியம் மற்றும் கூட்டுறவு துறை அமைத்து, தமிழகம் முழுவதும் பனை விதைகள் விதைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

    தூத்துக்குடி மாவட்டம் படுக்கபத்து கிராமத்தை சேர்ந்தவர் அகிலன். இவர் தாத்தா காலத்தில் இருந்தே பனைத்தொழில் செய்து வந்த நிலையில் அப்பகுதியில் மழை இல்லாததால் நிறைய பனை மரங்கள் பட்டுப்போன நிலையில் தொழில் இல்லாததால் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பழைய எருமை வெட்டி பாளையத்தில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் 480-க்கும் மேற்பட்ட பனை மரங்களுடன் இருந்த பனைமர தோப்பினை வாங்கி இழந்துபோன பனை மர தொழிலை மீண்டும் தொடங்கி உள்ளனர்.

    அரசு அனுமதியுடன் பனை மரத்தில் பதநீர் இறக்கும் தொழிலை செய்ய முடிவெடுத்த நிலையில் ராஜபாளையத்தில் இருந்து பனையேறும் தொழிலாளர்கள் 4 பேரை வரவழைத்து ஒரு நபருக்கு 25 பனைமரம் வீதம் 4 பேர் மூன்று வேளை பனை மரத்தில் ஏறி தினமும் காலை 80 லிட்டர் முதல் 100 லிட்டர் வரை பதநீர் இறக்கி விற்பனை செய்கின்றனர்.

    மீதமுள்ள பதநீரை காய்ச்சி கருப்பட்டி ஆக்கி விற்பனையும் செங்குன்றம், பொன்னேரி, தாம்பரம், சோழவரம், அம்பத்தூர், கொளத்தூர், மணலி, மீஞ்சூர் உள்ளிட்ட பல பகுதியில் பதநீர் வாங்க ஒரு நாளைக்கு முன்பாக ஆர்டர் கொடுத்து தினமும் பதநீர் வாங்கி செல்கின்றனர்.

    சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள அதிகமான பேர் குடும்பமாக வாகனங்களில் வந்து நுங்குடன் சேர்த்து பதநீர் அருந்தி செல்கின்றனர்.

    இதுகுறித்து அகிலன் கூறியதாவது, பனைமரம் மிகச் சிறந்த மரமாகும். 150 ஆண்டுகளுக்கு மேலாக பயன் தரக்கூடியது எனது தாத்தா காலத்தில் இருந்தே பனை தொழில் செய்து வருகிறேன்.

    காலப்போக்கில் பனையேறுவதற்கு ஆட்கள் இல்லாததால் குறைவாக காணப்பட்டதால் பனைமர தொழிலை பாதுகாக்கவும் இளம் தலைமுறைகளுக்கு எடுத்துச் சொல்லவும் ஊக்குவிக்கவும், கடந்த 2011 ல் தோட்டத்தினை வாங்கி ஆடு, மாடு, கோழி மற்றும் தோட்டம் அமைத்து கிராம சூழ்நிலை போல் காணப்படும் தோட்டத்தில் ஊரில் இருந்து 4 தொழிலாளர்களை வரவழைத்து பதநீர் இறக்கி விற்பனை செய்து வருகிறேன்.

    பதநீர் பற்றி தெரியாதவர்களுக்கு குடிக்க இலவசமாக கொடுத்து அதனுடைய பயன்களை விளக்கி சொல்லி வருகிறேன். கடந்த 2 வருடமாக அரசு அனுமதியுடன் தொழில் நடத்தி வருகிறேன்.

    பனை மரத்தில் உள்ள அத்தனை பொருட்களும் பயன்படுவதாக ஏப்ரல் மாதம் முதல் மே, ஜூன் மாதம் வரை பதநீர் கிடைக்கும். இதில் கால்சியம், இரும்பு சத்து அதிகம் காணப்படுவதாகவும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருகலாம். பதநீர் சாப்பிட்டவர்கள் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.

    நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் காணப்படும். உடலை குளிர்ச்சி படுத்தக்கூடியது. ரத்த சோகையை போக்கும் எனவும் பேன் தொல்லை இருப்பவர்கள் தலையில் பதநீர் ஊற்றி குளித்தால் முழுவதும் நீங்கி விடுவதாகவும் வயிறு எரிச்சல் அல்சர் நீங்குவதாகவும் நுங்கு சாப்பிடுபவர்களுக்கு உடல் சூடு தணியும் உடல் குளிர்ச்சி தரும். அதிகமான சத்துக்கள் நிறைந்தது சுகர் இருப்பவர்கள் நுங்கு தோவினை சேர்த்து சாப்பிடும்போது சுகர் குறைகிறது.

    கோடை காலத்தில் உடலில் வேர்க்குரு இருப்பவர்கள் தேய்த்து குளித்தால் வேர்க்குரு நீங்குகிறது. கருப்பட்டி சாப்பிட்டவர்கள் அதிக நாட்கள் பலம் உள்ளவர்களாக காணப்படுவார்கள். சுகர் இருப்பவர்கள் சாப்பிட்டால் சுகர் குறையும் வயிற்றுப்போக்கு மலச்சிக்கல் உள்ளவர்கள் சாப்பிட்டால் இரண்டே நாளில் குணமாகும் நுங்கில் வைட்டமின் பி, இரும்புச்சத்து கால்சியம் பொட்டாசியம் ஜிங்க் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. கோடை வெயிலில் தாக்கும் அதிகமான நோயான அம்மை நோய் வருவதை எளிதில் தடுக்கக் கூடியது சாலை ஓரங்களில் பதநீர், நுங்கு விற்பனை அதிகமாக உள்ளன. இவை ஒரிஜினல் பதநீர் தானா என சரி பார்த்து குடிக்க வேண்டும்.

    கருப்பட்டி போலியான கருப்பட்டி சாலை ஓரங்களில் விற்கப்படுவதாயிலும் போலிகளை கண்டறிந்து அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாப்பிடும் பொருளில் சாலை ஓரங்களில் கலப்படம் செய்து விற்பனை செய்வதால் வயிற்றுப்போக்கு அதிக சுகர் ஒவ்வாமை ஏற்படுகிறது. கடந்த ஆண்டு 1 லட்சத்து 50 ஆயிரம் பனை விதைகள் கடற்கரை ஓரங்களில் நடுவதற்கு கொடுத்தேன்.

    இதுகுறித்து பனைமரம் ஏறும் தொழிலாளிகள் பன்னீர், சண்முகம் கூறியதாவது:-

    அழிந்து வரும் பனை மரம் ஏறும் தொழிலை பாதுகாக்க அரசு பனைமரம் ஏறும் இயந்திரங்களை வழங்க வேண்டும். தொழில் செய்ய தொழிலாளர்களுக்கு லோன் வசதி மற்றும் பென்ஷன் வழங்க வேண்டும். பனங்கருப்பட்டியை ரேஷன் கடையில் விற்பனை செய்ய வேண்டும். கலப்படம் செய்து விற்பனை செய்து பணம் சம்பாதிக்கும் கும்பல் வந்து விட்டதால் கருப்பட்டியை பரிசோதனை செய்ய தனிக்குழு அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • சிங்கம், புலிகளுக்கு நீந்தி குளிக்கும் தொட்டி வைக்கப்பட்டுள்ளது.
    • யானைக்கு ஷவர் குளியல் மற்றும் சேற்று குளியல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. இந்த பூங்காவில் வெள்ளைப் புலிகள், வங்கப் புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், யானைகள், மனித குரங்குகள், காண்டாமிருகம், நீர்நாய், முதலைகள் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் உள்ளன.

    மேலும் வண்ணத்துப்பூச்சி, பூங்கா மீன் கண்காட்சியகம், குழந்தைகள் பூங்கா, இரவு நேர விலங்குகள் பூங்கா, பாம்புகள் இருப்பிடம் ஆகியவையும் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது. 

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் கோடை காலத்தை சமாளிக்கும் வகையில் விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் பார்வையாளர்களை கவரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    வண்டலூர் உயிரியல் பூங்காவை சுற்றிப்பார்க்க உலகின் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமானோர் வருகின்றனர். பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் கோடை காலத்தையொட்டி வெயிலின் தாக்கத்திலிருந்து வண்டலூர் உயிரியல் பூங்காவில் விலங்குகளை பாதுகாக்க தேவையான பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 

    மனித குரங்கு வசிக்கும் பகுதியில் திறந்தவெளி தண்ணீர் குளியல் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அவைகள் தண்ணீர் குடிப்பதற்கு ஏதுவாக குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சூட்டைத் தணிக்கக்கூடிய பழங்களான தர்பூசணி, கிர்ணிப்பழம் மற்றும் இளநீர் அனைத்தும் சேர்க்கப்பட்டு அவைகளை குளிர்சாதன பெட்டியில் வைத்து பழங்கள் உறைந்த நிலையில் விலங்குகளுக்கு கொடுக்கிறார்கள்.

    பறவைகளுக்கு அவைகள் இருப்பிடத்தை சுற்றி சணல் கோணி மூலம் கட்டப்பட்டு அவைகளுக்கு ஷவர் குளியல் ஏற்பாடு செய்யப்பட்டு வெயில் தாக்கம் ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது. சிங்கம், புலிகளுக்கு நீந்தி குளிக்கும் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. காண்டா மிருகத்திற்கு ஷவர் குளியல் இருக்கும் இடத்தை சுற்றி சேற்று குளியல் ஏற்பாடு செய்து உள்ளனர். நீர்யானை இருக்கும் இடத்தையும் தண்ணீரால் நிரப்பி சேற்றுத் தன்மை மாறாதபடி ஈரப்பதத்தை ஏற்படுத்தி கொடுத்து அந்த விலங்குகளின் சூட்டை தணிக்கின்றனர். அதேபோல் யானைக்கு ஷவர் குளியல் மற்றும் சேற்று குளியல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

    நெருப்புக்கோழி, ஒட்டகச்சிவிங்கி வரிக்குதிரை போன்றவைகளுக்கு மதியம் 11 மணி 12 மணி என ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தண்ணீரை சுழற்சி அடிக்கும் வகையில் குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த கோடை வெயிலில் இருந்து வண்டலூர் உயிரியல் பூங்காவில் விலங்குகளையும், பறவைகளையும் பாதுகாக்கும் பணியில் வண்டலூர் பூங்கா நிர்வாகம் சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    • முசாவிர் ஹூசைன் ஷாஜிப், அப்துல் மதின் தாஹா ஆகிய 2 பேரை என்.ஐ.ஏ கைது செய்தது.
    • திருவல்லிக்கேணியில் உள்ள லாட்ஜ் மற்றும் பழைய கட்டிடம் ஒன்றிற்கு அழைத்து சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்தில் கடந்த மாதம் குண்டு வெடித்தது. இதில் 9 பேர் காயம் அடைந்தனர். குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய கர்நாடகா அரசு இவ்வழக்கை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் ஒப்படைத்தது. அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு குண்டு வைத்ததாக சந்தேகப்படும் நபரின் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு, அதன் அடிப்படையில் குற்றவாளியை தீவிரமாக தேடிவந்தனர்.

    இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். குண்டுவெடிப்புக்கு பிறகு மேற்கு வங்கத்தில் தலைமறைவாக இருந்த முசாவிர் ஹூசைன் ஷாஜிப், அப்துல் மதின் தாஹா ஆகிய 2 பேரை என்.ஐ.ஏ கைது செய்தது.

    இந்நிலையில் இவ்வழக்கில் கைதான அப்துல் மதின் தாஹா என்பவரை சென்னை திருவல்லிக்கேணிக்கு அழைத்து வந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    திருவல்லிக்கேணியில் உள்ள லாட்ஜ் மற்றும் பழைய கட்டிடம் ஒன்றிற்கு அழைத்து சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சியில் நகர பேருந்தின் நாற்காலியுடன் நடத்துனர் சாலையில் கீழே விழுந்தார்.
    • 20,000 அரசு பேருந்துகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் - தலைமை செயலாளர்

    தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அரசு பேருந்துகள் சேதமடைவது தொடர்பான புகார்கள் எழுந்துள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சியில் நகர பேருந்தின் நாற்காலியுடன் நடத்துனர் சாலையில் கீழே விழுந்தார். இதே போன்று விருதுநகரிலும் பேருந்தில் சேதம் ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியானது.

    இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பேருந்துகள் எவ்வாறு இயங்குகிறது என்பது தொடர்பாக நேற்று தமிழ்நாடு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு போக்குவரத்துக்கு துறையானது ஒரு விரிவான உத்தரவை அனைத்து போக்குவரத்து மேலாண் இயக்குநர்களுக்கும் வழங்கியுள்ளது.

    அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பேருந்துகளையும் அடுத்த 48 மணி நேரத்திற்குள் முழுவதுமாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும், தமிழகத்தில் விரைவு போக்குவரத்து கீழ் இயங்கப்படும் விரைவு பேருந்துகள் மற்றும் அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் இயங்கப்படும் வெளியூர் பேருந்துகள் சென்னையில் இயங்கப்படும் மாநகர பேருந்து உள்ளிட்ட 20,000 பேருந்துகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆய்வு செய்த பின்பு அந்த பேருந்தில் என்னென்ன பிரச்சனைகள் உள்ளது என்பதை உடனடியாக கண்டறிந்து அவற்றை அடுத்த 48 மணி நேரத்திற்குள் சீரமைக்க வேண்டும் என்றும் போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

    • உடலில் நன்றாக காற்று புகக்கூடிய வகையிலான பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும்.
    • கோடை காலத்தில் ஏற்படும் செரிமான பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு தயிர்.

    தமிழகத்தில் கோடை வெயில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகவே சுட்டெரித்து வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தற்போது கோடை வெயில் உச்சத்தை தொடும் நிலையில் வெப்ப அலை வீசும் என்று எச்சரிக்கப்படுகிறது.

    தமிழகத்தில் வருகிற 30-ந்தேதி வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்பட்டுள்ளது. வெப்ப அலை வீசும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பானது பொதுமக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்துகிறது. ஆனால் அதற்கு பயப்பட வேண்டியதில்லை. பகல் 11 மணி முதல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தால் போதும், வெப்ப அலையில் இருந்து எளிதாக தப்பலாம் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

    அதே நேரத்தில் எத்தனை பேரால் பகல் 11 மணி முதல் 3 மணி வரை வெளியே வராமல் இருக்க முடியும்? அவரச வேலை, சொந்த வேலை, அலுவலக வேலை, தொழில் நிமித்தம் என ஏதாவது ஒரு காரணத்துக்காக பலர் பகல் நேரத்தில் வெளியே வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதனால் வெப்ப அலையை எப்படி சமாளிக்கப்போகிறோம்? என்கிற கேள்வியும் அவர்களின் மனதிற்குள் எழாமல் இல்லை.

    கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர காலத்தில் தான் வழக்கமாக வெயில் உச்சம் தொடும். ஒவ்வொரு ஆண்டும் மே 4-ந்தேதி தொடங்கும் அக்னி நட்சத்திரம் மே 28-ந்தேதி வரை மொத்தம் 25 நாட்கள் நீடிக்கும். ஆனால் அதற்கு முன்பே வெப்ப அலை தாக்கும் என்ற எச்சரிக்கையானது, பொதுமக்களை அச்சப்படத்தான் வைக்கிறது.

    வெப்ப அலை என்றால் என்ன? அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வதில் பலருக்கும் ஆர்வம் உள்ளது.

    ஒரு மாநிலத்தில் குறைந்தது 2 மாவட்டங்களிலாவது வெப்பநிலை 113 டிகிரிக்கு மேல் பதிவாக வேண்டும். அல்லது வெப்பநிலை 104 டிகிரிக்கு மேல் பதிவாகி 2 நகரங்களில் வழக்கத்தை விட 8 டிகிரி வெப்பம் அதிகமாக இருந்தாலும் வெப்ப அலை உருவாகும் என்று கணிக்கப்படுகிறது.

    மேலும் சமவெளிப் பகுதியில், குறைந்தது 2 நாட்களுக்கு 104 டிகிரி வெயில் அல்லது அதற்கு மேலாகவும், மலைப் பிரதேசங்களில் 86 டிகிரி வெயில் அல்லது அதற்கு மேலாகவும், கடலோரப் பகுதிகளில் 98.6 டிகிரி வெயில் அல்லது அதற்கு மேலாகவும் வெப்பநிலை உயரும்போது 'வெப்ப அலை' நிகழ்வு ஏற்படுவதாக வானிலை ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். தமிழகத்தில் கடந்த 25 ஆண்டுகளில், சராசரியாக ஆண்டுக்கு 8 வெப்ப அலைகள் ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    வெப்ப அலைகளால் தமிழகம் பல்வேறு காலகட்டங்களில் பலவித பாதிப்புகளை சந்தித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு தான் வெப்ப அலை கடுமையாக தாக்கியது.

    வெப்ப அலைகளின் காலம் அதிகரிக்கும்போதும், தீவிரமடையும்போதும் கூடவே வறட்சியும் அதிகரிக்கும். வெப்ப அலைகளுக்கு மத்தியில் மழை பெய்வது குறையும். எனவே, நிலத்தில் உள்ள ஈரப்பதம் குறைந்து நிலம் விரைவில் வறண்டு போகும். இதனால் நிலம் வேகமாக வெப்பமடைந்து காற்றை சூடாக மாற்றும். இது ஒரு தொடர் சுழற்சியாகி ஒட்டுமொத்த வெப்ப நிலையும் அதிகரிக்கும். இதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்.

    இதுபோன்ற வெப்ப அலை காலகட்டத்தில் கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியோர்கள், உடல் நலக்குறைபாடு கொண்ட நோயாளிகள் ஆகியோரே கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். எனவே வெப்ப அலையின்போது கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியோர்கள் விஷயத்தில் கூடுதல் கவனமும், கண்காணிப்பும் செலுத்த வேண்டும். தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் ஆசியா கண்டம் முழுவதும் 24 கோடி குழந்தைகள் வெப்ப அலையால் பாதிக்கப்படக்கூடிய ஆபத்து இருப்பதாக ஐ.நா. சபை எச்சரித்துள்ளது. வெப்ப அலையின்போது நமது உடலில் இருந்து அதிக வியர்வை வெளியேறுவதால் பூஞ்சை தொற்றுகள், சொறி, படர் தாமரை போன்ற தோல் நோய்கள் ஏற்படலாம். உடலின் ஈரப்பதத்தை பராமரித்து உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதன் மூலம் இதிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

    கோடை காலங்களில் உடலில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையால் பல்வேறு நீர் சார்ந்த நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்போது, நமக்கு கிடைக்கும் நீர் மாசடைந்து இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். அதனால், வாந்தி, வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை, டைபாய்டு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். ஆகவே, நீரை சூடாக்கிய பின்னர் குடிப்பது நல்லது. மேலும் உடலில் நீர்ச்சத்து குறைந்தால் சிறுநீரகக் கல் வரும் பாதிப்பு அதிகமாகவே இருக்கும். கோடைக்காலங்களில் அதிக அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்போருக்கு இந்தப் பிரச்சனை ஏற்படும்.

    அதே நேரத்தில் வெப்ப அலையில் இருந்து நாம் நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான வழிமுறைகளையும் மருத்துவர்கள் வகுத்துள்ளனர்.

    இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது:-

    வெப்ப அலையில் இருந்து தப்பிக்க முதலில் ஆடை விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். உடலில் நன்றாக காற்று புகக்கூடிய வகையிலான பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும். தினமும் அதிக அளவில் தண்ணீர் குடித்து உடலை நீர்ச்சத்துகளுடன் வைத்திருக்க வேண்டும். 10 நிமிடம் முதல் 15 நிமிடத்துக்கு ஒரு முறை தண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் எடுக்கவில்லை என்றாலும் அவ்வப்போது தண்ணீர் குடிக்க வேண்டும். பகல் 11 மணி முதல் 3 மணி வரை வெளியே வெயிலில் வருவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

    குழந்தைகளை வெப்பம் தாக்காமல் இருக்க அவர்களுக்கு பருத்தி துணியால் ஆன ஆடைகளையே அணிவிக்க வேண்டும். தினமும் 2 முறை அவர்களை குளிக்க வைக்க வேண்டும். குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் பகல் நேரத்தில், குறிப்பாக பகல் 11 மணி முதல் 3 மணி வரை வெயிலில் விளையாடுவதை தவிர்க்க வேண்டும்.

    மேலும் வெயிலுக்கு தகுந்தாற்போல் உணவு பழக்கங்களையும் கடைபிடிக்க வேண்டும். நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும்போது இரும்பு சத்தும் உடலில் குறையும். இதனை தவிர்க்க பேரீச்சை மற்றும் சாத்துக்குடி பழங்களை சாப்பிட வேண்டும். பேரீச்சை, சாத்துக்குடி ஆகிய பழங்கள் வெப்பத்தால் ஏற்படும் பக்கவாதத்தில் இருந்து நம்மை பாதுகாக்கும். பேரீச்சை சாப்பிடுவதால் நாள் முழுவதும் சோர்வில்லாமல் ஆரோக்கியமாக இருக்கலாம்.

    கோடை காலத்தில் ஏற்படும் செரிமான பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு தயிர். இதனை கண்டிப்பாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தயிரை லஸ்சியாகவும் செய்து சாப்பிடலாம். புதினா இலையில் இயற்கையாகவே ஏராளமான நன்மைகள் உள்ளன. உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும் புதினாவை சட்னி செய்து சாப்பிடலாம். புதினா சாறு குடிப்பது கோடையில் ஆரோக்கிய மேம்பாட்டுக்கு உதவும்.

    தர்பூசணியில் லைகோபீன் எனப்படும் ஆக்சிஜனேற்றி உள்ளது. இது சருமத்தின் பளபளப்பை பராமரிக்கிறது. தர்பூசணியில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது. மேலும் அதில் குளிர்ச்சி தன்மையும், 92 சதவீதம் தண்ணீரும் இருப்பதால், உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது.

    மேலும் எலுமிச்சையில் வைட்டமின் 'சி' உள்ளது. இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, குழந்தைகளிடம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. அதனால் தான் கோடைக்காலத்தில் எலுமிச்சை பழச்சாறு அதிகம் குடிக்க வேண்டும். வியர்வையால் குழந்தைகள் உடலில் உள்ள தாது உப்புகள் அதிகமாக வெளியேறும். இதனால் உடலில் ஏற்படும் தாது உப்புக்களின் பற்றாக்குறையை போக்க எலுமிச்சை பழச்சாறில் சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து கொடுக்கலாம். 

    தயிர் சேர்த்த கம்மங்கூழ், பழச்சாறு, இளநீர், நுங்கு ஆகியவற்றையும் சாப்பிடலாம். பெரும்பாலும் ஐஸ்கிரீம், செயற்கை குளிர்பானம் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.

    முதியவர்கள் பகல் நேரத்தில் வெயிலில் வெளியே செல்லும்போது அவர்களுக்கு மயக்கம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே 60 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்கள் பகல் நேரத்தில் வெளியே செல்வதை தவிர்த்து பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்க வேண்டும்.

     

    பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது தண்ணீர் குடித்தால் வாந்தி வரும் என்பதற்காக பலர் தண்ணீர் குடிப்பதை தவிர்ப்பார்கள். அவர்கள் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் பிரசவத்தின் போது பிரச்சனை உருவாகி குழந்தையின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும். பனிக்குடத்தில் எப்போதும் குழந்தைக்கு தேவையான அளவு நீர் இருக்க வேண்டும் என்பதால் கோடை காலத்தில் கர்ப்பிணி பெண்கள் அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்.

    வெப்ப அலையின்போது புரதச்சத்து அதிகம் உள்ள உணவை தவிர்க்க வேண்டும். வீட்டில் தண்ணீர் தெளித்து எப்போதும் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் வெப்ப அலையில் இருந்து நாம் நம்மையும், நம் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ளலாம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • எங்கள் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.
    • தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 15-ந்தேதி மின்னஞ்சல் மூலம் புகார் அளித்த போதும், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    சென்னை:

    கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்த சுதந்திர கண்ணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க சென்றபோது, வாக்காளர் பட்டியலில் எனது பெயர் மற்றும் எனது மனைவி பெயர் நீக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

    கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலும், 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் வாக்களித்த நிலையில், இந்த முறை எனது பெயரும், மனைவி பெயரும் நீக்கப்பட்டுள்ளது. அதே முகவரியில் வசிக்கும் எனது மகள் பெயர் பட்டியலில் உள்ளது.

    இதேபோல, எங்கள் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 15-ந்தேதி மின்னஞ்சல் மூலம் புகார் அளித்த போதும், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    அதனால் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து, வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். அதுவரை கோவை பாராளுமன்ற தொகுதி தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு தலைமை நீதிபதி அமர்வில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×