என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    • மத்திய அமைச்சர் எல்.முருகன், அண்ணாமலை முன்னிலையில் நயினார் நாகேந்திரன் மனு தாக்கல் செய்தார்.
    • ஸ்ரீவாரு மண்டபத்தில் நாளை மாலை 4 மணிக்கு அறிவிப்பு வௌியாகிறது.

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் பதவிக்காலம் நிறைவடைந்ததால் புதிய தலைவரை தேர்வு செய்வதில் கட்சி மேலிடம் தீவிரமாக ஈடுபட்டு வந்தது.

    அண்ணாமலை மாற்றப்படுவாரா? அல்லது அவரே தலைவர் பதவியில் நீடிப்பாரா? என்ற பேச்சும் பலமாக அடிபட்டது. அதுக்கு காரணம் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைக்க முயற்சிப்பதுதான்.

    இதுதொடர்பாக டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி தமிழக பா.ஜ.க. தலைமையில் கூட்டணிக்கு பிரச்சனைகள் வர வாய்ப்பு இருப்பதாக கூறினார். இதையடுத்து அண்ணாமலையையும் அமித்ஷா அழைத்து ஆலோசனை நடத்தினார்.

    இதைதொடர்ந்து, அண்ணாமலை மாற்றப்படலாம் என்று உறுதியாக பேச்சு அடிபட்டதை தொடர்ந்து, நயினார் நாகேந்திரன் டெல்லி சென்று நட்டா, அமித்ஷா ஆகியோருடன் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் சிலரையும் சந்தித்தார்.

    இதற்கிடையே, தேர்தலில் தமிழக பாஜக தலைவர் பதவிக்கு தான் போட்டியிடவில்லை என்றும் அண்ணாமலை கூறியிருந்தார்.

    இந்த பரபரப்புக்கு இடையில் இன்று தமிழக பாஜக தலைவருக்கான வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது.

    இந்நிலையில், மத்திய அமைச்சர் எல்.முருகன், அண்ணாமலை முன்னிலையில் நயினார் நாகேந்திரன் மனு தாக்கல் செய்தார்.

    தேர்தல் நடத்தும் அதிகாரியும் மாநில துணை தலைவருமான சக்கரவர்த்தியிடம் நயினார் நாகேந்திரன் விருப்பமனுவை வழங்கினார். நயினார் நாகேந்திரன் தவிர வேறு யாரும் வேட்பு மனுவை தாக்கல் செயயப்படவில்லை.

    இதனால், நயினார் நாகேந்திரன் பாஜக மாநில தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், தமிழக பாஜகவின் புதிய தலைவர் குறித்து நாளை மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, ஸ்ரீவாரு மண்டபத்தில் நாளை மாலை 4 மணிக்கு அறிவிப்பு வௌியாகிறது.

    • குழந்தையின் உறவினர்கள் அஞ்செட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் ஆம்புன்சில் இருந்த குழந்தையின் உடலுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே கடுகுநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மனைவி பிரீத்தா, இவர்களுக்கு 4 வயதில் பிரசாந்த் என்ற ஆண் குழந்தை இருந்தது.

    இந்நிலையில், கடந்த 30-ந் தேதி வீட்டின் படியிலிருந்து பிரசாந்த் தவறி கீழே விழுந்ததாக அஞ்செட்டி அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து சென்றனர்.

    அங்கு மருத்துவர்கள் குழந்தைக்கு காலில் அடிப்பட்டுள்ளதாக கூறி கட்டு போட்டு அனுப்பி உள்ளனர். பின்னர் மீண்டும் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் நேற்று முன்தினம் ரண ஜன்னியால் பாதிக்கப்பட்டு குழந்தை பிரசாந்த் உயிரிழந்தது.

    அதனால் மருத்துவர்கள் தனி ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் ஊருக்குள் செல்லாமல் நேரடியாக குழந்தையின் சடலத்தை மயானத்திற்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

    மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக இருந்ததால் குழந்தை இறந்ததாகவும், மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தையின் உறவினர்கள் அஞ்செட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் ஆம்புன்சில் இருந்த குழந்தையின் உடலுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து சென்ற அஞ்செட்டி வட்டாட்சியர் கோகுல், தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி ஆனந்தராஜ், மாவட்ட சுகாதார அலுவலர் ரமேஷ் குமார், அஞ்செட்டி இன்ஸ்பெக்டர் பங்கஜம் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதையடுத்து உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டு குழந்தையின் உடல் நல்லடக்கம் செய்ய கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • தமிழகத்தின் அரசியல் சூழ்நிலை குறித்தும், 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு குறித்தும் பேசினேன்.
    • தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. அதை திமுக அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை எனத் தெரிவித்தேன்.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள் பயணமாக நேற்றிரவு சென்னை வந்தார். இன்று கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினார். தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் அமித் ஷாவை சந்தித்து பேசினார்.

    அமித் ஷாவை சந்தித்து பேசியது குறித்து ஜி.கே. வாசன் கூறியதாவது:-

    அமித் ஷாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். இருந்தபோதிலும் தமிழகத்தின் அரசியல் சூழ்நிலை குறித்தும், 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு குறித்தும், இன்றைய அரசியல் களநிலவரத்தை பற்றியும் பேசினேன்.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. அதை திமுக அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. மக்களை திசைதிருப்ப பல்வேறு தேவையற்ற விசயங்களை பேசி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் எனக் கூறினேன்.

    இவ்வாறு ஜி.கே. வாசன் தெரிவித்தார்.

    அமைச்சர் அநாகரிகமாக பேசியது தொடர்பாக கேட்ட கேள்விக்கு, பொறுப்புள்ள அமைச்சர் ஒருவடைய பேச்சு அநாகரிமானது, அருவருப்பானது. இதுதான் அவர்களுடைய மாடலா? எனக் கேட்க விரும்புகிறேன். சற்றும் தாமதிக்காமல் அமைச்சர் பதவியில் இருந்து முதல்வர் அவரை நீக்க வேண்டும். இதுதான் தமிழகத்தில் உள்ள பெண்களின் எண்ணமாக உள்ளது என்றார்.

    • குழந்தையை அரசிடம் ஒப்படைத்து விட்டதாக கூறப்படுகிறது.
    • பழனிசாமியை தேடி பிடித்து கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ஏத்தாப்பூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி அரசு பள்ளியில் படித்து வந்தார். இம்மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி 60 வயதான கூலித் தொழிலாளி பழனிசாமி என்பவர் கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்தார்.

    இதில் கர்ப்பமான மாணவிக்கு வயிற்றுவலி ஏற்பட்டதால் இவரது பெற்றோர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மாணவிக்கு கடந்த மார்ச் மாதம் 3-ந்தேதி ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை அரசிடம் ஒப்படைத்து விட்டதாக கூறப்படுகிறது.

    இது குறித்து மாணவிக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், சேலம் மாவட்ட போலீசார் மற்றும் குழந்தைகள் நலத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மாணவியிடம் விசாரணை நடத்திய வாழப்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சம்பூரணம் தலைமையிலான போலீசார், மாணவியை கர்ப்பமாக்கி குழந்தை பெற காரணமான கூலி தொழிலாளி பழனிசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.

    மும்பை, சென்னை உட்பட பல இடங்களில் தேடிய போலீசார் ஒரு வழியாக முதியவர் பழனிசாமியை தேடி பிடித்து கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். 

    • கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது.
    • கடந்த 22 நாட்களாக நடைபெற்று வரும் போராட்டம் காரணமாக ரூ.600 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    நீலாம்பூர்:

    கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சோமனூர், காரணம்பேட்டை, பல்லடம், மங்கலம், அவிநாசி மற்றும் தெக்கலூர் உள்ளிட்ட இடங்களில் விசைத்தறி தொழில் முக்கியத்துவம் வாய்ந்த தொழிலாக இருந்து வருகிறது.

    இந்த பகுதியில் சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் விசைத்தறிகள் மற்றும் 10 ஆயிரம் விசைத்தறி கூடங்கள் உள்ளன.

    இந்த தொழில் மூலமாக நேரடியாகவும், மறைமுகமாவும் பல்லாயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்களிடம் கூலி உயர்வு கேட்டும், சட்டப்பூ ர்வமாக அடுத்தடுத்த கூலிகளை அமல்படுத்தவும், மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வுக்கு தீர்வு காண வலியுறுத்தியும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு எட்டப்படாத நிலையில் தொடர்ந்து போராட்டம் நடக்கிறது. இந்த நிலையில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி இன்று முதல் 15-ந் தேதி வரை 5 நாட்கள் விசைத்தறியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர்.

    அதன்படி கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது.

    கோவை சோமனூரில் உள்ள யூனியன் வங்கி முன்பு இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில், சோமனூர், அவிநாசி, தெக்கலூர், புதுப்பாளையம், பெருமாநல்லூர், கண்ணம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விசைத்தறியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

    இந்த போராட்டத்தில், 2022-ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்த கூலியில் மின் கட்டண உயர்வு மற்றும் விலைவாசி உயர்வைக் கணக்கில் கொண்டு புதிய கூலி உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    மேலும், ஜவுளி உற்பத்தியாளர்கள் ஒப்பந்த கூலி உயர்வை குறைத்து வழங்காத வகையில் சட்ட ரீதியான பாதுகாப்புடன் அமல்படுத்த வேண்டும் என்றும், மாநில, மாவட்ட நிர்வாகங்கள் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

    இதுகுறித்து விசைத்தறியாளர் பூபதி கூறும்போது, அனைத்து ஜவுளி உற்பத்தியாளர்களும் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்று கூலியை உயர்த்தி வழங்க வேண்டும். கடந்த 22 நாட்களாக நடைபெற்று வரும் போராட்டம் காரணமாக ரூ.600 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான காடா துணிகள் தேக்கமடைந்துள்ளன என்றார்.

    இன்று தொடங்கிய போராட்டமானது வருகிற 15-ந் தேதி வரை நடக்க உள்ளது. 

    • பொன்முடியின் தரக்குறைவான பேச்சு தமிழகத்தின் ஒட்டுமொத்த பெண்கள் மத்தியிலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • பெண்களை எத்தகைய மதிப்போடும், கண்ணியத்தோடும் நடத்த வேண்டும் என்பதை தங்களின் கட்சியினருக்கு அறிவுறுத்த வேண்டும்.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள 'எக்ஸ்' வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:-

    பெண்கள் குறித்த அமைச்சர் பொன்முடியின் நாகரீகமற்ற பேச்சு கடும் கண்டனத்திற்குரியது. பெண்களை அவமதிக்கும் வகையிலும் சைவம், வைணவம் குறித்து அவதூறு பரப்பும் வகையிலுமான தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடியின் தரக்குறைவான பேச்சு தமிழகத்தின் ஒட்டுமொத்த பெண்கள் மத்தியிலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    எனவே, அருவருக்கத்தக்க வகையில் பொதுவெளியில் மகளிர் குறித்து பேசி இருக்கும் வனத்துறை அமைச்சர் பொன்முடி, இனியும் அமைச்சர் பதவியில் நீடிக்க வேண்டுமா? என சிந்திப்பதோடு, பெண்களை எத்தகைய மதிப்போடும், கண்ணியத்தோடும் நடத்த வேண்டும் என்பதை தங்களின் கட்சியினருக்கு அறிவுறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • செய்தியாளர் சந்திப்பு அரங்கில் வைக்கப்பட்டுள்ள எல்இடி திரையில் நயினார் நாகேந்திரன் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
    • எல்இடி திரையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு அருகில் அண்ணாமலையின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

    தமிழக பாஜக தலைவர் பதவிக்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் இன்னும் சற்று நேரத்தில் வேட்பு மனு தாக்கல் தொடங்கி உள்ளது.

    இதில், தமிழக பாஜக தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் ஒருவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதற்கிடையே, இன்று சென்னைக்கு வருகைத்தர உள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். செய்தியாளர் சந்திப்பு அரங்கில் வைக்கப்பட்டுள்ள எல்இடி திரையில் நயினார் நாகேந்திரன் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

    மேலும், எல்இடி திரையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு அருகில் அண்ணாமலையின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

    நயினார் நாகேந்திரன் பாஜக மாநில தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

    இந்நிலையில், தி.நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக முக்கிய நிர்வாகிகளுடன் ஆண்ணாமலை ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தமிழக பாஜக தலைவர் பதவிக்கான பணிகளை ஒப்படைப்பது குறித்து அண்ணாமலை ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

    அப்போது, மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர ரெட்டியுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

    • தமிழக பா.ஜ.க. தலைவர் பதவி தேர்தலுக்கான விருப்பமனு தாக்கல் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தொடங்கியது.
    • பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி உள்ள விருப்பமனு தாக்கல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.

    சென்னை:

    தமிழகம் உள்பட நாடு முழுவதும் 19 மாநிலங்களில் புதிய தலைவர்களை நியமனம் செய்வதற்கான நடவடிக்கைகளிலும் பா.ஜ.க. தேசிய தலைமை தீவிரம் காட்டி வருகிறது.

    தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் பதவிக்கான தேர்தல் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நாளை நடைபெற உள்ளது. இதற்கான விருப்ப மனுக்களை இன்று சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    தமிழக பா.ஜ.க. தலைவர் பதவி தேர்தலுக்கான விருப்பமனு தாக்கல் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தொடங்கியது.

    பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி உள்ள விருப்பமனு தாக்கல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.

    இதையடுத்து தற்போதைய மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், சட்டசபை உறுப்பினர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் கமலாலயம் வந்துள்ளனர்.

    இந்த நிலையில், மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, வானதி சீனிவாசன் முன்னிலையில் நயினார் நாகேந்திரன் விருப்பமனு தாக்கல் செய்தார்.

    • போலி நகைகளை அடகு வைத்து பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக ஞானசேகரனின் தம்பி கைது செய்யப்பட்டுள்ளார்.
    • ஞானசேகரனின் தம்பி சுரேஷ் உள்பட 3 பேரை கைது செய்து முதலியார்பேட்டை காவல்நிலைய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் சிக்கிய ஞானசேகரனின் தம்பி சுரேஷ் உட்பட 3 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    சென்னை நகைக்கடைகளில் போலி நகைகளை அடகு வைத்து பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக ஞானசேகரனின் தம்பி கைது செய்யப்பட்டுள்ளார்.

    ஞானசேகரனின் தம்பி சுரேஷ் உள்பட 3 பேரை கைது செய்து முதலியார்பேட்டை காவல்நிலைய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திருச்சி சிவா நன்றி தெரிவித்தார்.
    • இதுவரை எதையும் நான் கேட்டுப் பெற்றதில்லை, தானாகவே தந்துள்ளார்கள்.

    சென்னை:

    அமைச்சர் பொன்முடியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் தி.மு.க.வில் வகித்து வந்த துணை பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. இதையடுத்து தி.மு.க. துணை பொதுச்செயலாளராக திருச்சி சிவாவை நியமனம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

    தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு தி.மு.க. துணை பொதுச்செயலாளராக திருச்சி சிவா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில், தி.மு.க. துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதை அடுத்து அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திருச்சி சிவா நன்றி தெரிவித்தார். இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி சிவா, கழகத்தைப் பொறுத்தவரை உழைப்புக்கு என்றும் அங்கீகாரம் உண்டு. இதுவரை எதையும் நான் கேட்டுப் பெற்றதில்லை, தானாகவே தந்துள்ளார்கள்.

    தலைவர் கொடுத்துள்ள அங்கீகாரம் என்பது நான் இன்னும் கடுமையாக இந்த இயக்கத்திற்காக உழைத்து இன்னும் பல தோழர்களை இந்த இயக்கத்தில் இணைத்து திராவிட முன்னேற்ற கழகம் என்கிற இந்த தவிர்க்க முடியாத சக்தி மேலும் வலிமை பெற உழைப்பதே எனது கடமை. பொறுப்பு வருகிறபோதே அதனுடன் கடமைகளும் அதிகமாக வருகின்றன என்பதை நான் உணர்ந்து இருக்கிறேன். எனது கடமைகள் மேலும் வேகமாக தொடரும் என்றார். 

    • பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்.
    • அதிகாலையில் 20-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது.

    திருப்பரங்குன்றம்:

    பங்குனி உத்திரம் என்பது தமிழ் கடவுளாகிய முருகப் பெருமானுக்கு உகந்த நாளாகும். இந்த நாளில் விரதம் மேற்கொண்டு வழிபாடு நடத்தினால் வாழ்க்கை சிறக்கும் என்பதுடன், திருமண தடைகள் அகலும் என்பதும் ஐதீகம்.

    அந்த வகையில் இன்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு முருகனின் அறுபடை வீடுகளின் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் இன்று அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டது. அப்போது முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். தற்போது திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மூலவர் சன்னதி உள்ளிட்ட இடங்களுக்கு பாலாலயம் செய்யப்பட்டு அங்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட வில்லை.

    எனவே மூலஸ்தானத்தில் பக்தர்கள் தரிசனம் செய்யாமல் அதற்கு பதிலாக சண்முகர் சன்னதியில் அத்தி மரத்தால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூலவர்களை பக்தர்கள் தரிசனம் செய்து விட்டு சென்றனர்.

    பங்குனி உத்திரத்தை முன்னிட்டு உற்சவர் சன்ன தியில் சண்முகர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணிய சுவாமி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    இதைத் தொடர்ந்து காலை ஐந்து மணி முதல் வழிபாட்டிற்காக பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    முன்னதாக ஏராளமான பக்தர்கள் திருப்பரங்குன்றம் மலையை சுற்றி கிரிவலம் வந்தனர். தொடர்ந்து அவர்கள் வேண்டுதலுக்காவும், வேண்டுதல்கள் நிறை வேறியமைக்காகவும் காவடி சுமந்தும், பால்குடம் ஏந்தியும் அவர்கள் கொண்டு வந்த பால் மூலம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர்.


    சுவாமிமலை

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலையில் அமைந்துள்ள முருகப்பெருமானின் 4-ம் படை வீடான சுவாமிநாத சுவாமி கோவிலில் இன்று பக்தர்கள் குவிந்தனர்.

    முன்னதாக அதிகாலை மூலவர் வள்ளி, தெய்வானை சமேத சுவாமிநாத சுவாமிக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்று, மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் முழங்க தரிசனம் செய்தனர்.

    மேலும், பங்குனி உத்திரத்தன்று முருகனை காண அதிகாலை முதலே திரளான பக்தர்கள் கோவிலில் குவிந்து நீண்ட வரிசையில் காத்திருந்து தீபம் ஏற்றியும், அர்ச்சனை செய்தும் மனமுருகி முருகப்பெருமானை வழிபட்டனர்.


    வயலூர் முருகன்

    குமார வயலூர் சுற்றுப்புற கிராமங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் பால்குடம், காவடி, அழகு குத்தி வந்தூம் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று இரவு 9 மணியளவில் முருகப்பெ ருமா ன் வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதிவுலா நடைபெறுகிறது.

    நாளை (சனிக்கிழமை) உபய அபிஷேகங்களும், 13-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணியளவில் வள்ளி தினைப்புனம் காத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 14-ந் தேதி வேலன் வேடனாக விருத்தனாக வருதல் மற்றும் யானை விரட்ட நிகழ்ச்சி பின் முருகப்பெருமானாக காட்சியளித்தலும் நடைபெறுகிறது.


    15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10:30 மணிக்கு மேல் 11:30 மணிக்குள் மிதுன லக்னத்தில் ஸ்ரீ வள்ளி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 19-ம் தேதி நடைபெற்ற கும்பாபிஷேகத்திற்காக கடந்த இரண்டு வருடங்களாக பாலாயம் செய்யப்பட்டு மூலவருக்கு அபிஷேக ஆராதனை நடைபெறாதால். இந்த பங்குனி உத்திரத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.

    • பா.ம.க. தலைவர் பதவி குறித்த ராமதாசின் அறிவிப்பு எதிர்பாராத ஒன்று.
    • நேற்று தான் ஐயா அறிவித்தார், வேகமாக இருப்பார் என்பதால் நேற்று அவரை சந்திக்கவில்லை.

    பாட்டாளி மக்கள் கட்சி அரசியல் பேரியக்கத்தை தொடங்கிய நிறுவனர் ராமதாஸ் ஆகிய நான், நிறுவனர் என்பதோடு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பொறுப்பையும் நானே ஏற்றுகொள்கிறேன்.

    தேர்தலின் வெற்றிக்காக அயராது உழைக்க வேண்டும் என்ற நோக்கில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்துவரும் அன்புமணி ராமதாசை பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவராக நியமனம் செய்கிறேன் என்று நேற்று அவர் அறிவித்தார்.

    பா.ம.க. நிறுவனர் ராமதாசின் இந்த அறிவிப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்தநிலையில் அன்புமணியை கட்சி தலைவர் பதவியில் நீக்கியது தொடர்பாக தலைவர் ராமதாசை சந்தித்து சமாதானம் செய்வதற்காக தைலாபுரத்திற்கு ஜி.கே.மணி வந்துள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

    * பா.ம.க. தலைவர் பதவி குறித்த ராமதாசின் அறிவிப்பு எதிர்பாராத ஒன்று.

    * நேற்று தான் ஐயா அறிவித்தார், வேகமாக இருப்பார் என்பதால் நேற்று அவரை சந்திக்கவில்லை.

    * ராமதாசும், அன்புமணியும் இணைந்து செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×