VIDEO: பறக்கும் விமானத்தில் துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த நபர்.. அச்சத்தில் உறைந்த பயணிகள்
- விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே நபர் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை வெளியில் எடுத்தார்.
- விமானப் பணிப்பெண்கள் துணிச்சலாகச் செயல்பட்டு மடக்கினர்.
பறக்கும் விமானத்தில் பயணி ஒருவர் துப்பாக்கியைக் காட்டி சக பயணிகளைக் கொலை செய்யப்போவதாக மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான வீடியோவும் வெளியாகி உள்ளது.
மத்திய அமெரிக்காவில் உள்ள ஹோண்டுராஸ் நாட்டில் சமீபத்தில் டெகுசிகல்பாவில் உள்ள டோன்காண்டின் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ரோட்டனுக்கு சென்ற விமானத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே நபர் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை வெளியில் எடுத்து பயணிகளை நோக்கி நீட்டி அவர்களைக் கொலை செய்யப்போவதாக மிரட்டியுள்ளார்.
இதனால் அனைவரும் அச்சத்தில் உறைந்தனர். இருப்பினும் விமானப் பணிப்பெண்கள் துணிச்சலாகச் செயல்பட்டு அந்த நபரை மடக்கினர்.
பயணிகளுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாமல் அவர்கள் தடுத்தனர். விமானி உடனடியாக விமானத்தை மீண்டும் டோன்காண்டின் சர்வதேச விமான நிலையத்திற்குத் திருப்பிவிட்டார்.
விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதும் தேசிய காவல்துறை அதிகாரிகள் விமானத்தில் ஏறி, அந்த நபரைக் கைது செய்தனர். பின்னர் பயணிகள் மற்றொரு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் தீங்கு ஏற்படவில்லை.
இந்த சம்பவம் விமான நிலைய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த கவலையை ஏற்படுத்தி உள்ளது. பாதுகாப்பு சோதனைகளை மீறி அந்த நபர் எப்படி விமானத்தில் துப்பாக்கியை கொண்டு வந்தார் என்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.