என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சிராப்பள்ளி, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    தமிழகத்தில் நாளை ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    வரும் 6-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    வரும் 7-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    வரும் 8-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    வரும் 9, 10-ந்தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    இன்று முதல் வரும் 8-ந்தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. எனினும் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக குறையக்கூடும்.

    இன்றும் நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

    வரும் 6-ந்தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு மதுராந்தகத்தில் நாளை மாலை 3.35 மணிக்கு நடைபெறுகிறது.
    • கூடுவாஞ்சேரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட கழகம் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    சென்னை:

    மே 5 வணிகர் தினத்தை முன்னிட்டு சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் மொத்தம் 6 இடங்களில் நாளை வணிகர் சங்கத்தினர் மாநாடு நடத்துகின்றனர்.

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு மதுராந்தகத்தில் நாளை மாலை 3.35 மணிக்கு நடைபெறுகிறது.

    42-வது வணிகர் தினம் வணிகர் கோரிக்கை பிரகடன மாநாடாக நடத்தப்படுவதால் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள வியாபாரிகள் தங்களது கடைகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாநாட்டுக்கு செல்கிறார்கள். இதற்காக மதுராந்தகத்தில் 5 லட்சம் பேர் அமரும் வகையில் 29 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது.

    மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு வரவேற்பு நிகழ்த்த உள்ளார். மாநாட்டு பிரகடனத் தீர்மானங்களை மாநிலப் பொருளாளர் ஹாஜி ஏ.எம்.சதக்கத்துல்லா தீர்மானங்களை முன்மொழிகிறார்.

    காஞ்சி மண்டலத் தலைவர் எம்.அமல்ராஜ், செங்கல்பட்டு தெற்கு மாவட்டத் தலைவர் பிரபாகர், வடக்கு மாவட்ட தலைவர் உத்திரகுமார் மாநாட்டு பணிகளை முன்னின்று கவனித்து வருகின்றனர்.

    பேரமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மாலை 5 மணியளவில் மதுராந்தகம் செல்கிறார். அவருடன் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.மூர்த்தி ஆகியோரும் உடன் செல்கின்றனர்.

    போகும் வழியில் கூடுவாஞ்சேரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட கழகம் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    வரவேற்பை பெற்றுக்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரமைப்பு மாநாட்டில் பங்கேற்று வணிகர்களுக்கு விருதுகள் வழங்கி நலத்திட்ட உதவிகளும் கொடுக்கிறார்.

    அதன் பிறகு விழாவில் சிறப்புரை ஆற்றுகிறார். அப்போது வணிகர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுகிறார்.

    இதே போல் தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு கொளத்தூர் த.ரவி தலைமையில் வணிகர் பாதுகாப்பு மாநாடாக மறைமலை நகரில் நாளை நடைபெறுகிறது.

    இந்த மாநாட்டில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள்.

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் படப்பை கரசங்சாலில் நாளை வணிகர் தின மாநாடு நடைபெறுகிறது. பேரவை தலைவர் எஸ்.சவுந்தரராஜன் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் பல தலைவர்கள் பங்கேற்று பேசுகின்றனர்.

    தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் திருவண்ணாமலையில் நாளை வணிகர் தின விழா நடத்தப்படுகிறது. மாநாட்டுக்கு மாநிலத் தலைவர் அ.முத்துக்குமார் தலைமை தாங்குகிறார்.

    இந்த மாநாட்டில் மு.அருண்குமார் மாநாட்டு எழுச்சி உரையாற்றுகிறார்.

    தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கம் சார்பில் நிறுவனத் தலைவர் சந்திரன் ஜெயபால், சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை அரங்கத்தில் வணிகர் தினம் நடத்துகிறார். இதில் முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் சிறப்புரை ஆற்றுகின்றனர்.

    இதில் முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் த.வெள்ளையனின் மகன் டைமண்ட் ராஜா நடத்தும் மாநாடு சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே ஜெயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது.

    இந்த மாநாட்டிலும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று பேசுகின்றனர்.

    6 இடங்களில் வணிகர்கள் மாநாடு நடத்துவதால் நாளை கடைகள் மார்க்கெட்டுகளுக்கு விடுமுறை அளித்து மாநாட்டில் வணிகர்கள் பங்கேற்க உள்ளனர்.

    • பாலப்பணிக்காக 10 அடியில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தில் தவறி விழுந்து நாகராஜ், ஆனந்தி 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
    • உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம்-ஊதியூர் இடையே குள்ளாய்பாளையம் பிரிவு அருகே மோட்டார் சைக்கிளில் செல்லும்போது அங்கு பாலப்பணிக்காக 10 அடியில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தில் தவறி விழுந்து நாகராஜ், ஆனந்தி 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம்-காங்கேயம் சாலை பகுதியில், மோட்டார் சைக்கிளில் சென்றபோது 10 அடி பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமிக்கு ஒரு லட்ச ரூபாயும் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நீட் தேர்வு தற்கொலைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும்.
    • மாணவ, மாணவியரின் உயிர்க்கொல்லியாக மாறியிருக்கும் நீட் தேர்வு மாணவ குலத்திற்கு எதிரானது.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு இன்று நடைபெறும் நிலையில், அத்தேர்வில் வெற்றி பெற்றுவிட முடியுமா? என்ற அச்சத்தில் மேல்மருவத்தூரைச் சேர்ந்த கயல்விழி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மாணவி கயல்விழியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    2017-ஆம் ஆண்டில் மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வுக்கு முந்தைய மாதமும், நீட் தேர்வு முடிவு வெளியாவதையொட்டிய சில காலங்களும் தற்கொலைக் காலங்களாக மாறி விடுகின்றன. இந்தக் கொடுமையிலிருந்து நடப்பாண்டும் தப்பவில்லை. கடந்த மார்ச் மாதம் 2-ஆம் தேதி திண்டிவனம் அருகே இந்துமதி, மார்ச் 28-ஆம் தேதி கிளாம்பாக்கம் தர்ஷினி, ஏப்ரல் 3-ஆம் தேதி எடப்பாடி பெரியமுத்தியம்பட்டி சத்யா, ஏப்ரல் 4-ஆம் தேதி புதுப்பாக்கம் சக்தி புகழ்வாணி, இன்று கயல்விழி என இரு மாதத்தில் 5 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நீட் தேர்வு ஒழிக்கப்படவில்லை என்றால் மாணவ, மாணவியரின் தற்கொலைகள் தொடர்வதையும் தடுக்க முடியாது.

    நீட் தேர்வு தற்கொலைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும். தமிழ்நாட்டில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அடுத்த நாளே நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, புதிய சட்டத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியதுடன் கடமையை முடித்துக் கொண்டது. அந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க முடியாது என மத்திய அரசு கூறிவிட்ட நிலையில் சட்டப்போராட்டம் நடத்துவோம் என்று வசனம் மட்டும் தான் தமிழக அரசு பேசுகிறது; நீட் தேர்விலிருந்து விலக்கு பெற நடவடிக்கை எடுக்கவில்லை.

    நீட் தேர்வு நடத்தப்படுவது எதற்காக என்பதே தெரியாமல், அதை நடத்திக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. நீட் தேர்வால் மருத்துவக் கல்வியின் தரம் உயரவில்லை; நீட் தேர்வால் மருத்துவக் கல்வி வணிகமயமாவது குறையவில்லை; மாறாக, இந்த இரு சிக்கல்களும் மேலும் தீவிரமடைந்துள்ளன. இதை தெரிந்து கொண்டும் நீட் தேர்வை நடத்தியே தீருவோம் என மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது நியாயமல்ல.

    மாணவ, மாணவியரின் உயிர்க்கொல்லியாக மாறியிருக்கும் நீட் தேர்வு மாணவ குலத்திற்கு எதிரானது. அதை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். மாநில அரசும் அதற்காக என்ன திட்டம் வைத்திருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக, நீட் தேர்வு தோல்வி அச்சத்துக்கு தீர்வு தற்கொலை அல்ல என்பதை மாணவச் செல்வங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தற்கொலை எண்ணத்தைக் கைவிடவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அப்பகுதியில் மின்விளக்குகள் இல்லாததால் முற்றிலும் இருள்சூழ்ந்து காணப்பட்டது.
    • ப்ரீத்தா ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே உள்ள சேர்வக்காரன் பாளையத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 44), விவசாயி. இவரது மனைவி ஆனந்தி (42). இவர்களது மகள் ப்ரீத்தா(13). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம்வகுப்பு படித்து வருகிறார்.

    இந்தநிலையில் 3 பேரும் திருநள்ளாறு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு நேற்றிரவு தாராபுரம் திரும்பினர். அங்கு பஸ் நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு 3 பேரும் சேர்வக்காரன் பாளையத்திற்கு புறப்பட்டனர்.

    தாராபுரம்-ஊதியூர் இடையே குள்ளாய்பாளையம் பிரிவு அருகே செல்லும்போது அங்கு பாலப்பணிக்காக சாலையோரம் 10 அடியில் பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. அப்பகுதியில் மின்விளக்குகள் இல்லாததால் முற்றிலும் இருள்சூழ்ந்து காணப்பட்டது. இதனால் பள்ளம் இருப்பது தெரியாததால் நாகராஜ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பள்ளத்திற்குள் பாய்ந்தது. இதில் 3 பேரும் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினர்.

    இரவு நேரம் என்பதால் அவர்கள் பள்ளத்திற்குள் விழுந்து கிடப்பதை யாரும் கவனிக்கவில்லை. பலத்த காயமடைந்து ரத்தம் வெளியேறியதில் நாகராஜ், ஆனந்தி ஆகிய 2 பேரும் உயிரிழந்தனர். ப்ரீத்தா ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

    இன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள், அவரது சத்தம் கேட்டு பள்ளத்திற்குள் எட்டிப்பார்த்தனர். அப்போது 3 பேரும் விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி யடைந்தனர். உடனே இது குறித்து குண்டடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன், ப்ரீத்தாவை மீட்டு சிகிச்சைக்காக தாரா புரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நாகராஜ், ஆனந்தி உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    பாலப்பணிக்காக தோண்டப்பட்ட 10 அடி பள்ளத்தை சுற்றி மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை. மேலும் தடுப்புகள் மற்றும் எச்சரிக்கை அறிவிப்புகள் எதுவும் வைக்கப்படவில்லை. இதன் காரணமாகவே பள்ளம் இருப்பது தெரியாமல் அதற்குள் விழுந்து 2 பேரும் பலியாகி உள்ளனர். பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டவர்களின் அலட்சியம் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இது போல் திருப்பூர் மாவட்டத்தின் பல இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு உள்ளது. மேலும் விபத்துக்களும் நிகழ்ந்துள்ளது. எனவே இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நிகழாதவாறு இருக்க தேவையான பாதுகாப்பு நடவடி க்கைகளை மேற்கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    விபத்துக்குக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருநள்ளாறு கோவிலுக்கு சென்று விட்டு திரும்பியபோது கணவன்-மனைவி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • ராஜ்யசபா சீட் குறித்து ஒப்பந்தம் செய்யப்படாவிட்டாலும் அ.தி.மு.க. சார்பில் வாய்மொழி உறுதியளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
    • எடப்பாடி பழனிசாமி, தே.மு.தி.க.வுக்கு ராஜ்யசபா சீட்டு தருவதாக தாங்கள் கூறவில்லை என கூறினார்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது தே.மு.தி.க. அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தது. அப்போது தே.மு.தி.க.வுக்கு 5 மக்களவைத் தொகுதிகளை ஒதுக்கிய அ.தி.மு.க. ஒரு மாநிலங்களவை எம்.பி. சீட்டு தருவதாக வாய்மொழி உத்தரவாதம் அளித்ததாக கூறப்பட்டது. இதனை தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தும் உறுதி செய்தார்.

    ராஜ்யசபா சீட் குறித்து ஒப்பந்தம் செய்யப்படாவிட்டாலும் அ.தி.மு.க. சார்பில் வாய்மொழி உறுதியளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தே.மு.தி.க.வுக்கு ராஜ்யசபா சீட்டு தருவதாக தாங்கள் கூறவில்லை என கூறினார்.

    இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் தே.மு.தி.க.வுக்கு ராஜ்ய சபா சீட் தருவதாக அ.தி.மு.க. கூறியது உண்மைதான் என்று அக்கட்சியின் பொருளாளர் எல்.கே.சுதீஷ் கூறி உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

    ஒரு ராஜ்ய சபா எம்.பி. சீட் தருவதாக அ.தி.மு.க. வாக்குறுதி அளித்தது முழுக்க முழுக்க உண்மை.

    அ.தி.மு.க. அளித்த உத்தரவாதத்தால்தான், 2024 பாராளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடவில்லை. நேரம் வரும்போது அனைத்தையும் வெளிப்படையாக பேசுவேன் என்று தெரிவித்துள்ளார்.

    • ராமநாதபிரபுவை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்த பொன்னையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் மகன் ராமநாதபிரபு (வயது 28). வேலைக்கு செல்லாமல் ஆன்லைன் ரம்மி, மது போதை என்று ஊரை சுற்றி வந்துள்ளார். பண பலம் மிக்க அவரை பெற்றோரும் பல முறை கண்டித்தும் அவர் திருந்தவில்லை.

    இதற்கிடைய திருமணத்திற்கு பிறகு ராமநாதபிரபு தன்னுடைய மனைவி ஊரான ராமநாதபுரம் மாவட்டம் அம்மன் கோவிலை அடுத்த தெற்கு தரவை பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    நேற்று இரவு அதே பகுதியைச் சேர்ந்த சாத்தையா மற்றும் சிலருடன் அமர்ந்து ராமநாதபிரபு மது அருந்தினார். பின்னர் தலைக்கேறிய அளவுக்கு அதிகமான போதையுடன் தனக்கு சொந்தமான காரில் நண்பர்களான அம்மன்கோவிலை சேர்ந்த பழனி மற்றும் வள்ளிமாடன்வலசையைச் சேர்ந்த சிவா, தெற்கு தரவையைச் சேர்ந்த சாத்தையா ஆகியோருடன் அங்கிருந்து புறப்பட்டார்.

    அப்போது எதிரே வாலி நோக்கத்தில் இருந்து ராமநாதபுரம் நோக்கி உப்பு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. அதனை டிரைவர் கார்த்தி ஓட்டினார். அம்மன்கோவிலை அடுத்த தமிழ்நாடு சிறப்பு காவல் படை குடியிருப்பு பகுதியில் சென்றபோது எதிரோ வந்த லாரி, காரின் பக்கவாட்டு பகுதியில் லேசாக உரசியது. இதில் அந்த காரின் கண்ணாடி உடைந்ததுடன், காரிலும் கீறல் ஏற்பட்டது.

    இதனையடுத்து லாரியை முந்திச் சென்ற பிரபு லாரியை மடக்கி வழிமறித்து நிறுத்தினார். பின்னர் அந்த லாரி டிரைவர் கார்த்தியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடனடியாக அந்த பகுதியைச் சேர்ந்த பலர் திரண்டனர். அப்போது காரில் கீறல் விழுந்ததை உடனடியாக சரி செய்து தருவதாகவும், கண்ணாடியை மாற்றி தருவதாகவும் லாரி டிரைவர் கார்த்தி கூறியுள்ளார்.


    ஆனால் அதனை காதில் வாங்கிக்கொள்ளாத ராமநாதபிரபு லாரி டிரைவரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதையடுத்து தகராறு நடந்த பகுதியில் திரண்ட அம்மன்கோவில் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், லாரி டிரைவர் கார்த்திக்கு ஆதரவாக, ராமநாதபிரபு தரப்பினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அத்துடன் தனது சகோதரரை தொலைபேசியில் தொடார்பு கொண்டு, சம்பவ இடத்திற்கு வரச்சொன்னதன்பேரில், அவருடன் அம்மன்கோவில் கிராமத்தைச் சேர்ந்த சில வாலிபர்கள் அங்கு வந்தனர்.

    அவர்களுடனும் போதையில் இருந்த ராமநாதபிரபு தகராறு செய்தார். மேலும் அவருடன் இருந்த அம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர்களை பார்த்து, தங்களுக்கு ஆதரவாக பேசாமல் வெளியூர் நபருக்கு ஏன் ஆதரவாக பேசுகிறீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஒருவழியாக இருதரப்பினரையும் சமாதானம் செய்து பிரச்சினையை மேலும் வளர்க்க வேண்டாம், அங்கிருந்து கலைந்து செல்லுமாறும், காருக்கும், லாரிக்கும் வழியை விடுமாறும் கூறியதையடுத்து பிரச்சினை முடிவுக்கு வந்தது.

    இதைத்தொடர்ந்து காரை எடுத்துக் கொண்டு புறப்பட்ட ராமநாதபிரபு தன்னுடன் காரில் வந்த நண்பர்கள் சிவா, சாத்தையா ஆகியோரை அதே இடத்தில் இறக்கிவிட்டார். ஆத்திரம் தீராமல் தான் அவமானப்படுத்தப்பட்டு விட்டதாக எண்ணினார். சிறிது தூரம் சென்று விட்டு மீண்டு காரை திருப்பிய ராமநாதபிரபு அதிவேகமாக வந்த அந்த இடத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது காரை மூர்க்கத்தனமாக ஏற்றினார். மேலும் பின் நோக்கி காரை இயக்கி மீண்டும் ஒருமுறை ஏற்றினார். பின்னர் காரில் இருந்து அவர் குதித்தார்.

    இதனை பார்த்த அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் அதிர்ச்சியில் நிலைகுலைந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் இங்கே நடந்தது கனவா அல்லது நனவா என்று புரியாமல் மக்கள் நின்றனர். இந்த கோர சம்பவத்தில் சிக்கியவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த கிராம மக்கள் உடனடியாக 108 ஆம்புலன்சை வரவழைத்தனர். த.மு.மு.க. மாநில துணைப் பொதுச் செயலாளர் சலிமுல்லா கான், வர்த்தக அணி மாநில செயலாளர் பனைக்குளம் பரக்கத்துல்லா ஆகியோர் தலைமையில் காயம் அடைந்த 12 பேரையும் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே தகவல் அறிந்து சம்பவம் நடந்த பகுதிக்கு ஒரு கிராமமே திரண்டு வந்தது. அவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஓலமிட்டு கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதில் சாத்தையா உட்பட 7 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மதுரை செல்லும் வழியில் ராமநாதபிரபுவின் நண்பர் சாத்தையா பரிதாபமாக இறந்தார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டது.

    கை, கால் முறிவு, தலையில் காயம் அடைந்த மற்றவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் விபத்தை ஏற்படுத்தியவர் கிராமமக்கள் கையில் சிக்கினால் அவரை அடித்தே கொலை செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் ராமநாதபிரபுவை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அவர் மீது கடுமையான காயத்தை ஏற்படுத்தி கொலை மிரட்டல், பொது மக்களுக்கு இடையூறு, தீங்கு விளைவித்தல், மரணத்தை ஏற்படுத்தக்கூடிய விபத்து, தாக்குதல், கொலை முயற்சி ஆகிய 5 பிரிவுகளில் கேணிக்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    சினிமாவை மிஞ்சும் அளவுக்கு, ஒரே கிராமத்தைச் சேர்ந்த 12 பேரை மூர்க்கத்தனமாக காரை கொண்டு ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் அங்கு அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • ED, Income Tax வைத்து அத்துமீறி செயல்படுவது அந்த அமைப்புக்களின் மீதே மக்களுக்கு நம்பிக்கை போய் விட்டது.
    • தி.மு.க.வில் யாரும் இது பற்றி அஞ்சவும் இல்லை. கவலைப்படவும் இல்லை.

    கோயம்புத்தூரில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * பயம் என்பது தி.மு.க. அகராதியிலேயே கிடையாது.

    * ED, Income Tax இதை எல்லாம் வைத்து அதிகாரம் இருக்கிறது என்று அவர்கள் அத்துமீறி செயல்படுவது அந்த அமைப்புக்களின் மீதே மக்களுக்கு நம்பிக்கை போய் விட்டது.

    * தி.மு.க.விலும் யாரும் இது பற்றி அஞ்சவும் இல்லை. கவலைப்படவும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தாண்டுக்கான கோடை விழா கோத்தகிரி நேரு பூங்காவில் 13-வது காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது.
    • கோத்தகிரி கண்காட்சியில் இடம் பெற்று உள்ள காய்கறி அலங்காரங்கள் அச்சு அசப்பில் நிஜ விலங்குகள், பறவைகள் போல காட்சி அளித்தன.

    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல்- மே ஆகிய 2 மாதங்கள் கோடை சீசன் ஆகும். அப்போது இங்கு நிலவும் இதமான காலநிலையை அனுபவிப்பதற்காகவும், சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் லட்சக்கணக்காக சுற்றுலாப் பயணிகள் நீலகிரிக்கு படையெடுத்து வருவது வழக்கம்.

    அப்படி வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விப்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி இந்தாண்டுக்கான கோடை விழா கோத்தகிரி நேரு பூங்காவில் 13-வது காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது.

    இதனை மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

    கோத்தகிரி காய்கறி கண்காட்சியில் தமிழர் பண்பாட்டை போற்றும் விதமாக கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, முள்ளங்கி, கேரட் உள்பட 2 ½ டன் காய்கறிகளை கொண்டு வாடிவாசலில் இருந்து சீறி பாயும் காளை உள்பட பல்வேறு அலங்காரங்கள் தத்ரூபமாக அமைக்கப்பட்டு உள்ளன.

    நேற்று வார விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் காய்கறி கண்காட்சிக்கு வந்திருந்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டு உள்ள அலங்கார வடிவமைப்புகளை கண்டு ரசித்தனர்.

    இந்த நிலையில் 2-வது நாளாக இன்றும் கோத்தகிரி பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    இங்கு இடம்பெற்று உள்ள உருளைக்கிழங்கால் ஆன சிலம்பாட்டம், கேரட், பீட்ரூட்டால் ஆன தமிழ் மறவன், பட்காய் மூலம் உருவான மரகத ப்புறா, பச்சை-சிவப்பு மிளகாய்களால் ஆன பச்சைக்கிளி, சுகினி, கோவைக்காய், பச்சை-சிவப்பு மிளகாய், முள்ளங்கி, கேரட்டால் ஆன தஞ்சாவூர் பொம்மை, சேனைக்கிழங்கால் ஆன நீலகிரி வரையாடு போன்ற அலங்காரங்கள் ஆகியவை சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அமைந்து இருந்தது.

    மேலும் கோத்தகிரி கண்காட்சியில் இடம் பெற்று உள்ள காய்கறி அலங்காரங்கள் அச்சு அசப்பில் நிஜ விலங்குகள், பறவைகள் போல காட்சி அளித்தன.

    அதுவும்தவிர திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், தேனி, ஈரோடு, திருப்பூர், கோவை உள்பட பல்வேறு மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் பல்வேறு காய்கறிகளால் ஆன பாண்டா கரடி, இருவாச்சி பறவை, திருவள்ளுவர், பூவில் இருந்து தேன் எடுக்கும் தேனீ, புலி, மாட்டு வண்டி, சிங்கம், கழுகு ஆகிய அலங்காரங்களும் கோத்தகிரி கண்காட்சியில் இடம்பெ ற்று உள்ளன. அவற்றின் முன்பாக சுற்றுலாப் பயணிகள் நின்று செல்பி எடுத்துக் கொண்டனர்.

    காய்கறி கண்காட்சி இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. அதைத்தொடர்ந்து பரிசளிப்பு விழா நடக்கிறது.

    • 2 பேரும் தடுப்பணையில் நூதன முறையில் மீன் பிடித்ததாக கூறப்படுகிறது.
    • இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அரும்பாவூர்:

    பெரம்பலூர் மாவட்டம் தொண்டமாந்துறை பாரதிநகர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் இவரது மகன் தினேஷ் (வயது 28). தொண்டமாந்துறை அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் அவரது மகன் ரஞ்சித் (25).

    இவர்கள் 2 பேரும் நேற்று நள்ளிரவு அங்குள்ள பேச்சாயி அம்மன் கோவிலுக்கு செல்லும் தெருவிளக்கு மின் வயரில் இருந்து இணைப்பு எடுத்து அங்குள்ள தடுப்பணையில் நூதன முறையில் மீன் பிடித்ததாக கூறப்படுகிறது.

    நெற்றியில் விளக்கு பொருத்தி அந்த வெளிச்சத்தில் மீன்களைப் பார்த்து மின்சாரத்தை பாய்ச்சும்போது அந்த மீன்கள் கொத்தாக மயக்க நிலைக்கு வந்து பிடிபடும் என கூறப்படுகிறது.

    இவ்வாறு கையில் மின் வயரை வைத்துக்கொண்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து அவர்களை தாக்கியது. இதில் தினேஷ் மற்றும் ரஞ்சித் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த பெரம்பலூர் தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடம் வரைந்து வந்தனர் பின்னர் தடுப்பணை நீரில் பிணமாக மிதந்த அவர்கள் இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தகவல் அறிந்த பெரம்பலூர் துணை போலி சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் சம்பவ இடம் விரைந்து சென்றார் மேலும் அரும்பாவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கயல்விழி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    நூதன முறையில் தண்ணீரில் மின்சாரத்தை பாய்ச்சி மீன்பிடித்த 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் அரும்பாவூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 114.20 அடியாக உள்ளது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வெள்ளி மலையில் மூல வைகை ஆறு உற்பத்தியாகிறது. இதன் மூலம் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது.

    இது தவிர கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. இன்று அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. மழைப்பொழிவு முற்றிலும் ஓய்ந்த நிலையில் மூல வைகை ஆற்றில் தண்ணீர் வரத்தின்றி முற்றிலும் வறண்டு காணப்படுகிறது.

    இதே நிலை நீடித்தால் இப்பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மழை பெய்தால் மட்டுமே விவசாயம் மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண முடியும். மூல வைகை ஆறு வறண்டுள்ளதால் வைகை அணைக்கு 25 கன அடி நீர் மட்டுமே வருகிறது. இதனால் 71 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 55.51 அடியாக சரிந்துள்ளது.

    மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 2802 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 114.20 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 100 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. 1593 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 36.70 அடியாக உள்ளது. 27 கன அடி நீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 100.69 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 3 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.

    சண்முகாநதி அணை நீர்மட்டம் 39.10 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. கூடலூர் 2.6, சண்முகாநதி 3.4 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. 

    • வீராணத்தில் இருந்து சென்னைக்கு குடிநீர் தேவைக்காக தினமும் தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது.
    • ஏரி நீரை கால்நடைகள் குடிக்கவும், அத்தியாவசிய தேவைக்கு தண்ணீரை பயன்படுத்தவும் மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

    சேத்தியாதோப்பு:

    கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அடுத்த பூதங்குடியில் தொடங்கும் வீராணம் ஏரி, லால்பேட்டை வரை 14 கி.மீ. நீளம், 5 கி.மீ. அகலம் கொண்டது.

    இந்த ஏரி மூலம் காட்டுமன்னார் கோவில், புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை, குமராட்சி, சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் சம்பா நெல் நடவு பருவங்களில் 54 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெறுகின்றன.

    வீராணத்தில் இருந்து சென்னைக்கு குடிநீர் தேவைக்காக தினமும் தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது.

    கடந்த 5 நாட்களுக்கு முன் வடவாற்றில் தண்ணீர் பச்சை நிறத்தில் வந்ததை தொடர்ந்து பொதுப்பணித்துறையினர் வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்தை நிறுத்தினார்கள்.

    ஏரியின் முழு கொள்ளளவான 48.50 அடியில் தற்போது 44 அடி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக ஏரியின் கரையோரங்களில் தண்ணீரில் நுரை பொங்கி காணப்படுகிறது.

    இதனால் ஏரியில் ரசாயனம் ஏதேனும் கலந்திருக்கலாம் என விவசாயிகள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    இதனால் ஏரி நீரை கால்நடைகள் குடிக்கவும், அத்தியாவசிய தேவைக்கு தண்ணீரை பயன்படுத்தவும் மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

    கடந்த ஆண்டு தண்ணீர் பச்சை நிறமாக மாறியபோது சென்னை மாசு கட்டுப்பாடு மற்றும் தண்ணீர் ஆய்வு அதிகாரிகள் ஏரியில் தண்ணீரை எடுத்து ஆய்வு செய்தனர்.

    அதேபோல் மீண்டும் அதிகாரிகள் ஏரி தண்ணீரை ஆய்வு செய்து விவசாயிகள், பொதுமக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

    ×