search icon
என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • தனியார் கல்லூரியை சுற்றியுள்ள தங்கும் விடுதிகளில் கஞ்சா புழக்கம் இருப்பதாக தகவல்.
    • மாணவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியை சுற்றியுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கியுள்ள விடுதிகளில், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் பெருமளவில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.


    இந்த சோதனையில், போதை மாத்திரைகள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள், பாங்கு போதை வஸ்து உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், கல்லூரியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீஸ் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று ஏராளமான பரிசுகள், பதக்கங்கள் பெற்றுள்ளார்.
    • ஆசியன் சர்பிங் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் மீனவர் பகுதி ஒத்தவாடை தெருவை சேர்ந்த சுகந்தி என்பவரின் மகள் கமலி (வயது 14). இவர் மாமல்லபுரம் செயின்ட் மேரீஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலை பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகி றார்.

    மீனவர் குடும்பத்தை சேர்ந்த இவர் தனது மாமா கடலில் சர்பிங் செய்வதை பார்த்து வளர்ந்ததால், அதன்மீது ஆர்வம் ஏற்பட்டு 2வயது முதலே சர்பிங் மற்றும் ஸ்கேட்டிங் பயிற்சி எடுக்க துவங்கினார்.

    தொடர்ந்து வயது வாரியான பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று ஏராளமான பரிசுகள், பதக்கங்கள் பெற்றுள்ளார்.

    இந்த நிலையில் மாலத்தீவில் நடந்த ஆசியன் சர்பிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று 4 சுற்றுவரை முன்னேறி, இந்தியா சார்பில் வெள்ளிப்பதக்கம் வென்றார். 

    தொடர்ந்து ஜப்பானில் 2026ம் ஆண்டு செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் அக்டோபர் 4- ஆம் தேதி வரை16நாட்கள் நடைபெற உள்ள 20-வது ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்று விளையாடவும் தகுதி பெற்றுள்ளார்.

    ஆசிய விளையாட்டு போட்டியிலும், ஒலிம்பிக் போட்டியிலும் முதன், முதலாக சர்பிங் போட்டி இடம் பெற்றுள்ள நிலையில், ஆசிய அளவிலான அந்த போட்டியில் பங்கேற்க செல்ல இருக்கும் மாமல்லபுரம் பள்ளி மாணவி கமலிக்கு அவர் படிக்கும் பள்ளியின் சார்பில் பள்ளி தாளாளர் பிரான்சிஸ், தலைமை ஆசிரியை பிருந்தா ஆகியோர் சிறப்பு செய்து, பரிசுத்தொகை வழங்க ஏற்பாடு செய்தனர்.

    மாமல்லபுரம் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தமிழ்செல்லி சிறப்பு விருந்தினராக பங்கேற்று சந்தனமாலை, கிரீடம் அணிவித்து கவுரவித்தனர்.

    • நிகழ்ச்சியின் முடிவில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும், பயிற்சி பள்ளிக்கும் சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டது.
    • திருக்கழுகுன்றம் பேரூராட்சி தலைவர் யுவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அடுத்த சதுரங்கபட்டினம் டச்சுக்கோட்டை அருகே உள்ள கடற்கரையில் தற்காப்பு கலையின் "வேல்டு ரெக்கார்ட்" சான்றிதழ் தேர்விற்காக ஆசான் மார்ஷியல் அரிஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் அகாடெமி இன்டர்நேஷனல் சார்பில், குலோபல் வேல்டு ரெக்கார்ட் அமைப்பின் அதிகாரி ராஜேஸ்குமார் முன்னிலையில் 30 நிமிடத்தில், 3 வயது முதல் 20 வயது வரையான 102 பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் சுருள் வாள் வீச்சு, வேல்கம்பு, வாட்டர் பேலன்ஸ், பைட்டிங் ஸ்டிக், சிலம்பம் ஒற்றை சுற்று, இரட்டை சுற்று ஆகிய தற்காப்பு கலைகளை தொடர்ந்து செய்து காண்பித்தனர்.


    நிகழ்ச்சியின் முடிவில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும், பயிற்சி பள்ளிக்கும் சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டது. மாமல்லன் தெக்கன்களரி ஆசான் அசோக்குமார், ம.தி.மு.க துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, கல்பாக்கம் அணுமின் நிலைய இயக்குனர் சேஷையா, திருக்கழுகுன்றம் பேரூராட்சி தலைவர் யுவராஜ், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • ஜல்லிக்கட்டு காளை காத்தாடி பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.
    • ஆணையர் சமயமூர்த்தி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    மாமல்லபுரம்:

    தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை மற்றும் மீடியா பாக்ஸ் நிறுவனம் இணைந்து நடத்தும் 3வது சர்வதேச காத்தாடி திருவிழா கோவளம் அடுத்த திருவிடந்தை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் நடந்து வருகிறது., இதில் ஜல்லிக்கட்டு காளை காத்தாடி பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது மற்றும் பல்வேறு வனவிலங்குகள், கார்ட்டூன் கதாபாத்திரங்கள், கடல்வாழ் உயிரினங்கள் என, வெவ்வேறு வடிவ காத்தாடிகள், கண்கவர் வண்ணங்களில், நீலவான பின்னணியில் வானில் பறந்து பார்வையாளர் அனைவரையும் கவர்ந்து வருகிறது.


    இந்தியா, தாய்லாந்து, சுவிட்சர்லாந்து, வியட்நாம், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளை சேர்ந்த, 40 காத்தாடி கலைஞர்கள், 200க்கும் மேற்பட்ட காத்தாடிகளை பறக்க விட்டுள்ளனர்., போட்டியை துவக்கி வைத்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் வெளிநாட்டவர் பறக்க விட்ட ஜல்லிக்கட்டு காளை காத்தாடியை அருகில் சென்று பார்த்து ரசித்தனர்., சுற்றுலாத்துறை செயலர் சந்திரமோகன், ஆணையர் சமயமூர்த்தி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


     வரும் 18ம் தேதி வரை தினசரி பிற்பகல் 2:00 மணி முதல், மாலை 6மணி வரை காத்தாடிகள் பறக்க விடப்படுகின்றன., நுழைவு கட்டணம் ரூ.200, 12 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு இலவச அனுமதி. உணவு, வர்த்தக அரங்குகள், கேளிக்கை விளையாட்டுகள், பாட்டுக்கச்சேரி, பேஷன்ஷோ மேடை போன்ற அரங்குகள் வளாகத்தின் உள்ளே இடம் பெற்றுள்ளது.

    • கடலில் நீந்தி மாலை ஈஞ்சம்பாக்கம் சென்றனர்.
    • நாளை சென்னை மெரினா கடற்கரையை அடைகின்றனர்.

    மாமல்லபுரம்:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் சென்னை வேவ்ஸ் ரைடர்ஸ் குழு இணைந்து சென்னை பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு, நீச்சல் பயிற்சியளித்து வருகின்றனர்., இப்பயிற்சி பெற்றவர்கள், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மாநில ஆறுகள், மற்றும் கோவாவில் நடைபெற்ற கடல் நீச்சல் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.


    தற்போது கின்னஸ் சாதனை பதிவிற்காக, 11வயது முதல் 30 வயது வரையிலான ஒரு பெண் உட்பட 15 பேர், கின்னஸ் சாதனை பதிவிற்காக, தற்போது கடலில் சாகச பயணம் மேற் கொண்டு வருகின்றனர்., இவர்கள் கடந்த 5ம் தேதி, ராமேஸ்வரம் மண்டபம் பகுதி கடலில் இருந்து, சென்னை மெரினா கடற்கரை வரை 604கி.மீ தூரம் நீச்சல் சாகச பயணத்தை துவங்கினர்.


    இவர்கள் நேற்று மாலை மாமல்லபுரம் கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர்., அவர்களை தமிழ்நாடு மீனவ பேரவை தலைவர் அன்பழகனார் மற்றும் மாமல்லபுரம் மீனவ சபையினர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து வரவேற்றனர். இன்று காலை மீண்டும் கடலில் நீந்தி மாலை ஈஞ்சம்பாக்கம் சென்றனர். நாளை சென்னை மெரினா கடற்கரையை அடைகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சீனிவாசராகவன் தெரு மற்றும் தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை என 4 வழித்தடங்களுக்கும் செல்லும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது.
    • அமைச்சர் தா.மோ.அன்பரசன், ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

    தாம்பரம்:

    சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் ரெயில் நிலையம் அருகில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.234 கோடியில் மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. நீள்வட்ட சுற்றுப்பாதையுடன் கூடிய இந்த மேம்பாலம் சென்னை-செங்கல்பட்டு, செங்கல்பட்டு-சென்னை, மேலும் சீனிவாசராகவன் தெரு மற்றும் தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை என 4 வழித்தடங்களுக்கும் செல்லும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது.

    இதில் செங்கல்பட்டு - சென்னை மற்றும் சீனிவாசராகவன் தெருவுக்கு செல்லும் பாலம் ஏற்கனவே பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்ட நிலையில், சென்னை - செங்கல்பட்டு வழித்தட மேம்பாலத்தை டி.ஆர்.பாலு எம்பி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் ஆகியோர் முன்னிலையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

    இதில் எம்எல்ஏக்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, கமிஷனர் பாலச்சந்தர், துணை மேயர் கோ.காமராஜ், மண்டல குழு தலைவர்கள் டி.காமராஜ், எஸ்.இந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • ஆஸ்பத்திரியில் வெடி குண்டு வைக்கப்பட்டு இருப்பதாக எழுதப்பட்டு இருந்தது.
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சோழிங்கநல்லூர்:

    பெரும்பாக்கத்தில் பிரபல தனியார் ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரிக்கு தபால் ஒன்று வந்தது. அதில் ஆஸ்பத்திரியில் வெடி குண்டு வைக்கப்பட்டு இருப்பதாக எழுதப்பட்டு இருந்தது. இதுபற்றி பெரும்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வெடிகுண்டு தடுப்பு போலீசார் விரைந்து வந்து சோதனை செய்தனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் இல்லை. புரளி என்பது தெரிந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்த கடிதத்தில் மதுராந்தகம் அருகே உள்ள புக்கத்துரையை சேர்ந்த மேகநாதன் என்று முகவரி குறிப்பிடப்பட்டு இருந்தது.

    மேலும் பா.ம.க. கட்சியை தறக்குறைவாக விமர்சிக்கும் தி.மு.க. கட்சிக்கு பாடமாக வெடி குண்டு வைத்து உள்ளேன். என் சமுதாயத்துக்காக பல ஆஸ்பத்திரிகளில் வெடிகுண்டு வைத்து இருக்கிறேன் என்ற பரபரப்பு கடிதமும் இருந்தது. இதனை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பஸ்நிறுத்தத்தில் பஸ் நின்றதும் அஜித் குமாரை கீழே இறக்கி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர்.
    • உடல் கிடந்த பஸ் நிறுத்தத்தில் இருந்து சுமார் 50 அடி தூரத்திலேயே செம்மஞ்சேரி போலீஸ் நிலையம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    சோழிங்கநல்லூர்:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே உள்ள சேத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது28) கொத்தனார்.

    இவர் சென்னை செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெறும் கட்டுமான பணிக்காக தனது தம்பி பிரேம் குமார் மற்றும் நண்பர்கள் என மொத்தம் 5 பேர் ரெயில் மூலம் இன்று காலை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு வந்தனர்.

    பின்னர் அஜித்குமார் உள்பட 5 பேரும் அங்கிருந்து மாநகர பஸ்சில் செம்மஞ்சேரிக்கு சென்று கொண்டிருந்தனர். காலை 9 மணியளவில் சோழிங்கநல்லூர் சிக்னல் அருகே மாநகர பஸ்வந்து கொண்டு இருந்த போது திடீரென அஜித் குமாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் பஸ்சிலேயே சுருண்டு விழுந்தார். இதனை கண்டு உடன் வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர்.

    அங்குள்ள பஸ்நிறுத்தத்தில் பஸ் நின்றதும் அஜித் குமாரை கீழே இறக்கி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர். இதற்குள் அஜித்குமார் பரிதாப இறந்துபோனார். இதனால் அவரது உடல் பஸ்நிறுத்தத்தில் இருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த உடன் வந்தவர்கள் போலீசுக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தனர். ஆனால் போலீசார் உடனடியாக வரவில்லை.

    இதன் காரணமாக பஸ் நிறுத்தத்திலேயே அஜித் குமாரின் உடல் கிடந்தது. காலை நேரம் என்பதால் ஏராளமான பயணிகள் அந்த பஸ்நிறுத்தத்தில் காத்திருந்தனர். அவர்களும் அருகில் இறந்தவர் உடல் கிடப்பதை கண்டு எந்த சளனமும் இல்லாமல் அருகிலேயே நின்றபடி வரும் பஸ்களில் ஏறிச்சென்றனர். சிலர் வேடிக்கை பார்த்த படி சென்றனர். அருகில் அழுது கொண்டிருந்த அஜித்குமாரின் தம்பி பிரேம் குமார் மற்றும் உடன் வந்தவர்களுக்கு உதவயாரும் முன்வரவில்லை என்று தெரிகிறது.

    இதற்கிடையே சுமார் 2 மணி நேரத்திற்கு பின்னர் காலை 11 மணியளவில் செம்மஞ்சேரி போலீசார் வந்து இறந்த அஜித்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    உடல் கிடந்த பஸ் நிறுத்தத்தில் இருந்து சுமார் 50 அடி தூரத்திலேயே செம்மஞ்சேரி போலீஸ் நிலையம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இறந்தவர் உடலை மீட்க போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். அஜித்குமார் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்து இருக்கலாம் என்று தெரிகிறது. அவரது இறப்புக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • போலீசார் லாரியை நிறுத்தியதும் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
    • மாடுகள் கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுராந்தகம்:

    ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு சட்டவிரோதமாக லாரியில் மாடுகள் கடத்தி செல்லப்படுவதாக அச்சரப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை த்தொடர்ந்து அச்சரப்பாக்கம் அருகே தேன்பாக்கம் கூட்டு ரோட்டில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது லாரியில் சுமார் 45 எருமை மாடுகள் போதிய இடவசதி இல்லாமல் நெருக்கமாக கட்டி சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படுவது தெரிந்தது.

    போலீசார் லாரியை நிறுத்தியதும் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். போலீசார் லாரியுடன் மாடுகளை மீட்டனர். பின்னர் மீட்கப்பட்ட 45 மாடுகளை மறைமலைநகரில் உள்ள கோசாலையில் ஒப்படைத்தனர். மாடுகள் கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். விலங்குகள் நல அமைப்பை சேர்ந்த ஒருவர் கொடுத்த தகவலின் படி இந்த மீட்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    • மின் நிலைய வளாகத்தில் உள்ள பராமரிப்பு மின் செயற்பொறியாளர் இயக்கத்தில் நடைபெற உள்ளது.
    • பொதுமக்கள் இந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்.

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தாம்பரம் கோட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (11-ந் தேதி) காலை 11 மணியளவில் தாம்பரம், புது தாங்கல் துணை மின் நிலைய வளாகத்தில் உள்ள பராமரிப்பு மின் செயற்பொறியாளர் இயக்கத்தில் நடைபெற உள்ளது.

    பொதுமக்கள் இந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரவுடி சீர்காழி சத்யாவை காலில் சுட்டு போலீசார் கைது செய்தனர்.
    • அலெக்சிஸ் சுதாகர் மீது மேலும் 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    சென்னை:

    சீர்காழியை சேர்ந்த ரவுடி சத்யா, மாமல்லபுரம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசாரால் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டார்.

    மாமல்லபுரம் பகுதியில் பண்ணை வீடு ஒன்றில் நடைபெற்ற வக்கீல் அலெக்ஸ் சுதாகரின் பிறந்த நாள் விழாவுக்காக சீர்காழியில் இருந்து வந்திருந்தபோதுதான் சத்யா போலீசில் சிக்கினார். விலை உயர்ந்த சொகுசு காரில் சென்றபோது போலீசார் மடக்கி பிடித்ததால் தப்பி ஓடிய சீர்காழி சத்யா மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.

    இதில் அவரது இடது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. பிடிக்க முயன்றபோது போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்றதால் துப்பாக்கியால் சுட நேரிட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    சீர்காழி சத்யா வைத்திருந்த துப்பாக்கி கள்ளத்துப்பாக்கி என்பது மாமல்லபுரம் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.

    இந்த துப்பாக்கியை பா.ஜனதா பிரமுகரான வக்கீல் அலெக்ஸ் சுதாகர் வாங்கி கொடுத்திருப்பதாக குற்றம் சாட்டிய போலீசார் அவரையும் கைது செய்திருந்தனர். அலெக்ஸ் சுதாகரிடம் இருந்து 5 தோட்டாக்கள் மற்றும் இன்னொரு கள்ளத்துப்பாக்கி ஆகியவையும் பிடிபட்டது. இது தொடர்பான வழக்கில் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் அலெக்ஸ் சுதாகரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய செங்கல்பட்டு போலீஸ் சூப்பிரண்டு சாய்பிரனித் பரிந்துரை செய்தார். இதனை ஏற்று மாவட்ட கலெக்டர் அருண்குமார் அலெக்ஸ் சுதாகரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.

    இதைத் தொடர்ந்து மாமல்லபுரம் போலீசார் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இது தொடர்பான உத்தரவு சிறையில் உள்ள அவரிடம் வழங்கப்பட உள்ளது.

    ரவுடி சத்யா பிடிபட்ட போது திருவாரூர் மாரி முத்து, தஞ்சை பால்பாண்டி ஆகிய 2 பேர் தப்பி ஓடி விட்டனர். அவர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்கள்.

    • போலீஸ் விசாரணையில் கொலையுண்ட 2 பேரும் அடையாளம் காணப்பட்டனர்.
    • இருவரது உடலையும் சுடுகாட்டிலேயே போட்டு விட்டு கொலையாளிகள் தப்பிச் சென்று விட்டனர்.

    தாம்பரம்:

    தாம்பரம் அருகே உள்ள பெருங்களத்தூர் குண்டு மேடு சுடுகாட்டு பகுதியில் 2 பேர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதைத் தொடர்ந்து பீர்க்கன்கரணை போலீசார் அங்கு விரைந்து சென்று இருவரது உடலையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    போலீஸ் விசாரணையில் கொலையுண்ட 2 பேரும் அடையாளம் காணப்பட்டனர். பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த அண்ணாமலை, தமிழரசன் ஆகிய இருவரும் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது. இதையடுத்து கொலையாளிகள் யார்? என்பது பற்றி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது கொலை செய்யப்பட்ட அண்ணாமலை, தமிழரசன் ஆகிய இருவரிடமும் நண்பர்களாக பழகியவர்களே இந்த கொலையை செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் கூடுவாஞ்சேரி உதவி கமிஷனர் ஜெயராஜ் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

    போதைப் பொருட்களை விற்பனை செய்வது தொடர்பாக இரு தரப்பை சேர்ந்தவர்களிடையே ஏற்பட்டிருந்த மோதலே பூதாகரமாக வெடித்து கொலையில் முடிந்திருப்பதாக கூறப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து அதன் பின்னணி பற்றி போலீசார் முழுமையாக விசாரணை நடத்தி வருகிறார்கள். பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த 5 பேர் நேற்று இரவு அண்ணாமலை மற்றும் தமிழரசனை ஆட்டோவில் ஏற்றி அழைத்துச் சென்றுள்ளனர்.

    தங்களுக்கிடையே ஏற்பட்டுள்ள பிரச்சனையை பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறி இருவரையும் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வைத்து ஏற்பட்ட மோதலில்தான் 2 பேரும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

    பின்னர் இருவரது உடலையும் சுடுகாட்டிலேயே போட்டு விட்டு கொலையாளிகள் தப்பிச் சென்று விட்டனர்.

    சவாரிக்கு அழைத்துச் சென்ற ஆட்டோ டிரைவர் அரி சற்று தூரத்தில் ஆட்டோவை நிறுத்தியிருந்து உள்ளார். நீண்ட நேரமாகியும் சவாரிக்கு வந்தவர்கள் திரும்பி வராததால் சுடு காட்டுக்கு சென்று அவர் பார்த்தபோதுதான் அண்ணாமலையும், தமிழரசனும் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளனர்.

    இதனால் பதறியடித்துக் கொண்டு ஓடிய டிரைவர் அரி இதுபற்றி இன்று அதிகாலை 3 மணி அளவில் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதன் பிறகே போலீசார் விரைந்து சென்று உடல்களை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த இரட்டை கொலை சம்பவம் தாம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×