search icon
என் மலர்tooltip icon

    தென்காசி

    • கும்பல் பார்த்திபனை அரிவாளால் வெட்டியது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடிவந்துள்ளனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள அடைக்கப்பட்டினத்தை அடுத்த வட்டாலூர் ராமர் கோவில் தெருவை சேர்ந்தவர் கடல்மணி. இவரது மகன் பார்த்திபன்(வயது 24). இவர் பாவூர்சத்திரம் காய்கறி மார்க்கெட் வேனில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று இரவு தனது ஊருக்கு அருகே உள்ள முத்து கிருஷ்ணபேரி கிராமத்தில் நடைபெற்ற பலவேசக்கார கோவில் கொடை விழாவில் கச்சேரி பார்த்துவிட்டு பார்த்திபன் நள்ளிரவில் தனது ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் வட்டாலூர் ஊருக்கு வடபுறம் காட்டுப்பகுதியில் வைத்து ஒரு கும்பல் அவருடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    தகராறு முற்றியதில் அந்த கும்பல் பார்த்திபனை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் பார்த்திபன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். உடனே கொலை கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், பார்த்திபனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடிவந்தனர்.

    இந்நிலையில், இன்று காலை பார்த்திபனை கொலை செய்ததாக கூறி வட்டாலூர் பகுதியை சேர்ந்த பார்த்திபனின் உறவினரான பாஸ்கர் என்ற வாலிபர் பாவூர்சத்திரம் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே பாஸ்கர் தான் பார்த்திபனை கொலை செய்தார் என சரண் அடைந்த தகவல் அறிந்து, பாஸ்கரின் தாயார் செல்வி ஊருக்கு அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆலங்குளம் தீயணைப்பு படை வீரர்கள் செல்வியை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்நிலையில் பாஸ்கர் அளித்த தகவலின்பேரில் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அனைவரையும் கைது செய்த பின்னரே கொலைக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    மேலும் கொலையான பார்த்திபன் மீது பாவூர்சத்திரம் போலீஸ் நிலையத்தில் 15-க்கும் மேற்பட்ட அடிதடி வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • வகுப்பறை முழுவதும் ரசாயனத்தின் நெடி பரவியதால் சிறிது நேரத்தில் அடுத்தடுத்து 13 மாணவிகள் மயங்கி விழுந்தனர்.
    • மாணவிகளை சிகிச்சைக்காக செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 9-ந்தேதி காலையில் பிளஸ்-2 பயிலும் மாணவி ஒருவர் கொண்டு வந்திருந்த வாசனை திரவிய பாட்டில் எதிர்பாராதவிதமாக தவறி தரையில் விழுந்து உடைந்தது. இதனால் அந்த வகுப்பறை முழுவதும் பயங்கர நெடியுடன் கூடிய வாசனை பரவியது. இதில் 2 மாணவிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர்.

    ரசாயனத்தின் நெடி வகுப்பறை முழுவதும் பரவி இருந்ததால் சிறிது நேரத்தில் அடுத்தடுத்து 13 மாணவிகள் மயங்கி விழுந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியைகள், மயங்கிய மாணவிகளை சிகிச்சைக்காக செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கும், தனியார் ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தனர். பின்னர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு பிறகு மாணவிகள் வீடுகளுக்கு திரும்பினர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று வகுப்பறையில் வாசனை திரவியம் தரையில் விழுந்து உடைந்த போது அதன் நெடி வகுப்பறை முழுவதும் பரவி இருந்தது. இது தொடர்பாக வகுப்பு ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவித்து உடனடியாக அங்கிருந்து வெளிறே அனுமதி கேட்டோம். ஆனால் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், சம்பவம் குறித்து உடனடியாக மாணவிகளின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என கூறியும் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் இன்று காலை பள்ளியின் முன்பு சாலையோரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    தகவலறிந்ததும் சம்பவ இடத்தற்கு செங்கோட்டை இன்ஸ்பெக்டர் பால கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். என்னும் ஆசிரியர், தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுதுதி அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • சீசன் கால பழங்கள் கேரளாவில் இருந்து குற்றாலத்திற்கு இறக்குமதி.
    • இரவிலும் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    செங்கோட்டை:

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் கடந்த மாதம் நிபா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு சுகாதாரத்துறையினர் முகாமிட்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் அண்டை மாநில சோதனை சாவடிகளிலும் சோதனையை தீவிரப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழக-கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை பகுதியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் சோதனை சாவடி மையம் அமைக்கப்பட்டு சுழற்சி முறையில் பணியாளர்கள் கண்காணித்து வருகின்றனர்.

    இதனால் கேரளாவில் இருந்து வரும் நபர்கள் முறையான சோதனைக்கு பின்னரே தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் தற்போது அரியவகை பழங்களான ரம்பூடான், மங்குஸ்தான் உள்ளிட்ட சீசன் கால பழங்கள் கேரளாவில் இருந்து குற்றாலத்திற்கு இறக்குமதி செய்யப்படுவதால் சோதனை சாவடியில் வைத்து அவற்றை சுகாதாரத்துறையினர் சோதனைக்கு உட்படுத்துகின்றனர். அதன்பின்னரே அதனை குற்றாலத்திற்கு கொண்டு செல்ல அனுமதிக்கின்றனர்.

    அந்த பழங்களில் வவ்வால்கள் கடித்து சேதமாகி இருந்தால், அதனை அப்படியே வாகனத்தில் கேரளாவுக்கு மீண்டும் திருப்பி அனுப்பும் பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இரவிலும் இந்த சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    • வணிகர் சங்கம் சார்பில் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • கடையடைப்பு போராட்டத்தால் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான குற்றாலம் மெயின் அருவி அருகே இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குற்றாலநாதர் கோவிலுக்கு சொந்தமான சுமார் 152 கடைகள் உள்ளன.

    இந்த கடைகளானது பல வருடங்களாக குறிப்பிட்ட சில நபர்களிடம் உள்ள நிலையில், அவர்கள் மாதம் தோறும் கோவில் நிர்வாகத்திற்கு வாடகை செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், ஒரு சில வியாபாரிகள் கொரோனா காலகட்டத்தில் வியாபாரம் இல்லாத நிலையில் வாடகை பாக்கி செலுத்தாமல் இருந்துள்ளனர்.

    இதனால் வாடகை பாக்கி நிலுவையில் வைத்துள்ள கடை வியாபாரிகள் உடனடியாக வாடகை பாக்கி செலுத்த வேண்டும் எனவும், கடையின் சாவியை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் குற்றாலநாதர் கோவில் நிர்வாகத்தினர் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாக கூறப் படுகிறது.

    இந்த நிலையில் கோவில் நிர்வாகத்தை கண்டித்து இன்று குற்றாலம் பகுதியில் வணிகர் சங்கம் சார்பில் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வாடகை பாக்கி முழுவதையும் செலுத்தி விட்டாலும், கடை சுவாதீன உரிமம் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும், வாரிசு தாரர்களையும், வாடகை தாரர்களாக ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு பெயர் மாற்றம் செய்து கொடுக்க வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

    விடுமுறை தினமான இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருகை தந்த வண்ணம் இருந்தனர். இந்நிலையில் கடையடைப்பு போராட் டத்தால் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

    கோவில் நிர்வாகம் தொடர்ந்து இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டாமல் இருந்தால் போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்படும் எனவும் குற்றாலம் வியாபாரிகள் சங்கம் சார்பில் தெரிவித்து உள்ளனர்.

    • பாதுகாப்பு கருதி போலீசார் அபாய ஒலியை எழுப்பி குளிப்பதற்கு தடை விதித்தனர்.
    • காலையில் அருவிகளில் தண்ணீரின் சீற்றம் குறைந்தது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் தண்ணீர் சீராக விழுந்து வரும் நிலையில், நேற்று மாலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த சாரல் மழையின் காரணமாக மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் திடீரென தண்ணீர் வரத்து அதிகரித்தது.

    இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி போலீசார் அருவியில் குளித்துக்கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை உடனடியாக அபாய ஒலியை எழுப்பி அப்புறப்படுத்தி குளிப்பதற்கு தடை விதித்தனர்.

    இதனால் ஐந்தருவி மெயின் அருவியில் குளிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் இன்று காலையில் தண்ணீரின் அளவு குறைந்ததை அடுத்து மெயின் அருவி, ஐந்தருவியில் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

    காலையில் குற்றாலம் பகுதியில் லேசான வெயிலுடன் இதமான குளிர்ந்த காற்றும் வீசி வருவதால் பழைய குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சீராக விழும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

    • வீட்டின் மேற்கூரை பகுதிக்கு மேல் மண் ஓடு அமைக்கப்பட்டுள்ளது.
    • 4 பக்கமும் மரக்கட்டைகளை கொண்டு தூண் அமைத்துள்ளார்.

    நெல்லை:

    தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே பரம்பு என்ற கிராமத்தை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். விவசாயி.

    இயற்கை மீதும் இயற்கை சார்ந்த பொருட்கள் மீதும் அதிக ஆர்வம் கொண்ட இவர் ஊருக்கு அருகில் உள்ள தனது நிலத்தில் இயற்கை சார்ந்த புதிய வீடு கட்ட திட்டமிட்டார்.

    அதன்படி சிமெண்ட் வீட்டுக்கு பதிலாக முழுக்க முழுக்க மரப்பலகைகளை பயன்படுத்தி தனது வீட்டை கட்டமைக்க சிவசுப்பிரமணியன் திட்டமிட்டுள்ளார்.

    எனவே மரச்சிற்ப கலை படித்துள்ள தனது நண்பரான சோமசுந்தரத்திடம் சிவசுப்பிரமணியன் தனது ஆசையை கூறியுள்ளார். அதேசமயம் அதிக செலவு செய்து கட்டப்படும் வீடு என்பதால் எந்த குறையும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக சோமசுந்தரம் முதலில் தயக்கம் காட்டினார்.

    இருப்பினும் சிவசுப்பிரமணியன் என்ன நடந்தாலும் நடக்கட்டும். நீங்கள் வேலையை தொடங்குங்கள் என சோம சுந்தரத்தை ஊக்கப்படுத்தி உள்ளார்.

    இதனால் கடந்த 2021-ம் ஆண்டு வீடு கட்டும் பணி தொடங்கப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக அடித்தளம் மட்டும் கற்கள், சிமெண்ட், மணல் கலவையை கொண்டு கட்டிய நிலையில், தொடர்ந்து அடித்தளத்திற்கு மேல் பகுதியில் 4 புறத்திலும் மற்றும் மேற்கூரை சேர்த்து முழுக்க முழுக்க மரப்பலகைகளை கொண்டு வீடு கட்டி உள்ளனர்.

    மொத்தம் சுமார் 500 சதுர அடி பரப்பளவில் இந்த வீடு கட்டமைக்கப்பட்டுள்ளது. போர்டிகோ, வரவேற்பறை, ஒரு படுக்கை அறை மற்றும் ஒரு சமையல் அறை ஆகிய அறைகளை இந்த வீடு கொண்டுள்ளது. மழையில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக மரப் பலகைகளுக்கு இடையே வாட்டர் ப்ரூப் பேஸ்ட் பயன்படுத்தி உள்ளனர்.

    அதேபோல் கூடுதல் பாதுகாப்புக்காக வீட்டின் மேற்கூரை பகுதிக்கு மேல் மண் ஓடு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பெரும்பாலும் சிமெண்ட் வீடு கட்டும்போது நான்கு பக்கமும் காலாம்பாக்ஸ் எனப்படும் காங்கீரிட் தூண்கள் அமைக்கப்படும். இது தான் கட்டிடத்தின் உறுதித்தன்மையை உறுதி செய்யும்.

    எனவே சோமசுந்தரம் வீட்டின் உறுதித்தன்மைக்காக 4 பக்கமும் மிக கனமான மரக்கட்டைகளை கொண்டு தூண் அமைத்துள்ளார்.

    மேலும் படுக்கை அறையில் துணி உள்ளிட்ட பொருட்களை வைத்து எடுப்பதற்கு வசதியாக அதே மரக்கட்டைகளை கொண்டு கபோர்டு அமைத்துள்ளார். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் இயற்கை சூழலோடு அமைந்துள்ள பரம்பு கிராமத்தில் மிகவும் வித்தியாசமான முறையில் மரக்கட்டைகளால் சிவசுப்பிரமணியன் அமைத்துள்ள வீடு பார்ப்போரை கவர்ந்து உள்ளது.

    இதுகுறித்து சோமசுந்தரம் கூறுகையில், வெளிநாடு களில் இது போன்று மரக்கட்டை வீடுகள் அமைப் பது வழக்கம். தமிழ்நாட்டில் தென் தமிழக பகுதியில் இது போன்ற மரக்கட்டை வீட்டை எனக்கு தெரிந்தவரை யாரும் கட்டவில்லை.

    இங்கு நான் தான் முதலில் கட்டியுள்ளேன். செலவை பொறுத்தவரை 2-க்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. 600 சதுர அடியில் மரக்கட்டையால் வீடு கட்ட ரூ.15 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை ஆகி உள்ளது. அதிகபட்சம் ஒரு வருடத்திற்குள் வீட்டை கட்டி முடித்து விடலாம். அனைவரும் இது போன்ற இயற்கை சார்ந்த மர வீடுகளுக்கு மாற வேண்டும் என்று கூறினார். 

    • பாதுகாப்பு கருதி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
    • அருவிகளில் தண்ணீரின் சீற்றமும் குறைந்தது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக முக்கிய சுற்றுலா தலமாக விளங்கிவரும் குற்றாலம் அருவிகளில் கடந்த 4 நாட்களாக தண்ணீர் அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் நேற்று பிற்பகலில் இருந்தே மலைப்பகுதியில் மழையின் தாக்கம் குறையத்தொடங்கியது. இதனால் குற்றால அருவிகளில் தண்ணீரின் சீற்றமும் குறைந்தது.

    இதனை தொடர்ந்து நேற்று இரவு முதல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்காக ஐந்தருவியில் அனுமதி வழங்கப்பட்டது. தொடர்ந்து இன்று காலையில் பழைய குற்றாலத்திலும், அதன்பின்னர் சிறிது நேரத்தில் மெயினருவி என படிப்படியாக அனைத்து அருவிகளிலும் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    4 நாட்கள் தடைக்கு பின்னர் கிடைத்த அனுமதியால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்தனர். 

    • அருவிகளில் தண்ணீர் காட்டாற்று வெள்ளம்போல் விழுந்தது.
    • குளிக்க வந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று காலை முதல் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக குற்றாலத்தில் உள்ள முக்கிய அருவிகளான மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலி அருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நேற்று மாலையில் தண்ணீர் வரத்து படிப்படியாக அதிகரித்தது.

    ஒருகட்டத்தில் கடுமை யான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஐந்தருவியில் 5 கிளைகளும் ஒருசேர காட்சியளிக்கும் அளவு தண்ணீர் காட்டாற்று வெள்ளம்போல் விழுந்தது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

    இதனால் நேற்று விடு முறை நாளில் குடும்பத்துடன் குளிக்க வந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். அவர்கள் ஐந்தருவி, பழைய குற்றாலம், மெயினருவிகளில் வெள்ளப்பெருக்கை தூரத்தில் நின்று பார்த்து ரசித்துவிட்டு சென்றனர். தொடர்ந்து இரவு முழுவதும் மலைப்பகுதியில் மழை பெய்தவண்ணம் இருந்ததால் வெள்ளப்பெருக்கு குறைய வில்லை.

    இந்நிலையில் இன்று காலையில் மலைப்பகுதியில் சாரல் மழை சற்று குறைந்துள்ளது. இதன் காரணமாக பழைய குற்றாலம் மற்றும் ஐந்தருவில் சற்று தண்ணீர் குறைய தொடங்கியுள்ளது. இருப்பினும் குளிப்பதற்கு தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அதேநேரத்தில் மெயினருவியில் ஆர்ச்சை தொட்டபடி தண்ணீர் விழுந்து வருகிறது. எனவே அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு இன்று 2-வது நாளாக தடை நீடிக்கிறது.

    அருவிகளுக்கு வரும் தண்ணீரின் அளவு சீராகும் பட்சத்தில் சுற்றுலா பயணிகள் உடனடியாக குளிக்க அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் மிதமாக விழுந்து வருகிறது.
    • சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

    தென்காசி:

    தமிழக சுற்றுலா தலங்களில் முக்கியமாக விளங்கிவரும் குற்றால அருவிகளில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் களை கட்டும்.

    அதன்படி தற்போது குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் மிதமாக விழுந்து வருகிறது. மேலும் குளிர்ந்த காற்றுடன் அவ்வப்போது சாரல் மழையும் பெய்வதால் தண்ணீர் விழுவதால் அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.

    இன்று விடுமுறை தினம் என்பதால் காலை முதலே சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

    மேலும் குற்றாலத்திற்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வாகனங்களில் வருவதால் சேதமடைந்து காணப்படும் சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • மோட்டார் சைக்கிள் பேரணியில் ஹெல்மெட் அணியாமல் புல்லட் ஓட்டிய செல்வபெருந்தகை .
    • மத்திய அரசு நலத்திட்ட பிரிவின் மாநில செயலாளர் மருதுபாண்டியன் புகார் அளித்துள்ளார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் கடந்த 23-ந்தேதி நடைபெற்ற காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலையில் மோட்டார் சைக்கிள் பேரணியில் பங்கேற்று புல்லட் ஓட்டி சென்றார். அப்போது அவர் ஹெல்மெட் அணியவில்லை.

    இதனால் மோட்டார் வாகன சட்டத்திற்கு புறம்பாக ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர் செயல்பட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாவூர்சத்திரம் போலீஸ் நிலையத்தில் பாஜக கட்சியின் மத்திய அரசு நலத்திட்ட பிரிவின் மாநில செயலாளர் மருதுபாண்டியன் புகார் அளித்துள்ளார்.

    • ஆடி மாத பவுர்ணமியான இன்று ஆடித்தபசு விழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது.
    • சங்கரன்கோவிலில் அரியும் சிவனும் ஒருங்கே இணைந்து ஓர் உருவில் காட்சி கொடுத்தனர்.

    சங்கரன்கோவில்:

    சைவமும், வைணவமும் பிளவுபடக்கூடாது என்பதற்காக அரியும் சிவனும் ஒண்ணு என்பதை உலகுக்கு உணர்த்தும் விதமாக இறைவன், சங்கரநாராயணராக தோன்றிய அற்புதமான திருத்தலம், சங்கரன்கோவில் சங்கரநாராயணர் ஆலயம்.

    இக்கோவிலில் ஆடி மாத பவுர்ணமியான இன்று உத்திராட நட்சத்திரத்தில் ஆடித்தபசு விழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

    இங்குள்ள கோமதி அம்மன் சன்னிதி முன், நடு மண்டபத்தில் நாகச்சுனை ஒன்று இருக்கிறது. இந்த நாகச்சுனை இருக்கும் இடத்தில் அந்த காலத்தில் சங்கன், பதுமன் என்ற இரு நாகர்கள் வசித்து வந்தனர்.

    சங்கன் சிவபெருமான் மீதும், பதுமன் மகாவிஷ்ணு மீதும் அதீத பக்தி கொண்டிருந்தனர். இருவரும் சிவன் பெரியவரா, விஷ்ணு பெரியவரா என தங்களுக்குள் வாதம் செய்தனர். இது பற்றி தெரிந்து கொள்ள பார்வதி தேவியிடம் சென்று முறையிட்டனர்.

    அம்பாள் ஈசனை வேண்ட, அவர் அம்பாளை பொதிகை மலைப்பகுதியில் புன்னை வனத்தில் தவம் செய்யும்படி கூறினார். அதன்படி அம்பாள் தற்போது சங்கரநாராயணர் கோவில் அமைந்திருக்கும் இடத்திற்கு வந்து தவம் செய்தார். அப்போது ஈசன் சங்கர நாராயணராக வந்து அம்பாளுக்கு காட்சி கொடுத்தார்.

    அரியும் சிவனும் ஒருங்கே இணைந்து ஓர் உருவில் காட்சி கொடுத்தனர். இந்தக் காட்சியை அம்பாளின் அருளால் சங்கனும், பதுமனும் தரிசித்து நற்பேறு பெற்றனர்.

    சங்கரநாராயணரின் சிவனுக்குரிய வலது பாகத்தில் தலையில் கங்கை, பிறை நிலா, அக்னி, ஜடாமுடியுடன் கையில் மழு, மார்பில் ருத்ராட்சம், இடுப்பில் புலித்தோல் போன்றவற்றுடன் திருவாசியில் நாக வடிவில் சங்கன் குடைபிடிக்கிறான்.

    அதேபோல் மகாவிஷ்ணுவுக்குரிய இடது பாகத்தில் நவமணி கிரீடம், கையில் சங்கு, மார்பில் துளசி மற்றும் லட்சுமி மாலைகள் இவற்றுடன் திருவாசியில் நாக வடிவில் பதுமன் குடை பிடிக்கிறான்.

    இவ்வாறு தவம்செய்த அம்பாளுக்கு சிவபெருமான் சங்கரநாராயணராக திருக்காட்சி கொடுத்த மாதம் ஆடி மாதம் என்கிறது புராணம். இதைத்தான் இன்று ஆடித்தபசு என கொண்டாடுகிறோம்.

    • கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராகவும், சங்கரலிங்க மூர்த்தியாகவும் காட்சி கொடுத்தார்.
    • 108 முறை ஆடி சுற்று சுற்றி வந்தால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவில் தென் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற ஆன்மீக தலங்களில் ஒன்று. சிவன் வேறு, விஷ்ணு வேறு என பிளவுபடுத்துவது தவறு என்பதை பக்தர்களுக்கு உணர்த்தும் பொருட்டு சிவபெருமான், கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராகவும், சங்கரலிங்க மூர்த்தியாகவும் காட்சி கொடுத்தார். இத்தகைய அரிய நிகழ்ச்சி ஆடித்தபசு திருவிழாவாக பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் வீதி உலா நடைபெற்று வருகிறது.

    மேலும் கோவில் உள் மண்டபத்தில் உள்ள கலையரங்கத்தில் பக்தி இன்னிசை கச்சேரி, சொற்பொழிவு, வழக்காடு மன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

    ஆடித்தபசு திருவிழா நாட்களில் கோவில் பிரகாரத்தை 108 முறை ஆடி சுற்று சுற்றி வந்தால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆடி சுற்று சுற்றி வருகின்றனர். முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு காட்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. விழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு சங்கரலிங்க சுவாமி-கோமதி அம்பாளுக்கு விளா பூஜையும், 9 மணிக்கு சங்கர நாராயண சுவாமி மற்றும் உற்சவமூர்த்திகளுக்கும், சுவாமி-அம்பாளுக்கும், சந்திரமவுலீஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது.

    காலை 9.30 மணிக்கு கோமதி அம்பாளுக்கு அபிஷேக அலங்காரம், பரிவட்டம், பிற்பகல் 1.35 மணிக்கு தங்க சப்பரத்தில் கோமதி அம்பாளுக்கு ஆடித்தபசு மண்டகப்படிக்கு எழுந்தருளல் நடைபெற்றது.

    மாலை 4.15 மணிக்கு சங்கரநாராயண சுவாமி தபசு காட்சிக்கு புறப்பாடு நிகழ்ச்சியும், 6.05 மணிக்கு சங்கரன்கோவில் தெற்கு ரதவீதியில் சிவபெருமான் அரியும், சிவனும் ஒன்று என்பதை உணர்த்தும் வகையில் சங்கரநாராயணசுவாமியாக ரிஷப வாகனத்தில் கோமதி அம்பாளுக்கு தபசு காட்சி கொடுக்கிறார்.

    இரவு 11 மணிக்கு மேல் சங்கரலிங்க சுவாமி யானை வாகனத்தில் புறப்பாடு, இரவு 11.45 மணிக்கு சங்கரலிங்க சுவாமி யானை வாகனத்தில் கோமதி அம்பாளுக்கு காட்சி கொடுத்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    ஆடித்தபசு திருவிழாவை காண தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான வர்கள் கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் சங்கரன் கோவிலில் எங்கு பார்த்தாலும் மனிதர்களின் தலையாகவே தெரிகிறது.

    தபசு விழாவையொட்டி சங்கரன்கோவில் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. பக்தர்கள் வசதிக்காக நகராட்சி சார்பில் குடிநீர், சுகாதார வசதி செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தலைமையில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஆடித்தபசு விழாவை யொட்டி 4 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள், நிர்வாகம் மற்றும் மண்டகப்படிதாரர்கள், நகராட்சி நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    தீயணைப்பு துறை சார்பில் 4 விதமான தீயணைப்பு வாகனங்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. மின் வாரியம் சார்பில் தடையில்லா மின்சாரம் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கோவில் வாசல் அருகில் மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். 

    ×