என் மலர்
ஐ.பி.எல்.

நான் பவர் ஹிட்டராக மாற இவரது அட்வைசே காரணம்: தோனியை பாராட்டிய இலங்கை முன்னாள் வீரர்

- எம்.எஸ்.தோனி தலைமையில் திசாரா பெரேரா விளையாடியுள்ளார்.
- ஐ.பி.எல். தொடரில் சென்னை மற்றும் புனே அணிகளுக்காக விளையாடினார்.
கொழும்பு:
ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனாக செயல்பட்டு வந்த தோனி 5 கோப்பையையும், 2 சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பையையும் வென்றுள்ளார்.
எம்.எஸ்.தோனி சி.எஸ்.கே. கேப்டனாக இருந்தபோது பல இளம் வீரர்களின் திறமைகளை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகித்தார். இந்திய வீரர்கள் மட்டுமின்றி ஐ.பி.எல். தொடர்களில் பல வெளிநாட்டு வீரர்களுக்கும் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
இந்நிலையில், இலங்கை முன்னாள் வீரர் திசாரா பெரேரா சமீபத்திய அளித்த பேட்டியில் பேசியதாவது:
சில நேரங்களில் நான் தடுப்பாட்டம் விளையாடும்போது எம்.எஸ். தோனி என்னிடம் வந்து பெரேரா நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நீங்கள் நல்ல பவர் ஹிட்டர். எனவே இப்படி விளையாடாமல் ஒவ்வொரு பந்திலும் அதிரடி காட்டுங்கள் என்று சொல்வார். அது போன்ற வார்த்தைகள் இளம் வீரர்களுக்கு பெரிய தன்னம்பிக்கையை உருவாக்கும். அந்த சமயத்தில் எனக்கு 20 வயது மட்டுமே இருந்தது. அப்போது அவருடன் மகிழ்ச்சியாக வேலை செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
நான் புனே அணிக்காக விளையாடிய போட்டியில் ஆரம்பத்திலேயே நாங்கள் 4 - 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினோம். அந்தச் சமயத்தில் களமிறங்கிய எனக்கு அதிரடியாக விளையாடலாமா அல்லது சிங்கிள் எடுக்கலாமா என்ற குழப்பம் இருந்தது.
அப்போது என்னிடம் வந்த எம்எஸ், 'பெரேரா நீங்கள் என்ன செய்கிறீர்கள்?' என கேட்டார். அதற்கு நாம் விக்கெட்டுகளை இழந்துள்ளோம் என்று சொன்னேன். அதைக் கேட்ட தோனி ஒவ்வொரு பந்திலும் அதிரடி காட்டுங்கள் என்று சொன்னார்.
அதைப் பின்பற்றி விளையாடியதால் ஒரு கட்டத்தில் 60/5 என்ற நிலையில் இருந்த நாங்கள், கடைசியில் 190/7 என்ற ஸ்கோர் எடுத்தோம். நான் 40 ரன்கள் அடித்தேன். தோனி 80 முதல் 90 ரன்கள் அடித்தார்.
தனிப்பட்ட முறையில் தோனி எனக்கு இந்த உலகின் மிகச்சிறந்த கேப்டன். அவரது தலைமையில் நான் சென்னை மற்றும் புனே அணிகளுக்காக விளையாடியுள்ளேன். என்னை எப்போதும் நம்பிய அவர் பவர் ஹிட்டராக உருவாக நிறைய தன்னம்பிக்கையை கொடுத்தார் என தெரிவித்தார்.