search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    • அரையிறுதி ஆட்டத்தில் இத்தாலி வீரர் சின்னர், ரஷிய வீரரான மேத்வதேவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.
    • ஜோகோவிச் ஸ்பெயின் வீரரான கார்லஸ் அல்காரசை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

    துரின்:

    தரவரிசையில் முதல் 8 இடம் வகிக்கும் வீரர்கள் மட்டுமே கலந்துகொண்ட ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் உள்ள துரின் நகரில் நடைபெற்றது. இதில் பங்கேற்றிருந்த வீரர்கள் ரெட், கிரீன் என்று இரு பிரிவாக பிரிக்கப்பட்டிருந்தனர்.

    ஒவ்வொரு வீரரும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற வீரர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். 'ரவுன்ட்-ராபின்' முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிப்போர் அரையிறுதிக்கு தகுதி பெறுவார்கள். அதன்படி நடைபெற்ற லீக் ஆட்டங்களின் முடிவில் 'கிரீன்' பிரிவில் ஜோகோவிச் மற்றும் சின்னர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். 'ரெட்' பிரிவில் கார்லஸ் அல்காரஸ் மற்றும் டேனியல் மேத்வதேவ் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.

    அதன்படி நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இத்தாலி வீரர் சின்னர், ரஷிய வீரரான மேத்வதேவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார். தரவரிசையில் நம்பர் 1 வீரர் செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச் ஸ்பெயின் வீரரான கார்லஸ் அல்காரசை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

    இறுதி போட்டியில் சின்னர் மற்றும் ஜோகோவிச் பலப்பரீட்சை நடத்தினர். இதில் ஜோகோவிச் 6-3 மற்றும் 6-3 என்ற நேர் செட் கணக்கில் சின்னரை எளிதில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். ஜோகோவிச் இந்த பட்டத்தை வெல்வது இது 7-வது முறையாகும்.

    • ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்து வருகிறது.
    • லீக் சுற்று முடிவில் ‘ரெட்’ பிரிவில் நடப்பு சாம்பியன் ராஜீவ் ராம் - சாலிஸ்பரி (இங்கிலாந்து), போபண்ணா - மேத்யூ எப்டென் ஜோடிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.

    துரின்:

    தரவரிசையில் முதல் 8 இடம் வகிக்கும் வீரர்கள் மற்றும் ஜோடிகள் மட்டும் கலந்து கொள்ளும் ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்து வருகிறது. இதில் வீரர்கள் 'கிரீன்', 'ரெட்', என இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதினர்.

    இதன் ஒற்றையர் பிரிவில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டத்தில் இத்தாலி வீரர் யானிக் சின்னெர் 6-2, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ருனேவை வீழ்த்தினார். லீக் சுற்று முடிவில் 'கிரீன்' பிரிவில் யானிக் சின்னெர் 3 வெற்றியுடன் முதலிடம் பிடித்தும், 'நம்பர் ஒன்' வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 2-வது இடமும் பெற்று அரைஇறுதிக்கு முன்னேறினர். சின்னெர் அரைஇறுதிக்கு முன்னேறிய முதல் இத்தாலி வீரர் என்ற பெருமையை தனதாக்கினார்.

    இரட்டையர் பிரிவில் (ரெட்) தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் ரோகன் போபண்ணா (இந்தியா)-மேத்யூ எப்டென் (ஆஸ்திரேலியா) ஜோடி 6-4, 7-6 (7-5) என்ற நேர்செட்டில் வெஸ்லி கோல்ஹோப் (நெதர்லாந்து)-நீல் ஸ்குப்ஸ்கி (இங்கிலாந்து) இணையை வீழ்த்தியது. லீக் சுற்று முடிவில் 'ரெட்' பிரிவில் நடப்பு சாம்பியன் ராஜீவ் ராம் - சாலிஸ்பரி (இங்கிலாந்து), போபண்ணா - மேத்யூ எப்டென் ஜோடிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.

    • ஜோகோவிச் 7-6, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்றார்.
    • இவர் தனது அரையிறுதி ஆட்டத்தில் 'ரெட்'பிரிவில் முதலிடம் பிடிக்கும் வீரருடன் மோத உள்ளார்.

    துரின்:

    தரவரிசையில் முதல் 8 இடம் வகிக்கும் வீரர்கள் மட்டுமே கலந்துகொள்ளும் ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள வீரர்கள் ரெட், கிரீன் என்று இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

    ஒவ்வொரு வீரரும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற வீரர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். 'ரவுன்ட்-ராபின்' முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிப்போர் அரையிறுதிக்கு தகுதி பெறுவார்கள். இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இதில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் 'நம்பர் ஒன்' வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், போலந்தின் ஹூபர்ட் ஹர்காக்ஸ் உடன் மோதினார்.

    இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 7-6, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் ஜோகோவிச் 'கிரீன் பிரிவில் 2-வது இடம் பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். இவர் தனது அரையிறுதி ஆட்டத்தில் 'ரெட்'பிரிவில் முதலிடம் பிடிக்கும் வீரருடன் மோத உள்ளார்.

    'கிரீன்' பிரிவில் சின்னர் முதலிடமும், ஜோகோவிச் 2-வது இடமும் பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர். அதேவேளையில் 'ரெட்' பிரிவில் டேனியல் மெத்வதேவ் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். மற்றொரு வீரருக்கான இடத்திற்கு அல்காரஸ் மற்றும் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் இடையே போட்டி நிலவுகிறது.

    • டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்று ஆட்டம் இன்று நடைபெற்றது.
    • இதில் இந்தியாவின் ஸ்மித் நாகல் 6-0, 6-0 என்ற கணக்கில் வென்றார்.

    பீஜிங்:

    ஆசிய விளையாட்டு போட்டியில் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்மித் நாகல், மக்காவ் நாட்டின் மார்கோ லியூங்குடன் மோதினார்.

    இதில் ஸ்மித் நாகல் 6-0, 6-0 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

    • இந்தியாவின் ரோகன் போபண்ணா, யுகி பாம்ப்ரி ஜோடி மொராக்கோ ஜோடியை வென்றது
    • 43 வயதான ரோகன் போபண்ணாவுக்கு இதுவே கடைசி டேவிஸ் கோப்பை போட்டியாகும்.

    லக்னோ:

    டேவிஸ் கோப்பை டென்னிசில் உலக குரூப் 2 சுற்றில் இந்தியா, மொராக்கோ அணிகள் இடையிலான ஆட்டம் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் தொடங்கியது.

    முதல் நாளில் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்களில் சுமித் நாகல் வெற்றி பெற்றார். சசிகுமார் முகுந்த் காயத்தால் பாதியில் விலகினார்.

    இந்நிலையில், 2-வது நாளான நேற்று இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் அனுபவம் வாய்ந்த இந்தியாவின் ரோகன் போபண்ணா, யுகி பாம்ப்ரி ஜோடி 6-2, 6-1 என்ற நேர் செட்டில் மொராக்கோவின் பென்செட்ரிட், யுனெஸ் லலாமி லாரோசி ஜோடியை எளிதில் வென்றது.

    பெங்களூருவைச் சேர்ந்த 43 வயதான ரோகன் போபண்ணாவுக்கு இதுவே கடைசி டேவிஸ் கோப்பை போட்டி ஆகும். இந்தப் போட்டியில் இருந்து அவர் வெற்றியோடு விடைபெற்றார்.

    இதையடுத்து, நடந்த மாற்று ஒற்றையர் ஆட்டங்களில் சுமித் நாகல் 6-3, 6-3 என்ற நேர் செட்டில் யாசினே டிலிமியையும், இந்தியாவின் திக்விஜய் பிரதாப் சிங் 6-1, 5-7, 10-6 என்ற செட் கணக்கில் மொராக்கோவின் வேலிட் அஹோடாவையும் வீழ்த்தினர். முடிவில் இந்தியா 4-1 என்ற கணக்கில் மொராக்கோவை தோற்கடித்தது.

    • அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவர்களின் பட்டியலில் ஆஸ்திரேலிய முன்னாள் வீராங்கனை மார்கரெட் கோர்ட்டுடன் சமநிலையில் உள்ளார்.
    • விளையாட்டு வரலாற்றில் இது ஒரு மிகப்பெரிய சாதனையாகும்.

    நியூயார்க்:

    உலகின் 'நம்பர் ஒன்' டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) சில தினங்களுக்கு முன்பு அமெரிக்க ஓபனை கைப்பற்றி கிராண்ட்ஸ்லாம் பட்டத்தின் எண்ணிக்கையை 24 ஆக உயர்த்தினார். அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவர்களின் பட்டியலில் ஆஸ்திரேலிய முன்னாள் வீராங்கனை மார்கரெட் கோர்ட்டுடன் சமநிலையில் உள்ளார். 36 வயதான ஜோகோவிச் இந்த ஆண்டில் நடந்த 4 கிராண்ட்ஸ்லாம் போட்டியில் விம்பிள்டனை தவிர மற்ற மூன்றிலும் கோப்பையை வென்று தனது ஆதிக்கத்தை நிலை நாட்டினார்.

    இந்த நிலையில் அவரது எதிர்கால திட்டம் குறித்து அவரது பயிற்சியாளர் கோரன் இவானிசெவிச் அளித்தபேட்டியில், '24 கிராண்ட்ஸ்லாம் வென்ற ஜோகோவிச் சாதனை உண்மையிலேயே வியப்புக்குரியது. அவர் தொடர்ந்து சாதிக்கும் வேட்கையில் இருக்கிறார். இன்னும் சாதனைகளை உடைக்கிறார். நம்ப முடியாத ஒரு டென்னிசை விளையாடிக்கொண்டு இருக்கிறார். விளையாட்டு வரலாற்றில் இது ஒரு மிகப்பெரிய சாதனையாகும். நான் டென்னிஸ் குறித்து மட்டும் பேசவில்லை. பொதுவாக எல்லா விளையாட்டையும் சேர்த்து தான் சொல்கிறேன். அவர் ஒரு வின்னர். தனக்கு தானே உத்வேகம் அளிப்பதில் ஜோகோவிச்சும் ஒருவர்.

    25-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றதும் அவர் ஓய்வு பெறுவாரா? என்று கேட்கிறீர்கள். இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை. 2028-ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் நடக்கும் ஒலிம்பிக் போட்டி வரை விளையாட வேண்டும் என்பதே அவரது திட்டம்' என்றார்.

    • எத்தனை கிராண்ட்ஸ்லாம்களை வெல்ல வேண்டும் என மனது சிந்திக்கவில்லை.
    • முக்கியமான போட்டி தொடர்களில் சிறந்த டென்னிஸ் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றே சிந்திக்கிறேன்.

    போட்டிக்கு பின் ஓய்வு குறித்து ஜோகோவிச் கூறியதாவது:-

    முடிந்தவரை விளையாட திட்டமிட்டுள்ளேன். இப்போது எனது உடல் நன்றாக ஒத்துழைப்பதாக உணர்கிறேன். மேலும் எனது குடும்பம் உட்பட என்னை சுற்றியுள்ளவர்களின் ஆதரவும் இருக்கிறது. டென்னிசில் தொடர்ந்து பெரிய தொடர்களில் வெற்றிபெற்று வருகிறேன்.

    இந்த விளையாட்டில் இன்னும் என்னால் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்தும் முடியும் என்ற நம்பிக்கை இருப்பதால் இப்போதைக்கு ஓய்வுபெற விரும்பவில்லை. தரவரிசையில் நான் இன்னும் முதலிடத்தில் இருப்பதால், எனது விளையாட்டு பாணியை தொடரவே திட்டமிட்டபட்டுள்ளேன். எனவே டென்னிஸை விட்டு வெளியேற நான் விரும்பவில்லை.

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளே என்னுடைய மிக உயர்ந்த இலக்காகவும் முன்னுரிமையாகவும் இருந்து வருகிறது. போட்டிகளின் அடிப்படையில் நான் அதிகம் விளையாடுவதில்லை. அதனால்தான் நான் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளுக்கான பயிற்சிக்கு முன்னுரிமை அளிக்கிறேன்.

    ஓய்வு பெறுவதற்கு விருப்பமில்லை என்றாலும், தனது எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கிய நேரங்களும் தமது வாழ்க்கையில் இருந்ததாக ஜோகோவிச் வெளிப்படுத்தினார்.

    பல சமயங்களில் என்னை நானே கேள்வி கேட்டுள்ளேன். டென்னிஸில் உச்சம் தொட்ட பின்பும் எனக்கு என்ன தேவை உள்ளது? இன்னும் எவ்வளவு காலம் விளையாட முடியும்? போன்ற கேள்விகளை என்னை நானே கேட்கிறேன். எத்தனை கிராண்ட் ஸ்லாம்களை வெல்ல வேண்டும் என மனது சிந்திக்கவில்லை. மாறாக, முக்கியமான போட்டி தொடர்களில் சிறந்த டென்னிஸ் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றே சிந்திக்கிறேன்.

    என்று ஜோகோவிச் தெரிவித்தார்.

    • 24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை ஜோகோவிச் கைப்பற்றினார்.
    • 2020-ல் உயிரிழந்த அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் பிரையன்ட்டுக்கு தனது அஞ்சலியை ஜோகோவிச் செலுத்தினார்.

    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்றது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டி இன்று நடந்தது. இந்தப் போட்டியில் 6-3, 7-6(5), 6-3 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்றார். இதன் மூலம் 24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை ஜோகோவிச் கைப்பற்றினார்.

    2008-ம் ஆண்டு முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றிய இவர் ஆஸ்திரேலியா ஓபன் பட்டம் 10, விமிள்டன் ஓபன் பட்டம் 7, அமெரிக்க ஓபன் பட்டம் 4 பிரெஞ்சு ஓபன் பட்டம் 3 என ஆக மொத்தம் 24 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி உள்ளார்.

    பட்டம் வென்றதும் உடனடியாக தான் அணிந்திருந்த ஜெர்ஸியை மாற்றி கடந்த 2020-ல் உயிரிழந்த அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் பிரையன்ட்டுக்கு தனது அஞ்சலியை ஜோகோவிச் செலுத்தினார். அவரது ஜெர்ஸி எண் 24 என்பது குறிப்பிடத்தக்கது. தனது 24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றது குறித்து அந்த எண்ணை சுட்டிக்காட்டி குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.




    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்றது.
    • இதில் செர்பியாவின் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்றது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டி இன்று நடந்தது.

    இதில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ரஷிய வீரர் மெத்வதேவுடன் மோதினார்.

    ஆரம்பம் முதலே ஜோகோவிச் அதிரடியாக ஆடினார். முதல் செட்டை 6-3 என ஜோகோவிச் எளிதில் கைப்பற்றினார்.

    இரண்டாவது செட்டில் மெத்வதேவ் பதிலடி கொடுக்கும் விதமாக ஆடினார். இதனால் ஜோகோவிச் 7-6 (7-5) என போராடி கைப்பற்றினார். மூன்றாவது செட்டை ஜோகோவிச் 6-3 என வென்றார்.

    இறுதியில், ஜோகோவிச் 6-3, 7-6 (7-5), 6-3 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    இது ஜோகோவிச்சின் 24வது கிராண்ட்சிலாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடந்தது.
    • இந்த இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப் வென்றார்.

    நியூயார்க்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் கோகா காப்புடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை சபலென்கா 6-2 என வென்றார். இதையடுத்து, சுதாரித்துக் கொண்ட கோகோ காப் அடுத்த இரு செட்களை 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி போட்டி நடைபெற்றது.
    • இதில் செர்பியாவின் ஜோகோவிச் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி போட்டிகள் நடைபெற்றன.

    இதில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், அமெரிக்க இளம் வீரர் பென் ஷெல்டனுடன் மோதினார்.

    இதில் ஜோகோவிச் 6-3, 6-2, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதியில் இந்தியாவின் போபண்ணா ஜோடி தோற்றது.

    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டம் இன்று நடந்தது.

    இதில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி, அமெரிக்காவின் ராஜீவ் ராம், ஜோ சாலிஸ்பெரி ஜோடியுடன் மோதியது.

    இதில் போபண்ணா ஜோடி முதல் செட்டை 6-2 என கைப்பற்றியது. இதையடுத்து சுதாரித்துக் கொண்ட அமெரிக்க

    ஜோடி அடுத்த இரு செட்களை 6-3, 6-4 என கைப்பற்றியது.

    இறுதியில், அமெரிக்க ஜோடி 2-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

    13 ஆண்டுக்குப் பிறகு ரோகன் போபண்ணா அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×