என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "aavin milk"

    • ஒரு குளிர்சாதனப் பெட்டிகளில் 40 முதல் 50 பாக்கெட்டுகள் பால் வைக்க முடியும்.
    • ஆவின் நிறுவனம் வெளிப்படையாக இன்னும் அறிவிக்கவில்லை.

    சென்னை:

    சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவதை தடுக்க பிளாஸ்டிக் பாக்கெட்டுகளுக்கு பதிலாக மாற்றுவழியில் பால் வழங்குவதற்கு தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனம் முடிவு செய்து இருக்கிறது. இதுதொடர்பான தேசிய பசுமை தீர்ப்பாய வழக்கு விசாரணையின்போது இந்த தகவலை ஆவின் நிறுவனம் பதிவு செய்து இருக்கிறது.

    இந்த நிலையில் மாற்றுவழி என்பது கண்ணாடி பாட்டில் அல்லது மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம் பால் விற்பனை செய்யப்படுமா? அல்லது வேறு ஏதாவது முறையில் வழங்கப்படுமா? என்பதை ஆவின் நிறுவனம் வெளிப்படையாக இன்னும் அறிவிக்கவில்லை.

    ஆனால் கண்ணாடி பாட்டில், மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பாட்டில் இவை இரண்டையும் மாற்றுவழியாக கொண்டாலும் கூட அது சாத்தியப்படாது என்பதுதான் பால் முகவர்கள், வியாபாரிகள் தரப்பு வாதமாக இருக்கிறது.

    அப்படி இதை ஒரு மாற்றுவழியாக எடுத்துக்கொண்டாலும் கூட, நுகர்வோரின் பட்ஜெட்டில் இது பாதிப்பை ஏற்படுத்தும். முகவர்கள், வியாபாரிகளை எடுத்துக்கொண்டால், கண்ணாடி பாட்டில், பிளாஸ்டிக் பாட்டில் ஆகியவற்றை சரியாக பராமரித்து மீண்டும் பயன்படுத்தும் அளவுக்கு கொண்டு வருவது என்பது சிரமத்தை கொடுக்கும்.

     

    அதேநேரம், ஒரு குளிர்சாதனப் பெட்டிகளில் 40 முதல் 50 பாக்கெட்டுகள் பால் வைக்க முடியும் என்றால், பாட்டிலில் கொண்டுவந்தால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டு, குறைந்த எண்ணிக்கையில்தான் பால் வாங்கி வைப்பார்கள். இதனால் விற்பனையும் குறையும். தட்டுப்பாடும் ஏற்படும். அதேபோல், பால் நிறுவனங்கள் கண்ணாடி பாட்டில், மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பாட்டிலை மீண்டும் சுத்தமாக பயன்பாட்டுக்கு கொண்டுவருமா? என்பதும் கேள்விக்குறிதான்.

    சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கை என்றாலும், இதுபோன்ற பல்வேறு சிக்கல்கள், சிரமங்கள் இருப்பதால் மாற்றுவழி வெற்றி பெறுமா? என்பது 100 சதவீதம் சந்தேகம்தான் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க மாநில தலைவர் சு.ஆ.பொன்னுசாமி தெரிவித்தார்.

    ஏற்கனவே ஆவின் நிறுவனம் தரப்பில் கொழுப்புச்சத்து செறிவூட்டப்பட்ட பால் 1½ லிட்டர் டப்பாவில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை ரூ.120. இதுவே பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் இதே பாலின் விலை ரூ.90. டப்பாவில் அடைத்து விற்கப்படும் சமன்படுத்தப்பட்ட 1½ லிட்டர் பாலின் விலை ரூ.110. இதுவே பாக்கெட்டுகளில் ரூ.68-க்கு கிடைக்கிறது. நுகர்வோருக்கு பால் விலை அதிகரிக்கும் என்பதை சுட்டிக்காட்டும் ஒரு உதாரணமாக இது சொல்லப்படுகிறது.

    மொத்தத்தில் ஆவின் நிறுவனம் இன்னும் 2 வாரத்தில் நிரந்தர தீர்வை அறிவித்து, அதன் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து நடைமுறைக்கு கொண்டு வந்தால் மக்களின் அன்றாட பட்ஜெட்டில் கூடுதல் செலவையே கொடுக்கும் என்பதில் மாற்று கருத்தே இல்லை. மாற்றுவழி நடைமுறைக்கு வந்தால் தற்போதைய அரை லிட்டர் பால் பாக்கெட்டின் விலையில் இருந்து குறைந்தது ரூ.5 முதல் ரூ.10 வரை அதிகரிக்கும் என்றே பால் முகவர்கள், வியாபாரிகள் கூறுகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்படுகிறது.
    • கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    சென்னை:

    ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

    ஆவின் நிறுவனம் கிராம அளவில் 9,354 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள், மாவட்ட அளவில் 27 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள், மாநில அளவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் என்ற மூன்றடுக்கு கட்டமைப்பில் செயல்பட்டு வருகிறது.

    ஆவின் நிறுவனம் 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, சுமார் 30 லட்சம் லிட்டர் பாலை நாள்தோறும் நுகர்வோருக்கு தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறது.

    கடந்த 19.08.2019 முதல் பசும்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.32 ஆகவும், எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.41 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. அதேநேரம், நுகர்வோர்களின் நலன் கருதி கடந்த 16.5.2021 முதல் அனைத்து பால் வகைகளுக்கான விற்பனை விலையினை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது.

    பால் கூட்டுறவு அமைப்புகளின் முக்கிய நோக்கமே பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான கொள்முதல் விலையையும், பால் நுகர்வோர்களுக்கு தரமான பாலை நியாயமான விலையில் விற்பனை செய்வதுமாகும்.

    இச்சூழ்நிலையில் இடுபொருட்கள் விலையேற்றம், உற்பத்தி செலவினம் ஆகியவை கூடியுள்ளதால், பால் உற்பத்தியாளர்கள் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கிட கோரிக்கை வைத்துள்ளனர். அதன்படி, பால் உற்பத்தியாளர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பசும்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் உயர்த்தி, ரூ.32-லிருந்து ரூ.35 ஆகவும், எருமைப்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் உயர்த்தி ரூ.41-லிருந்து ரூ.44 ஆகவும் வழங்கப்படும்.

    நவம்பர் 5-ம் தேதி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும். இந்தக் கொள்முதல் விலை உயர்வால் சுமார் 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் நேரடியாக பலனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்துவந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஆரஞ்சு பால் விலை உயர்த்தப்பட்டதால் நிறைய பேர் அதனை வாங்குவதை குறைத்து வருகிறார்கள்.
    • வழக்கத்தை விட பச்சை நிற பாக்கெட் தேவை ஓரிரு நாட்களாக அதிகரித்து வருகிறது.

    சென்னை:

    ஆவின் பால் பல்வேறு தரங்களில் விற்பனை செய்யப்படுகிறது. தனியாரை விட ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.20 வரை குறைவாக இருப்பதால் மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டதை அடுத்து ஆரஞ்சு பால் பாக்கெட் விலை லிட்டருக்கு ரூ.12 உயர்த்தப்பட்டது. அதிக கொழுப்பு சத்துள்ள ஆரஞ்சு பால் விலை உயர்த்தப்பட்டதால் கடைகளில் விற்பனை குறைந்துள்ளது.

    ஆவின் பால் வினியோகஸ்தர்கள் மற்றும் பார்லர்களில் ஆரஞ்சு அரைலிட்டர் பால் தற்போது ரூ.30-க்கு விற்கப்படுகிறது. மளிகை, மற்றும் பெட்டிக்கடைகளில் அவற்றின் விலை ரூ.31, ரூ.32 என விற்கப்படுகிறது.

    அதே நேரத்தில் ஆவின் பச்சை நிற பால் அரைலிட்டர் ரூ.22க்கு கிடைக்கிறது. ஆவின் வினியோகஸ்தர்கள் தவிர பிற இடங்களில் ரூ.23, ரூ.24-க்கு விற்கப்படுகிறது.

    ஆரஞ்சு பால் விலை லிட்டருக்கு ரூ.12 ஆவின் உயர்த்திய நிலையில் கடைகளில் கூடுதலாக 2 ரூபாய் சேர்த்து விற்கப்படுகிறது. இதனால் இதுவரையில் ஆரஞ்சு பால் பாக்கெட் வாங்கியவர்கள் ஆவின் பச்சை நிறத்திற்கு மாறினார்கள்.

    அரை லிட்டருக்கு 8 ரூபாய் வித்தியாசம் இருப்ப தால் சாமான்ய மக்கள் பச்சை நிற பால் பாக்கெட்டை தற்போது அதிகளவில் வாங்க தொடங்கி உள்ளனர். இதனால் கடைகளில் பச்சை நிற பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    மளிகை கடைகள், பெட்டி கடைகள் உள்ளிட்ட பால் வியாபாரம் செய்யக்கூடிய இடங்களில் ஆவின் பச்சை நிற பால் உடனே விற்று தீர்ந்து விடுகின்றன.

    இதுகுறித்து கொடுங்கையூர் மூலச்சத்திரத்தில் உள்ள மளிகை கடை வியாபாரி அன்பு கூறியதாவது:-

    வழக்கமாக ஆரஞ்சு, பச்சை நிற பால் பாக்கெட்கள் தான் அதிகளவில் விற்பனையாகும். தற்போது ஆரஞ்சு பால் விலை உயர்த்தப்பட்டதால் நிறைய பேர் அதனை வாங்குவதை குறைத்து வருகிறார்கள். அதற்கு பதிலாக பச்சை நிற பால் பாக்கெட் கேட்கிறார்கள். வழக்கத்தை விட பச்சை நிற பாக்கெட் தேவை ஓரிரு நாட்களாக அதிகரித்து வருகிறது.

    ஆனால் அதற்கேற்ப பச்சை நிற பாக்கெட் சப்ளை இல்லை. குறைந்த அளவில் தான் வருகின்றன. பச்சை பாக்கெட் இல்லாததால் ஆரஞ்சு பாக்கெட்டை வாங்கி செல்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுபற்றி ஆவின் அதிகாரிகளிடம் கேட்டபோது, ஆரஞ்சு, பச்சை, நீலம் பாக்கெட் உற்பத்தியை குறைக்கவில்லை. இதுவரையில் உற்பத்தி செய்யப்பட்ட அளவில் தான் செய்யப்படுகிறது. பச்சை நிற பாக்கெட்டிற்கு தேவை அதிகரித்தால் அதனை ஆய்வு செய்து உற்பத்தியை அதிகரிப்போம். அதற்கு சில நாட்கள் ஆகும் என்றனர்.

    • கடந்த ஆண்டு நாள் ஒன்றிற்கு 26 லட்சம் லிட்டர் விற்பனை நடைபெற்ற நிலையில், தற்போது கூடுதலாக 3 லட்சம் லிட்டர் விற்பனை அதிகரித்துள்ளது.
    • ஆரஞ்ச் பால் பாக்கெட் விலை உயர்ந்ததால் பெரும்பாலானோர் பச்சை நிற பால் பாக்கெட்டிற்கு மாறி உள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் ஆவின் பால் அதிகம் விற்பனையாகி வருகிறது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மேலும் உயர்ந்துள்ளது.

    கடந்த ஆண்டு நாள் ஒன்றிற்கு 26 லட்சம் லிட்டர் விற்பனை நடைபெற்ற நிலையில், தற்போது கூடுதலாக 3 லட்சம் லிட்டர் விற்பனை அதிகரித்துள்ளது.

    அதாவது தினமு‌ம் 29 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை நடைபெற்று வருவதாக ஆவின் அதிகாரிகள் தெரிவித்தனர் 

    தற்போது ஆரஞ்ச் பால் பாக்கெட் விலை உயர்ந்ததால் பெரும்பாலானோர் பச்சை நிற பால் பாக்கெட்டிற்கு மாறியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆவின் பச்சை கவர் பாலுக்கு கடுமையாக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
    • பச்சை கவர் பால் வினியோகத்தை குறைந்தது 20 சதவீதம் அதிகரிக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆவின் பச்சை கவர் பாலுக்கு கடுமையாக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் ஆரஞ்சு கவர் பால் விலை உயர்த்தப்பட்டது தான். பச்சை உறை பாலுக்கான தேவை அதிகரித்திருப்பது ஆவின் நிர்வாகத்திற்கு தெரியும்.

    வாடிக்கையாளர்களை ஆவின் ஏமாற்றக்கூடாது. பச்சை கவர் பால் வினியோகத்தை குறைந்தது 20 சதவீதம் அதிகரிக்க வேண்டும். அதில் ஏதேனும் தடை இருந்தால் ஆரஞ்சு கவர் பாலின் விலையை முன்பிருந்தவாறே லிட்டர் ரூ.48 என்ற அளவுக்கு குறைக்க ஆவின் நிறுவனம் முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தினமும் ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 392 லிட்டர் பால் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு மதுரை மக்களுக்காக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது
    • ஆவின் தரப்பில் விசாரித்தபோது அங்கு பால் பாக்கெட்டுகளை தயாரிக்கவும், வாகனங்களில் அனுப்பி வைக்கவும் 150-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

    மதுரை:

    மதுரையில் சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தினமும் ஆவின் பால் பாக்கெட்டுகளை வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். இதற்காக மதுரையில் 47 ஆவின் பாலகங்கள், 390 டெப்போக்கள் மூலம் இந்த ஆவின் பால் பாக்கெட்கள் விற்பனை செய்யப்படு கின்றன.

    இதற்காக மதுரை கே.கே. நகரில் உள்ள ஆவின் நிறுவனத்தில் அதிகாலையில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பால் பாக்கெட்டுகளை வாகனங்களில் ஏற்றி சம்பந்தப்பட்ட பால் பூத்துகள் மற்றும் ஆவின் பாலகங்களுக்கு அனுப்பி வைப்பது வழக்கம்.

    ஆனால் கடந்த சில வாரங்களாக ஆவின் பால் விநியோகத்தில் அடிக்கடி காலதாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக பால் விநியோக முகவர்கள் ஆவின் நிறுவனத்தில் போராட்டம் நடத்தியுள்ளனர்.

    பொது மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகளையும் முற்றுகையிட்டு தாமதம் இன்றி பால் விநியோகத்தை செய்ய தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். ஆனாலும் இந்த பிரச்சினை தீர்ந்தபாடில்லை.

    இன்று காலை வழக்கம் போல 5 மணிக்கு சப்ளை செய்ய வேண்டிய ஆவின் பால் பாக்கெட் சுமார் 2 மணி நேரம் தாமதமாக காலை 7 மணிக்கு மேல் பால் பூத்துகளுக்கு கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் சம்பந்தப்பட்ட முகவர்கள் பால் பாக்கெட்டுகளை வாங்க தயக்கம் காட்டினர். காரணம் 7 மணிக்கு மேல் பால் பாக்கெட் விற்பனை வழக்கம் போல இருக்காது என்பதால் முகவர்கள் ஆவின் ஊழியர்களிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

    தினமும் ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 392 லிட்டர் பால் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு மதுரை மக்களுக்காக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. காலதாமதம் காரணமாக இந்த விற்பனை பெருமளவில் சரிவை சந்தித்துள்ளதாக முகவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக ஆவின் தரப்பில் விசாரித்தபோது அங்கு பால் பாக்கெட்டுகளை தயாரிக்கவும், வாகனங்களில் அனுப்பி வைக்கவும் 150-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த ஒப்பந்த ஊழியர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வராதாலும், பலர் விடுமுறையில் இருப்பதாலும் பால் பாக்கெட் குறிப்பிட்ட நேரத்தில் விநியோகம் செய்வதில் பிரச்சனை எழுந்து வருவதாக தெரிய வந்துள்ளது.

    இதுதொடர்பாக ஆவின் அதிகாரிகள் உரிய ஏற்பாடுகளை செய்து காலதாமதம் இன்றி பால் பாக்கெட்டுகளை விநியோகத்திற்கு அனுப்பினால் தான் மதுரை ஆவின் தனது விற்பனை இலக்கை தொடர்ந்து சரி கட்ட முடியும் என்று பாதிக்கப்பட்ட முகவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    • ஆவின் நெய் வகைகளின் விலைகள் இன்று முதல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
    • 5 லிட்டர் நெய் பாட்டில் ரூ.2,900-ல் இருந்து ரூ.3,250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் ஆவின் பால் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்ட நிலையில் இப்போது ஆவின் நெய் விலையும் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    ஆவின் நிறுவனம் சார்பில் பல்வேறு வகையான பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதில் ஆவின் நெய் வகைகளின் விலைகள் இன்று முதல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி 5 லிட்டர் நெய் பாட்டில் ரூ.2,900-ல் இருந்து ரூ.3,250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    ஒரு லிட்டர் நெய் பாட்டில் ரூ.580-ல் இருந்து ரூ.630 ஆகவும் உயர்ந்து உள்ளது. அதாவது லிட்டருக்கு 50 ரூபாய் உயர்ந்து உள்ளது. மேலும் 500 மி.லி. நெய் ரூ.290-ல் இருந்து ரூ.315 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

    200 மி.லி. நெய் ரூ.130-ல் இருந்து ரூ.145 ஆகவும், 100 மி.லி நெய் ரூ.70-ல் இருந்து ரூ.75 ஆகவும் உயர்ந்துள்ளது. பிரீமியம் நெய் 1 லிட்டர் ரூ.630-ல் இருந்து ரூ.680 ஆகவும் பிரீமியம் நெய் 500 மி.லி. ரூ.340-ல் இருந்து ரூ.365 ஆகவும் உயர்ந்துள்ளது.

    15 மி.லி. பாக்கெட் நெய் ரூ.12-ல் இருந்து ரூ.14 ஆகி உள்ளது. 100 மி.லி. பாக்கெட் நெய் ரூ.65-ல் இருந்து ரூ.70 ஆக உயர்ந்துள்ளது. 15 கிலோ நெய் டின் ரூ.9,680-ல் இருந்து ரூ.10,725 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    புதிய விலையில் ஆவின் நெய், இன்று முதல் விற்பனைக்கு வருகிறது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டில் 2-வது முறையாக நெய் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • வரும் கோடைகாலத்தில் ஐஸ்கிரீம், மோர், லஸ்ஸி ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய ஆலைகளில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • தள்ளுவண்டி, பேட்டரி தள்ளுவண்டி மூலமாக விற்பனை செய்ய ஆவின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

    சென்னை:

    ஆவின் நிறுவனம் வாயிலாக பால் மட்டுமின்றி, 225-க்கும் மேற்பட்ட பால் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றில் மோர், லஸ்ஸி, ஐஸ்கிரீம், நெய், இனிப்பு வகைகள் ஆகியவற்றை எல்லா தரப்பினரும் விரும்புகின்றனர்.

    இந்த நிலையில் வரும் கோடைகாலத்தில் ஐஸ்கிரீம், மோர், லஸ்ஸி ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய ஆலைகளில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றை தள்ளுவண்டி, பேட்டரி தள்ளுவண்டி மூலமாக விற்பனை செய்ய ஆவின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலமாக சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த புதிய தொழில்முனைவோருக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

    இது குறித்து ஆவின் நிர்வாக மேலாண்மை இயக்குனர் ந.சுப்பையன் கூறியதாவது:-

    தள்ளுவண்டிகள் மூலமாக ஐஸ்கிரீம் வகைகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளோம். இதற்காக விற்பனையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதன்மூலம், புதிய தொழில்முனைவோருக்கு வாய்ப்பு வழங்க உள்ளோம்.

    மக்கள் இருக்கும் இடத்துக்கு நேரடியாக சென்று அவர்கள் விரும்பும் ஆவின் பொருட்களை வழங்க திட்டமிட்டு உள்ளோம். முதற்கட்டமாக சென்னை மற்றும் புறநகரைச் சேர்ந்த 100 புதிய தொழில் முனைவோருக்கு வாய்ப்பு வழங்க உள்ளோம். இந்த வாகனம் மூலமாக ஆவின் ஐஸ்கிரீம் உள்பட பல்வேறு பொருட்களை விற்பனை செய்ய விரும்புவோர் ஆவின் நிர்வாகத்தை அணுகலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆவின் ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருட்களை தள்ளுவண்டிகள் மூலமாக விற்பனை செய்ய விரும்புவோர், சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். இதற்கான சான்றிதழ் அளிக்கப்பட வேண்டும். விற்பனைக்கு எடுக்கும் பொருட்களின் மதிப்பை முன்பணமாக செலுத்தி பொருட்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.

    தேர்ந்தெடுக்கப்பட்ட விற்பனையாளர்கள் ரூ.10 ஆயிரம் காப்புத்தொகை செலுத்த வேண்டும். மாதம் ரூ.30 ஆயிரத்துக்கு குறையாமல் ஐஸ்கிரீம் எடுத்து, விற்பனை செய்ய வேண்டும். விற்பனையாளர்களுக்கு லாபம் 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வழங்கப்படும். வங்கி கணக்கு மற்றும் குடும்ப அட்டை ஆகிய ஆவணங்களுடன் 2 அரசு அலுவலர்களால் சான்று அளிக்கப்பட்ட நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

    ஐஸ்கிரீம் விற்பனை செய்ய தேர்ந்தெடுக்கப்படும் பகுதிகள் மற்றும் இடங்கள் விண்ணப்பத்தில் முன்னதாகவே குறிப்பிட்டு அளிக்கப்பட வேண்டும்.

    • சில நாட்களாக பச்சை நிற பாக்கெட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் ஆரஞ்சு நிற பாக்கெட்டுகள் வீடுகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது.
    • நெல்லை ஆவினுக்கு கூட்டுறவு பால்பண்ணைகள் மூலமாக பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில வாரமாக ஆவின் தட்டுப்பாடு நிலவியது. இதையடுத்து பால்வளத்துறை அமைச்சர் நாசர், அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் கலந்து பேசி தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இந்நிலையில் நெல்லை மாவட்டத்திலும் சில நாட்களாக ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த விபரம் வருமாறு:-

    நெல்லை மாவட்ட ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் நெல்லை ரெட்டியார்பட்டியில் இயங்கி வருகிறது. இங்கிருந்து தான் நெல்லை மாவட்டம், தென்காசி மாவட்டம், தூத்துக்குடி மாவட்டம் ஆகிய பகுதிகளுக்கு பால் வினியோகம் செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நெல்லை மாவட்ட ஆவினில் பால் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக ஆவின் முகவர்களுக்கு பாதி அளவே பால் சப்ளை செய்யப்படுவதாகவும், கடந்த சில தினங்களாக அனைத்து அளவு பாக்கெட்டுகளும் தட்டுப்பாட்டில் இருந்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.

    இங்கிருந்து தினமும் கடைகளுக்கு ஆரஞ்சு நிற பாக்கெட்டுகளும், வீடுகளுக்கு பச்சை நிற பாக்கெட்டுகளும் விற்பனைக்காக அனுப்பப்பட்டது. ஆனால் சில நாட்களாக பச்சை நிற பாக்கெட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் ஆரஞ்சு நிற பாக்கெட்டுகள் வீடுகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது.

    இந்த தட்டுப்பாட்டை போக்குவதற்காக நாளை முதல் 'கவ் மில்க்' என்ற பெயரில் புதிய பால் பாக்கெட்டை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த பாக்கெட் 500 மில்லி அதிகபட்ச விலையாக ரூ.22.50 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கத்தினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து ஆவின் அலுவலக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    நெல்லை ஆவினுக்கு கூட்டுறவு பால்பண்ணைகள் மூலமாக பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தற்போது நெல்லை மாவட்டத்தில் 36 ஆயிரம் லிட்டர் பால், தூத்துக்குடி மாவட்டத்தில் 40 ஆயிரம் லிட்டர் பால் என மொத்தம் 76 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மொத்தம் 85 ஆயிரம் லிட்டருக்கு மேல் ஆவின் பால் தேவைப்படுகிறது.

    தற்போது கொள்முதல் வெகுவாக குறைந்துவிட்டது. இதற்கு காரணம் தனியார் பால் நிறுவனங்கள் கூடுதல் விலை நிர்ணயித்து பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பாலை கொள்முதல் செய்கின்றனர். ஆவினில் இருந்து லிட்டர் ரூ.33 முதல் 38 வரை தரத்திற்கு ஏற்ப கொள்முதல் செய்யப்படுகிறது.

    ஆனால் தனியார் நிறுவனங்கள் லிட்டர் ரூ.40 முதல் 42 வரை கொள்முதல் செய்வதால் பால் உற்பத்தியாளர்கள் அவர்களை நாடி செல்கின்றனர். இதனால் ஆவினில் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

    வழக்கமாக பச்சை நிற பாக்கெட்டு ஒன்று விற்பனை செய்வதன் மூலம் ஆவினுக்கு ரூ.2 நஷ்டம் தான் ஏற்பட்டு வருகிறது. இவற்றையெல்லாம் சரிசெய்யவே கவ் மில்க் என்ற பெயரில் புதிதாக பால் பாக்கெட்டுகள் அறிமுகம் செய்ய உள்ளோம். இதன்மூலம் தட்டுப்பாடு தீரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து ஆவின் பால் ஏஜெண்ட்டுகள் கூறியதாவது:-

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆவின் பால் பாக்கெட்டுகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. பச்சை நிற பாக்கெட்டுகளில் கொழுப்பு 4.5 சதவீதம் என்ற அளவில் இருந்தது. அதனை லிட்டர் ரூ.46-க்கு விற்பனை செய்து வந்தோம். ஆனால் தற்போது தட்டுப்பாட்டினால் கவ் மில்க் என்பதை 3.5 சதவீதம் கொழுப்புடன் அறிமுகப்படுத்தி லிட்டர் ரூ.45-க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இதனால் வீடுகளில் விசேஷ நிகழ்ச்சிகள் நடத்துவோர், டீக்கடைக்காரர்கள் ஆவின் பால் வாங்குவதை நிறுத்தி வருகின்றனர். பேட் அளவு அதிகமாக இருந்தால் கூடுதலாக தண்ணீர் சேர்த்து டீ போட்டு கொள்ள முடியும். ஆனால் கவ் மில்க்கில் பேட் அளவு குறைக்கப்பட்டுள்ளதால் அதில் குறைந்த அளவே தண்ணீர் சேர்க்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெரும்பாலும் ஆவின் பால் தான் வீடுகளில் மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள்.
    • சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் இருந்து தினமும் 5.50 லட்சம் லிட்டர் பால் சப்ளை செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் ஆவின் பால் நிறுவனம் மூலம் 14.50 லட்சம் லிட்டர் பால் தினமும் வினியோகிக்கப்படுகிறது. தனியார் பாலை விட ஆவின் பால் விலை குறைவாக இருப்பதால் கடைகளில் விரைவாக விற்று வருகின்றன.

    பெரும்பாலும் ஆவின் பால் தான் வீடுகளில் மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆவின் பாலை விரும்புவதால் தட்டுப்பாடாகவே இருந்து வருகிறது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆவின் பால் விலை உயர்த்தப்பட்ட போதிலும் தனியார் பாலை விட விலை குறைவாக இருப்பதால் தொடர்ந்து தேவை அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆவின் பச்சை நிற பாக்கெட் பால் கடைகளில் உடனே விற்று தீர்ந்து விடுகின்றன.

    இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு பால் வினியோகம் செய்யக்கூடிய சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் கடந்த சில நாட்களாக பால் சப்ளை செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    அங்கு பணியாற்றும் வடமாநில ஒப்பந்த தொழிலாளர்கள் ஹோலி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு சென்றவர்கள் திரும்பாததால் பால் வினியோகத்தில் தாமதம் ஏற்பட்டது.

    சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் இருந்து தினமும் 5.50 லட்சம் லிட்டர் பால் சப்ளை செய்யப்படுகிறது. பால் அட்டைதாரர்களுக்கு 2 லட்சம் லிட்டரும், வினியோகஸ்தர்களுக்கு 3.50 லட்சம் லிட்டரும் வினியோகிக்கப்படுகிறது.

    தொழிலாளர்கள் பணிக்கு வராததால் ஆவின் பால் லாரி, வேன்களில் ஏற்றி அனுப்புவதில் நேற்று தாமதம் ஏற்பட்டது. அதிகாலை 3, 4 மணிக்கு புறப்பட்டு செல்லக்கூடிய வாகனங்கள் காலை 6, 7 மணிக்கு மேல் புறப்பட்டதால் பால் வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது.

    இதனால் பால் வினியோகஸ்தர்கள், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

    அடையாறு, மயிலாப்பூர், வேளச்சேரி, தாம்பரம், கோவிலம்பாக்கம், பாலவாக்கம், பல்லாவரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பால் 2 மணிநேரம் தாமதமாக வினியோகிக்கப்பட்டது. இன்று 2-வது நாளாக பால் சப்ளை செய்வதில் தாமதம் ஏற்பட்டது.

    பால் அட்டைதாரர்களுக்கு அதிகாலையில் குறிப்பிட்ட நேரத்திற்கு பால் வினியோகிக்கப்பட்டாலும் கடைகளுக்கு வழங்கக்கூடிய வினியோகஸ்தர்களுக்கு செல்வதில் பிரச்சினை ஏற்பட்டது.

    மளிகை கடைகள், பெட்டிக்கடைகள், ஆவின் முகவர்களுக்கு குறித்த நேரத்திற்கு பால் போகாததால் பொதுமக்கள் தனியார் பால் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இதேபோல அம்பத்தூர் பால் பண்ணையிலும் தொழிலாளர்கள் பிரச்சினை ஏற்பட்டதால் மத்திய சென்னை பகுதியில் பால் வினியோகம் தாமதம் ஆனதாக தெரிகிறது. தெற்கு மற்றும் மத்திய சென்னை பகுதியில் ஆவின் பால் சப்ளையில் இன்று பாதிப்பு ஏற்பட்டதை சரிசெய்யும் வகையில் அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து ஆவின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    சோழிங்கநல்லூர் பண்ணையில் தொழிலாளர்கள் நேற்று முன்தினம் குறைந்த அளவில் பணியில் ஈடுபட்டதால் நேற்று சப்ளை சற்று தாமதம் ஆனது. அவற்றை இன்று சரி செய்து விட்டோம். அங்கு பணி செய்யக்கூடிய 65 தொழிலாளர்களில் 60 பேர் வேலை செய்தனர். பால் அட்டைதாரர்களுக்கு அதிகாலை 2 மணிக்கு லாரிகள் புறப்பட்டு சென்றன. வினியோகஸ்தர்களுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் காலை 5.30 மணி, 6 மணி வரை சென்றன. இதனால் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இல்லை. பால் பற்றாக்குறை எதுவும் இல்லை. தேவையான அளவு சப்ளை செய்யப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • யாரும் ஏற்றுக்கொள்ளாத அளவிற்கு இன்றைக்கு அதிகார துஷ்பிரயோகம் ஏற்பட்டுள்ளது.
    • பாராளுமன்ற தேர்தல் பணிகள் கடந்த ஜனவரி மாதம் முதல் அ.தி.மு.க. துவங்கிவிட்டது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. துணை பொது செயலாளர் முன்னாள் அமைச்சர்ருமான கே.பி.முனுசாமி கலந்துகொண்டு அ.தி.மு.க. புதிய உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி கூறியதாவது:-

    ஆவின் பால் தட்டுப்பாடு செயற்கையான முறை என்பதுடன் தவறான கையாளுகின்றதால் மிகப்பெரிய அளவில் ஆவின் நிர்வாகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 30 லட்சம் ஆவின் நுகர்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதற்கு காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உள்ள அரசு எல்லா துறைகளிலும் உரிய முறையில் செயல்படாத காரணத்தினால் திறமையான அதிகாரிகள் பணிய மறுத்த காரணத்தினால் தனக்கு வேண்டியவர்களை பணியில் அமருவதால் ஒவ்வொரு துறையும் செயல் இழந்துள்ளது.

    முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்திருப்பது எவ்வளவு பெரிய காழ்ப்புணர்ச்சி என்பதை காட்டுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் இதில் முறையாக செயல்படவில்லை. வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் குற்றம் சுமத்துகிறார். அதற்கு எடப்பாடி பொறுமையாக இருக்கிறார். யாரும் ஏற்றுக்கொள்ளாத அளவிற்கு இன்றைக்கு அதிகார துஷ்பிரயோகம் ஏற்பட்டுள்ளது.

    தமிழகத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை என்றால் இதுபோன்ற சமூக விரோத செயல்கள் மூலம் சம்பாதிக்கும் பணத்தில் ஆணவ தாக்குதல் நடத்த முயற்சி செய்வார்கள்.

    அப்படி நடக்கும்போது சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் இதுபோன்ற சம்பவங்களுக்கு சில இடங்களில் காவல்துறையும் உறுதுணையாக இருக்கும். இதனால் மென்மேலும் தவறுகள் செய்ய வாய்ப்பு இருக்கும். அப்படி சட்டம் ஒழுங்கு பாதிப்பிற்கு முக்கிய காரணமாக இருப்பது ஆளும் கட்சியினர். முதலமைச்சருக்கு எச்சரிக்கையாக கூறுகிறேன். இதில் முழு கவனத்துடன் செயல்பட வேண்டும். இல்லையெனில் அவரது ஆட்சிக்கு மிகப்பெரிய களங்கம் ஏற்படும்.

    பாராளுமன்ற தேர்தல் பணிகள் கடந்த ஜனவரி மாதம் முதல் அ.தி.மு.க. துவங்கிவிட்டது. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட அளவில் ஒன்றிய அளவில் சார்பு அணிகள் ஆலோசனை நடத்தி எப்படி தேர்தலில் பணியாற்ற வேண்டும் என ஆலோசனை வழங்கி பம்பரம் போல் செயல்பட்டு வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் இருக்கும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக ஆவினுக்கு இன்று முதல் பால் அனுப்ப மாட்டோம்.
    • பால் விலை உயர்வுக்கு தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும்.

    சென்னை:

    பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பால் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி வந்தனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க நிர்வாகிகளுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இதில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால் பால் உற்பத்தியாளர்கள் இன்று முதல் ஆவினுக்கு பால் அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ளனர்.

    இதுதொடர்பாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் மாநில தலைவர் வாழப்பாடி ராஜேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பால் கொள்முதல் விலை உயர்வு, பணியாளர்களின் பணி வரன்முறை, கால்நடை தீவனம், கால்நடைகளுக்கான இன்சூரன்ஸ் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த அக்டோபர் மாதம் போராட்டத்தில் ஈடுபட்டோம்.

    தமிழக அரசு எங்களை அழைத்து பேசி எங்கள் கோரிக்கைகள் மீது தீர்வு ஏற்படுத்தி தருவதாக உத்தரவாதம் அளித்தது. அதன்படி, பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 மட்டும் உயர்த்தப்பட்டது. அதாவது, பசும்பால் லிட்டருக்கு ரூ.32-ல் இருந்து ரூ.35 ஆகவும், எருமை பால் ரூ.41-ல் இருந்து ரூ.44 ஆகவும் உயர்த்தப்பட்டது.

    இந்த விலை உயர்வு 'யானைப்பசிக்கு சோளப்பொறி' போன்றதாக உள்ளது என்றும், விலை உயர்வு போதாது என்றும் அப்போதே தமிழக அரசுக்கு தெரியப்படுத்தினோம்.

    குறைந்தபட்சம் லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி தரும்படி கேட்டோம். பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூ.42-ம், எருமைப்பாலுக்கு ரூ.51-ம் வழங்கும்படி கேட்டிருந்தோம். இருந்தபோதிலும் லிட்டருக்கு ரூ.3 மட்டுமே உயர்த்தி வழங்கப்பட்டது. அதே வேளையில் மற்ற கோரிக்கைகள் மீது எந்த தீர்வும் காணப்படவில்லை.

    பால் விலை உயர்வு உள்ளிட்ட எங்களது கோரிக்கையை நிறைவேற்றக்கோரி கடந்த 1-ந் தேதி கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டோம்.

    ஆனால், அரசு எங்கள் கோரிக்கை மீது எந்த தீர்வும் காணவில்லை. எனவே, ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்குவதை நிறுத்துவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.

    எனவே, இன்று முதல் ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்குவதை நிறுத்த முடிவு செய்து உள்ளோம். இதன்மூலம் தமிழகத்தில் இருக்கும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக ஆவினுக்கு இன்று முதல் பால் அனுப்ப மாட்டோம்.

    தற்போது தமிழகத்தில் உள்ள 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஆவினுக்கு நாள் ஒன்றுக்கு 27½ லட்சம் லிட்டர் பால் அனுப்பப்படுகிறது.

    இதில் 2½ லட்சம் லிட்டர் பால், நெய் உள்ளிட்ட பால் பொருட்கள் தயாரிக்க எடுத்துக்கொள்ளப்படுகிறது. மீதமுள்ள பால் ஆவின் நிறுவனத்தின் மூலம் நுகர்வோருக்கு வினியோகிக்கப்படுகிறது.

    இந்த போராட்டம் குறித்து தமிழகம் முழுவதும் உள்ள பால் உற்பத்தியாளர்களுக்கு தகவல் தெரிவித்து வருகிறோம். இந்த போராட்டத்தின் மூலம் காலை மற்றும் மாலையில் தலா 50 ஆயிரம் லிட்டர் என்ற வகையில் தொடர்ந்து குறைந்து கொண்டே வரும்.

    தொடர்ந்து 5 நாட்களில் ஆவினுக்கு 10 லட்சம் லிட்டர் வரை பால் வழங்குவது குறையும். ஒரு கட்டத்தில் ஆவினுக்கு பால் கொள்முதல் முற்றிலும் தடைபடும்.

    தனியார் நிறுவனங்கள் ஏற்கனவே உள்ள விலையில் 10 ரூபாய் கூடுதலாக கொடுத்து பாலை கொள்முதல் செய்துகொள்ள தயாராக இருக்கிறார்கள்.

    இந்தியாவில் எந்த மாநிலத்திலும் பால் உபரி என்பது இல்லை. இதனால், நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் எங்கிருந்தும் பால் வாங்க முடியாது.

    ஆவின் நிறுவனத்தை தமிழக அரசு முழுமையாக காப்பாற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் எங்கள் சங்க உறுப்பினர்கள் கூடுதல் விலை கொடுக்கும் தனியார் நிறுவனத்துக்கு பாலை கொடுத்து விடுவோம்.

    பால் விலை உயர்வுக்கு தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும். கேரளாவில் ஒரு லிட்டர் பாலுக்கு 48 ரூபாய் 70 காசு வழங்கப்படுகிறது. தமிழகத்தை விட கர்நாடகாவில் ரூ.15 கூடுதலாக வழங்கப்படுகிறது. இந்த கொள்முதல் விலைப்பட்டியலை தமிழக அரசுக்கு அளித்துள்ளோம்.

    தமிழக அரசு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் போராட்ட அறிவிப்பால் ஆவின் நிறுவனத்தின் பால் வினியோகிப்பதில் கடும் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது.

    ×