என் மலர்
நீங்கள் தேடியது "amman temple"
கரூர் மாரியம்மன் நான்கு கரங்களுடன் கிழக்கு முகமாக சற்றே ஈசான்யதிசை பார்வையுடன் அமர்ந்த நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றாள். மேலும் மதங்களுக்கு அப்பாற்பட்டு மத நல்லிணக்கம் பேணும் புண்ணிய தலமாக இக்கோவில் விளங்குகிறது. சுமார்100 ஆண்டுகளுக்கு முன்பு முன்னோர்கள் தான்தோன்றி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் இருந்து பிடி மண் எடுத்துவந்து இந்த கோயிலை அமைத்துள்ளனர். கோவிலில் பரம்பரை அறங்காவலராக முத்துக்குமார் உள்ளார். இவரது முன்னோர்கள் இந்த கோயிலை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.
திருச்சி சமயபுரம் மாரியம்மனுக்கு அடுத்தபடியாக உள்ள முக்கிய தலமாக கரூர் மாரியம்மன் கோவில் விளங்குகிறது. இக்கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் 22 நாட்கள் திருவிழா மிக விமரிசையாக நடைபெறும். இத்திருவிழாவில் பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் கோவிலுக்கு வந்து கண்ணடக்கம், பூ மிதித்தல், அக்னிசட்டி எடுத்தல், அங்க பிரதட்சணம், முளைப்பாரி எடுத்தல், மாவிளக்கு வழிபாடு, உருவார பொம்மை, அலகு குத்துதல், போன்ற நேர்த்திக்கடன்களை செலுத்தி மாரியம்மனின் அருளை பெறுகின்றனர். மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திருவிழா அன்று பந்தல் அமைப்பதை சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பே முகமது என்ற முஸ்லிம் இனத்தை சேர்ந்தவர் முன் நின்று நடத்தி வைத்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
இன்றும் அவை தலைமுறை, தலைமுறையாக தற்போதும் தொடர்ச்சியாக நிறைவேற்றி வருவது தனி சிறப்பு. மேலும் அம்மன் வழிபாட்டில் சில பூஜைகளை ஏற்பாடு செய்வதும் அம்மன் கோவில் மதிய பூஜை தீர்த்தத்தை வாங்கி அம்மை நோய் தாக்கியவர்களுக்கு கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம் மக்கள் நம்பிக்கையோடு கொடுத்து வழிபடுவதும் கோவிலில் தினமும் நடைபெறும் நிகழ்ச்சியாகும். எனவே மத நல்லிணக்கம் பேணும் புண்ணிய தலமாக கரூர் மாரியம்மன் கோவில் விளங்குகிறது. கோவில் திருவிழா அன்று கம்பம் ஆற்றில் விடுவது வெகு விமரிசையாக நடைபெறும். கம்பம் விடும் நாளன்று சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் உடன் கம்பத்திற்கு தயிர் சாதம் படைத்து வழிபாடு நடைபெறும்.
பின்னர் மாரியம்மனுக்கும் கம்பத்திற்கும் மாலை அணிவித்து சிறப்பு வழிபாடுகளுடன் கம்பம் கோவிலில் இருந்து ஊர்வலமாக ஆற்றுக்கு எடுத்து செல்லப்படும். அப்போது கம்பத்திற்கு காவலாக மாவடி ராமசாமி அம்சமாக அரிவாள் எடுத்து செல்லப்படும். இவ்வாறு ஆற்றுக்கு அனுப்பும் கம்பத்திற்கு சில வரலாறுகள் உண்டு. மஞ்சள் நீர் கம்பம் என்பது கடவுளை குறிக்கும். கடவுளின் பிரதிபலிப்பே கம்பம் எனப்படுகிறது. சிவசக்தி, விஷ்ணு சக்தி, பிரம்ம சக்தி ஆகிய மூன்று சக்திகளின் வடிவமாகவே கம்பம் உள்ளது.
ஆணவம், கண்மம், மாயை என்ற மூன்றையும் நீக்கக் கூடிய சக்தியாகவே கம்பம் விளங்குகிறது. இறைவன் ஏகன் அநேகன் என்பதை வலியுறுத்துவது கம்பம். மூன்று பாகங்கள் இணைந்து ஒரே பாகமாக கம்பம் அமைந்திருக்கும். வழிபாடுகளில் உருவ வழிபாடு, உருவமில்லா வழிபாடு, ஜோதி வழிபாடு என்று பல வகைகள் உண்டு. அதில் மஞ்சள் நீர் கம்பம் வழிபாடு என்பது அனைத்திற்கும் பொதுவானது என்கின்றனர் ஆன்மிக பெரியோர்கள். கரூருக்கு மழை வளம் தரும் தெய்வமாக கரூர் “மாரி”யம்மன் விளங்குகிறாள். ஓவ்வொரு ஆண்டும். கோடை காலத்தில் கம்பம் திருவிழா அன்று கம்பம் சாற்றுதலில் துவங்கி கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்வு வரை அடிக்கடி கண்டிப்பாக மழை பெய்து விடுகிறது.
கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் திருநீறு மருத்துவ குணம் நிறைந்தது. வெண்டா மண் என்று அழைக்கப்படும் இந்த திருநீற்றை பக்தர்கள் நெற்றியில் பூசிக் கொள்வதன் மூலம் தலைவலி, தலையில் நீர் கோர்த்தல், கண் சம்பந்தமான நோய்கள், தோல் நோய் போன்ற நோய்கள் தீர்ந்து விடுகிறது. இத்தகைய ஒரு அரிய வகை மண், தெய்வீக சக்தி கொண்டதும், பல மருத்துவ குணங்கள் அடங்கியும் உள்ளது.
அம்மனுக்கு மாவிளக்குக் காரி என்ற பெயரும் உண்டு. அவள் திருவிளையாடலில் கண் வலி, பிடரி வலி, வயிற்று வலி, தலைவலி என இன்னல் படுவோர் மா விளக்கு எடுத்து நெய் விளக்கேற்றி கோயிலின் முன் தன் நேர்த்திக்கடனை செலுத்தினால் பிணியெல்லாம் பனி போல் விலகும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
துன்பம், துயரம், கஷ்டம், இன்னல், இடர் ஏற்படுவதா, ஏற்படுத்திக் கொள்வதா, இதைக் கேள்வியாக முன் வைத்தால் நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்வது என்பது தான் சரியாகும். அதற்குத் தீர்வு காண அம்மன் சன்னதி, மனதிற்கு நிம்மதி தரும் அந்த சன்னதிக்கு நாமே நம் மனக்கட்டுப்பாடோடு சில நியதிகளை வகுத்துக் கொண்டு நேர்த்திக் கடன்களாய் செய்வதுதான்;
சிறு குழந்தை முதல் பெரியவர் வரை கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி, மொட்டை அடித்து தவமிருந்து பெற்ற குழந்தையை கரும்புத் தொட்டிலிட்டு, அக்னியாய் செங்கதிராய் எழும் தீச்சுடர் சட்டியை கரங்களில் ஆற்றிலிருந்து எடுத்து வழிநெடுக ஊற்றப்படும் எண்ணெய் வேகத்திலும் பைய நடை பயின்று ஆலயம் சேர்க்கும் அழகு தனியழகு. உள்ளம் வருத்தி உயிர் மெய் உருக்கி மேனியெல்லாம் அலகு, நாக்கில் அலகு, இடுப்பில் பெரிய அலகு, முதுகுதண்டில் அலகு குத்தி ஏற்ற வண்டியின் மேல் நிறுத்தி பறக்கும் காவடி, பறவைக் காவடி இப்படி எண்ணற்ற காவடிகளை எண்ணமெல்லாம் நிறைந்த தாய்க்கு தன் நேர்த்திக் கடனாய் செலுத்துவதும் முக்கிய நிகழ்ச்சியாகும்.
3 ஆண்டுகளுக்குப் பிறகு களைகட்டிய கரூர் மாரியம்மன் திருவிழா
திருச்சி சமயபுரம் மாரியம்மன் ஆலயத்திற்கு அடுத்தபடியாக கொங்கு மண்டலத்தில் உள்ள பிரசித்திபெற்ற அம்மன் ஆலயங்களில் பிரசித்திபெற்ற கரூர் மாரியம்மன் ஆலயமும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் கரூர் மாரியம்மன் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனாவால் 3 ஆண்டுகளாக இத்திருவிழா தடைபட்டது.
இந்த ஆண்டு வைகாசி திருவிழாவின் முதல் நிகழ்வாக கம்பம் நடும் நிகழ்ச்சி கடந்த 8-ந் தேதி நடைபெற்றது. கம்பம் நடுதல் என்பது கோயில் அறங்காவலர்கள் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் கனவில் அம்மன் தோன்றி கம்பம் இருக்கும் இடத்தை கூறுவதாக ஐதீகமாக இருந்து வருகிறது. தொடர்ந்து 15 நாள்களுக்கு அதிகாலை தொடங்கி இரவு வரை கம்பத்திற்கு காவிரி தீர்த்தம் செலுத்தும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்ய கூட்டம் தினந்தோறும் அலைமோதும்.
தொடர்ந்து 13-ந் தேதி வெள்ளிக்கிழமை பூச்சொரிதல் விழாவில் அலங்கரிக்கப்பட்ட பூ அலங்காரத்தில் பகுதிவாரியாக மாரியம்மன் ஆலயத்திற்கு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 23ஆம் தேதி திருத்தேர், மாவிலக்கு, அக்னி சட்டி, அலகு காவடி உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக் கடன்கள் செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இறுதி நிகழ்ச்சியாக வரும் மே 25-ந்தேதி புதன்கிழமை கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் கலந்து கொள்ளக்கூடிய பிரமாண்ட நிகழ்ச்சியாக கரூர் மாரியம்மன் திருவிழா நிறைவுபெறுகிறது. கரூர் மாரியம்மன் வைகாசி பெருவிழாவை ஒட்டி விழாக்குழுவினர் மற்றும் காவல் துறை உள்ளிட்ட இந்து அறநிலையத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் விழாவுக்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
பிரார்த்தனை தலம்
கரூரில் கருணை வடிவாய் வீற்றிருந்து அருள்பாலித்து வரும் மாரியம்மன் நான்கு கரங்களுடன், கிழக்கு முகமாக சற்றே ஈசான்ய பார்வையுடன் அமர்ந்த நிலையில் இருக்கிறாள். தன்னை நாடிவரும் பக்தர்களின் குறைகளை வேரறுத்து இன்மையிலும், நன்மையுடன் வாழ வைக்கும் பிரார்த்தனை தலமாக இந்த கரூர் மாரியம்மன் கோவில் உள்ளது. வழிப் போக்கர், வாசலில் நின்று வணங்கி செல்லும் பக்தர்க ளின் குறைகளை கூட தன தாக்கிக்கொண்டு அவர்கள் வாழ்வின் தடைகளை போக்கி மகிழ்ச்சி பெருக்குடன் வாழ்வை தொடர வைக்கும் தெய்வமாக திகழ்ந்து வருகிறாள்.
அக்னி சட்டியும், அலகு குத்துதலும் நேர்த்திக்கடன்
ஆன்மீகமாக இருந்தாலும், அறிவு சார்ந்த நிகழ்வாக இருந்தாலும் எதையுமே கூலி இல்லாமல் அரிதாக வாங்கி விட முடியாது. அதன் பலனை அனுபவித்ததற்கான கூலியை அளித்தே ஆகவேண்டும். அறிவுசார் நிகழ்வுக்கு அதிக மாகவும், அம்மனுக்கு தன்னால் இயன்றதையும் செய்வது சாலச்சிறந்தது. அந்த வகையில் கண்ணீருடன் மருகி நிற்கும் பக்தர்களின் குறைகளை கேட்டறிந்து தீர்த்து வைக்கும் கரூர் மாரியம்மனுக்கு பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனாக அக்னி சட்டி ஏந்துதல், அலகு குத்துதல், காவடி எடுத்தல், பால் குடம், மாவிளக்கு வைத்தல், பொங்கல் வைத்தல் ஆகியவற்றை செவ்வனே நிறைவேற்றி வைக்கிறார்கள். இவை தவிர நீர்மோர், பானகம், வடை பருப்பு வைத்து பிரார்த்தனை நடத்தலாம். பால் அபிசே கம் செய்யலாம். திருவிளக்கு பூஜை நடத்தலாம். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைக்கலாம்.
வீடுகளில் மஞ்சள் நீருடன், தயிர் சாதம் படைத்து வழிபட்ட பக்தர்கள்
கரூர் நகரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில், சித்திரை மாதம் இறுதியில் திருவிழா தொடங்கி வைகாசி மாதத்தில் பெருவிழா நடப்பது வழக்கம். அதில், கம்பம் நடுதல், பூத்தட்டு, கம்பம் ஆற்றில் விடுதல் போன்ற நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடக்கும். அன்று மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் கோவிலுக்குள் பக்தர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. திருவிழாக்களும் ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோவில் நிர்வாகம் ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அதில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கோவிலில் நடைபெறும் அனைத்து திருவிழாக்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் அம்மனை தரிசிக்க வரவேண்டாம்.
தங்கள் வீடுகளில் மஞ்சள் நீர் வைத்து கும்பத்தில் வேப் பிலை, இளநீர், மாவிளக்கு, தேங்காய், பழவகைகளை வைத்து வழிபாடு செய்து, தயிர் சாதம் படையலுடன் பிரார்த்தனை செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வீடுகளிலும் மக்கள் மஞ்சள் நீர் வைத்து, கும்பத்தில் வேப்பிலை, இளநீர், மாவிளக்கு, தேங்காய், பழவகைகளை வைத்து, தயிர் சாதம் படையலுடன் வழிபாடு செய்தனர்.
பக்தர்கள் மனதில் ஆறாத வடுவாக இந்த திருவிழா ரத்து இருந்தபோதிலும் நோயற்ற வாழ்வை கரூர் மாரியம்மன் நமக்கு அருளுவார் என்ற நம்பிக்கையுடன் அம்மனை மனதார வழிபட்டு வருகிறார்கள்.
கரூர் மாரியம்மனுக்கு அக்னி சட்டி எடுத்த கே.பி.சுந்தராம்பாள்
மாரி என்றால் மழை என்பது பொருள். மாரியம்மன் என்றால் அருள்மழை பொழியும் தெய்வம் என்பது தெளிவு. எல்லை தெய்வமாய் மக்களை காக்கும் அன்னையாய் கருணையே வடிவான தாயாய், கற்பக விருட்சமாய் மாரி விளங்குவதற்கு ஆண்டு தோறும் கரூர் மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையே சாட்சி.
இன்னல் நீங்க வேண்டி எத்தனையோ ஆயிரம் பேர் அக்னிசட்டி ஏந்தி வருகிறார்கள். எத்தகையோ பக்தர்கள் 10, 12 அடி நீளமுள்ள அலகு குத்தி வருகிறார்கள். சில பக்தர்கள் பறக்கும் காவடி பாடைக்காவடி, விமான காவடி எடுத்துஅங்கப் பிரதட் சணம் செய்து கொஞ்சும் மழலைவேண்டி வணங்கி, பின்னர்மாரி அருளால் வந்த குழந்தைகளை கரும்பில் தொட்டில் கட்டி தூக்கி வருவதே பேரழகு தான்.
சிலர் கரும்புள்ளி, செம் புள்ளி குத்தி குழந்தை வரம் வேண்டுதல், முடிக்காணிக்கை செலுத்துவது, பல்லாயிரம் மாவிளக்கு வைத்தல் என எத்தனை வழிபாடு. அம்மாவாம் கருவூர் மாரிகுழந்தைகளின் உடம்பிலே விளையாட்டாய், விளையாட்டு அம்மையாய் விளையாடும் அழகு தான் எத்தனை. அழகு செதுக்கிய முத்துக்களாய் கோர்த்த மாலையாய் அவர் பார்க்கும் அழகும் வேப்பிலையும், அபிஷேக தீர்த் தமும் வந்த வேகத்தில் வடியும் அழகும் அம்மையின் திருவிளையாடல் அல்லவா! லட்சோப லட்சம் மக்கள் ஆம் பிராவதி எனும் அமராவதி ஆற்றின் கரையில் கூடி வழிபடும் இப்பெருவிழாவை காணாதவர்கள் கண்டு களிக் கவும் அம்மனை தரிசிக்கவும் அழைக்கிறார்கள் அம்மனின் தீவிர பக்தர்கள்.
அஞ்சாக்கவுண்டன்பட்டி பெரியநாயகியம்மன், அணைப் பாளையம் கொளப்பியம்மன், அத்திப்பாளையம் பெரிய பொன்னாச்சியம்மன் மற்றும் சின்ன பொன்னாச்சியம்மன், அரவக்குறிச்சி கன்னி–மாரியம்மன், அரவக்குறிச்சி முத்தாலம் மன், ஆண்டாங்–கோவில் ஏலரம்மன், ஆதனூர் முத்தாலம்மன், ஆதனூர் ஜக்காளம்மன், ஆதிநத்தம் பிடாரி சடச்சியம்மன், ஆர்ச்சம்பட்டி எல்லையம்மன், இரண்யமங்கலம் கன்னிமாரம் மன், இனங்கூர் கன்னிமார், மதுரைவீரசாமி, இனுங்கனூர் கன்னிமார், இனுங்கனூர் செல்லாண்டியம்மன், இனுங்கூர் எல்லையம்மன், இனுங்கூர் பிடாரியம்மன், உப்பிடமங்கலம் எல்லையம்மன், ஓடுகம்பட்டி மாரியம்மன், கஞ்சமனூர் மாரியம் மன், கரூர் புற்றுக்கண் மாரியம்மன், நவக்கிரக தலம்,
கரட்டுப்பட்டி கொடிக்கார மாரியம்மன், கரியாம்பட்டி அங்காளபரமேஸ்வரி அம்மன், கருவப்பநாயக்கன்பட்டி மாரி யம்மன், கரூர் எடுப்பாளம்மன், கரூர் மாரியம்மன், கல்லடை கரையடி கன்னிமார், கள்ளப்பள்ளி காமாட்சியம்மன், கள்ளை பூக்குழி கன்னிமார், கள்ளை மாரியம்மன், காக்காவாடி கஸ்பா ஊத்துக்கரை கன்னிமார், காருடையாம்பாளையம் மேலப்பட்டையம்மன், காளையாப்பட்டி அழகநாச்சியம்மன், கிருஷ்ணராயபுரம் பிடாரி அழகுநாச்சியம்மன், குப்பாச்சிப்பட்டி எல்லையம்மன், குளித்தலை ராமலிங்க சாமுண்டீஸ்வரியம்மன், கொக்காணிபாளையம் செல்லாண்டியம்மன், கொசூர் குள் ளாயி அம்மன், கொசூர் ஜக்காளம்மன், கொளக்காரன்பட்டி துர்க்கையம்மன், கோட்டைபுளிப்பட்டி மாரியம்மன், கோடங்கிப் பட்டி முத்தாலம்மன், கோடந்தூர் காளியம்மன், கோடாந்தூர் சந்திரசேகர பிடாரியம்மன், கோடாந்தூர் பெரிய நாயகியம்மன், கோதூர் கோதையம்மன், கோயம்பள்ளி செல்லாண்டியம்மன்,
சரக்கம்பட்டி ஜக்காளம்மன், சாந்துவார்பட்டி பாம்பாலம்மன், சிந்தலவாடி நாச்சிமாரம்மன், பெரியகாண்டியம்மன், சிந்தா மணிப்பட்டி பிடாரி மாரியம்மன், சிவாயம் அங்காளம்மன், சிவாயம் கன்னிமார், சிவாயம் மாரியம்மன், சின்ன சேங்கல் பிடாரியம்மன், சின்னதாராபுரம் மாரியம்மன், சின்னதேவன் பட்டி வீரமலைக்கன்னிமார், சின்னப்பனையூர் மாரியம்மன், சின்னமலையாண்டிப்பட்டி மாரியம்மன், சின்னியம்பாளையம் மாரியம்மன், சுக்காலியூர் பகவதியம்மன், செம்பியாநத்தம் நத்தமேடு பிடாரியம்மன், செம்பியாநத்தம் பட்டத்தளச்சியம் மன், செம்பியாநத்தம் மாரியம்மன், செவ்வந்திபாளையம் காளியம்மன், சேங்கல் எல்லையம்மன், தண்ணீர்பள்ளி இசக்கியம்மன், தரகம்பட்டி பகவதியம்மன்,
தளவாய்ப்பாளையம் மாரியம்மன், தாந்தோன்றிமலை பூமா தேவி, தாளியாம்பட்டி மாரியம்மன், திருமாணிக்கம்பட்டி கன்னிமார், துக்காச்சி அகிலாண்டம்மன், தென்னிலை சீலக்காம்பட்டி ஜக்காளம்மன், தொண்டமாங்கினம் மாரியம்மன், தொண்டமாங்கினம் வீரமலைக் கன்னிமார், நங்கவரம் அரிசன மாரியம்மன், நங்கவரம் பகவதியம்மன், நங்கவரம் பிடாரியம்மன், நஞ்சை காளக்குறிச்சி குங்குமகாளியம்மன், நஞ்சைக்காளக்குறிச்சி மாரியம்மன், நஞ்சைகடம்பங்குறிச்சி செல்லாண்டியம்மன், நஞ்சைதோட்டக்குறிச்சி மாரியம்மன், நஞ்சைதோட்டக்குறிச்சி மலையம்மன்,
நஞ்சைப்புகழூர் மாரியம்மன், நஞ்சைபுகர் கண்டியம்மன், நடுப்பட்டி பெரியகாண்டியம்மன், நல்லமுத்துப்பாளையம் செல்லாண்டியம்மன், நல்லூர் மாரியம்மன், பிடாரியம்மன், நன்னியூர் குமாரசாமி பவனியம்மன், நாகம்பள்ளி துர்க் கையம்மன், நாகனூர் மாரியம்மன், நாகனூர் ஜக்காளம்மன், நெடுங்கூர் பிடாரி காளியம்மன், நெரூர் காளியம்மன், நெரூர் நீலியம்மன் மாரியம்மன், நெரூர் பெரியகாண்டியம்மன்.
பசுபதிபாளையம் பகவதியம்மன், பசுவப்பட்டி செல்லாண்டியம்மன், பசுவப்பட்டி மகாலட்சுமி, பஞ்சப்பட்டி பிடாரி, பஞ்சப்பட்டி மாரியம்மன், பண்ணப்பட்டி எல்லையம்மன், பணிக்கம்பட்டி காளியம்மன், பனையூர் மாரியம்மன் வீரமா காளியம்மன், பள்ளப்பட்டி கரியகாளியம்மன், பள்ளப்பட்டி செல்லாண்டியம்மன், பள்ளப்பட்டி மாரியம்மன், பாகநத்தம் அழகாபதியம்மன், பாதிரிப்பட்டி மாரியம்மன், பாப்பக்காப் பட்டி பள்ளர் மாரியம்மன், பாப்பக்காப்பட்டி ஜக்காளம் மன், பாப்பயம்பாடி எல்லையம்மன், பால்ராஜபுரம் அறவ முடிச்சம்மன், பாலவிடுதி அங்காளம்மன், பாலவிடுதி கனவாய் கன்னி மாரம்மன்,
பாலவிடுதி தூலிப்பட்டி பிடாரி, பாலவிடுதி மாரியம்மன், பாலாம்பாள்புரம் காமாட்சியம்மன், பாலாம்பாள்புரம் பகவதியம் மன், பில்லூர் கன்னிமார், பில்லூர் பட்டத்தலச்சியம்மன், பில்லூர் பிடாரியம்மன், புஞ்சைகடம்பங்குறிச்சி மாரியம்மன், புஞ்சை காளக்குறிச்சி சின்னம்மன், புஞ்சைகாளக்குறிச்சி பகவதியம்மன், புஞ்சைதோட்டக்குறிச்சி மாரியம்மன், புஞ்சை புகளூர் மாரியம்மன், புத்தாம்பூர் மாகாளியம்மன், புத்தூர் பட்டத்தலச்சியம்மன், புத்தூர் மலைவளர்ந்தம்மன், புதுக்க நல்லி அணைப்பாளையம் கங்கையம்மன், புதுப்பட்டி ஜக்காளம் மன், புலியூர் எல்லையம்மன், புலியூர் காளியம்மன், புழுதேரி பிடாரி யம்மன், புனவாசிப்பட்டி மாரியம்மன், பூலாம்பட்டி ஜக் காளம்மன்,
பெரியபனையூர் பெரியகாண்டியம்மன், பொய்யாமணி மகாமாரியம்மன் வலம்புரிவிநாயகர், பொரணி செல்லாண்டி யம்மன், பொருந்தலூர் அங்காளம்மன், பொருந்தலூர் கள்ள நாயக்கன்பட்டி முத்தாளம்மன், பொருந்தலூர் பகவதியம்மன், பொருந்தலூர் மாரியம்மன், பொருந்தலூர் முத்தாலம்மன், பொருந்தலூர் மருதகாளியம்மன் கோவில் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட அம்மன்கள் கரூர் மாவட்டத்தில் கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.
குழந்தைப்பேறு வேண்டிவரும் பெண்களுக்கும், திருமணத்தடையைப் போக்கவேண்டி வருவோருக்கும் கண்கண்ட தெய்வமாகத் திகழ்கிறாள் காரைக்குடி கொப்புடை அம்மன். இதைத்தவிர, சிறு வியாபாரிகள் முதல் வர்த்தகப் பிரமுகர்கள் வரை புதிதாகத் தொழில் தொடங்கினாலோ, தொழில் அபிவிருத்தி வேண்டுமென்றாலோ இந்தக் கொப்புடை அம்மனைத்தான் வணங்கி வழிபட்டுச் செல்கின்றனர். கேட்பவருக்கு கேட்ட வரங்களை வாரி வழங்கும் தாயாகத் திகழ்கிறாள்.
காரைக்குடி நகரின் நடுவில் கோயில் அமைந்துள்ளது ஒரு தனிச் சிறப்பாகும். கோயிலின் நுழைவாயிலில் உள்ள ராஜகோபுரம் மூன்று நிலைகளுடன் ஓங்கி உயர்ந்து நிற்கிறது. அம்மனின் அருள் பெற உள்ளே நுழைந்ததும், ‘சோபன மண்டபம்’ காட்சி தருகிறது. இடப்புறம் விநாயகர் சந்நிதியும், வல்லத்துக் கருப்பர் சந்நிதியும் உள்ளன. வலப்புறம் வண்ண மயில்வாகனன் தண்டாயுதபாணியாக அருள்புரிகிறார்.
தலவரலாறு:
ஒரு காலத்தில் இந்தப்பகுதி முழுவதும் வனப்பகுதியாக இருந்தது. இதில் காரை மரங்கள் அதிகம் வளர்ந்திருந்தன. அவற்றைச் சமன்படுத்தி மக்கள் குடியேறியதால், 'காரைக்குடி' என்று அழைக்கப்படலாயிற்று. காரைக்குடியிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது செஞ்சை சங்கராபுரம். இங்கு காட்டம்மன் கோயில் கொண்டிருக்கிறார். இங்குள்ள காட்டம்மனும் கொப்புடை நாயகியும் அக்காள் தங்கை. காட்டம்மனுக்கு ஏழு பிள்ளைகள். கொப்புடை நாயகிக்கோ பிள்ளைகள் இல்லை.
அக்காளின் குழந்தைகளைப் பார்க்க அரிசி மாவில் செய்யப்பட்ட கொழுக்கட்டைகளைச் செய்து எடுத்துக்கொண்டு தங்கை பாசத்துடன் சென்று பார்த்து வருவது வழக்கம். ஆனால், அக்காளுக்கோ புத்தி கோணாலாக வேலை செய்தது. தன் தங்கை, தனது பிள்ளைகளைப் பார்க்க அடிக்கடி வருவதை விரும்பவில்லை. அதனால், தன் பிள்ளைகளை ஒழித்து வைத்துவிட்டு தங்கையிடம் நலம் விசாரித்துக் கொண்டிருந்தார். இதைக் குறிப்பால் உணர்ந்த கொப்புடை நாயகி, 'ஒளித்து வைக்கப்பட்ட பிள்ளைகளை இனி பார்க்க வரமாட்டேன்' எனக் கூறி உக்கிரமாகப் போய் அமர்ந்து விட்டார். அக்கா தன் தவற்றை உணர்ந்து கலங்கினார். கொப்புடை நாயகி தன் அக்காவை மன்னித்து அருளினார் என்பது இந்தக் கோயிலின் தலவரலாறு.
ஆதிசங்கரர் தனது ஶ்ரீசக்கரத்தை வைத்து வழிபட்ட தலம் என்பதால், இந்த ஆலயத்துக்குள் அருகில் வரும்போதே இதன் ஆகர்ஷண சக்தியை நம்மால் உணர முடியும். காரைக்குடியின் காவல் தெய்வம், கொப்புடைநாயகி அம்மன் !காரைக்குடியின் காவல் தெய்வம், கொப்புடை நாயகி அம்மன், காரைக்குடிக்கு மட்டுமல்ல, தென் மாவட்ட மக்களுக்கே வளம் பல தந்து, நலமுடன் காக்கும் நாயகியாகத் திகழ்கின்றாள்.
சிவன் தலங்களில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் தான் மூலவரும் உற்சவரும் ஒன்றாக இருக்கும். அதேபோல் அம்மன் தலங்களில் மூலஸ்தானத்தில் இருக்கும் அம்மனே உற்சவ மூர்த்தியாக இருப்பது காரைக்குடி கொப்புடை நாயகி அம்மன் கோயிலில் தான். காவல் தெய்வம் கருப்பண்ணசாமி வேறெங்கும் இல்லாத கோலத்தில் குதிரையில் அமர்ந்தபடி இங்கு அருள்பாலிக்கிறார்.
சரும வியாதிகள், குழந்தைப் பேறு இல்லாமை போன்ற குறைபாடுகளினால் அவதிப்படுவோர், மற்றும் மண வாழ்வில் பல பிரச்சினைகளைச் சந்திப்போர் போன்றவர்கள் அனைவரும் வந்து வழிபட்டு அம்மனின் அருளை பெற்று தங்கள் பிரச்சனைகளிலிருந்து விடுபடுகின்றனர். உடல்நலக் குறைவினால் அவதிப்படுவோர், இங்கு வந்து பிரார்த்தனை செய்து செல்கின்றனர்.
சித்திரை மாதம் கடைசி செவ்வாய் கிழமை செவ்வாய்ப் பெருந்திருவிழா தொடங்கி வைகாசி மாதம் முதல் வாரம் முடிய 10 நாள் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சித்திரை மாதத்தில் நான்கு செவ்வாய் கிழமை வந்தால் அதில் இரண்டாவது செவ்வாய் கிழமையும், ஐந்து செவ்வாய் கிழமை வந்தால் அதில் மூன்றாவது செவ்வாய் கிழமையும் கொப்புடையம்மனுக்கு பூச்சொரிதல் நடைபெறும்.
சித்திரை வருடப்பிறப்பு, புரட்டாசி நவராத்திரி திருவிழா, ஆடிச் செவ்வாய், மார்கழி திருப்பள்ளி எழுச்சி, பங்குனி தாராபிஷேகம் ஆகியன இக்கோயிலின் சிறப்பான திருவிழா ஆகும்.
இக்கோவில் காலை 6 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மதுரை மீனாட்சி
மதுரையின் முக்கிய அடையாளமே, மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம்தான். வைகை ஆற்றின் தென் பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் 14 கோபுரங்களும், 5 நுழைவு வாசல்களும் கொண்டு பிரமாண்டமாக அமைந்த திருக்கோவில் இது. சிவபெருமானின் திருவிளையாடல்கள் அனைத்தும் நடைபெற்றது மதுரை நகர் என்றாலும், இங்கு மீனாட்சியோடு இணைந்து சுந்தரேஸ்வரரும் கோவில் கொண்டுள்ளார் என்றாலும், இந்த ஆலயத்தில் அம்பாளுக்கே முதல் மரியாதை. தங்கத் தேர் உள்ள ஆலயங்களில், மதுைர மீனாட்சி அம்மன் ஆலயமும் ஒன்று. இந்த ஆலயத்தில் கடம்ப மரமும், வில்வ மரமும் தல விருட்சங்களாக உள்ளன.
காஞ்சி காமாட்சி
காஞ்சிபுரம் என்றாலே அங்கு வீற்றிருக்கும் காமாட்சி அம்மன்தான் அனைவரின் நினைவுக்கும் வருவார். அந்த அளவுக்கு பக்தர்களின் மனதில் இடம் பிடித்தவர், காமாட்சி தேவி. காஞ்சிபுரத்தின் மையப்பகுதியில் அமைந்த இந்த ஆலயம், 51 சக்தி பீடங்களில் ‘காமகோடி சக்தி பீடம்’ என்று அழைக்கப்படுகிறது. இத்தல அம்பிகை, தங்க விமானத்தின் கீழ் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களுக்கும், இந்த அன்னையே பிரதான சக்தி தேவியாவார். அதனால் காஞ்சிபுரத்தில் உள்ள சிவாலயங்களில், தனியாக அம்பாள் சன்னிதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலயத்தின் தல விருட்சம் செண்பக மரம் ஆகும்.
கன்னியாகுமரி பகவதிதேவி
முக்கடல் சங்கமிக்கும், தமிழ்நாட்டின் தென்கோடியில் அமைந்த ஊர், கன்னியாகுமரி. இங்கு கடற்கரையோரமாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள், பகவதி அம்மன். இந்த அம்பாள் கொலுவிருக்கும் ஆலயம், 51 சக்தி பீடங்களில் ‘குமரி சக்தி பீடம்’ என்று அழைக்கப்படுகிறது. இது அம்பாளின் முதுகுப் பகுதி விழுந்த சக்தி பீடமாக கருதப்படுகிறது. உள்நாட்டு பக்தர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு பக்தர்களும் வந்து செல்லும் சிறப்பு மிக்க ஆலயமாக இந்த ஆலயம் திகழ்கிறது. பரசுராமர், பகவதி அம்மனின் திருவுருவத்தை இந்த இடத்தில் அமைத்து வழிபட்டிருக்கிறார். இங்குள்ள அம்பாள், குமரிப் பெண்ணாக (திருமணமாகாத கன்னிப் பெண்ணாக) இருந்து அருள்புரிகிறார். பாணாசுரை அழிப்பதற்காக, தேவி பராசக்தியே பகவதி அம்மனாக அவதரித்ததாக தல புராணம் சொல்கிறது.
சமயபுரம் மாரியம்மன்
திருச்சியில் இருந்து சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சமயபுரம் என்ற ஊர். இங்குள்ள மாரியம்மன், ஊர் பெயரோடு சேர்த்து ‘சமயபுரம் மாரியம்மன்’ என்றே அழைக்கப்படுகிறார். கண்நோய் தீர்க்கும் சிறப்பு மிக்க தலமாக இந்த ஆலயம் விளங்குகிறது. வேப்பிலை ஆடை தரிப்பது, தீச்சட்டி ஏந்தி அம்பாளை வழிபடுவது, கண்மலர் வாங்கி காணிக்கை செலுத்துவது போன்றவை, இங்கு முக்கியமான நேர்த்திக்கடன்களாக இருக்கின்றன. மாசி மாதத்தில் இங்கு நடைபெறும் ‘பூச்சொரிதல்’ விழா மிகவும் பிரசித்திப்பெற்றது. அதே போல் சித்திரை மாதம் நடைபெறும் தேர்த் திருவிழாவும் மிகவும் பிரபலம். ஆண்டு தோறும் சித்திரை மாத முதல் செவ்வாய்க்கிழமையில், தேரில் பவனி வந்து அம்மன் அருள்பாலிப்பதைப் பார்க்க லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். இந்த ஆலயத்தின் தல விருட்சம் வேம்பு.
பொள்ளாச்சி மாசாணியம்மன்
கோயம்புத்தூரில் இருந்து சுமார் 28 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது மாசாணியம்மன் கோவில். இந்த ஆலயம் அமைந்துள்ள இடம் ஆனைமலை என்ற ஊராகும். உப்பாற்றின் வடகரையில் இருக்கிறது இந்த ஆலயம். மயானத்தில் சயன கோலத்தில் இருப்பவள் என்பதால் இந்த அன்னைக்கு ‘மயானசயனி’ என்ற பெயர் ஏற்பட்டது. அதுவே மருவி ‘மாசாணி’ என்றானதாக சொல்கிறார்கள். இங்கு மாசாணியம்மன், 17 அடி நீளத்தில் கிடந்த கோலத்தில், தெற்கே தலை வைத்து, கபாலம், சர்ப்பம், திரிசூலம், உடுக்கை ஏந்தி காட்சியளிக்கிறார். ருதுவாகும் பெண்கள் சந்திக்கும் பல்வேறு வகையான உடல் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் தெய்வமாக, மாசாணியம்மன் அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தில் தை மாதம் 18 நாட்கள் நடைபெறும் பெருவிழா சிறப்புமிக்கது.
- அக்னி கரகம் எடுத்தால், தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
- குழந்தை பாக்கியத்திற்கும் இந்த ஆலயம் புகழ்பெற்று விளங்குகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில் அமைந்துள்ள, முத்துமாரியம்மன் ஆலயத்தைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
மூலவர்: முத்துமாரியம்மன்
உற்சவர்: பூவாடைக்காரி
தல விருட்சம்: வேம்பு
தீர்த்தம்: ஆகாச ஊரணி, தளுப்புசுனை, பழுதுபடாசுனை.
* ஈரேழு உலகங்களுக்கும் பயணிக்கும் வல்லமை பெற்றவர் நாரத முனிவர். இவர் இத்தலம் வந்து தங்கியதால் இது 'நாரதர் மலை' என்று வழங்கப்பட்டு, நாளடைவில் 'நார்த்தாமலை' என்றானது.
* மேலமலை, கோட்டை மலை, கடம்பர் மலை, பறையர் மலை, உலக்கன் மலை, ஆளுருட்டி மலை, பொம்மாடி மலை, மண் மலை, பொன் மலை ஆகிய ஒன்பது மலைக்குன்றுகளுக்கு மத்தியில் அமைந்திருக்கிறது, நார்த்தாமலை.
* ராமாயண காலத்தில் நடந்த ராம- ராவணப் போரின் போது, மேகநாதனின் அம்பு பட்டு மூர்ச்சையான லட்சுமணனைக் காப்பாற்ற அனுமன் சஞ்சீவி மலையை தூக்கிச் சென்றார். அதில் இருந்து விழுந்த சிறிய துண்டுதான் இந்த நார்த்தாமலை என்கிறது தல வரலாறு.
* திருவண்ணாமலையில் வாழ்ந்த ஜமீன்தார் வம்சத்தைச் சேர்ந்த மலையம்மாள் என்பவர் தன்னுடைய சொந்த முயற்சியால் இந்த ஆலயத்தை விரிவுபடுத்தி மண்டபங்கள் எழுப்பினார்.
* இத்தல அம்மன் சிலை, நார்த்தாமலையில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலை வில் உள்ள கீழக்குறிச்சி என்ற கிராமத்தில் ஒரு வயல் வெளியில் கண்டெடுக்கப்பட்டது.
* முத்துமாரியம்மன் சன்னிதியின் வடபுற சுவரில், கல்லால் ஆன முருகன் எந்திரம் பதிக்கப்பட்டுள்ளது. இந்த எந்திரம் மிகவும் விசேஷத்தன்மை வாய்ந்ததாக கருதப்படுகிறது.
* அம்மை நோய் கண்டவர்கள், இத்தலம் வந்து வழிபட்டால், அந்த நோய் குணமாவதால் இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம். குழந்தை பாக்கியத்திற்கும் இந்த ஆலயம் புகழ்பெற்று விளங்குகிறது.
* குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், இங்கு வந்து கரும்பு தொட்டில் செய்து ஆலயத்தைச் சுற்றி வலம் வந்து வழிபட்டால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். அக்னி கரகம் எடுத்தால், தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
* புதுக்கோட்டையில் இருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில்.
- இந்தியாவில் சூர்ப்பனகைக்கு உள்ள ஒரே ஒரு கோவில் இது மட்டுமே.
- கர்ப்பகிரகத்தில் அம்மன் தலை மட்டும் இருக்கும்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள கூனவேலம்பட்டிபுதூரில் இருக்கிறது ஆயா கோவில் என்று பிரசித்தி பெற்ற அழியா இலங்கை அம்மன் திருக்கோவில். மூன்று வாயில்கள் கொண்ட கோவிலில், தினமும் வடக்கு, கிழக்கு திசை வாயில்கள் மட்டுமே திறக்கப்படுகிறது. திருவிழாக்காலங்களில் மட்டுமே மேற்கு திசை வாயில் திறக்கப்படுகிறது. வடக்கு வாசல் முன்பாக 25 அடி உயரத்திலும், வடக்கு வாசலுக்கு செல்லும் வழியில் 10 அடி உயரத்திலும் கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கருவறை முன்மண்டபம் 16 தூண்களால் எழுப்பப்பட்டுள்ளது. முன் மண்டபத்தை ஒட்டியுள்ள ஊஞ்சலில் திருவிழாக்காலங்களில் அம்மனை ஊஞ்சலில் வைத்து, பாட்டுப்பாடி வழிபடுவது வழக்கமாக உள்ளது. ''இலங்கை அதிபதி ராவணனின் சகோதரியான சூர்ப்பனகை தான், அழியா இலங்கையம்மன் என்ற பெயரில் இங்கு அருள்பாலிக்கிறார். சீதையைத்தேடி அனுமன் இலங்கை சென்ற சமயம், வடக்கு வாசலில் காவலுக்கு நின்ற சூர்ப்பனகை தடுத்தாள்.
அனுமன் தன் வாலினால் அவளை கட்டி சுருட்டி வீச, புதர்மண்டிய வனப்பகுதியான இந்தப்பகுதியில் தலைகீழாக வந்து விழுந்தாள். அந்த சூர்ப்பனகையை அழியாஇலங்கை அம்மனாக மக்கள் வழிபடுகின்றனர்,'' என்பது தலவரலாறு. இந்தியாவில் சூர்ப்பனகைக்கு உள்ள ஒரே ஒரு கோவில் இது மட்டுமே. கர்ப்பகிரகத்தில் அம்மன் தலை மட்டும் இருக்கும். ராம, லட்சுமணர்களால் வெட்டப்பட்ட சூர்ப்பனகையின் தலை விழுந்த இடத்தில் கோவில் கட்டப்பட்டதால் உடல் இல்லாத தலை மட்டுமே உள்ளது. இலங்கை அழிவதற்கு முன்பே இங்கு வந்து சேர்ந்ததால், அழியா இலங்கை அம்மன் என்று அழைக்கப்படுகிறார் என்பது பெயர்க்காரணம். பிரசித்தி பெற்ற அத்தனூர் அம்மனின் தமக்கையாகவும் அழியா இலங்கை அம்மனை வழிபடுகின்றனர். இதனால் அத்தனூர் அம்மன், விநாயகர், முனியப்பன், பசு, நந்தி, நாக தெய்வங்களுக்கும் தனிச்சன்னதி உள்ளது.
மேலும் தனிக்கட்டிடம் ஒன்றில் அழியா இலங்கை அம்மனின் குழந்தைகள் என்று அழைக்கப்படும் 27 குழந்தைகளின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பங்களை 27 நட்சத்திரங்களாக பக்தர்கள் வழிபடுகின்றனர். மற்றொரு புறத்தில் நாகர் சிற்பங்கள் உள்ளன. இதற்கு அருகிலுள்ள பாம்பு புற்றில், பால் ஊற்றி முட்டைகளை உடைத்து வழிபடுகின்றனர். இப்படி வழிபடுவதால் பிரசவம் சிறப்பாக அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. நோய் நொடிகள் தீரவும், தீய சக்திகள் அண்டாமல் இருக்கவும் பக்தர்கள் திரண்டு வந்து அழியா இலங்கை அம்மனை வழிபடுகின்றனர். வேண்டுதல்கள் நிறைவேறும் போது சிறிய பசு உருவங்களை மண்ணால் செய்து கோவிலில் வைத்துச் செல்கின்றனர். நாய், பாம்பு உருவங்களையும் சமர்ப்பிக்கின்றனர். அதோடு கோவிலை 3 முறை வலம் வந்து, அங்கபிரதட்சணம் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
400 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில், ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் தீபாவளி பண்டிகைக்கு அடுத்து வரும் வெள்ளிக்கிழமை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி நாளை இரவு தொடங்கி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) திருவிழா நடக்கிறது. இதில், வேண்டுதலை நிறைவேற்ற வெள்ளிக்கிழமை அதிகாலையில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவர், ஆடுகளை பலியிட்டு விருந்து அளிப்பர்.
திருவிழாவை ஒட்டி, செவ்வாய், புதன், வியாழன் ஆகிய 3 நாட்கள் கூனவேலம்பட்டி, கூனவேலம்பட்டி புதூர், பாலப்பாளையம், தோனமேடு, ஆனைகட்டி பாளையம், குறுக்கபுரம் உள்ளிட்ட பகுதியில் உள்ள கிராமங்களில் பொங்கல் வைப்பவர்கள் குடும்பத்திலும், வெளியூர்களில் இருந்து பொங்கல் வைக்க வருபவர்களின் குடும்பத்திலும், சமையலுக்கு எண்ணெய் பயன்படுத்த மாட்டார்கள்.
வீட்டில் அரிசி சோறு சாப்பிட மாட்டார்கள். கேழ்வரகு, கம்பு, சோளம், திணை போன்றவற்றால் சமைக்கப்பட்ட உணவு வகைகளை தான் சாப்பிடுவர். மேலும் பொங்கல் வைக்கும் பெண்கள் வெள்ளை சேலை உடுத்தி கொள்வர். கட்டிலில் படுத்து உறங்க மாட்டார்கள். திருவிழாவை முன்னிட்டு நேற்று முதல் கிராம மக்கள் அரிசி சாதம் சாப்பிடுவதை தவிர்த்து கம்பு, கேழ்வரகு போன்ற உணவு வகைகளை சாப்பிட தொடங்கி உள்ளனர்.
- தில்லைக்காளி உக்கிரத்துடன் கிழக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் உள்ளாள்.
- தில்லைகாளிக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் மிகவும் உகந்தது.
சுவாமி : அருள்மிகு தில்லைகாளியம்மன்.
மூர்த்தி : பிரம்ம சாமுண்டீஸ்வரி, விநாயகர், வீணை வித்யாம்பிகை, கடம்பவன தக்ஷண ரூபிணி.
தலச்சிறப்பு :
ஒவ்வொரு ஆண்டும் மாசி பௌர்ணமி நாளன்று காலை 6.00 மணிக்கு சந்திரனும் பௌர்ணமியின் இரண்டு நாட்களுக்கு பிறகு மாலை 6.00 மணி முதல் 6.15 க்குள் சூரியனும் அம்பிகையை வழிபட்டு தன் பொன்னொளி நிகழச்செய்யும் அற்புதம் காணவேண்டிய காட்சி ஆகும்.
தில்லைக்காளி உக்கிரத்துடன் கிழக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் உள்ளாள். தில்லைகாளிக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் மிகவும் உகந்தது. குங்குமத்தால் காப்பிட்டு உடல் முழுவதும் மறைக்கப்படுகிறது. தம்மை வழிப்படுவோர்க்கு சாந்தமே கொண்டிருப்பதாக வெள்ளை வஸ்திரம் சூடி குறிப்பில் உணர்த்துகின்றாள். பெண்களுக்கு விதவைக் கோலம் ஏற்படாதிருக்க தாமே விதவையாக வெள்ளை வஸ்திரம் தரித்து சுமங்கலிகளுக்கு அருள் செய்கிறாள் என்றும் கூறுவர். தில்லைகாளியம்மன் மகம் நட்சத்திரகாரர்களுக்கு அதிதேவதை ஆவாள், எனவே மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட்டால் மிகவும் சிறப்பு.
பிரம்ம சாமுண்டீஸ்வரிக்கு "தில்லையம்மன்" என்ற பெயரும் உண்டு. இவள் பிரம்மனை போல் நான்குமுகத்துடன் தனி சன்னதியில் நின்ற கோலத்தில் மேற்கு நோக்கி சாந்த சொரூபிணியாக அருளுகிறாள். பிரகாரத்தில், நின்ற கோலத்தில் "வீணை வித்யாம்பிகை" என்ற பெயரில் சரஸ்வதியும், தெட்சிணாமூர்த்தி பெண் உருவத்தில் "கடம்பவன தக்ஷண ரூபிணி" என்ற பெயரிலும் அருளுகிறார்கள். தெட்சிணாமூர்த்தியை பெண் வடிவில் இங்கு மட்டுமே தரிசிக்க முடியும்.
சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற தில்லைக்காளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் வைகாசிப் திருவிழா 13 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் வைகாசிப் திருவிழா காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கும். விழாவையொட்டி, அம்மனுக்கு தினந்தோறும் காலை, மாலை நல்லெண்ணை, சந்தனம், குங்குமம், உள்ளிட்ட பல்வேறு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும்.
விழாவை முன்னிட்டு தில்லைகாளியம்மன் தினந்தோறும் இரவு அலங்கரிங்கப்பட்ட சூரியபிரபை, சந்திரபிரபை, பூதகி வாகனத்தில் வீதியுலா, தெருவடைச்சான் உற்சவம், காமதேனு வாகனம், கைலாய, ரிஷப வாகனத்தில் அம்மன் வீதியுலா நடைபெறும்.
விழாவில் முக்கியமானதாக 9–வது திருநாளான தேரோட்ட திருவிழா நடைபெறும். தில்லைக்காளியம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். திருத்தேரில் எழுந்தரித்த தில்லைக்காளியம்மனுக்கு மகாதீபாராதனை செய்யப்பட்டு திரளான பக்தர்கள் அம்மன் திருத்தேரை வடம்பிடித்து இழுப்பார்கள். தேர் 4 ரத வீதிகள் வழியாக வரும்பொழுது திரளான பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் அம்மனை தரிசனம் செய்கின்றனர். பிறகு தில்லையம்மனுக்கு மண்டகப்படி தீபாராதனை நடைபெற்று கோவில் சன்னதியை தில்லைக்காளியம்மன் சென்றடைவாள்.
இதையடுத்து, சிவப்பிரியை குளத்தில் தீர்த்தவாரி உற்சவம், காப்பு களைதல், மஞ்சள் நீராட்டு விழா, முத்துப்பல்லாக்கு உற்சவமும், தெப்ப உற்சவம் மற்றும் திருஊஞ்சல் நிகழ்ச்சியுடன் வைகாசிப் திருவிழா நிறைவடைகிறது.
தலவரலாறு : சிவமும் சக்தியும் ஒன்றே என்று சிவபெருமான் பலமுறை எடுத்துக்கூறியும் சக்தியான அம்பிகை சமாதானம் அடையவில்லை. சக்தி நான் தான் சக்திமிக்கவள் என சிவனுடன் விவாதம் செய்தாள். சிவனும் சக்தியும் ஒன்று என்பதை உணர்த்த சினம் கொண்ட சிவன், "நீ எம்மை பிரிந்து காளியாக மாறுவாய்" என்று சபித்து விடுகிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத பார்வதி, தன் தவறுக்கு மனம் வருந்தி சிவனிடம் சாப விமோசனம் கேட்டாள். "கோபத்தில் தந்த சாபமாக இருந்தாலும், தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் அசுரர்களால் ஆபத்து வர இருக்கிறது. எனவே அவர்களை காப்பாற்ற வேண்டிய நேரம் வரும். அதுவரை நீ உக்கிரத்தின் உச்சக்கட்டமாகத்தான் இருக்க வேண்டும் என்று சிவன் கூறினார்.
ஈசன் கூறியது போல் அசுரர்களால் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் பல இன்னல்கள் எற்பட ஆரம்பித்தது. எனவே காளிதேவியிடம் தங்களை காப்பாற்ற வேண்டினார்கள். காளிதேவி அசுரர்களை வதம் செய்து முனிவர்களையும், தேவர்களையும் காத்தாள்.
மீண்டும் சிவனிடம் சேர வேண்டும் என்ற விருப்பத்தால் காளிதேவி, சிவனை நினைத்து தில்லையில் தவம் இருந்தாள். பல வருடங்களாக தில்லையில் தவம் இருந்தும் சிவன் காட்சி தராததால், அமைதியாகவும் பொறுமையாகவும் தவம் செய்த காளி, மீண்டும் கடும் கோபம் கொண்டாள். இதனால் தில்லைவாழ் மக்கள் அனைவரும் பாதிப்பு அடைந்தார்கள். அத்துடன் சிவனை நடனம் ஆட போட்டிக்கும் அழைத்தாள்.
ஆடல்நாயகனுடன் போட்டியா? என்று தேவர்களும் முனிவர்களும் மனம் பதறினார்கள். போட்டியில் பந்தயமும் வைத்தாள் காளி. "நான் தோற்றால் தில்லையின் எல்லைக்கே சென்று விடுகிறேன்" என்று கூறினாள். சிவபெருமானுக்கும் காளிக்கும் நடன போட்டி உச்சகட்டத்தை அடைந்தது. இவர்களுடன் பூமியும் சேர்ந்து ஆட அரம்பித்தது. யார் வெற்றி பெறுவார்கள் என்று நிர்ணயிக்க முடியாதபடி இரண்டு பேரும் சரி சமமாக ஆடினார்கள்.
சிவன் தன் காதில் அணிந்திருந்த குண்டலத்தை கீழே விழச் செய்து, ஊர்த்வ தாண்டவம் ஆடி அந்த குண்டலத்தை தன் கால் விரலாலேயே எடுத்து காதில் மாட்டினார். ஈசன் செய்தது போல் பெண்ணான காளி தேவி பல ஆயிரகணக்கான முனிவர்களும் தேவர்களும் சுற்றி இருக்கும் போது எப்படி ஊர்த்வ தாண்டவம் ஆட முடியும்? என்ற வெட்கத்தால் தோல்வியடைந்ததாக ஒப்புக் கொண்டாள்.
தந்திரமாக சிவன் வெற்றி பெற்றதை காளியால் தாங்க முடியவில்லை. "தந்திரமாக ஜெயித்ததை எல்லாம் வெற்றி என்று ஏற்க முடியாது" என்று கூறி முன்பை விட அதிகம் சினம் கொண்டாள். அவள் கோப சக்தியாக, தில்லை எல்லையில் "தில்லைக்காளி" என்ற பெயரில் அமர்ந்தாள். இவளை "எல்லைக்காளி" என்றும் சொல்வர். "நானும் இதே தில்லையில் உன் அருகிலேயே இருக்கிறேன். என்னை வணங்குபவர்கள் உன்னையும் வணங்குவார்கள். இதனால் இன்னும் நீ பெருமையடைவாய்" என்று எவ்வளவோ சிவன் சமாதானம் செய்தும் காளி தேவியின் கோபம் தணியவில்லை. சிவன் கூறியது போல் இன்றும் சிதம்பரத்தில் அருள் செய்யும் நடராஜரைத் தரிசிப்பவர்கள், ஊரின் எல்லையில் தில்லைக்காளியையும் வணங்குகிறார்கள்.
பிரம்மா தில்லைக்காளியின் கோபத்தை போக்க "தில்லைக்காளியை வேதநாயகி" எனப் புகழ்ந்துபாடி, நான்கு வேதங்களாகிய ரிக் வேதம், யசுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என குறிக்கும் வகையில், நான்கு முகங்களுடன் அருளுமாறு வேண்டினார். அதன்படி காளி, "பிரம்ம சாமுண்டீஸ்வரி" என்ற பெயரில் பிரம்மனைப்போல் நான்கு முகத்துடன் காட்சி தந்து தில்லையிலேயே அமர்ந்தாள் காளி. அன்னை மகாகாளியை தில்லையம்மன் என்றே மக்கள் அழைக்கிறார்கள். பலருக்கு குல தெய்வமாகவும் தில்லைகாளி திகழ்கிறாள். தில்லைகாளியை வணங்கினால் விரோதிகளை அழித்து, கல்வி, செல்வம், வீரம் போன்றவை கிடைக்க அருள்புரிவாள்.
நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல்பகல் 12.00 மணிவரை / மாலை 4.30 மணிமுதல்இரவு 8.30 மணிவரை
கோவில் முகவரி :
அருள்மிகு தில்லைகாளியம்மன் திருக்கோவில்,
சிதம்பரம் - 608 001,
கடலூர் மாவட்டம்.
- இந்த கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பரணேற்று என்ற ஒரு திருவிழா நடத்தப்படுகிறது.
- பச்சிளம் குழந்தைகளின் தூக்க நேர்ச்சை விழா நடக்கிறது.
குமரி மாவட்டத்தில் உள்ள இன்னொரு பிரசித்திப் பெற்ற கோவில்களில் கொல்லங்கோடு தூக்க முடிப்புரை கோவிலும் ஒன்று. இந்த பத்ரகாளி அம்மன் கோவிலில் இரண்டு தேவிகள் ஒருசேர அமர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குகின்றனர். இதனால் இங்கு தேவிகள் வசிக்க இரண்டு கோவில்கள் உள்ளது.
ஒன்று வெங்கஞ்சி திருவிழா கோவில். மற்றொன்று திருவிழா நாட்களை தவிர மீதமுள்ள அனைத்து நாட்களிலும் அமர்ந்து ஆசி வழங்கும் வட்டவிளை மூலக்கோவில்.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் தமிழ் மாதங்களில் மீன மாதம் திருவிழா நடத்தப்படுகிறது. பத்து நாட்கள் நடக்கும் திருவிழா வில் பத்தாம் நாள் மீனபரணி நாளில் மிகவும் பிரசித்தி பெற்ற பச்சிளம் குழந்தைகளின் தூக்க நேர்ச்சை விழா நடக்கிறது.
இதில் தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த கோவில் குமரி மாவட்டத்தில் அமைந்திருந்தாலும் இங்கு நடத்தப்படும் பூஜைகள் அனைத்தும் கேரள முறைப்படி நடத்தப்படுகிறது. கோவிலின் அமைப்பும் கேரள முறையில் தான் அமைந்துள்ளது.
குழந்தை பேறு இல்லாத தம்பதியினர் தங்களுக்கு குழந்தை பிறந்தால் அம்மனுக்கு தூக்க நேர்ச்சை நிறைவேற்றுவதாக இங்கு வந்து வேண்டிக் கொள்வார்கள். இதேபோல குழந்தைகள் நோய் நொடி இல்லாமல் நீண்ட காலம் வாழவும் வேண்டுவார்கள்.
திருமணமாகாத பெண்கள், திருமணம் நடக்க அம்மனை வேண்டிக் கொள்கிறார்கள். அதன்படி வேண்டுதல் நிறைவேறியதும் தங்கள் குழந்தைகளை கோவிலுக்கு அழைத்து வந்து அந்தரத்தில் தொங்கியபடி கோவிலை வலம் வரும் நேர்ச்சைக்காரர்களிடம் கொடுத்து தூக்க நேர்ச்சை நிறைவேற்றுகிறார்கள்.
இதேபோன்று இந்த கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பரணேற்று என்ற ஒரு திருவிழா நடத்தப்படுகிறது. இது கோவிலில் இருக்கும் தேவிகள் அசுரனை வதம் செய்யும் நிகழ்வாக கொண்டாடப்படுகிறது.
இந்த கோவில் களியக்காவிளை பகுதியில் இருந்து 11 கிலோ மீட்டர் தொலைவிலும், உச்சகடை பகுதியில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. களியக்காவிளை பகுதியில் இருந்து அடிக்கடி பஸ் வசதி உள்ளது. திருவிழா நாட்களில் நாகர்கோவில், மார்த்தாண்டத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
ஆடி மாதம் பெண்கள் இக்கோவிலுக்கு வந்து சிறப்பு வழிபாடு நடத்துவார்கள். மேலும் இந்த மாதத்தில் நடக்கும் நிறைபுத்தரிசி பூஜை மிகவும் விசேஷமானது. அதிகாலை வேளையில் புதிதாக அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்களை அம்மன் முன்பு வைத்து பூஜை நடத்துவர். பின்னர் அந்த நெற்கதிர்களை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவார்கள்.
மெய்சிலிர்க்க வைக்கும் தூக்க நேர்ச்சை
கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை 10 நாட்கள் தூக்க திருவிழா நடக்கிறது. 4 மர சக்கரங்களுடன் கூடிய தேர் போன்று தூக்க வண்டி அமைந்திருக்கும். அந்த தூக்க வண்டியின் உச்சியில் நீளமான இரண்டு களை கம்புகள் (வில்) பொருத்தப்பட்டுள்ளன. இரண்டு வில்களின் நுனியிலும் குறுக்குவாட்டில் தலா இரண்டு மரச்சட்டங்கள் இருக்கும்.
தூக்க வண்டியில் இருப்போரை தூக்ககாரர்கள் என்று அழைப்பார்கள். ஒவ்வொரு வண்டியிலும் 4 தூக்கக்காரர்களை மார்பிலும், இடுப்பிலும் துணியால் கட்டி அந்த மரச்சட்டங்களில் தொங்கவிடுவார்கள். தொங்கிக் கொண்டிருக்கிற ஒவ்வொரு நபரின் கைகளிலும் தலா ஒரு பச்சிளம் குழந்தை.
தூக்க நேர்ச்சை தொடங்கியதும் தூக்க வண்டியின் வில்களின் பின்பகுதியை கயிறால் கட்டி சிலர் கீழே இழுப்பார்கள். இதனால் முன்பகுதி சர்ரென மேலே போகிறது. அப்போது 4 தூக்கக்காரர்களும் குழந்தைகளுடன் 40 அடி உயரத்தில் மேலே தொங்குவார்கள். அப்போது சுற்றி நிற்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குலவையிட்டு பக்தி பரவசத்தோடு அம்மனை வழிபடுவார்கள். பின்னர் செண்டை மேளம் ஒலிக்க, நூற்றுக்கணக்கான இளைஞர்கள் வடம் பிடித்து தூக்க வண்டியை கோவிலை சுற்றி இழுத்து வருவார்கள்.
அந்தரத்தில் குழந்தைகளுடன் தொங்கியபடியே அந்த 4 நபர்களும் கோவிலை ஒரு சுற்று சுற்றி முடிந்ததும் கீழே இறங்குவார்கள். பிறகு வேறு 4 நபர்களை தூக்க வண்டியில் கட்டி தொங்கவிட்டு அவர்களின் கைகளில் வேறு நான்கு குழந்தைகள் கொடுக்கப்படும். இப்படி அதிகாலையில் தொடங்கி இரவு வரை விடிய, விடிய தூக்க நேர்ச்சை நடைபெறும். இந்த காட்சியை காணும் பக்தர்களுக்கு மெய்சிலிர்க்கும். குழந்தைகளை அந்தரத்தில் தூக்கிச் சென்றபடி அம்மனை வழிபடுவதால் இந்த திருவிழாவுக்கு தூக்க நேர்ச்சை திருவிழா என்று பெயர்.
தூக்க காரர்கள் 4-ம் திருவிழா நாளில் இருந்தே விரதமிருக்க வேண்டும். கோவில் வளாகத்தில் தான் தங்க வேண்டும். அந்த 7 நாட்களும் கோவில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு எளிமையான உணவு வழங்கப்படும்.
கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவில் வழிபாட்டு நேரம்
கன்னியாகுமரி மாவட்ட த்தில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் கொல்லங்கோடு ஸ்ரீபத்ரகாளி அம்மன் கோவிலும் ஒன்றாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் மீனப்பரணி தூக்கத் திருவிழா பிரசித்தி பெற்றதாகும். கொல்லங்கோடு பத்ரகாளி அம்மனுக்கு தினசரி பூஜை நடத்த ஒரு கோவிலும், தூக்க நேர்ச்சை திருவிழா நடத்த ஒரு கோவிலும் என தனித்தனியாக 2 கோவில்கள் உள்ளன. இக்கோவிலில் தினமும் நடைபெறும் பூஜை விபரம்:-
காலை 5.00 மணிக்கு நடை திறத்தல்
காலை 5.15 மணிக்கு நிர்மால்ய பூஜை, தொடர்ந்து கணபதி, சிவன் சன்னதியில் பூஜை,
பகல் 11.30 மணிக்கு உச்சபூஜை
மதியம் 12 மணிக்கு நடை அடைத்தல்
மாலை 5.00 மணிக்கு நடை திறத்தல்
மாலை 6.30 மாலை பூஜை
இரவு 7.30 அத்தாழ பூஜை
இக்கோவிலில் தமிழ் மாத கடைசி வெள்ளிக் கிழமைகளில் மதியம் 12.30 மணிக்கு உச்ச பூஜை நடைபெறுகிறது.
மாதந்தோறும் வரும் பரணி நட்சத்திர நாளில் விசேஷ பூஜை நடைபெறும். தினசரி பூஜையை கோவில் பூசாரிகள் செய்யும் நிலையில் பரணி நட்சத்திர நாள் விசேஷ பூஜைகள் நடைபெறும். ஆவணி மாதம் 1-ந்தேதி அதிகாலை 4.50 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. ஓணம் திருநாளில் கோவிலைச் சுற்றி அம்மன் எழுந்தருளல் நடைபெறும். இக்கோவிலில் நேர்ச்சைகள் மற்றும் வழிபாடுகள் ஆன் லைனில் புக்கிங் செய்யப்படுகிறது.
- திருமங்கலம் அருகே அம்மன் கோவிலில் தங்கம்-வெள்ளி நகைகள் திருட்டு போனது.
- இந்த சம்பவம் தொடர்பாக டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள டி.கல்லுப்பட்டி கிராமத்தில் ஆயிரம் கண்ணுடையாள் அம்மன் கோவில் இருக்கிறது. இந்த கோவிலில் 41 அடி உயர பிரம்மாண்ட அம்மன் சிலை உள்ளது. மேலும் வாராகி அம்மன் உள்ளிட்ட பல்வேறு சாமி சிலைகள் இருக்கின்றன.
பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வர். நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்ததும் கோவில் நடை பூட்டப்பட்டது. நேற்று காலை கோவிலை திறக்க பூசாரி வந்த போது கோவில் நடை திறந்து கிடந்தது.
மேலும் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க தாலி உள்ளிட்ட தங்க நகைகள் மற்றும் வெள்ளி கிரிடம் உள்ளிட்ட வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருந்தன. இது குறித்து கோவில் நிர்வாகி செந்தில்குமார் திருமங்கலம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த 11 பவுன் தங்க நகைகள், ரூ.1 லட்சம் மதிப்புள்ள வெள்ளி கிரிடம் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தன.
யாரோ மர்ம நபர்கள் இரவு நேரத்தில் கோவிலுக்குள் புகுந்து நகைகளை கொள்ளையடித்து சென்றிரு ப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. கொள்ளையில் ஈடுபட்டவர்கள் யார்? என்பதை கண்டறிய கோவிலில் இருந்த கண்காணிப்பு காமிராக்களில் பதிவாகி இருந்த வீடியோ பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது நள்ளிரவு நேரத்தில் 2 மர்ம நபர்கள் கம்பி வேலியை வெட்டி அதன் வழியாக கோவிலுக்குள் புகுந்து நகைகளை திருடி சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன.
அதன் அடிப்படையில் கோவில் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்கள் இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பிரசித்தி பெற்ற அம்மன் கோவிலில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் டி.கல்லுப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அம்மை நோய் கண்டவர்கள் இங்கு வந்து வழிப்பட்டு குணமடைவது வழக்கமாக உள்ளது.
- நவராத்திரி கொண்டாட்டமே குலசேகரப்பட்டினத்தின் மிகப்பெரும் திருவிழாவாகும்.
தூத்துக்குடிமாவட்டத்தில் உள்ள அழகிய கடற்கரை கிராமமான குலசை என அழைக்கப்படும் குலசேகரப்பட்டினம் திருநெல்வேலியில் இருந்து 68 கி.மீ. தொலைவிலும் திருச்செந்தூரில் இருந்து 20 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
இந்தியாவிலேயே மைசூருக்கு அடுத்தப்படியாக நவராத்திரி பண்டிகை படு விமரிசையாக இங்கு கொண்டாடப்படுகிறது. 9 நாட்கள் மட்டுமின்றி 365 நாட்களும் இங்கே கொண்டாடப்படும். முத்தாரம்மன் வழிபாடு சிறப்பானது.
கிராமங்களில் அம்மைப் போடுவதை முத்து போடுவதாக கூறுவார்கள். அப்படி போட்டிருக்கும் 'முத்தை' (அம்மை நோயை) 'ஆற்ற'க்கூடிய அம்மன் என்பதால் 'முத்து ஆற்று அம்மன்' என்பது நாளடைவில் 'முத்தாரம்மன்' என கூறலாயிற்று. அதனால்அம்மை நோய் கண்டவர்கள் இங்கு வந்து வழிப்பட்டு குணமடைவது வழக்கமாக உள்ளது.
கிட்டதட்ட 500 ஆண்டுகளுக்கு முன் மைலாடி என்னும் ஊரில் ஆசாரி ஒருவரின் கனவில் தோன்றிய அம்மன் தனக்கு சிலை செய்து அதை குலசையிலிருந்து வரும் அர்ச்சகரிடம் கொடுத்தனுப்புமாறு கூறினார். அதேபோல அர்ச்சகரின் கனவிலும் தோன்றி ஆசாரி தரும் சிலையை கொண்டு வந்து வைத்து வழிபடுமாறு கூறினார். அம்மன் கனவில் சொன்னது படியே அனைத்தும் நடந்தது. தன் உருவத்தை தானே வடிவமைத்துக் கொண்ட அம்பாளுக்கு இங்கே கோயிலமைத்து வழிபாட்டு பூஜைகள் நடந்து வருகிறது.
பொதுவாக எல்லா கோவில்களிலும் சிவனுக்கும், அம்பாளுக்கும் தனித்தனி சன்னதிகள் இருக்கும். ஆனால் இக்கோவிலில் சக்தி மயமாக சிவனும், சிவமயமாக சக்தி யும் இருந்து அருள்பாலிக்கின்றனர். குலசை முத்தாரம்மன் கோவிலில் எங்கும் காண முடியாத அதிசயமாக இங்கு மூலவர் ஞானமூர்த்தீஸ்வரரும் அம்பாள் முத்தாரம்மனும் சுயம்புவாக தோன்றி ஒரே விக்கிரகமாக வடக்கு திசை நோக்கி வீற்றிருக்கின்றனர்.
குலசேகரப்பட்டினத்தில் நவராத்திரி விழா பெரும் திருவிழாவாக கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த சமயத்தில் ஊர் முழுவதும் உள்ள ஆட்ட கலைஞர்கள் அம்மன் வேடமிட்டு தெருவெங்கும் நடன மாடி திருவிழா நடத்த வேண்டிய தொகையை வீடுகள்தோறும் காணிக்கையாக பிச்சையெடுப்பர். புரட்டாசி மாதம் நவராத்திரி சமயத்தில் ஊரெங்கும் ஆடல் பாடல் களைக்கட்டும். கொண்டாடி விட்டு 10-ம் நாள் விஜயதசமியன்று கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறும்.
இந்த நவராத்திரி கொண்டாட்டமே குலசேகரப்பட்டினத்தின் மிகப்பெரும் திருவிழாவாகும். இதை தவிர ஆடிக்கொடை திருவிழா, ஐப்பசி விசு, திருக்கார்த்திகை, மகாசிவராத்திரி போன்ற தினங்களும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அம்மை நோய் கண்டவர்கள் நலமடைய இங்கே பிரார்த்திக்கின்றனர்.
மேலும் ஊனமுற்றவர்கள், மனநிலை பாதிப்படைந்தவர்கள் சொத்துக்கள் இழந்தவர்கள், வியாபாரம் விருத்தியடைய விரும்புபவர்கள் ஆகியோரும் மாவிளக்கு பூஜை, அங்க பிரதட்சனம், தீச்சட்டி எடுத்தல், வேல் அம்பு குத்தல் என தங்களால் இயன்ற நேர்த்தி கடன்களை செலுத்தி பலன் அடைகின்றனர்.
- மேலூர் அருகே இன்று ஏழைகாத்த அம்மன் கோவில் திருவிழா நடந்தது.
- இதில் பெண்கள் உள்பட ஏராளமானோர் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது. வெள்ளலூர். சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட கிராமங்களின் தலைமை இடமாக கருதப்படும் இதனை வெள்ளலூர் நாடு என்று அப்பகுதியினர் அழைப்பார்கள். இங்கு பிரசித்தி பெற்ற ஏழைகாத்த அம்மன் கோவில் உள்ளது.
ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் நடைபெறும் இக்கோவில் திருவிழாவில் 60 கிராம மக்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிர கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான விழா 15 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. விழா தொடங்கியதில் இருந்து வௌ்ளலூர் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் கடும் விரதம் மேற்கொண்டனர். விழாவில் அந்த கிராமத்தை சேர்ந்த 7 சிறுமிகள் தெய்வங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு வழிபடுவது வழக்கம்.
இந்த ஆண்டும் 7 சிறுமிகள் தெய்வங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். விழாவில் முக்கிய நிகழ்ச்சியான நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதையொட்டி நடுத்தர வயதுடைய பெண்கள் 1000-க்கும் மேற்பட்டோர் மதுக்கலயம் ஏந்தி வெள்ளலூர் ஏழைகாத்த மாரியம்மன் கோவிலில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இருந்து பெரிய ஏழைகாத்த அம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.
இதேபோல் ஆண்கள், சிறுவர்கள் தங்கள் உடலில் வைக்கோல் பிரி போர்த்தி பலவித வேடங்களை அணிந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். பொதுமக்கள் பலர் சிறிய தெய்வ சிலைகளை ஏந்திக்கொண்டு ஊர்வலமாக சென்றனர்.
இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டதால் வெள்ளலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் விழாக்கோலம் பூண்டிருந்தது.