என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "anbil Mahesh Poiyamozhi"

    • தர்மேந்திரா பிரதான் அவர்களே, தவறான தகவல்களைப் பரப்புவது உண்மைகளை மாற்றாது.
    • தமிழ்நாட்டின் கலாச்சாரத்தையும் மரபையும் சிதைக்க முயற்சிப்பவர்கள்தான் அரசியல் செய்கிறார்கள்.

    நேற்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடங்கிய உடனேயே, தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி மறுப்பு விவகாரத்தை கையில் எடுத்த திமுக எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

    இதற்கு பதில் அளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான், "பாஜக ஆளாத மாநிலங்களான கர்நாடகா, இமாச்சல பிரதேசத்திலும் தேசிய கல்விக் கொள்கை ஏற்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக்கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுகிறது என்பது தவறானது. தமிழ்நாட்டு மாணவர்களை, திமுக தவறாக வழிநடத்தி அரசியல் செய்கிறது.

    தமிழக எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள், ஜனநாயக விரோதமானவர்கள். தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு பாழடித்து வருகிறது.

    பிஎம்ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட வந்த தமிழ்நாடு கடைசி நேரத்தில் யு-டர்ன் போட்டது. கடந்தாண்டு மார்ச் 15இல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட்டது. திட்டத்தை ஏற்க ஒப்புக்கொண்டு சூப்பர் முதலமைச்சரின் ஆலோசனையில் அரசு பின்வாங்கியது. சூப்பர் முதல்வரின் பேச்சைக் கேட்டு கையெழுத்திட மறுத்தனர்" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்துள்ளார்.

    இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "மத்திய அமைச்சர் தர்மேந்திரா பிரதான் அவர்களே, தவறான தகவல்களைப் பரப்புவது உண்மைகளை மாற்றாது.

    தமிழ்நாடு தொடர்ந்து தேசிய கல்விக்கொள்கை 2020 ஐ எதிர்த்து வருகிறது, ஏனெனில் அது நமது வெற்றிகரமான கல்வி மாதிரியை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.

    எங்களது நிலைப்பாட்டில் எந்த திடீர் மாற்றமும் இல்லை. 15/3/2024 தேதியிட்ட கடிதம் தேசிய கல்விக்கொள்கையை அங்கீகரிப்பதாக கூறவில்லை.

    மாணவர்களுக்கு நன்மை பயக்கும் போது மட்டுமே தமிழ்நாடு மத்திய திட்டங்களில் ஈடுபடுகிறது, ஆனால் அது எந்தவொரு திட்டத்தையும் அல்லது கட்டமைப்பையும் குருட்டுத்தனமாக ஏற்றுக்கொள்வதாக அர்த்தம் இல்லை. .

    ஒரு குழு அமைக்கப்படும் என்றும், குழுவின் கண்டுபிடிப்புகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் செயல்படுத்துவது குறித்து நாங்கள் முடிவு செய்வோம் என்றும் அந்தக் கடிதம் தெளிவாகக் கூறுகிறது.

    அது தேசிய கல்விக்கொள்கையை திணித்து தமிழ்நாட்டின் கலாச்சாரத்தையும் மரபையும் சிதைக்க முயற்சிப்பவர்கள்தான் அரசியல் செய்கிறார்கள்.

    தமிழ்நாட்டின் கல்வி மாதிரி முன்மாதிரியானது மற்றும் நமது மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் திறனை தொடர்ந்து நிரூபித்துள்ளது

    இந்தியாவின் பலமான அதன் பன்முகத்தன்மை பலவீனமானது இல்லை என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளவேண்டும் என்பதே நாங்கள் உங்களிடம் இருந்து எதிர்பார்ப்பது.

    தமிழ்நாட்டின் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு எது சிறந்தது என்பதைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை அங்கீகரித்து ஆதரிப்பதன் மூலம், நீங்கள் உண்மையில் தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கும் அதன் மாணவர்களுக்கும் ஒரு சிறந்த சேவையைச் செய்கிறீர்கள்" என்று பதிவிட்டுள்ளார். 

    • சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற இணையத் தொடர் அயலி.
    • இந்த இணையத் தொடர் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியுள்ளார்.

    இயக்குனர் முத்துக்குமார் இயக்கத்தில் உருவான வெப்தொடர் 'அயலி'. எட்டு எபிசோடுகள் அடங்கிய இந்த தொடரில் அபி நட்சத்திரா, அனுமோல், அருவி மதன், லிங்கா மற்றும் சிங்கம்புலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கடந்த ஜனவரி 26 அன்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி திரையுலகினர், சினிமா விமர்சகர்கள், ரசிகர்கள் என பலரின் பாராட்டுக்களை அயலி இணையத் தொடர் பெற்றது.


    இந்நிலையில், பெண் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் வகையில் ஜீ5 தளத்தில் வெளியாகி பாரட்டுக்களை குவித்த அயலி இணையத் தொடர், கொளத்தூர் எவர்வின் வித்யாஸ்ரம் (Everwin Vidhyashram, Kolathur) பள்ளி மாணவிகளுக்காக சிறப்பு திரையிடல் செய்யப்பட்டது. இந்த திரையிடலில் 8 ஆம் வகுப்பு மற்றும் 9 ஆம் வகுப்பை சார்ந்த 35 மாணவிகள் பங்கேற்றனர்.



    ஜீ5 நிறுவனம் முன்னெடுத்த இவ்விழாவினில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஸ்ரீமதி. காகர்லா உஷா ஐஏஎஸ் அரசின் முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு திரு கே.நந்தகுமார் ஐஏஎஸ்., கமிஷனர் பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.


    இந்நிகழ்வு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது, அயலி நாம் அனைவரும் பெருமைப்படக்கூடிய படைப்பு முதலில் இந்த இணையத்தொடருக்காக ஜீ5 நிறுவனத்திற்கு நன்றி கூறிக்கொள்கிறேன். இது ஒரு பொழுது போக்கு தொடர் அல்ல, நாம் பெண்ணடிமைத்தனத்தில் எந்த இடத்திலிருந்து இப்போதைய நிலைக்கு வந்துள்ளோம் என்பதற்கு சான்றாக இந்த தொடர் உருவாகியுள்ளது.



    கல்வி என்பது ஆண் பெண் என பார்க்காமல் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் அதற்கு இந்த அரசாங்கம் பாடுபட்டு வருகிறது. கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவுத்திட்டம் முதலாக பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாம் பெரியார் அண்ணா கலைஞர் காலங்களில் பெண்ணுரிமைக்காக போராடி இந்த இடத்திற்கு வந்துள்ளோம். இதனை மிக அழகாக இந்த தொடர் சித்தரித்துள்ளது இதனை உருவாக்கிய குழுவிற்கும் நடித்த நடிகர் நடிகையர் அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

    • இயல்பாக பதிவாகும் வெப்ப அளவை விட கடந்த 4 நாட்களாக வெப்பத்தின் அளவு அதிகமாகவே காணப்படுகிறது.
    • பள்ளிகள் 7-ந்தேதி திறப்பதை மறுபடியும் தள்ளி வைக்க வேண்டும் என்று அரசுக்கு மீண்டும் கோரிக்கைகள் சென்ற வண்ணம் உள்ளது.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் தற்போது புதிய கல்வி ஆண்டில் பள்ளிக் கூடங்கள் திறப்பிற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகிறது. இதற்காக மாணவர்களுக்கு தேவையான பாட புத்தகங்கள் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5-ந்தேதியும் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1-ந்தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால் வெயில் வாட்டி வதைப்பதால் பள்ளிகள் திறக்கும் தேதியை தள்ளி வைக்க வேண்டும் என்று அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் வந்தது. அதன் அடிப்படையில் ஜூன் 7-ந்ததி பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு வெளியிட்டார்.

    1-ந்தேதிக்கு பதில் 7-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் சமயத்தில் வெயில் குறைந்து விடும் என கணிக்கப்பட்டது.

    ஆனால் இப்போது வெயில் குறைவதற்கான அறிகுறியே தென்பட ல்லை. தமிழகத்தில் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து கொண்டே தான் வருகிறது.

    அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் வெயிலின் உக்கிரம் குறையவில்லை. சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் 108 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்துகிறது. இயல்பாக பதிவாகும் வெப்ப அளவை விட கடந்த 4 நாட்களாக வெப்பத்தின் அளவு அதிகமாகவே காணப்படுகிறது.

    இதனால் பள்ளிகள் 7-ந்தேதி திறப்பதை மறுபடியும் தள்ளி வைக்க வேண்டும் என்று அரசுக்கு மீண்டும் கோரிக்கைகள் சென்ற வண்ணம் உள்ளது.

    எனவே பள்ளிகள் திறப் பது மீண்டும் தள்ளி போகுமா? இல்லையா? என்பது ஓரிரு நாளில் தெரிய வரும்.

    • தேசிய நல்லாசிரியர் விருது அளிக்கப்பட்டு இருப்பது பெருமை.
    • தொழிற்கல்வி குறித்து வகுப்புகள் எடுத்து வருகிறேன்.

    மதுரை:

    மதுரை ரிசர்வ் லைன் விஸ்வநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் முரளிதரன். இவர் மதுரை ஜெய்ஹிந்த் புரம் பகுதியில் உள்ள டி.வி.எஸ். மேல்நிலைப்பள்ளியில் கடந்த 39 ஆண்டுகளாக தொழில் கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் ஆசிரியர் முரளிதரனின் கல்விப் பணியை கவுரவிக்கும் வகையில் இன்று தேசிய நல்லாசிரியர் விருது மத்திய கல்வி அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள முரளிதரன் கூறியதாவது:-

    தேசிய நல்லாசிரியர் விருது கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நான் ஏற்கனவே மாநில அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வாங்கியுள்ளேன். தற்போது தேசிய நல்லாசிரியர் விருது அளிக்கப்பட்டு இருப்பது பெருமை அளிப்பதாகவும் அமைந்துள்ளது.

    என்னால் இயன்றவரை இதனை பணியாக பார்க்காமல் மாணவர்களுக்கு செய்யும் கடமையாக பார்த்துதான் பணி செய்து வருகிறேன்.

    மாணவர்களுக்கு புரியும் வகையில் கொரோனா காலத்தில் கூட தொழில் கல்வி தொடர்பான வீடியோக்களை உருவாக்கி அதன் மூலம் பயிற்சி அளித்தேன். தொடர்ந்து யூடியூப் கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் தொழிற்கல்வி குறித்து வகுப்புகள் எடுத்து வருகிறேன்.

    எனது குடும்பம் ஒரு ஆசிரியர் குடும்பம், எனது தந்தை ஆசிரியராக இருந் தார். தற்போது எனக்கு 39 ஆண்டுகள் ஆசிரியர் பணி செய்ததன் காரணமாக தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டிருப்பது பெருமை அளிப்பதாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கான விருது வருகிற (செப்டம்பர்) 5-ந்தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசு, வெள்ளிப்பதக்கம் மற்றும் சான்றிதழுடன் வழங்கப்பட உள்ளது.

    தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ள மதுரையை சேர்ந்த தொழில் கல்வி ஆசிரியர் முரளிதரனுக்கு தமிழக பள்ளிக்கல் வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

    • ஆசிரியர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
    • குடிநீர், கழிப்பிட வசதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கொடைக்கானல்:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கலந்தாய்வு கூட்டத்திற்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வந்தார்.

    தனியார் விடுதியில் தங்கி இருந்த அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று காலை திடீரென்று விடுதி அருகே இருந்த கொடைக்கானல் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்றார்.

    எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பள்ளிக்கு வருவதை பார்த்ததும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் அமைச்சரை வரவேற்றனர்.


    அதன்பின் கொடைக்கானல் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள கட்டிடங்கள், வகுப்புகள், அங்குள்ள ஆய்வரங்கங்கள் உள்ளிட்டவற்றை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது ஆசிரியர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் பள்ளி வகுப்பறை, மாணவ-மாணவிகளுக்கான குடிநீர், கழிப்பிட வசதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் அமைச்சர் அன்பில் மகஷே் பேசியதாவது:-

    உங்களுடைய திறமைகளை கண்டறிந்து கனவுகளை நோக்கி பயணம் செய்யுங்கள். ஆசிரியர்களிடம் அதிகமான சந்தேகங்களை கேளுங்கள். அப்போதுதான் உங்களுடைய பாடங்களைப் பற்றி முழுமையாக அறிய முடியும்.

    எந்த நிலைக்கு போனாலும் படித்து வந்த பள்ளியையும், ஆசிரியர்களையும் மறந்து விடக்கூடாது. உங்களுக்கு கற்றுக் கொடுக்கக்கூடிய ஆசிரியர்களுக்கு தங்களது பள்ளி மாணவ-மாணவிகள் பல்வேறு இடங்களில் தொழில் அதிபர், டாக்டர் உள்ளிட்ட பதவிகளுக்கு செல்வதே அவர்களது விருப்பமாக இருக்கும். அந்த விருப்பமே அவர்களுக்கு நல்லாசிரியர் விருதாகவும் அமையும்.

    மலைப் பகுதிகளில் அதிக தூரம் பயணம் செய்து படிக்க வரும் மாணவர்களை கண்டு மெய் சிலிர்க்கிறேன். தங்களுக்கு பஸ் பாஸ் வேண்டும் என்று மாணவர்கள் கேட்டிருந்த நிலையில் சீருடை அணிந்து சென்றால் பஸ்சில் பாஸ் கேட்கமாட்டார்கள் என்றார். இருந்த போதும் மாணவர்களுக்கு பஸ்பாஸ் விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

    அதனை தொடர்ந்து சிறந்த மாணவ-மாணவிகளுக்கு அப்துல்கலாம் எழுதிய புத்தகங்களை பரிசாக வழங்கினார். பள்ளி கல்வித்துறைக்கு தேவையான பல்வேறு உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து வருவதால் அரசு பள்ளி மாணவர்கள் அனைத்து துறையிலும் சாதனை படைத்தவர்களாக மாறவேண்டும் என வாழ்த்து தெரிவித்தார். 

    • அரசுப்பள்ளி பெயர் மாற்றத்திற்காக போராடிய கணேசனுக்கு அமைச்சர் பொன்னாடை அணிவித்தார்.
    • பெயர் மாற்றத்திற்கான அரசாணையை பள்ளி தலைமை ஆசிரியரிடம் அமைச்சர் வழங்கினார்.

    நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி, 'அரிசன் காலனி' என்ற ஊர்ப்பெயரில் இயங்கி வந்த நிலையில், 'மல்லசமுத்திரம் கிழக்கு' என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெயர் மாற்றம் செய்தார்

    'கல்வி மட்டுமே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம்' என்ற மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் வரிகளை குறிப்பிட்டு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அரசுப்பள்ளியின் பெயரை மாற்றம் செய்தார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட 'ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி அரிசன் காலனி' எனும் பெயரினை 'ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மல்லசமுத்திரம் கிழக்கு' எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்பது அவ்வூர் மக்களின் கோரிக்கையாக இருந்தது.

    இந்நிலையில் 'ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, மல்லசமுத்திரம் கிழக்கு' எனப் பெயர் மாற்றம் செய்வதற்கான அரசாணையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க வெளியிட்டோம்.

    தொடர்ந்து இன்று மல்லசமுத்திரம் கிராமத்திற்கு நேரடியாக சென்று 'அரிசன் காலனி' எனும் பெயரினை அழித்து, அரசாணையை பள்ளியின் தலைமையாசிரியரிடம் வழங்கினோம். இதற்காக போராடி வந்த ஊர் பெரியர் திரு.கணேசன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மகிழ்ந்தோம்.

    ஊர் மக்களின் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்ற வழக்கறிஞர் திரு.G.அன்பழகன் அவர்களிடம் 'ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மல்லசமுத்திரம் கிழக்கு' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதை அலைப்பேசி வாயிலாக தெரிவித்தோம். மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்" என்று பதிவிட்டுள்ளார்.

    • கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு.
    • திருவள்ளுவர் தொடர்பான கண்காட்சிகள் இன்று முதல் நடத்தப்பட்டு வருகின்றன.

    சென்னை:

    கன்னியாகுமரி கடலில் உள்ள இரண்டு பாறை களில் ஒரு பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைக்கப் பட்டுள்ளது. மற்ெறாரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    1.1.2000-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சராக இருந்த கருணாநிதி அந்த திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார். இந்த சிலை தமிழகத்தின் சுற்றுலா தலங்களில் தனித்துவமான சிறப்பை பெற்று உள்ளது.

    கன்னியாகுமரி கடல் பாறையில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு தற்போது 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. இதையொட்டி தமிழக அரசு சார்பில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் அரசு சார்பில் திருவள்ளுவர் தொடர்பான கண்காட்சிகள் இன்று முதல் நடத்தப்பட்டு வருகின்றன.

    திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.


    மேலும் திருவள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் நினைவு மண்டபத்தையும் இணைக்கும் வகையில் ரூ.37 கோடி செலவில் 97 மீட்டர் நீளம் 4 மீட்டர் அகலம் உள்ள கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.

    தற்போது அந்த பாலம் பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளன. அந்த கண்ணாடி கூண்டு பாலத்தை வருகிற 30-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். மேலும் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்.

    இதையொட்டி தமிழ கத்தின் பல பகுதிகளிலும் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா களை கட்டி உள்ளது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள நூலகத்தில் அரசு சார்பில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    அந்த கண்காட்சியில் திருவள்ளுவரின் சிறப்பை தெரிவிக்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் இடம் பெற்று இருந்தன. மாணவ-மாணவிகள் வரைந்த திருவள்ளுவரின் பல்வேறு வகையான படங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. அதில் ஒரு மாணவர் வரைந்த படம் திடீரென சர்ச்சையை ஏற்படுத்தியது.

    அந்த திருவள்ளுவர் படத்தை அந்த மாணவர் காவி உடையுடன் வரைந்து இருந்தார். திருவள்ளுவர் படத்துக்கு காவி நிறம் பூசப்பட்டு இருப்பது சரியானது அல்ல என்று கண்காட்சிக்கு வந்திருந்த பலரும் விமர்சித்தனர்.

    கடந்த ஆண்டு காவி உடையுடன் கூடிய திருவள்ளுவர் படத்தை கவர்னர் ஆர்.என்.ரவி பயன்படுத்தியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. கவர்னருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் அதே போன்று காவி உடையில் திருவள்ளுவர் படம் இருந்ததால் கண்காட்சியில் சற்று சர்ச்சை எழுந்தது. இதையடுத்து அந்த திருவள்ளுவர் படம் கண்காட்சி அரங்கில் இருந்து உடனடியாக அகற்றப்பட்டது.

    இது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஐயன் திருவள்ளுவர் சிலை 25 ஆண்டுகளுக்கு முன் கன்னியாகுமரியில் கலைஞரால் 2000-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி வைக்கப்பட்டது.

    25 ஆண்டுகள் நிறைவடைந்து வெள்ளி விழா கொண்டாட்டமாக மட்டுமின்றி நம் பள்ளி பிள்ளைகளுக்கு ஓவியப் போட்டியாக இருந்தாலும் சரி, அதை சார்ந்துள்ள பல்வேறு ஒப்புவிப்பு போட்டியாக இருந்தாலும் இதுபோன்ற போட்டிகளை நடத்தி, பரிசுகள் வழங்க வேண்டும் என்று சொல்லி இருந்தார்.

    அது மட்டுமின்றி ஒவ்வொரு மாவட்ட நூல கங்களிலும் இது போன்று வள்ளுவர் புத்தக கண்காட்சி ஓவிய கண்காட்சியாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு நூலகத்திலும் அந்தந்த மாவட்ட கலெக்டர் மூலமாக வள்ளுவர் புகைப்படம் வைக்கப்பட்டு மாலை மரியாதை செலுத்தும் நிகழ்வும் நடைபெறுகிறது.

    திருவள்ளுவருக்கு மரியாதை என்று சொல்கிற போது அனைவருக்கும் பொதுமறையான ஒன்று. அந்த விதத்தில் பெருமை கொள்கின்ற ஒரு நிகழ்வாக அமைந்துள்ளது.

    மாணவ-மாணவிகள் ஒவ்வொருவரையும் தனித் திறமையை வளர்த்தெடுக்கும் விதமாக தேர்ந்தெடுத்து பல்வேறு போட்டிகளை நடத்தி வருகிறோம்.

    இதில் தேர்வு செய்யப்படு கிற மாணவ செல்வங் களை வெளிநாடுகளுக்கு அழைத்து செல்வதை ஒவ்வொரு ஆண்டும் செய்து வருகிறோம்.

    கேள்வி:- பள்ளிக் கல்வி துறைக்கு ஒன்றிய அரசிடம் இருந்து நிதி வரவேண்டியது இன்னும் வராமல் இருக்கிறதே. நிதி பற்றி பேச மறுப்பதற்கு என்ன காரணம்?

    பதில்:- நிதி பற்றி பேச ஒன்றிய அரசுதான் மறுக்கிறார்கள். சம்பளத்துக்கும் இண்டர்நெட்டுக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் இண்டர்நெட்டுக்கு பாக்கி வைக்க வேண்டிய அவசியம் இல்லை. எங்களுக்கும் அவர்களுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளது. ஒரு அரசாங்கம் நிலுவை வைக்குமா?

    கேள்வி:- மும்மொழி கல்விக் கொள்கையை ஏற்காததால்தான் மத்திய அரசு நிதியை நிறுத்தி வைத்திருக்கிறார்களா?

    பதில்:- இதுபற்றி மத்திய மந்திரி கூறும்போது அது மாதிரிதான் சொல்கிறார். அதனால்தான் கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று சொல்கிறோம்.

    கேள்வி:- திருவள்ளுவர் ஓவியத்தை காவி நிறத்தில் வரைந்து வைத்திருந்தது குறித்து?

    பதில்:- ஓவியம் வரைந்த அந்த பிள்ளையிடம் சொல்லி விட்டோம். இம்மாதிரி வரையக் கூடாது என்று சொல்லி உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • பள்ளி மாணவர்களுக்கு நீதி போதனை வகுப்புகள் பயனுள்ளதாக அமையும்.
    • அனைத்துப் பள்ளிகளிலும் உடற் கல்வி மேம்படுத்தப்படும்.

    பெரம்பலூரில் கல்வியாளர்கள் சங்கமம் சார்பில் ஆசிரியர்களுடன் அன்பில் நம்மில் ஒருவர் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்த கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:-

    ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக காத்திருக்கக்கூடாது என்பதன் அடிப்படையில், தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் திருச்சி மாவட்டத்தில் தனி அலுவலகம் அமைத்து "ஆசிரியர் மனசு" என்ற பெட்டி வைக்கப்பட்டு, புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது.

    மேலும் ஆசிரியர் மனசு என்ற மின்னஞ்சல் உருவாக்கப்பட்டு அதன் மூலம் தெரிவிக்கப்படும் கோரிக்கைகளுக்கும் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது சிறப்பான தேர்வு முடிவுகளை கொடுத்து தமிழ்நாட்டிற்கு முன்னோடி மாவட்டமாக பெரம்பலூர் மாவட்டம் திகழ்ந்து கொண்டிருக்கிறது. உங்களை பார்த்து மற்ற மாவட்ட ஆசிரியர்களும் தங்களது மாவட்டம் முன்னுக்கு வருவதற்கு பாடுபடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் செய்தியாளரகளிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, போக்சோ சட்டத்தில் கைதான கரூர் மாவட்டம், பொம்மாநாயக்கன்பட்டி அரசு பள்ளி ஆசிரியர் மீது முதன்மை கல்வி அதிகாரியின் அறிக்கை வந்த பிறகு தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்றார். பள்ளி மாணவர்களுக்கு நீதி போதனை வகுப்புகள் பயனுள்ளதாக அமையும் என்றும், ஒவ்வொரு பள்ளியிலும் உடற்கல்வி மேம்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    ×