என் மலர்
நீங்கள் தேடியது "Cauvery issue"
- தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கும் காவிரி டெல்டா, மாநிலத்தின் நெல் தேவையைப் பெருமளவு பூர்த்தி செய்கிறது.
- காவிரி டெல்டாவில் தற்போது உள்ள குறுவை நெல் பயிரையும், தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பிரதமர் நரேந்திர மோடி உடனடியாகத் தலையிட்டுக் காப்பாற்ற வேண்டும்.
சென்னை:
பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவின் பிற பகுதிகளைப் போல் அல்லாமல், தமிழ்நாடு, குறிப்பாக காவிரி டெல்டா பகுதிகள், தென்மேற்கு பருவமழையின் போது மிகக் குறைவான மழைப்பொழிவைப் பெறுகிறது. குறுவை சாகுபடியும், சம்பா நெல் விதைப்பும், மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை, குறிப்பாக கர்நாடகாவிலிருந்து வரும் நீரை மட்டுமே சார்ந்துள்ளது.
மாதாந்திர அட்டவணைப்படி, பிலிகுண்டுலுவில், தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரின் பங்கை உச்சநீதிமன்றம் நிர்ணயித்துள்ளன. துரதிர்ஷ்டவசமாக, இந்த உத்தரவை கர்நாடகம் முழுமையாக மதிக்கவில்லை. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதல்களையும் கடைபிடிக்கவில்லை.
2023-2024-ம் ஆண்டில், 2023 ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை கர்நாடகாவிலிருந்து பிலிகுண்டுலுவிற்கு 40.4 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர வேண்டிய நிலையில், 11.6 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே வந்துள்ளது. கர்நாடகாவில், 4 முக்கிய நீர்த்தேக்கங்களின் முழு கொள்ளளவான 114.6 டி.எம்.சி.-யில், 91 டி.எம்.சி அளவிற்கு மொத்த நீர் இருப்பு தற்போது உள்ளது. என்ற போதிலும், கர்நாடக அரசு 28.8 டி.எம்.சி அளவிற்கு பற்றாக்குறையாக தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விட்டுள்ளது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
காவிரி டெல்டாவின் உயிர்நாடியாக விளங்கும் மேட்டூர் அணையில், 2023, ஆகஸ்ட் 2-ம் நாளன்று நிலவரப்படி, 26.6 டி.எம்.சி. அளவிற்கு மட்டுமே தண்ணீர் இருந்தது. இது குடிநீர் மற்றும் இதர அத்தியாவசிய தேவைகளுக்கு 15 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். குறுவை நெற்பயிர் முதிர்ச்சியடைந்து, அதிக மகசூல் பெற, இன்னும், 45 நாட்கள் தண்ணீர் தேவைப்படுகிறது.
இத்தகைய ஆபத்தான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சரிடம் கடந்த ஜூலை 5 மற்றும் 19 தேதிகளில் இப்பிரச்சனையை எடுத்துச் சென்று, உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த விநியோக அட்டவணையைக் கடைப்பிடிக்க கர்நாடக அரசுக்கு உரிய அறிவுரைகளை வழங்கிடுமாறும், இதனை முறையாக கண்காணிக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தினை அறிவுறுத்துமாறும் வலியுறுத்தினோம்.
இருப்பினும், கர்நாடக அரசு இவற்றைக் கருத்தில் கொள்ளாமல், முழுமையாக நிரம்பிய கபினி அணையில் இருந்து மட்டுமே தண்ணீரைத் திறந்து விட்டது. கர்நாடகாவின் முக்கிய நீர்த்தேக்கங்கள் 80 விழுக்காடு அளவிற்கு நிரம்பியுள்ள சூழ்நிலையிலும், அவற்றிற்குத் தொடர்ந்து நல்ல நீர்வரத்து உள்ள சூழ்நிலையிலும், அந்த நீர்த்தேக்கங்களில் இருந்து தண்ணீர் ஏதும் திறக்கப்படவில்லை.
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கும் காவிரி டெல்டா, மாநிலத்தின் நெல் தேவையைப் பெருமளவு பூர்த்தி செய்கிறது. ஏற்கெனவே அரிசித்தட்டுப்பாட்டால், பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ள தற்போதைய சூழலில், காவிரி டெல்டாவில் தற்போது உள்ள குறுவை நெல் பயிரையும், தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பிரதமர் நரேந்திர மோடி உடனடியாகத் தலையிட்டுக் காப்பாற்ற வேண்டும்.
அதோடு, உச்சநீதிமன்றம் நிர்ணயித்துள்ளபடி, தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய தண்ணீரை உடனடியாகத் திறந்துவிடவும், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஏற்பட்ட பற்றாக்குறையைத் தீர்க்கவும் கர்நாடக அரசுக்கு பிரதமர் உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும். இதனை உறுதி செய்வதற்குத் தேவையான அறிவுரைகளை ஒன்றிய ஜல்சக்தி அமைச்சகத்திற்கும் வழங்கிட வேண்டும்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த கடிதத்தில் கூறி உள்ளார்.
- விவசாயப் பெருங்குடி மக்களின் வயிற்றில் பால் வார்க்க வேண்டும் என்று தி.மு.க. அரசின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.
- தி.மு.க. அரசைக் கண்டித்து அ.திமு.க.வின் சார்பில் டெல்டா விவசாயிகளை ஒன்றிணைத்து தீவிரமான போராட்டத்தில் களமிறங்குவோம் என்று எச்சரிக்கிறேன்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
'என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்' என்று, நம் நானிலத்தின் பெருமையை உயர்த்திப் பாடினார் புரட்சித் தலைவர்.
ஆனால், ஆளும்போதெல்லாம் மக்களை எல்லா விதத்திலும் கையேந்த வைப்பதையே தொழிலாகக் கொண்டு செயல்பட்டு வரும் தி.மு.க.வும், அதன் அரசும், நம் அண்டை மாநிலமான கர்நாடகத்திடம் காவிரி நீருக்காக கையேந்த வைக்கக் கூடிய அவல நிலையை ஏற்படுத்தியது வெட்கக்கேடானதாகும்.
காவிரியில் தமிழகத்திற்கு உரிய பங்கினை பெறுவதற்காக, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும், புரட்சித் தலைவி அம்மாவும், தொடர்ந்து எனது தலைமையிலான அம்மாவின் அரசும் மேற்கொண்ட தொடர் சட்ட நடவடிக்கைகளின் காரணமாக, 40 ஆண்டுகளுக்குப் பிறகு உச்சநீதிமன்றம் 16.2.2018 அன்று இறுதித் தீர்ப்பினை அளித்தது. அதன் அடிப்படையில், காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவினை மத்திய அரசு 1.6.2018 அன்று அமைத்தது.
இதன்படி மாதாந்திர அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும் கர்நாடகா, தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி. நீரை வழங்க வேண்டும்.
பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தி, காவிரியில் உள்ள நமது உரிமையை மீட்டது அ.தி.மு.க.வின் 31 ஆண்டுகால அரசு. காவிரி நதிநீர் தொடர்பாக கர்நாடகாவிற்கும், தமிழகத்திற்கும் இருந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் தமிழகத்தை வஞ்சித்தது தி.மு.க. அரசு. 1974-ல் காவிரி ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டிருந்தால், நமக்கு 500 டி.எம்.சி-க்கும் குறையாமல் தண்ணீர் வந்திருக்கும். தி.மு.க.வினர் நடத்திய மக்கள் விரோத ஆட்சியால், நாம் 1974 வரை பெற்று வந்த பங்கில் பாதிக்கு மேல் இழந்துள்ளோம்.
தமிழகத்திற்கு உரிய பங்கை அந்த அரசோடு வாதாடி, போராடி வாங்காமல், மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கும், பிரதமருக்கும் கடிதம் எழுதுவதாக இந்த பொம்மை முதலமைச்சர் நாடகமாடி வருவது கண்டிக்கத்தக்கது.
'தமிழகத்திற்குரிய நீரை காவிரியில் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் மூலம் உத்தரவிடப்படும்' என்று மத்திய அமைச்சர் உறுதி அளித்ததாக தி.மு.க. அரசின் நீர்வளத்துறை அமைச்சர் டெல்லியில் பேட்டி அளித்தார்.
இந்த நிலையில் இன்று, பிரதமருக்கு இதே பிரச்சினை குறித்து முதலமைச்சர் ஸ்டாலினும் ஒரு கடிதம் எழுதி இருப்பதாக அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
தன்னாட்சி அதிகாரம் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் உடனடியாக கூட்டப்பட்டு, தண்ணீரை பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதலையும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளையும் நிறைவேற்ற வேண்டியது கர்நாடக அரசின் கடமை. அந்தக் கடமையில் இருந்து அரசியல் காரணங்களுக்காக நழுவும் அம்மாநில காங்கிரஸ் அரசை தட்டிக் கேட்க வேண்டியதும், கண்டிக்க வேண்டியதும், வற்புறுத்தி நம்முடைய பங்கு நீரைப் பெற வேண்டியதும் காங்கிரஸ் கூட்டாளியான தி.மு.க. ஆட்சியின் முதலமைச்சர் ஸ்டாலினின் உரிமையும், பொறுப்புமாகும்.
எனது தலைமையிலான அம்மா அரசின் சார்பில் மக்கள் நலனுக்காக மத்திய அரசுக்கு கடிதம் எழுதும் போதெல்லாம் கேலியும், கிண்டலும் பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் ஆனபின் எடுத்ததெற்கெல்லாம் பிரதமருக்கும், மத்திய அமைச்சர்களுக்கும், ஜனாதிபதிக்கும் கடிதம் எழுதி கொத்தடிமைகளின் தலைவராக விளங்குவதன் மர்மம் என்ன?
கர்நாடக மாநில நீர்பாசனத்துறையும், துணை முதல்-அமைச்சர் சிவக்குமாரும் மேகதாதுவின் குறுக்கே அணை கட்டுவதற்காக நில அளவீடு செய்ய ஆட்களை நியமித்துள்ளதாக நாளிதழ்களிலும், ஊடகங்களிலும் செய்திகள் வந்துள்ளன. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. உடனடியாக இந்த தி.மு.க. அரசு, கர்நாடக மாநில அரசு மேற்கொள்ளும் நில அளவைப் பணிகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடில் தமிழகம் பாலைவனமாக மாறிவிடும் என்று எச்சரிக்கிறேன்.
தற்போது கர்நாடக அணைகளில் 80 சதவீதத்திற்கு மேலான அளவில் தண்ணீர் உள்ள நிலையில், தமிழக மக்களின் காதுகளில் பூ சுற்றும் வேலையை இத்தோடு நிறுத்திவிட்டு, உடனடியாக ஸ்டாலின் பெங்களூரு சென்று, உங்களது கூட்டணியில் அங்கம் வகிக்கும் கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையாவுடனும், துணை முதலமைச்சர் சிவக்குமாருடனும் பேசி, வற்புறுத்தி, உடனடியாக ஜூன் மாதம் 9.190 டி.எம்.சி, ஜூலை மாதம் 31.240 டி.எம்.சி, ஆகஸ்ட் மாதம் 45.950 டி.எம்.சி, ஆக மொத்தம் 86.380 டி.எம்.சி. தண்ணீரை விரைந்து பெற்று, தற்போது டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறையால் சுமார் 3.5 லட்சம் ஏக்கரில் கருகிக் கொண்டிருக்கும் குறுவை நெல் பயிரைக் காப்பாற்ற வேண்டும் என்றும்; நமது விவசாயப் பெருங்குடி மக்களின் வயிற்றில் பால் வார்க்க வேண்டும் என்றும், ஓரங்க நாடகம் நடத்தும் இந்த தி.மு.க. அரசின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன். மறுக்கும் பட்சத்தில் தி.மு.க. அரசைக் கண்டித்து அ.திமு.க.வின் சார்பில் டெல்டா விவசாயிகளை ஒன்றிணைத்து தீவிரமான போராட்டத்தில் களமிறங்குவோம் என்று எச்சரிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கர்நாடகத்திடம் இருந்து உரிய தண்ணீரை பெற கோர்ட்டுக்கு செல்வதை தவிர வேறு வழியில்லை என்ற நிலை உருவாக்கப்பட்டு இருக்கிறது.
- சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவதற்கான ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.
சென்னை:
தமிழகத்தில் டெல்டா பாசன விவசாயத்துக்காக ஒவ்வொரு மாதமும் காவிரியில் இருந்து எவ்வளவு தண்ணீரை கர்நாடகா திறந்து விட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டு இருக்கிறது.
கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் காவிரி தண்ணீரை பிலிகுண்டுலுவில் அளவீடு செய்ய வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.
சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ள உத்தரவுபடி ஜூன் வரை ஆகஸ்டு 11-ந்தேதி முதல் தமிழ்நாட்டுக்கு 53.77 டி.எம்.சி. தண்ணீரை காவிரியில் கர்நாடகா திறந்திருக்க வேண்டும். ஆனால் கர்நாடகா அரசு வெறும் 15.73 டி.எம்.சி. தண்ணீரை மட்டுமே திறந்துஉள்ளது. 37.97 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்கு வழங்கப்படவில்லை.
இதையடுத்து தமிழ்நாட்டுக்கு உரிய காவிரி நீர் பங்கை கர்நாடகா தர வேண்டும் என்று வலியுறுத்தி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசு முறையீடு செய்தது. அதுபோல காவிரி நீர் ஒழுங்காற்று குழு அமைப்பிடமும் வலியுறுத்தப்பட்டது. என்றாலும் தமிழகத்துக்கு உரிய தண்ணீர் கிடைக்கவில்லை.
இந்தநிலையில் டெல்லியில் நேற்று காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக பிரதிநிதிகள் காவிரியில் 37.97 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் திறந்து விட உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
ஆனால் கூட்டத்தில் அதற்கான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து கூட்டத்தில் இருந்து தமிழக நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா உள்பட அதிகாரிகள் வெளிநடப்பு செய்தனர்.
காவிரி நதிநீர் மேலாண்மை ஆய்வு கூட்டத்தில் தமிழக டெல்டா பாசனத்தை காப்பாற்றும் வகையில் முடிவுகள் எட்டப்படாததால் தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டை நாட முடிவு செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் துரைமுருகன் அறிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "கர்நாடகாவில் உள்ள 4 அணைகளிலும் போதுமான அளவுக்கு தண்ணீர் இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் அளிக்க கர்நாடக அரசுக்குத்தான் மனம் இல்லை" என்று கூறி இருந்தார்.
கோர்ட்டு மூலம் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை பெற்றே தீருவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
அடுத்தக்கட்டமாக எத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்பது குறித்து நேற்றும் இன்றும் தொடர் ஆலோசனை நடத்தப்பட்டது.
கர்நாடகத்திடம் இருந்து உரிய தண்ணீரை பெற கோர்ட்டுக்கு செல்வதை தவிர வேறு வழியில்லை என்ற நிலை உருவாக்கப்பட்டு இருக்கிறது. எனவே சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவதற்கான ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.
இன்றும், நாளையும் சுப்ரீம் கோர்ட்டு விடுமுறையாகும். எனவே திங்கட்கிழமை காவிரி நீர் விவகாரத்தில் தலையிட்டு தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறந்து விட உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் டெல்லி செல்ல உள்ளனர். திங்கட்கிழமை அவர்கள் தாக்கல் செய்யும் மனு உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படு கிறது.
கர்நாடகாவில் உள்ள 4 அணைகளின் மொத்த தண்ணீர் கொள்ளளவு 114.571 டி.எம்.சி. ஆகும். தற்போது 4 அணைகளிலும் சுமார் 94 டி.எம்.சி. அளவுக்கு தண்ணீர் இருக்கிறது. மொத்த நீர் இருப்பில் இது 82 சதவீதம் ஆகும்.
கர்நாடகாவிடம் போதுமான அளவுக்கு தண்ணீர் இருப்பதால் தமிழகத்துக்கு உரிய பங்கை திறந்து விடக்கோரி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட வாய்ப்பு உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் கர்நாடகா உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து விட்டால்தான் டெல்டா மாவட்டங்களில் காய்ந்து கொண்டிருக்கும் பயிர்களை காப்பாற்ற முடியும்.
- மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி முறையீடு செய்தார்.
- காவிரி நீர் தொடர்பான வழக்கை முதலில் முறையீட்டு பட்டியலில் இணைக்க பதிவாளரிடம் கோரிக்கை வைக்கவும் அறிவுறுத்தினார்.
சென்னை:
காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் மனுவை முறையீட்டு பட்டியலில் இணைப்பது தொடர்பாக பதிவாளரிடம் கோரிக்கை வைக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதம் 9-ந்தேதி வரை கர்நாடகம் காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய 51 டி.எம்.சி நீரில் 15 டி.எம்.சி மட்டுமே தந்திருப்பதால் எஞ்சியுள்ள 38 டி.எம்.சி நீரை உடனடியாக திறக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால் வினாடிக்கு 10,000 கன அடி வீதம் 15 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் திறக்க கர்நாடகத்திற்கு உத்தரவிட்டது மேலாண்மை ஆணையம். நமக்கு தரவேண்டிய தண்ணீரை திறந்து விட மறுக்கப்பட்டதால் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது தமிழ்நாடு அரசு. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பின் படி உரிய நீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தனது மனுவில் கூறியுள்ளது. தமிழ்நாடு அரசு 113 பக்கங்களை கொண்ட விரிவான மனுவில் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு திறந்து விட வேண்டிய நீரில் சுமார் 29 டி.எம்.சி தண்ணீரை இன்னும் கர்நாடகம் திறந்து விட வேண்டும்.
அதேபோல ஆகஸ்டு மாதத்தில் கர்நாடகம் 45 டி.எம்.சி நீர் தர வேண்டும்.
எனவே தமிழக அரசு காவிரி டெல்டா பாசன பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்களை காப்பாற்ற உடனடியாக வினாடிக்கு 24,000 கனஅடி வீதம் தண்ணீர் இந்த மாதம் முழுவதும் காவிரியில் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
அதேபோன்று செப்டம்பர் மாதம் திறக்க வேண்டிய 36.76 டி.எம்.சி நீரையும் காலதாமதமில்லாமல் உரிய நேரத்தில் திறந்து விடவும் கர்நாடகத்துக்கு உத்தரவிட வேண்டும்.
மேலும், காவிரி நீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் உரிய நீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு மனுவில் வலியுறுத்தி இருந்தது.
இந்நிலையில் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி முறையீடு செய்தார்.
அதற்கு தலைமை நீதிபதி, வழக்குகளை விரைந்து விசாரிப்பதற்கான முறையீட்டுக்கான பட்டியலில் இந்த வழக்கு இணைக்கப்படாமல் உள்ள நிலையில் தங்களது முறையீட்டை எவ்வாறு ஏற்பது? என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினர்.
மேலும், காவிரி நீர் தொடர்பான வழக்கை முதலில் முறையீட்டு பட்டியலில் இணைக்க பதிவாளரிடம் கோரிக்கை வைக்கவும் அறிவுறுத்தினார்.
- தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- உரிய தண்ணீரை திறந்து விடக்கோரியும், கர்நாடக அரசு மற்றும் மத்திய அரசை கண்டித்தும் டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளின் போராட்டங்கள் தீவிரமடைந்தன.
தஞ்சாவூர்:
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு குறுவை பாசனத்திற்கு குறிப்பிட்ட தேதியான ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறந்து விடப்பட்டது. அப்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டி இருந்தது. இதனால் இம்முறை குறுவை பாசனத்தில் நல்ல விளைச்சல் பெறலாம் என விவசாயிகள் நம்பி இருந்தனர்.
ஆனால் அணை திறக்கப்பட்டு சில நாட்களுக்குப் பிறகு நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வந்தது. மேலும் தமிழகத்திற்கு கடந்த ஜூன், ஜூலை மாதங்களுக்கான தண்ணீரையும் கர்நாடக அரசு திறந்து விடவில்லை. மிக குறைந்த அளவே தண்ணீரை திறந்து விட்டது. இந்த ஆகஸ்ட் மாதத்திற்கான தண்ணீரும் வரவில்லை. கர்நாடக அரசின் இந்த வஞ்சிக்கும் செயலால் தண்ணீர் இன்றி டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர்கள் காயத் தொடங்கின.
தமிழக அரசும் கிடைக்க வேண்டிய தண்ணீரை பெற பல கட்டங்களாக கர்நாடக அரசு மற்றும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்தன. ஆனால் அப்படியும் கர்நாடக அரசு தமிழகத்திற்கான தண்ணீரை திறந்து விடவில்லை. இதனால் காவிரி டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் கருகத் தொடங்கியதால் விவசாயிகள் வேதனை உச்சத்திற்கு சென்றனர்.
உரிய தண்ணீரை திறந்து விடக்கோரியும், கர்நாடக அரசு மற்றும் மத்திய அரசை கண்டித்தும் டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளின் போராட்டங்கள் தீவிரமடைந்தன. பல்வேறு இடங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறது.
அந்த வகையில் இன்று தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமை தாங்கினார்.
பொருளாளர் மணிமொழியன், துரை. ரமேசு, நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஹீமாயூன் கபீர், மணி செந்தில், தமிழ் தேசிய பேரியக்கம் மாவட்ட செயலாளர் வைகறை, இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் சிமியோன் சேவியர் ராசு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் ஜெய்னுலாப்தீன் , தமிழ் தேசிய முன்னேற்ற கழகம் தலைவர் கார்த்திகேயன், மனிதநேய ஜனநாயக கட்சி அகமது கபீர், தமிழர் தேசிய களம் தலைவர் கலைச்செல்வம், ஆழ்துளைக் கிணற்று பாசன விவசாயிகள் சங்கம் தலைவர் புண்ணியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சி, இயக்க, விவசாய சங்க நிர்வாகிகள் 300-க்கும் மேற்பட்டோர் கர்நாடக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக வந்து கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்திற்கு உரிய காவிரி தண்ணீர் தராத கர்நாடகாவுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டும். செயல்படாத காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தரை நீக்கி நடுநிலை உள்ள புதிய ஆணையம் அமைக்க வேண்டும். குறுவை, சம்பா, தாளடி நெற்பயிர்களை காக்க உடனடியாக தமிழகத்திற்கு கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட வேண்டும். கர்நாடகத்திற்கு ஆய்வு குழு அனுப்பி காவிரி நீர் தேக்கங்களில் உள்ள நீரின் அளவு, மழை பொழிவு அளவு ஆகியவற்றின் உண்மை நிலையை அறிந்து வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் காவிரி உரிமை மீட்பு குழு செந்தில் வேலன், தனசேகரன், தமிழ் தேசிய பேரியக்கம் பழ. ராஜேந்திரன், நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை ஒருங்கிணைந்த தஞ்சை மண்டல செயலாளர் வீர. பிரபாகரன் மற்றும் பல்வேறு கட்சி, இயக்கம், விவசாய சங்க நிர்வாகிகள், டெல்டா மாவட்ட விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- மண்டியா மாவட்ட பா.ஜனதாவினர் காவிரியில் தண்ணீர் திறப்பதை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.
- ஊர்வலத்தின்போது கோவிந்தா, கோவிந்தா காவிரி நீர் இல்லை கோவிந்தா’ என்று கோஷமிட்டனர்.
பெங்களூரு:
கர்நாடகத்திற்கும், தமிழகத்திற்கும் இடையே காவிரி பிரச்சனை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் காவிரி படுகையில் உள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.), ஹாரங்கி, ஹேமாவதி உள்ளிட்ட அணைகள் நிரம்பவில்லை. கபினி அணை மட்டும் நிரம்பி இருந்தது.
இந்த நிலையில் தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடகத்திற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி மண்டியா மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.எஸ். அணையில் இருந்து, மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணையில் இருந்தும் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது நாள் முதல் கே.ஆர்.எஸ். அணை, மண்டியா, ஸ்ரீரங்கப்பட்டணா என பல்வேறு பகுதிகளில் விவசாயிகள், அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறப்பதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.
கே.ஆர்.எஸ். அணையின் தெற்கு நுழைவு வாயில் பகுதியில் கர்நாடக மாநில விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் பெண்கள் தலையில் காலி குடங்களை சுமந்தபடி ஊர்வலமாக வந்து போராட்டம் நடத்தினர். ஸ்ரீரங்கப்பட்டணா டவுனில் உள்ள மினி விதான சவுதா முன்பு கன்னட அமைப்பினர், விவசாயிகள் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் ஒன்றாக சேர்ந்து போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் நெற்றியில் நாமம் போட்டு மணி அடித்து தண்ணீருக்காக யாசகம் கேட்பதுபோல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக ஊர்வலத்தின்போது கோவிந்தா, கோவிந்தா காவிரி நீர் இல்லை கோவிந்தா' என்று கோஷமிட்டனர்.
இந்த நிலையில் மண்டியா மாவட்ட பா.ஜனதாவினர் காவிரியில் தண்ணீர் திறப்பதை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் தங்கள் ரத்தத்தால் கடிதத்தில் கையெழுத்திட்டு கவர்னருக்கு அனுப்பும்படி பா.ஜனதாவினர் மாவட்ட கலெக்டர் குமாரிடம் கொடுத்தனர்.
தொடர்ந்து 8-வது நாளாக தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறப்பதை கண்டித்து மண்டியா மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் மண்டியாவில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
- இந்த ஆண்டில் 14.09.2023 வரை தமிழ்நாட்டிற்கு அளிக்கப்பட வேண்டிய 103.5 டி.எம்.சியில் 38.4 டி.எம்.சி. மட்டுமே கிடைத்துள்ளது.
- தமிழ்நாட்டிற்கு குறிப்பிட்டுள்ள நீரை குறித்த காலத்தில் வழங்குமாறு கர்நாடகாவிற்கு தகுந்த அறிவுரையை வழங்கிட வேண்டும்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காவிரி நதிநீர் பிரச்சினையில் நீண்டகால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, ஒரு சராசரி ஆண்டில் பில்லிகுண்டுலுவில் கர்நாடகா வழங்க வேண்டிய மாதாந்திர நீர் அளவின் கால அட்டவணை, உச்ச நீதிமன்றத்தின் 16.02.2018 தேதியிட்ட தீர்ப்பின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது. மேலும், 05.02.2007 தேதியிட்ட காவிரி நடுவர் மன்றத்தின் (CWDT) இறுதித் தீர்ப்பு மற்றும் 16.02.2018 தேதியிட்ட உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, பற்றாக்குறை ஆண்டில், அதற்கேற்ற விகிதாச்சார (pro rata sharing) அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு இடையே நீர் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். அதன்படி இந்த ஆண்டில் 14.09.2023 வரை தமிழ்நாட்டிற்கு அளிக்கப்பட வேண்டிய 103.5 டி.எம்.சியில் 38.4 டி.எம்.சி. மட்டுமே கிடைத்துள்ளது. இது 65.1 டி.எம்.சி குறைவு ஆகும்.
மேட்டூர் நீர்த்தேக்கத்தின் 69.25 டி.எம்.சி. நீர் இருப்பு, இந்திய வானிலை ஆய்வுத்துறையின் (IMD) இயல்பான மழைப்பொழிவு அறிக்கை மற்றும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளின் அடிப்படையில் பெறப்பட வேண்டிய நீர் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, குறுவை பயிரிடுவதற்கும், சம்பா பயிர்களுக்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்குவதற்கும் ஏதுவாக, 12.06.2023 அன்று நீர் திறக்கப்பட்டது. கர்நாடகா அரசு, தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய பங்கை, விகிதாச்சாரப்படி கூட விடுவிக்காததாலும், உச்சநீதிமன்ற ஆணையின்படி ஏற்படுத்தப்பட்ட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு (CWRC) ஆகியவற்றால் இதற்குத் தீர்வு காண முடியாததாலும், தமிழ்நாடு அரசு 14.08.2023 அன்று உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தது. இம்மனு விசாரிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், தமிழ்நாட்டின் கோரிக்கை நியாயமற்றது என்றும், தமிழ்நாடு தனது ஆயக்கட்டை அதிகபடுத்தி உள்ளது என்றும் ஆதாரமற்ற அறிக்கைகளை கர்நாடக அரசு வெளியிட்டுள்ளது. மேலும், கர்நாடக அரசு மத்திய ஜல் சக்தி அமைச்சருக்கு 13.09.2023 அன்று எழுதிய கடிதத்தில், தமிழ்நாட்டிற்கு வடகிழக்கு பருவமழை காலத்தில் போதுமான மழை கிடைக்கும் எனவும், காவிரி டெல்டாவில் தேவையான அளவு நிலத்தடிநீர் இருக்கிறது எனவும் தவறான கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள். இத்தகைய உண்மைக்கு புறம்பான அறிக்கைகளை மத்திய அரசு கருத்தில் கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தி ஒரு கோரிக்கை மனுவை (Memorandum), மத்திய ஜல்சக்தி அமைச்சரிடம் தமிழ்நாட்டின் அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அளிக்க உள்ளார்கள்.
தற்போது, 13.09.2023 முதல் 15 நாட்களுக்கு, கர்நாடக காவிரிப் பகுதியில் சராசரி இயல்பான மழை இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு துறை (IMD) அறிக்கையின் அடிப்படையில் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு (CWRA) கணித்துள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 12,500 கனஅடி நீரை கர்நாடகா விடுவித்திட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) உத்தரவிட வேண்டும் என மத்திய ஜல் சக்தி அமைச்சர் ஆணையத்திற்கு அறிவுறுத்த வேண்டும் என்றும், CWMA/CWRC அளித்த உத்தரவின்படி தமிழ்நாட்டிற்கு குறிப்பிட்டுள்ள நீரை குறித்த காலத்தில் வழங்குமாறு கர்நாடகாவிற்கு தகுந்த அறிவுரையை வழங்கிட வேண்டும் என்றும் இம்மனுவில் வலியுறுத்தப்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா நாளை டெல்லி செல்கிறார்.
- அவருடன் துணை முதல் மந்திரி டி.கே.சிவகுமாரும் நாளை டெல்லி செல்ல உள்ளார்.
பெங்களூரு:
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், காவிரி விவகாரம் தொடர்பாக புதுடெல்லியில் இன்று மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர ஷெகாவத்தை சந்தித்துப் பேசினார். அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், காவிரியிலிருந்து கர்நாடக அரசு, தமிழகத்திற்கு தர வேண்டிய நீர் குறித்து மத்திய மந்திரியிடம் விளக்கிக் கூறினோம். காவிரியில் கர்நாடக மாநிலத்திடம் போதுமான தண்ணீர் இருந்தும் கூட தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கிறது என தெரிவித்தார்.
இந்நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா மற்றும் துணை முதல் மந்திரி டி.கே.சிவகுமார் ஆகியோர் நாளை டெல்லி செல்கின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் நாளை அனைத்துக் கட்சி எம்.பி.க்களுடன் சித்தராமையா மற்றும் சிவக்குமார் ஆலோசிக்கின்றனர். காவிரி விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரி கஜேந்திர சிங் செகாவத்தையும் சந்திக்க முடிவு செய்துள்ளனர். கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லை என்பதை பிரதமரிடம் அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழு வலியுறுத்த உள்ளது.
- எக்காரணம் கொண்டும் தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கக்கூடாது.
- கர்நாடகத்தின் நிலையை ரஜினிகாந்த் எடுத்துக் கூற வேண்டும்.
பெங்களூரு:
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து பெங்களூருவில் நேற்று முன்தினம் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து நாளை கர்நாடக மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.
இந்த முழு அடைப்புக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கன்னட சங்கங்கள் ஆதரவு வழங்கியுள்ளன. இதனால் தலைநகர் பெங்களூரு மீண்டும் முடங்கும் என்று தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் பெங்களூரு சிவானந்த சர்க்கிளில் உள்ள முதல்-மந்திரி சித்தராமையாவின் இல்லத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து வாட்டாள் நாகராஜ் கூறுகையில், 'எக்காரணம் கொண்டும் தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கக்கூடாது. இதை கண்டித்து 29-ந்தேதி (நாளை) கர்நாடகத்தில் முழு அடைப்பு நடத்துகிறோம். கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடத்துகிறோம். நடிகர் ரஜினிகாந்த் பெங்களூரு வந்து செல்கிறார். அவா் இங்கு இருந்தபோது காவிரி நீர் குடித்துள்ளார். அதனால் அவர் காவிரி பிரச்சனையில், கர்நாடகத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும். கர்நாடகத்தின் நிலையை எடுத்துக் கூற வேண்டும். இல்லாவிட்டால் அவரது படத்தை கர்நாடகத்தில் திரையிட விடமாட்டோம்' என்றார்.
- கர்நாடகா மாநிலத்தில் தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று சமூக வலைத்தளத்தில் வதந்திகளை பரப்புவது மிகவும் கண்டிக்கதக்கது.
- மக்களின் உணர்ச்சிகளை தூண்டி கலகம் ஏற்படுவதை இரு மாநில அரசுகளும் கடுமையாக தடுத்து நிறுத்த வேண்டும்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகா மற்றும் தமிழகத்திற்கு இடையில் நதிநீர் பங்கீடு விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு, இரண்டு மாநிலங்களுக்கு இடையே சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி சிறப்பாக பணியாற்றி வருகிறது.
அந்தந்த மாநில நிலவரத்திற்கு ஏற்ப கருத்து பரிமாற்றங்கள் இருக்கும். இதில் வன்முறைக்கு எந்த விதத்திலும் இடமில்லை. கர்நாடகா மாநிலத்தில் தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று சமூக வலைத்தளத்தில் வதந்திகளை பரப்புவது மிகவும் கண்டிக்கதக்கது. இதுபோன்ற வீண் வதந்திகளை பரப்புவர்கள் மீது கர்நாடகா அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மக்களின் உணர்ச்சிகளை தூண்டி கலகம் ஏற்படுவதை இரு மாநில அரசுகளும் கடுமையாக தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கர்நாடக மாநிலத்தில் இன்று முழு அழைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
- காவேரி மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று கூடியது.
உச்சநீதிமன்ற உத்தரவின் படி தமிழகத்திற்கு காவேரி நீர் திறந்து விடப்பட்டு இருப்பதை கண்டித்து கர்நாடக மாநிலத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் கர்நாடக மாநிலத்தில் இன்று முழு அழைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், காவேரி மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று கூடியது. இந்த கூட்டத்தில், தமிழகத்திற்கு அக்டோபர் 15-ம் தேதி வரை தினமும் விநாடிக்கு 3000 கன அடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு குறித்து கர்நாடக முதலமைச்சர் மற்றும் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என்று கர்நாடக நீர்வளத்துறை செயலாளர் ராகேஷ் சிங் தெரிவித்து உள்ளார். மேலும் மேகதாது விவகராம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் முறையிடப்போவதாக அவர் தெரிவித்தார்.
- காவிரி நீரை பெறுவதற்காக நமது ஒன்று பட்ட உணர்வை காட்ட வேண்டும்.
- தமிழகத்தில் இளைஞர்களும், மாணவர்களும் போதை பழக்கத்துக்கு அடிமையாகி கொண்டிருக்கிறார்கள்.
சென்னை:
தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி நதிநீர் பிரச்சனையில் 55 ஆண்டுகளாக கண் துடைப்பு நாடகம் தான் நடக்கிறது.
தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய தண்ணீரையும் கர்நாடக அரசு கொடுக்கவில்லை. அந்த மாநில அரசும், அங்குள்ள அனைத்து கட்சிகளும், அமைப்புகளும் மொத்தமாக ஒன்றிணைந்து போராடுகின்றன.
தமிழகத்திலும் அனைவரும் ஒருங்கிணைந்து போராடும் சூழலை உருவாக்காதது ஏன்? உடனே அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். காவிரி நீரை பெறுவதற்காக நமது ஒன்று பட்ட உணர்வை காட்ட வேண்டும்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிதான் நடக்கிறது. சோனியா மூலம் அந்த மாநில அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு என்பது நதிகளை இணைப்பதுதான். இதுபற்றி கவர்னரை சந்தித்தபோதும் வற்புறுத்தினோம்.
தமிழகத்தில் இளைஞர்களும், மாணவர்களும் போதை பழக்கத்துக்கு அடிமையாகி கொண்டிருக்கிறார்கள். இதை தடுக்க போதை பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.