என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coonoor"

    • மார்க்கெட்டில் இருந்த துணிக்கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
    • கடைகளில் இருந்தவர்கள் வெளியில் வந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் நகராட்சிக்கு சொந்தமாக மவுண்ட்ரோடு பகுதியில் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 800-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

    காய்கறி கடை, துணிக்கடை, எலெக்ட்ரிக் பொருட்கள் கடை, பெயிண்ட் என என பல்வேறு கடைகள் இயங்கி வருகிறது. குன்னூர் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்தவர்கள் இங்கு கடை நடத்தி வருகின்றனர்.

    நேற்று இரவு 10 மணியளவில், வழக்கம் போல வியாபாரிகள் கடையில் வியாபாரத்தை முடித்துக்கொண்டு கடைகளை அடைத்து கொண்டிருந்தனர்.

    அப்போது மார்க்கெட்டில் இருந்த துணிக்கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கடை முழுவதும் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது.

    சிறிது நேரத்தில் துணிக்கடையில் பற்றிய தீ அருகே உள்ள மற்ற கடைகளுக்கும் மளமளவென பரவியது. அந்த கடைகளிலும் தீ பிடித்து கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.

    தீ விபத்து ஏற்பட்டதை பார்த்ததும், அங்கு இருந்த வியாபாரிகளும், பொதுமக்களும், அந்த இடத்தை விட்டு நகர்ந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடினர். கடைகளில் இருந்தவர்கள் வெளியில் வந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    அவர்கள் தண்ணீரை எடுத்து தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் தீ மளமளவென மார்க்கெட்டில் உள்ள மற்ற கடைகளுக்கும் பரவியதால் கட்டுப்படுத்த முடியவில்லை.

    உடனடியாக குன்னூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் வாகனங்களில் வேகமாக வந்து, மார்க்கெட்டில் பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    ஆனால் தீ கட்டுக்கடங்காமல் பரவி கொழுந்து விட்டு எரிந்து கொண்டே இருந்தது. தொடர்ந்து ஊட்டி, கோத்தகிரி மற்றும் அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் தீயணைப்பு வீரர்களும், வாகனங்களும் வரவழைக்கப்பட்டு, தீயை அணைக்கும் பணி தொடர்ந்தது. ஓரளவு தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தபோது, அங்குள்ள பெயிண்ட் கடையில் உள்ள பொருட்களில் தீ பற்றி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    தீ விபத்து குறித்த தகவல் அறிந்ததும், மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு, போலீஸ் சூப்பிரண்டு நிஷா, குன்னூர் சப்-கலெக்டர் சங்கீதா, நகராட்சி ஆணையர் இளம் பருதி, குன்னூர் டி.எஸ்.பி. ரவி, நகர மன்ற துணைத் தலைவர் வாசிம் ராஜா உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    அவர்கள் தீ விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு மீட்பு பணிகளை முடுக்கி விட்டனர். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு நள்ளிரவை தாண்டி மார்க்கெட்டில் பற்றி எரிந்த தீ அணைக்கப்பட்டது.

    இந்த தீ விபத்தில், மார்க்கெட்டில் உள்ள துணி, பெயிண்ட், மளிகை கடை என 15-க்கும் மேற்பட்ட கடைகள் முற்றிலும் எரிந்து நாசமானது. இதில் பல கோடி மதிப்பிலான பொருட்களும் எரிந்து தீக்கிரையானது.

    இன்று காலையும் அதிகளவு புகை மூட்டமாகவே காணப்படுகிறது. இதனால் தீயணைப்பு துறையினர் அங்கேயே முகாமிட்டு அதனை கண்காணித்து வருகின்றனர்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குன்னூர் மார்க்கெட் பகுதி முற்றிலும் சீல் வைக்கப்பட்டு, அங்கு யாரும் செல்லாமல் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மார்க்கெட் பூட்டப்பட்டுள்ளதால் மார்க்கெட்டிற்கு வந்த சரக்கு லாரிகள் சாலைகளில் அணிவகுத்து நின்றது.

    இந்த தீ விபத்து தொடர்பாக குன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின்னர் தான் தீ விபத்துக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். 

    • 300-க்கும் மேற்பட்ட வாகனங்களை இரவு முழுவதும் சோதனை செய்தனர்.
    • குன்னூர் வட்டாட்சியர் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    குன்னூர்,

    நீலகிரி மாவட்டத்திற்கு நுழைவாயிலாக பர்லியார் சோதனை சாவடி உள்ளது. குன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த சோதனை சாவடியில் திடீரென்று இரவு முழுவதும் குன்னூர் வட்டாட்சியர் சிவக்குமார் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    நீலகிரி மாவட்டத்திற்குள் நுழையக்கூடிய வாகனங்கள் குன்னூர் நகரம் வழியாக தான் செல்ல வேண்டும். வெளி மாவட்டம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் அனைத்தும் பர்லியார் சோதனை சாவடி வழியாகத்தான் மாவட்டத்திற்குள் நுழைய முடியும்.

    இதையடுத்து இந்த ேசாதனை சாவடியில் வருவாய்த்துறையினர் இரவில் வந்த அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்தனர். சுமார் 300-க்கும் மேற்பட்ட வாகனங்களை இரவு முழுவதும் சோதனை செய்தனர். வாகனங்களில் ஏதாவது தேவையற்ற பொருட்கள் எடுத்து வரப்படுகிறதா, அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் ஏதாவது எடுத்து வரப்படுகிறதா என வாகனங்களை ஆய்வு செய்தபின்னர் உள்ளே வர அனுமதித்தனர்.

    இதில் குன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெய்சங்கர், வருவாய் அலுவலர்கள், அரசு அலுவலர்கள் பலர் இரவு முழுவதும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    • கரடிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.
    • தாய்சோலை பகுதியில் உள்ள முக்கிய சாலையில் கரடி ஒன்று நேற்று நடமாடியது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் சமீபகாலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. உணவு மற்றும் தண்ணீா் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் கரடிகள், அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளிலும் தேயிலைத் தோட்டங்களிலும், உலவி வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்தநிலையில் குன்னூா் அருகே உள்ள தாய்சோலை சுற்று வட்டாரப் பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. தாய்சோலை பகுதியில் உள்ள முக்கிய சாலையில் கரடி ஒன்று நேற்று நடமாடியது. நீண்ட நேரம் சாலையில் சுற்றித் திரிந்ததால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்றனா். சிலா் செல்போனில் கரடியை படம் பிடித்தனா். சிறிது நேரத்துக்குப் பின் கரடி அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது. தகவல் அறிந்த வனத்துறையினர் கரடி நடமாட்டத்தை கண்கானித்து வருகின்றனர்.

    • உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நடந்தது.
    • மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

    ஊட்டி

    தி.மு.க இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு குன்னூர் நகர தி.மு.க இளைஞரணி அமைப்பாளர் பத்மநாபன் தலைமையில் மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.போட்டியை நகர மன்ற தலைவர் சீலா கேத்ரின் மற்றும் நகர மன்ற துணைத் தலைவர் பா.மு. வாசிம் ராஜா தொடங்கி வைத்தனர். வெற்றி பெற்ற வெலிங்டன் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்கு நகர செயலாளர் ராமசாமி பரிசு வழங்கினார். இரண்டாம் பரிசு கன்னி மாரியம்மன் கோவில் ஸ்போர்ட்ஸ் கிளப் தலைமை பேச்சாளர் ஜாகிர் உசேன் வழங்கினார். அருகில் நகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சையது மன்சூர், செல்லின் ராஜ், சாதிக் பாட்சா, நகர துணை செயலாளர் முருகேசன் மற்றும் வினோத்குமார், நகர மன்ற உறுப்பினர் மணிகண்டன், கிளை செயலாளர் சிக்கந்தர் அப்துல் காதர், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் பாலாஜி, மாவட்டம் மாணவர் அணி துணை அமைப்பாளர் விஜய், ராஜ், நந்தகுமார் சதீஷ்குமார், மதிவாணன், பாலச்சந்தர், மகாலி, சதீஷ் தினேஷ், வினோத்குமார், செல்வா, விவேக் ஆகியோர் கலந்து கொண்டனர். 

    • 93 ஆயிரம் பாகிஸ்தான் ராணுவ வீரா்கள் இந்திய ஆயுதப் படையினரிடம் சரணடைந்தனா்.
    • போட்டியில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகளும், பங்கேற்பாளா்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

    ஊட்டி,

    1971-ம் ஆண்டு நடைபெற்ற போரில் 93 ஆயிரம் பாகிஸ்தான் ராணுவ வீரா்கள் இந்திய ஆயுதப் படையினரிடம் சரணடைந்தனா். வெற்றி திருநாளான இந்நாளை கொண்டாடும் வகையில் ராணுவம் சாா்பில் ஆண்டுதோறும் மினி மாரத்தான் போட்டி நடைபெற்று வருகிறது.அதன்படி, இந்த ஆண்டுக்கான மாரத்தான் போட்டி 'ரன் வித் சோல்ஜா்' என்ற தலைப்பில் நடைபெற்றது. போட்டியை மெட்ராஸ் ரெஜிமென்ட் கமாண்டன்ட் பிரிகேடியா் சுனில்குமாா் யாதவ் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

    5 கி.மீ., 12.5. கி.மீ. என இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் வெலிங்டன் கண்டோன்மென்ட் போா்டு, பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் என 800க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். போட்டியில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகளும், பங்கேற்பாளா்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

    • கிராம நிா்வாக அலுவலா் சாம்சனை குந்தா வட்டத்துக்கு மாவட்ட நிா்வாகம் இடமாற்றம் செய்தது.
    • மாவட்ட நிா்வாகத்தை கண்டித்து கிராம நிா்வாக அலுவலா்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட

    ஊட்டி

    ஊட்டி, கூக்கல் பகுதியை சோ்ந்த கிராம நிா்வாக அலுவலா் சாம்சனை குந்தா வட்டத்துக்கு மாவட்ட நிா்வாகம் இடமாற்றம் செய்தது. இது பழி வாங்கும் நடவடிக்கை என்று கூறி கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தின் சாா்பில் தலைவா் அருள் ரத்தினம் தலைமையில் மாவட்டத் தலைவா் தீபக் முன்னிலையில் குன்னூரில் தாசில்தார் அலுவலகம் முன்பு மாவட்ட நிா்வாகத்தை கண்டித்து கிராம நிா்வாக அலுவலா்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

    • வருவாய்த்துறை அதிகாரிகள் கார்களை மறித்து சோதனையில் ஈடுபட்டனர்.
    • 5 ரூபாய் நாணயங்கள், 10 மற்றும் 20 ரூபாய் நோட்டுகள் இருந்தது.

    குன்னூர்,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் காட்டேரி பூங்கா அருகே குன்னூர் கோட்டாட்சியர் பூஷணகுமார் மற்றும் தாசில்தார் சிவக்குமார் தலைமையிலான வருவாய்த் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

    அந்த வழியாக வரும் வாகனங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்பதை பார்வையிட்டு சோதனை செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். அப்படி ஏதாவது இருந்தால், அந்த வாகனங்களுக்கு அபராதமும் விதித்தனர்.

    அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. அந்த காரை அதிகாரிகள் மறித்து சோதனை செய்தனர். காருக்குள் சாக்குமூட்டைகள் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் காரில் ஏறி சாக்குமூட்டையை பிரித்து சோதனை மேற்கொண்டனர்.

    அதில், ஏராளமான 5 ரூபாய் நாணயங்கள், 10 மற்றும் 20 ரூபாய் நோட்டுகள் இருந்தது. இதன் மதிப்பு 2 லட்சத்து 59 ஆயிரம் ஆகும். இதுகுறித்து கார் டிரைவரிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

    இதையடுத்து அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்த நபரையும், பணத்தையும் குன்னூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    போலீசார் அந்த வாலிபரிடம் விசாரித்தனர். விசாரணையில்,அந்த வாலிபர் திருப்பூரை சேர்ந்த பாலமுருகன் என்பது தெரியவந்தது.

    இவர் நீலகிரியில் உள்ள கடைகள் மற்றும் டாஸ்மாக் கடைகளுக்கு கொடுப்பதற்காக இந்த நாணயங்களை பழனியில் இருந்து எடுத்து வந்ததும், அதற்கு அவரிடம் முறையான ஆவணங்கள் இல்லாததும் தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் நேற்று ஒரே நாளில் பிளாஸ்டிக் பயன்படுத்தியதாக அந்த வழியாக வந்த 20 வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ.20 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய தேயிலை வாரியத்தின் 70-வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
    • தேயிலை கண்காட்சி வைக்க ஏற்பாடு செய்யப்படும்.

    ஊட்டி,

    குன்னூர் இந்திய தேயிலை வாரியத்தின் 70-வது ஆண்டு விழா குன்னூர் தென்னிந்திய தேயிலை வாரிய தலைமை அலுவலகத்தில் நடந்தது. . விழாவில் தென்னிந்திய தேயிலை வாரியத்தின் செயல் இயக்குனர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தேயிலை வாரியத்தின் முன்னாள் துணைச் செயலாளர் ரங்கையா கலந்து கொண்டார்.

    முன்னதாக குத்து விளக்கு ஏற்றி தென்னிந்திய தேயிலை வாரியத்தின் செயல் இயக்குனர் முத்துக்குமார் பேசும்போது கூறியதாவது:-

    அனைத்து சிறு, குறு விவசாயிகளும். தோட்ட அதிபர்களும். தேயிலை தொழிற்சாலை உரிமையா ளர்களும்.

    வியாபாரிகளும். ஏலம் எடுப்பவர்களும் அனைவரும் ஒன்றிணைந்து தேயிலை வாரியத்துடன் இணைந்து செயல்பட்டால் தேயிலையை நல்ல நிலைக்கு எடுத்து செல்ல முடியும். நீலகிரி மாவட்டத்தில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஒரு மாதங்களில் குன்னூர், ஊட்டி, கோத்தகிரி போன்ற இடங்களில் மலர் கண்காட்சி. காய்கறி கண்காட்சி. பழக்கண்காட்சி போன்றவை நடக்கிறது.

    அது போல தேயிலை கண்காட்சியும் நடத்த முடிவு செய்துள்ளோம். அதைப்பற்றி மாவட்ட கலெக்டரிடம் பேசி நல்ல முடிவு எடுத்து குன்னூரில் உள்ள காட்டேரி பூங்கா கோத்தகிரி மற்றும் ஊட்டி ஆகிய இடங்களில் எங்கு வைப்பது என்று முடிவு செய்து விரைவில் தேயிலை கண்காட்சி வைக்க ஏற்பாடு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் தேயிலை வாரிய உறுப்பினர்கள் தனஜெயம். ராஜேஷ் மற்றும் ஏராளமான சிறு, குறு தேயிலை விவசாயிகள் கலந்து கொண்டனர். இதில் தேயிலை தயாரிப்பவ ர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    குன்னூரில் மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

    குன்னூர்,

    குன்னூரில் மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து குன்னூர் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் வி.பி.தெருவில் நகர காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் ஆனந்த் குமார் தலைமையில் மத்திய பா.ஜ.க அரசை கண்டித்தும், ராகுல் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்தும் போராட்டம்நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகளும், காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

    • லேம்ஸ்ராக் காட்சி முனையில் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
    • கழிப்பறை, நடைபாதை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    குன்னூர்

    தற்போது சமவெளிப் பகுதிகளில் கடுமையான வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் நீலகிரி மாவட்டத்தை நோக்கி சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்த வண்ணம் உள்ளனர்.

    குறிப்பாக குன்னூரில் உள்ள லேம்ஸ்ராக் காட்சி முனையில் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    அழகிய பசுமை நிறைந்த காடுகளையும். சமவெளி பகுதிகளில் ஓடும் ஆறுகளையும் வானுயர்ந்த மலைகளையும் பார்க்கலாம் என்பதால் இங்கு சுற்றுலா பயணிகள் வரத்து அதிகமாக உள்ளது.

    இந்த நிலையில் தமிழக அரசின் சார்பில் சுற்றுலா தளங்களை மேம்படுத்த மாண்புமிகு தமிழக முதல்-அமைச்சரின் ஆணைப்படி சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் குன்னூர் லாம்ஸ் ராக் காட்சி முனை பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அங்கு இயற்கை காட்சிகளை பார்த்து ரசிக்க இருக்கை அமைப்பது, கழிப்பறை, நடைபாதை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் அந்த பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின் போது சுற்றுலா துறை அலுவலர் உமா சங்கர், குன்னூர் ஒன்றிய செயலாளர் பிரேம்குமார், பர்லியார் ஊராட்சி மன்ற தலைவி சுசீலா மற்றும் பலர் இருந்தனர்.

    • தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன
    • தேர் அலங்கரிக்கப்பட்டு, அதில் திருவுருவ சிலையுடன் தேர்பவனி நடந்தது.

    குன்னூர்,

    குன்னூரில் நூற்றாண்டு பழமைவாய்ந்த புனித அந்தோணியார் தேவாலயம் உள்ளது. இங்கு தேர்பவனி திருவிழா நிகழ்ச்சிகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. அப்போது தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து புனித அந்தோணியார் சர்ச்சில் இருந்து தேவாலயம் வடிவமைப்பில் தேர் அலங்கரிக்கப்பட்டு, அதில் திருவுருவ சிலையுடன் தேர்பவனி நடந்தது. அந்தோனியார் கோவிலில் தொடங்கிய தேர்பவனி குன்னூர் மவுண்ட் ரோடு, ஒய்.எம்.சி கார்னர், மார்க்கெட், டாக்சி ஸ்டாண்ட், பஸ் நிலையம் வழியாக மீண்டும் மவுண்ட் ரோடு வந்து தேவாலயம் சென்றடைந்தது. குன்னூர் அந்தோணியார் தேர்பவனியில் இந்துக்கள் உள்பட 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • அப்போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானது.
    • தடுப்புச் சுவரில் மோதி அதிர்ஷ்டவசமாக நின்றதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது

    ஊட்டி,

    கும்பகோணத்தில் இருந்து 2 சிறுவா்கள் உட்பட 5 போ், காரில் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர். அதன்பிறகு அவர்கள் மீண்டும் கும்பகோணம் திரும்பிக் கொண்டு இருந்தனா். குன்னூா் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை, 10-வது கொண்டை ஊசி வளைவில் கார் வந்தது. அப்போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானது. இதில் காரில் இருந்த 5 போ் படுகாயம் அடைந்தனா். இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து 5 பேரையும் மீட்டு குன்னூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் ஊட்டியில் இருந்த திரும்பிய காரில் பிரேக் பிடிக்கவில்லை. இதனால் அந்த வாகனம் நிலைதடுமாறி விபத்துக்கு உள்ளானது. அப்போது தடுப்புச் சுவரில் மோதி அதிர்ஷ்டவசமாக நின்றதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது என்பது தெரியவந்து உள்ளது.

    ×