என் மலர்
நீங்கள் தேடியது "fees"
- விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் மாவட்டந்தோறும் கோடை கால பயிற்சி முகாம் நடைபெறும்.
- சென்னையில் 500 ரூபாயும், இதர மாவட்டங்களில் 200 ரூபாயும் கட்டவேண்டும் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் செய்தி வெளியிட்டுள்ளனர்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் தமிழக மாணவ, மாணவிகள் எந்த விளையாட்டுப் பிரிவில் சிறந்து விளங்குகிறார்கள் என்பதைக் கண்டறிந்து, அவ்விளையாட்டுக்களில், மாணாக்கர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கி விளையாட்டுத் திறனை ஊக்கு விக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ கத்தில் மாவட்டந்தோறும் கோடை கால பயிற்சி முகாம் நடைபெறும்.
இவ்விளையாட்டுப் பயிற்சி முகாமில் 18 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். அதன்படி இந்தாண்டு 29.4.2024 முதல் 13.5.2024 வரை கால்பந்து, வாலிபால், கபாடி, கூடை பந்து உள்ளிட்ட பல விளையாட்டுகளுக்கு கோடை கால சிறப்பு பயிற்சி வழங்கப்படும் என்றும், அதற்காக இந்த ஆண்டு கோடைகால பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிக் கட்டணமாக சென்னையில் 500 ரூபாயும், இதர மாவட்டங்களில் 200 ரூபாயும் கட்டவேண்டும் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் செய்தி வெளியிட்டுள்ளனர்.
கோடை கால பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்களில் பெரும்பாலானோர் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படித்து வருபவர்கள். அவர்களிடம் பயிற்சிக்கு கட்டணம் வசூலிக்க ஆணையம் கூறுவதற்கு விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
அம்மா அரசில், மாணவர்களின் விளையாட்டுப் பயிற்சியை ஊக்குவிக்கும் வகையில், கோடை கால பயிற்சி முகாமிற்கு எந்தவித கட்டணமும் வசூலிக்காமல், பயிற்சி வழங்கப்பட்டு வந்தது. ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் இப்பயிற்சி முகாமில் பங்கேற்று தமிழகத்தில் விளையாட்டுத் துறையில் தங்களது திறமைகளை நிரூபித்து வந்தனர்.
மாவட்டந்தோறும் விளையாட்டு மைதானங்கள் (ஸ்டேடியம்) அமைக்கப்படும் என்றும், தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளை பிரதம மந்திரியை வைத்து ஆரம்பித்து வைத்தோம் என்றும், உலக செஸ் போட்டியை தமிழகத்தில் நடத்திவிட்டோம் என்றும் சுய தம்பட்டம் அடித்துக் கொள்ளும் தி.மு.க. அரசின் பொம்மை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாரிசு அமைச்சரின் கீழ் செயல்படும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, எந்த ஆண்டும் இல்லாத புதுமையாக இந்த ஆண்டு கோடை கால பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவர்களிடம் இருந்து பயிற்சிக் கட்டணமாக 500 ரூபாய் மற்றும் 200 ரூபாய் வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது விளையாட்டு ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாரா ஒலிம்பிக் உலகப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றேன் என்று கடையில் வாங்கிய கோப்பையுடன் வந்த நபரை உச்சி முகர்ந்து அவரோடு படம் எடுத்தது மட்டுமின்றி, தன் முதல்-அமைச்சர் தந்தையுடன் நிற்க வைத்து புகைப்படம் எடுத்து வெற்று விளம்பரம் தேடிய அதிபுத்தி சாலி மந்திரியிடம் இதை விடப் பெரிதாக எதையும் எதிர்பார்க்க முடியாது.
எனவே பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டுமென்றும், கோடை சிறப்பு பயிற்சி முகாமிற்கு எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்றும் இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ஐதராபாத்தில் பள்ளியில் எல்.கே.ஜி பயில்வதற்கான கட்டணம் ரூ.2.3 லட்சத்தில் இருந்து ரூ.3.7 லட்சமாக அதிகரித்துள்ளது
- இதுவே பணவீக்கத்தை அதிகரித்து மார்க்கெட் விலையை எகிறச்செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்
இந்தியாவில் கடந்த 30 வருடங்களில் கல்வி கற்பதற்கான செலவு பன்மடங்கு அதிகரித்துள்ளது குறித்த விவாதம் இணையத்தில் நடந்துவருகிறது. இதற்கு காரணம் ஐதராபாத்தில் பள்ளியில் எல்.கே.ஜி பயில்வதற்கான கட்டணம் ரூ.2.3 லட்சத்தில் இருந்து ரூ.3.7 லட்சமாக அதிகரித்து விட்டதாக பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் அவிரால் பாட் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதே ஆகும்.
தனது பதிவில் அவர், இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் பள்ளிப் படிப்புகளுக்கான கட்டணங்கள் 9 மடங்கு அதிகரித்துள்ளது என்றும் கல்லூரிப் படிப்புகளுக்கான கட்டணங்கள் 20 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் பதிவிட்டிருந்தார். தற்போது இதற்கு பதிலளித்துள்ள தமிழகத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர், சோஹோ Zoho நிறுவன சிஇஓ ஸ்ரீதர் வேம்பு அவரது கருத்தை ஆமோதித்துள்ளார்.
இதுகுறித்து ஸ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது, இந்தியாவில் நகர்புர ரியல் எஸ்டேட்களின் அதிக விலையினால் கல்வி பயில்வதற்கான கட்டணமும் கட்டுபடியாகாத அளவு உயர்ந்துள்ளது. இந்த ரியல் எஸ்டேட்களில் அரசியல்வாதிகளின் ஊழல் பணம் குவிக்கப்பட்டுள்ளது. இதுவே பணவீக்கத்தை அதிகரித்து மார்க்கெட் விலையை எகிறச்செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
- தொழில் பிரிவு ஒதுக்கீடு பெற்று கட்டணம் செலுத்தி சேர்க்கையை உறுதி செய்யாதவர்களும் 2-ம் கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.
- இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசி தேதிக்கு பிறகு இணையதளத்தில் வெளியிடப்படும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
கூறியிருப்பதாவது :-
2022-ம் ஆண்டில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரச மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் முதல் கட்ட கலந்தாய்வில் சேர்க்கை முடிந்துள்ளது.
மீதி உள்ள காலியிடங்களில் சேர 2-ம் கட்டமாக கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கு ஏற்கனவே விண்ணப்பிக்காதவர்கள் இணையதளம் வாயிலாக வருகிற 25ஆம் தேதி (வியாழக்கிழமை) மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
முதல் கட்ட கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து தொழில் பயிற்சி நிலையம் மற்றும் தொழில் பிரிவு ஒதுக்கீடு பெறாதவர்களும், தொழில் பயிற்சி நிலையம் மற்றும் தொழில் பிரிவு ஒதுக்கீடு பெற்று கட்டணம் செலுத்தி சேர்க்கையை உறுதி செய்யாதவர்களும் 2-ம் கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.
www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக கணினி மையங்களில் விண்ணப்பங்கள் பதிவு செய்ய வேண்டும்.
மேலும் மாணவர்களுக்கு உதவிடும் வகையில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு தொழில் பயிற்சி நிலையங்கள் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் ஆகியவற்றில் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
உரிய ஆவணங்களுடன் 8-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் ஆன்லைன் மூலம் அல்லது கடன் அட்டை வாயிலாக விண்ணப்பக் கட்டணம் ரூ.50 செலுத்த வேண்டும்.
மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசி தேதிக்கு பிறகு இணையதளத்தில் வெளியிடப்படும்.
மேலும் விவரங்களுக்கு தஞ்சை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குனர், முதல்வரை 9994043023, 9840950504, 8056451988, 9943130145, 7373935569 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சாதனை படைத்த ராயல் பள்ளிகளின் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
- மாணவ மாணவிகளுக்கு மேல்நிலைக்கல்வி கட்டணத்தில் 100 சதவீத சலுகை வழங்கப்பட்டது.
மதுரை
விளாங்குடி ராயல் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெத்தானியாபுரம் ராயல் பப்ளிக் பள்ளிகள் நேற்று வெளியிடப்பட்ட 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் 100 சதவீத தேர்ச்சி பெற்றது.
12-ம் வகுப்பில் 581 மதிப்பெண்கள் பெற்ற மாணவி ஸ்ரீஜா கணிதம் மற்றும் உயிரியல் பாடங்களில் 100 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடமும், மாணவி எம்.சுபிக்ஷா 579 மதிப்பெண் பெற்று உயிரியல் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடமும், மாணவி எஸ். எஸ்.பூஜா 565 மதிப்பெண் பெற்று 3-ம் இடமும், மாணவி சிவதர்ஷினி 564 மதிப்பெண்கள் பெற்று 4-ஆம் இடமும், மாணவி சந்தியா 566 மதிப்பெண்கள் பெற்று 5-ம் இடமும் பெற்றனர்.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவி பூமிகா ஸ்ரீ 481 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடமும், மாணவர் கேசவன் 459 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடமும், மாணவர் அஸ்வின் 457 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடமும், மாணவி சி.நித்திலா 450 மதிப்பெண்கள் பெற்று 4-ம் இடம் பெற்றனர்.
12-ம் வகுப்பில் முதலிடம் பெற்ற மாணவி ஸ்ரீஜாவை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் ரூ. 25 ஆயிரம் ரொக்க பரிசாக பள்ளி நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டது. 10ம் வகுப்பில் முதல் 3 இடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு மேல்நிலைக்கல்வி கட்டணத்தில் 100 சதவீத சலுகை வழங்கப்பட்டது.
பள்ளி நிர்வாகத்தின் சார்பில் 100 சதவீத தேர்ச்சி வழங்கிய அனைத்து ஆசிரியர்களுக்கும், 100 மதிப்பெண்கள் பெற செய்த கணித ஆசிரியை கவிதா, உயிரியல் ஆசிரியர் முத்துராஜ் ஆகியோருக்கு பரிசுகளை பள்ளி நிறுவன தலைவர் ராஜாராம், தாளாளர் ஷகிலா தேவி ராஜாராம் ஆகியோர் வழங்கி னர்.
- அரசு இசைப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடந்தது.
- தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை கீழ் மாவட்ட அரசு இசைப்பள்ளி ராமநாதபுரத்தில் செயல்பட்டு வருகிறது.
ராமநாதபுரம்
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை கீழ் மாவட்ட அரசு இசைப்பள்ளி ராமநாதபுரத்தில் செயல்பட்டு வருகிறது,
இங்கு சிறந்த இசையாசி ரியர்களை க்கொண்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. குரலிசை , பரதநாட்டியம், நாதசுரம், தவில் , தேவாரம், மிருதங்கம், வயலின் 2022-2023-ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றதுவருகின்றன. இதில் 12 முதல் 25 வயது வரைக்குட்பட்டவர்கள் சேர்ந்து கொள்ளலாம்.
இப்பள்ளியில் குரலிசை, பரதநாட்டியம், தேவாரம், வயலின், மிருதங்கம்" பிரிவுகளில் சேர 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண் மாணவர்களும் பரதநாட்டிய பிரிவில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். பயிற்சிக் காலம் 3 ஆண்டுகள். பயிற்சிக் கட்டணம் முதலாமாண்டு மாணவர்களுக்கு ரூ.350 இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு ரூ.325 சிறப்புக் கட்டணமாக வசூலிக்கப்படும்.
அரசு வழங்கும் சலுகை இலவசப்பேருந்து பயண அட்டை,கல்வி உதவித்தொகை (மாதம் ரூ .400), அரசு மாணவர் விடுதி வசதி அளிக்கப்படும். மாவட்ட அரசு இசைப்பள்ளியில் 3-ஆண்டுகள் பயிற்சி முடிக்கும் மாணவர்க ளுக்கு தமிழக அரசு தேர்வு இயக்கத்தால் தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.
சான்றிதழ்களை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பதிவு மூப்பு அடிப்படையில் இசைப்பள்ளிகளிலும், இந்து அற நிலையத்து றைக்கு உட்பட்ட கோவில்களிலும்வேலை வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
எனவே விருப்பமுள்ள மாணவ, மாண வி க ள்தலை மையாசிரியர், மாவட்ட அரசு இசைப்பள்ளி , எண்-14, கவுரி விலாஸ் பேலஸ், அரண்மனை, ராமநாதபுரம் – 623501 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள நிகர் நிலைப் பல்கலைக் கழகங்களில் மருத்துவப் படிப்புக்கான கட்டணத்தை நிர்ணயிக்க வல்லுனர் குழு அமைக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. அதுவரை ஆண்டுக்கு ரூ.13 லட்சம் மட்டுமே கல்விக் கட்டணமாக வசூலிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
இந்த தீர்ப்பின் காரணமாக மருத்துவக் கல்விக்கட்டணம் 5 ஆண்டுகளுக்கும் சேர்த்து ரூ.50 லட்சம் வரை மிச்சமாகும். ஆனால், உயர்நீதிமன்றம் விதித்துள்ள இடைக்காலக் கல்விக் கட்டணமே மிகவும் அதிகம் என்பது தான் பெரும்பான்மையான கல்வியாளர்களின் கருத்து ஆகும்.
தமிழ்நாட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும், நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் மருத்துவக் கல்லூரிகளுக்கும் இடையில் எந்தவிதமான கட்டமைப்பு சார்ந்த வித்தியாசங்கள் இல்லை. ஒரு காலத்தில் தனியார் கல்லூரிகளாக இருந்தவை தான், மாநில அரசின் கட்டுப்பாட்டிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்வதற்காக நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாறின. இவை எப்படி, எதற்காக, யார் மூலம் இந்த தகுதியை பெற்றன என்பது மிக நீண்ட பின்னணியாகும்.
ஆனால், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கல்விக்கட்டணத்திற்கும், நிகர்நிலைப்பல்கலைக் கழகங்களின் கல்விக் கட்டணத்திற்கும் இடையில் பெரும் வித்தியாசங்கள் உள்ளன. தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆண்டுக் கல்விக்கட்டணமாக ரூ.2.85 லட்சம் முதல் ரூ 4 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது.
நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு அனைத்துக் கல்லூரிகளிலும் ரூ.12.50 லட்சம் வசூலிக்க அனுமதிக்கப்படுகிறது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தமுள்ள இடங்களில் 65 சதவீதம் இடங்கள் அரசு ஒதுக்கீட்டிற்கு வழங்கப்படுகின்றன. அதன்படி பார்த்தால் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் சராசரிக் கல்விக்கட்டணம் ஆண்டுக்கு ரூ.6.22 லட்சம் முதல் ரூ.6.97 லட்சம் என்ற அளவில் தான் உள்ளது. இது ஓரளவு நியாயமானதாகும்.
அதேநேரத்தில் நிகர் நிலைப் பல்கலைக் கழகங்களில் மருத்துவப் படிப்புக்கான ஆண்டுக் கல்விக் கட்டணம் குறைந்தது ரூ.18 லட்சம் ஆகும். அதிகபட்சமாக ரூ.22.50 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. நீட் தேர்வு அறிமுகம் செய்யப்படும் வரை நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் ஆண்டுக் கட்டணமாக ரூ.6 லட்சம் மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்தது. இதுதவிர ரூ.60 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரை நன்கொடையாக வசூலிக்கப்பட்டு வந்தது.
நீட் தேர்வுக்குப் பிறகு மாணவர் சேர்க்கையை மத்திய சுகாதார அமைச்சகம் கையில் எடுத்துக் கொண்டதால் நன்கொடை வசூலிப்பதை நிறுத்திவிட்ட நிகர் நிலைப் பல்கலைக் கழகங்கள், அதை ஈடு செய்யும் வகையில் ரூ.6 லட்சமாக இருந்த ஆண்டு கல்விக் கட்டணத்தை ரூ.22.50 லட்சமாக உயர்த்திவிட்டன. ஒரே ஆண்டில் கல்விக் கட்டணத்தை 4 மடங்கு உயர்த்தியது எந்த வகையில் நியாயம் என்பதை மத்திய அரசோ, இந்திய மருத்துவக் குழுவோ கேட்கவில்லை. மாறாக, எந்த அடிப்படையும் இல்லாமல் மருத்துவக்கல்விக் கட்டணமாக ஆண்டுக்கு ரூ.25 லட்சம் வரை நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களே நிர்ணயித்துக் கொள்ள அனுமதி அளித்தன.
நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் கட்டணத்தை நிர்ணயிப்பதற்காக உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பல்கலைக்கழக மானியக்குழுவும், இந்திய மருத்துவக் குழுவும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் ஆகும். இந்திய மருத்துவக் குழு அனுமதித்தக் கட்டணங்களை பல்கலைக்கழக மானியக் குழு குறைக்காது. இதனால் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் கட்டணம் எந்த வகையிலும் குறையாது. அதனால், தமிழகத்திலுள்ள நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு வழங்கப்படுவது தான் மிகவும் சரியானதாக இருக்கும்.
இதற்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட கட்டண நிர்ணயக்குழு அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இந்தக் குழுவால் தான் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பது போன்ற ஓரளவுக்காவது நியாயமான கட்டணத்தை நிர்ணயிக்க முடியும்; இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
எனவே, தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் மருத்துவக் கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும். அத்துடன், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் மருத்துவ மாணவர் சேர்க்கையில் அந்தந்த மாநிலங்களில் கடைபிடிக்கப்படுவது போன்ற இட ஒதுக்கீட்டையும் பின்பற்ற ஆணையிட வேண் டும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #PMK #ramadoss