என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gas cylinder"

    • 7-வது முறையாக வணிகத்திற்கான கியாஸ் சிலிண்டர்கள் விலை குறைக்கப்பட்டுள்ளது.
    • வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

    சென்னை :

    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் ஏற்ற இறக்கம் ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோலிய பொருட்களின் விலைகளை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கூட்டமைப்பு மாற்றியமைத்து வருகிறது. அதனடிப்படையில், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை மாதம் ஒருமுறை அல்லது மாதம் இருமுறையும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.

    தொடர்ந்து சமையல் கியாஸ் விலை உயர்ந்து வருவதால் வணிகர்களும், வீட்டு உபயோக சிலிண்டர் உயர்த்தும் போது இல்லத்தரசிகளும், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை கட்டுக்குள் வைத்து கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து அரசுக்கும் எண்ணெய் நிறுவனங்களுக்கும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இதேபோல தான் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலையும் தினமும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நவம்பர் மாதத்துக்கான சமையல் கியாஸ் சிலிண்டர்கள் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பினர் நேற்று அறிவித்தனர்.

    அதன்படி வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் கட்டணத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால், வணிக பயன்பாட்டிற்கான சமையல் கியாஸ் சிலிண்டர் கட்டணம் ரூ.116.50 குறைக்கப்பட்டு உள்ளது என்று விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.

    19 கிலோ எடை கொண்ட வணிகத்திற்கான கியாஸ் சிலிண்டர் ஒன்றின் விலை கடந்த மாதம் ரூ.2009.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது 116.50 ரூபாய் குறைக்கப்பட்டு ரூ.1,893-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மே மாதத்துக்கு பிறகு தொடர்ந்து 7-வது முறையாக தற்போது வணிகத்திற்கான கியாஸ் சிலிண்டர்கள் விலை குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையானது தொடர்ந்து 4 மாதமாக எந்த விதமாற்றமும் செய்யப்படாமல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் ரூ.1,068.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ரஷியா-உக்ரைன் போர் ஆரம்பித்ததில் இருந்து கச்சா எண்ணெய் விலைகள் அதிகரித்தது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்தது. ஆனால் தற்போது கச்சா எண்ணெய் விலை குறைய தொடங்கியிருக்கிறது. இதனாலேயே தற்போது பெட்ரோல், டீசல் விலையில் பெரிய மாற்றமின்றி தொடருகிறது என்று எண்ணெய் நிறுவன கூட்டமைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பழைய பாளையம் பகவதியம்மன் கோவில் பின்புறம் வசித்து வருபவர் ஆதிமூர்த்தி (வயது65). இவர் அப்பகுதியில் அங்காளம்மன் கோவில் பூசாரியாக உள்ளார்.
    • சிலிண்டரின் கேஸ் டியூப் வழியாக கேஸ் கசிந்து சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த பழைய பாளையம் பகவதியம்மன் கோவில் பின்புறம் வசித்து வருபவர் ஆதிமூர்த்தி (வயது65). இவர் அப்பகுதியில் அங்காளம்மன் கோவில் பூசாரியாக உள்ளார். இவரது மனைவி அமராவதி(40). இவர் நேற்று இரவு வீட்டில் சமையல் செய்து கொண்டிரு ந்தார்.

    அப்போது சிலிண்டரின் கேஸ் டியூப் வழியாக கேஸ் கசிந்து சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆதிமூர்த்தி, அமராவதி, மகள் சுமதி(15), மகன் பிரவீன்குமார்(12)ஆகிய 4 பேரின் கை, கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது.

    நாமக்கல் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். பின் அக்கம் பக்கத்தினர் 4 பேரையும் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

    • கடந்த இரண்டு வருடங்களாக சமையல் எரிவாயுவின் விலை உயர்ந்து, மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • சர்வதேச சந்தையில் விலை குறைந்துள்ள நிலையில் ஏன் விலை குறைக்கப்படவில்லை? என எதிர்க்கட்சிகள் கேள்வி.

    புதுடெல்லி:

    ஆங்கில புத்தாண்டின் முதல் நாளான இன்று, வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை 25 ரூபாய்  உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் சிலிண்டர் விலை ரூ.25.50 அதிகரித்து 1,917 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டெல்லியில் ரூ.1768, மும்பையில் ரூ.1721, கொல்கத்தாவில் ரூ.1870 என விற்பனை ஆகிறது. இந்த விலை உயர்வால், உணவகங்கள் பாதிக்கப்படும். உணவுகளின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

    'புத்தாண்டின் முதல் பரிசாக, வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இப்போது 25 ரூபாய் உயர்ந்துள்ளது. இது வெறும் ஆரம்பம் தான்' என காங்கிரஸ் கட்சி டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.

    கடந்த இரண்டு வருடங்களாக சமையல் எரிவாயுவின் விலை உயர்ந்து, மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    பாஜக ஆட்சிக்கு வந்த 2014-ம் ஆண்டு முதல் வீட்டு உபயோக சிலிண்டர் 410 ரூபாயில் இருந்து 1000 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது. எரிபொருள் விலையில் ஏற்பட்ட இந்த தொடர் உயர்வால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்தது.

    எரிபொருள் விலை உயர்வு குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்புகின்றன. ஆனால் கச்சா எண்ணெய்யின் சர்வதேச விலைகளை அரசாங்கம் சுட்டிக்காட்டியது. ஆனால், சர்வதேச சந்தையில் விலை குறைந்துள்ள நிலையில் தற்போது ஏன் விலை குறைக்கப்படவில்லை? என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

    • சிலிண்டர் ஒன்றுக்கு ரூ. 100 மானியம் அளிப்போம் என்ற வாக்குறுதி நிறைவேற்றாமல் உள்ளது.
    • ஏழை, எளிய நடுத்தர மக்களின் பொருளாதார சுமை கூடும்.

    பல்லடம் :

    பல்லடத்தில் உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து நிருபர்களிடம் கூறியதாவது:- மத்திய அரசு தற்போது கியாஸ் சிலிண்டரின் விலையை உயர்த்தியிருப்பது ஏழை எளியவர்களை கடுமையாக பாதிக்கும். கியாஸ் சிலிண்டர் என்பது அனைத்து தரப்பு மக்களுக்கும் அத்தியாவசிய தேவையாக இருக்கிறது. கொரோனா காலத்திற்கு பின்னர் வேலைவாய்ப்புகள் குறைந்ததால் ஏழைகளின் குடும்ப சுமை அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் அத்தியாவசிய தேவைகளான சமையல் கியாஸ் விலை உயர்வு ஏழை, எளிய, மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

    ஏற்கனவே தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியாக கியாஸ் சிலிண்டரின் விலையை குறைக்கும் வகையில் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ. 100 மானியம் அளிப்போம் என்று கொடுத்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றாமல் உள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு வீட்டு உபயோகத்திற்கான கியாஸ சிலிண்டரின் விலையை உயர்த்தியதால் ஏழை, எளிய நடுத்தர மக்களின் பொருளாதார சுமை கூடும். எனவே மத்திய அரசு உயர்த்தப்பட்டு இருக்கும் கியாஸ் சிலிண்டரின் விலையை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு 12 கேஸ் சிலிண்டர்களுக்கு மட்டும் மானியம் ரூ.200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
    • தமிழகத்தில் 35 லட்சம் பேருக்கு சிலிண்டருக்கு ரூ.200 மானியம் வழங்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    சர்வதேச சந்தையில் நிலவும், கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பெட்ரோல் , டீசல் விலை மற்றும் கேஸ் சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. இதில் பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றியமைக்கப்படும் நிலையில், கேஸ் சிலிண்டர்களின் விலை மாதமாதம் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

    அந்தவகையில் இந்த மாதம் (மார்ச்) சென்னையில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 50 உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ரூ. 1068 ஆக இருந்த சமையல் சிலிண்டர் விலை தற்போது ரூ. 1,118.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இந்நிலையில் பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு 12 கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு வழங்கப்படும் வீட்டு உபயோக பயன்பாடுகளுக்கான கேஸ் சிலிண்டர்களுக்கு மானியம் ரூ.200 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு 12 கேஸ் சிலிண்டர்களுக்கு மட்டும் மானியம் ரூ.200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 35 லட்சம் பேருக்கு சிலிண்டருக்கு ரூ.200 மானியம் வழங்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    • வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை.
    • வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாக குறைத்து வந்தன.

    சென்னை:

    சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.

    இதில், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை தினந்தோறும் என்ற அடிப்படையிலும், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை மாதத்தில் முதல் தேதி அல்லது மாதத்துக்கு 2 முறை என்ற அடிப்படையிலும் நிர்ணயிக்கப்படுகிறது. இதன்படி, கடந்த 3 மாதங்களாக வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்த சூழலில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாக குறைத்து வந்தன.

    இந்நிலையில் ஏப்ரல் 1-ஆம் தேதி 2192.50 ஆக இருந்த வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் 2021.50 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதன்படி சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை ரூ,171 குறைக்கப்பட்டுள்ளது.

    வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடைகொண்ட சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்படவில்லை. இதன்படி வீடுகளில் பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1,118.50 ஆக தொடர்கிறது.

    • வட்ட அளவிலான எரிவாயு சிலிண்டர் விநியோகம் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.
    • குறைகளும் நிவர்த்தி செய்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை வட்ட அளவிலான எரிவாயு சிலிண்டர் விநியோகம் குறித்த ஆய்வு கூட்டம் திருத்துறைப்பூண்டி வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடைப்பெற்றது.

    மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா தலைமை வகித்தார்.

    வட்ட வழங்கல் அலுவலர்கள் திருத்துறைப்பூண்டி அலெக்ஸாண்டர், முத்துப்பேட்டை வசுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் எரிவாயு விநியோக குறைபாடுகள் குறித்தும், புதிய சிலிண்டர்கள் பெறும் வழிமுறைகளை எளிதாக்குவது, மண்ணெண்ணை, சமையல் ஆயில், ரேஷன் பொருட்கள் விநியோகம், அங்காடி செயல்பாடு, குறித்தும் ஆலோசித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது,

    அனைத்து குறைகளும் நிவர்த்தி செய்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

    இதில் பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார், நாச்சிகுளம் நுகர்வோர் குழு தலைவர் பொன்வேம்பையன், செயலாளர் பாசில் அகமது மற்றும் எரிவாயு முகவர்கள் கலந்துக் கொண்டனர்.

    வருவாய் ஆய்வாளர் சேக்தாவூது நன்றி கூறினார்.

    • சமைக்கும்போது என்ன சமைத்தாலும், அதனை மூடி வைத்து சமைக்க வேண்டும்.
    • சின்ன சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தினால் கேஸ் வீணாவதைத் தடுக்கலாம்.

    நாம் அன்றாடம் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டர் விலை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வரும் நிலையில் இல்லத்தரசிகள் எப்படி சிக்கமான பயன்படுத்தலாம் என்பது குறித்து பார்ப்போம்.

    சமையலைத் தொடங்குவதற்கு முன்பே வெட்டப்பட்ட காய்கள் மற்றும் தேவையான பாத்திரங்களைத் தயாராக வைத்துக் கொள்ளவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்துவிட்டு ஒவ்வொரு பொருட்களாக தேடித் தேடி எடுத்துப் போடுவதன் மூலம் கேஸ் அதிகம் செலவாகும்.

    ஃப்ரிட்ஜில் வைத்த உணவு மற்றும் குழம்பு பாத்திரத்தைச் சூடுபடுத்தும் முன், அதை வெப்பநிலையில் சிறிதுநேரம் வைக்கவும். ஃபிரிட்ஜில் இருந்து நேரடியாக அடுப்பில் வைத்து சூடுபடுத்தினால் கேஸ் செலவு அதிகரிக்கும்.

    சமைக்கும்போது என்ன சமைத்தாலும், அதனை மூடி வைத்து சமைக்க வேண்டும். காய்கறிகள் சமைப்பதாக இருந்தாலும் சரி, அரிசியாக இருந்தாலும் மூடி வைத்து சமைத்தால் சீக்கிரமாகவே வெந்துவிடும்.

    பிரஷர் குக்கர் மூலம் சமைப்பது நல்லது. அகலமான பாத்திரத்தில் சமைப்பது எரிபொருளைச் சேமிக்க உதவும்.

    வெந்நீர் வைக்க கேஸ் ஸ்டவ்வுக்குப் பதிலாக rod water heater பயன்படுத்தலாம்

    இண்டக்ஷன் ஸ்டவ்வில் செய்ய முடிகிற சமையலை அதிலேயே செய்யலாம். கேஸ் ரெகுலேட்டர், ட்யூப், பானர் ஆகியவற்றில் கசிவு இருக்கிறதா என்பதை அடிக்கடிப் பார்த்துக் கொள்ளவும்.

    சமையல் முடிந்தவுடன் ரெகுலேட்டர் சுவிட்சை அணைக்க மறக்க வேண்டாம். வீட்டில் அனைவரும் ஒரே நேரத்தில் சாப்பிடுவது சிறந்தது. இது உணவினைச் சூடு செய்வதை தவிர்க்கும்.

    சமைப்பதற்கு முன்னதாக அரிசி, பருப்பு, பயறு வகைகளை ஊற வைக்க வேண்டும். அப்படி ஊற வைத்து சமைத்தால் வெகு சீக்கிரமாகவே எல்லாமே வெந்துவிடும். இதன் மூலமாக சிலிண்டர் மிச்சமாகும்.

    கேஸ் அடுப்பில் உள்ள பர்னர் எப்போதும் அழுக்குகள் படியாமல் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் பிசு பிசுப்பு மற்றும் அழுக்குகள் இருந்தால் அடைப்பு ஏற்பட்டு பிரச்னை ஏற்படும். இதனால் கேஸ் லீக் ஆகும் வாய்ப்பு கூட உண்டாகும். இதனால், சிலிண்டர் சீக்கிரமாக கூட தீர்ந்துவிடும். அதனால், பர்னர் எப்போதும் சுத்தமாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். அடிக்கடி தனியாக எடுத்து சுத்தம் செய்து வைப்பது நல்லது.

    காலையில் சமையலை முடிக்க வேண்டிய அவசரத்தில் ஈரமான பாத்திரங்களைக் கொண்டு சமையல் செய்வார்கள். முதல் நாள் இரவு கழுவாமல் பேட்ட பாத்திரத்தை மறுநாள் காலையில் அவசர அவசரமாக கழுவி, அதனை அப்படியே சமையலுக்கு பயன்படுத்த கூடாது. அந்த ஈரமான பாத்திரம் காய்வதற்கு 2 முதல் 4 நிமிடங்கள் வரை ஆகலாம். ஒரு நாள் இரண்டு நாள் என்றால் பரவாயில்லை. ஒவ்வொரு நாளும் இது போன்று இருந்தால் சிலிண்டர் சீக்கிரமே காலியாகிவிடும்.

    இப்படி சின்ன சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தி கேஸ் வீணாவதைத் தடுத்து, மிச்சப்படுத்துவதன் மூலம் மேலும் நான்கு நாட்கள் அல்லது ஒரு வாரம் சிலிண்டரைப் பயன்படுத்தலாம்.

    • இந்தியன் ஆயில் நிறுவனம் புதிதாக எடை குறைந்த அழகிய வடிவிலான புதிய 'காம் போசிட்' சிலிண்டரை அறிமுகம் செய்துள்ளது.
    • சிலிண்டர், வாயு கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டாலும் வெடிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    நாட்டின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனம், வீடுகள், ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்களுக்கு இன்டேன் என்ற பெயரில் சிலிண்டர்களை வினியோகம் செய்து வருகிறது. வீடுகளுக்கு 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர்களும், வர்த்தக பயன்பாட்டுக்கு 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர்களும் விநியோகம் செய்யப்படுகிறது.

    இந்தநிலையில், இந்தியன் ஆயில் நிறுவனம் புதிதாக எடை குறைந்த அழகிய வடிவிலான புதிய 'காம்போசிட்' சிலிண்டரை அறிமுகம் செய்துள்ளது.

    இந்த சிலிண்டர் பாலிமர் பைபர் கிளாஸ், அதிக அடர்த்தி வாய்ந்த பாலி எத்திலின் தெர்மோ பிளாஸ்டிக்காலான வெளிப்புற ஜாக்கெட் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மிகவும் உறுதித்தன்மை கொண்ட இந்த சிலிண்டர், வாயு கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டாலும் வெடிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    அத்துடன், தற்போது பயன்பாட்டில் உள்ள இரும்பிலான உருளையை ஒப்பிடுகையில் இந்த சிலிண்டர் 50 சதவீதம் எடை குறைவானது. எனவே, பெண்களே இந்த சிலிண்டரை எளிதாக கையாள முடியும். அத்துடன், இந்த சிலிண்டர் துருப்பிடிக்காது. இப்புதிய சிலிண்டரை பெற விரும்பும் புதிய வாடிக்கையாளர்கள் ரூ.3,500 பாதுகாப்பு வைப்புத்தொகையாக (செக்யூரிட்டி டெபாசிட்) செலுத்த வேண்டும்.

    பழைய வாடிக்கையாளர்கள் ஏற்கெனவே செலுத்திய காப்புத்தொகையுடன், புதிய பாதுகாப்பு வைப்புத் தொகையுடன் எவ்வளவு வித்தியாசம் உள்ளதோ அத்தொகையை செலுத்தினால் போது மானது.

    மேலும், புதிய சிலிண்டர்களை பெற முன்பதிவு செய்ய 8655677255 என்ற எண்ணுக்கு மிஸ்டுகால் கொடுக்கலாம் என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில், சமையல் எரிவாயு உருளை விலை மாற்றப்பட்டு வருகிறது.
    • சமையல் எரிவாயு உருளை விலை ஒவ்வொரு மாநிலத்தின் உள்ளூர் வரிகளுக்கு ஏற்ப வேறுப்படும்.

    எண்ணெய் நிறுவனங்கள் வர்த்தக பயன்பாடுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலையை மாற்றியமைத்துள்ளன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

    அந்த வகையில், இந்தியாவில் ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில், சமையல் எரிவாயு உருளை விலை மாற்றப்பட்டு வருகிறது. அதன்படி, ஜூன் 1-ம் தேதியான இன்று முதல் சமையல் எரிவாயு உருளை புதிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    19 கிலோ எடை கொண்ட வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை விலை 84 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த மாதம் 2 ஆயிரத்து 21 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த வர்த்தக சமையல் எரிவாயு உருளை இன்று முதல் ரூ. 84 குறைக்கப்பட்டு, ஆயிரத்து 937 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை குறைக்கப்பட்ட நிலையில், வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அதன்படி 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை விலை ஆயிரத்து 118 ரூபாய் 50 பைசா கட்டணத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்தியாவில் சமையல் எரிவாயு உருளை விலை ஒவ்வொரு மாநிலத்தின் உள்ளூர் வரிகளுக்கு ஏற்ப வேறுப்படும். இந்தியாவில் எல்பிஜி சமையல் எரிவாயு உருளை வர்த்தக பயன்பாடு மற்றும் வீட்டு உபயோகம் என்று இரண்டு விதங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை புதிய விலை

    சென்னை: 2 ஆயிரத்து 21 ரூபாய் 50 பைசா

    மும்பை: ஆயிரத்து 808 ரூபாய் 50 பைசா

    புது டெல்லி: ஆயிரத்து 856 ரூபாய் 50 பைசா

    கொல்கத்தா: ஆயிரத்து 960 ரூபாய் 50 பைசா

    • கியாஸ் சிலிண்டர் கிடங்கு அமைக்கும் பணிகள் தனியார் நிறுவனம் சார்பில் நடைபெறுகிறது.
    • முற்றுகையில் ஈடுபட்ட கிராம மக்களிடம் அரூர் வட்டாட்சியர் பெருமாள் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அரூர்:

    தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம், எட்டிப்பட்டி அழகிரி நகரில், கியாஸ் சிலிண்டர் கிடங்கு அமைக்கும் பணிகள் தனியார் நிறுவனம் சார்பில் நடைபெறுகிறது. இந்த கியாஸ் சிலிண்டர் அமைக்கும் இடம் அழகிரி நகரில் குடியிருப்பு பகுதிக்கு மிக அருகில் இருப்பதாக புகார் தெரிவித்து கிராம மக்கள் சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

    இந்த சாலை மறியல் சம்பவம் தொடர்பாக 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கில் தொடர்பு இருப்பதாக எட்டிப்பட்டி அழகிரி நகரைச் சேர்ந்த செந்தில்குமார், வீரமணி, தின்டன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதையடுத்து, அழகிரி நகரைச் சேர்ந்த 3 பேரின் கைது சம்பவத்தை கண்டித்து, எட்டிப்பட்டி அழகிரி நகரைச் சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் அரூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது முற்றுகையில் ஈடுபட்ட கிராம மக்களிடம் அரூர் வட்டாட்சியர் பெருமாள் பேச்சுவார்த்தை நடத்தினார். உரிய விசாரணைக்கு பிறகு கியாஸ் சிலிண்டர் கிடங்கு அமைப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் அளித்த உறுதியின் பேரில் கிராம மக்கள் முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இயற்கை எரிவாயு வினியோகம் செய்யும் பணியை 'டோரன்ட் கியாஸ்' என்ற நிறுவனம் மேற்கொள்கிறது.
    • கியாஸ் சிலிண்டர் விலையை விட இயற்கை எரிவாயு விலை 30 சதவீதம் குறைவாக உள்ளது என்பதால் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

    சென்னை:

    பொதுத்துறை எண்ணை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், தமிழகம் முழுவதும் குழாய் வழித்தடம் மூலம் இயற்கை எரிவாயுவை வினியோகம் செய்வதற்காக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் வழியாக குழாய் வழித்தடம் அமைத்து வருகிறது. விரைவில் இந்த பணிகள் முடிந்து வீடுகளுக்கு இயற்கை எரிவாயு வினியோகம் செய்யப்பட உள்ளது.

    தமிழகத்தில் மொத்தம் 1.61 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு வினியோகம் செய்யும் பணிகளை மேற்கொள்ள 7 நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் 33 லட்சம் வீடுகளுக்கு குழாய் வழித்தடம் மூலம் இயற்கை எரிவாயு வினியோகம் செய்யும் பணியை 'டோரன்ட் கியாஸ்' என்ற நிறுவனம் மேற்கொள்கிறது.

    எண்ணூர் துறைமுகத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம் எல்.என்.ஜி. எனப்படும் திரவ நிலை இயற்கை எரிவாயு முனையம் அமைத்துள்ளது. இதற்கு வெளிநாடுகளில் இருந்து கப்பலில் திரவ எரிவாயு வருகிறது. இந்த எரிவாயு குழாய் மூலம் வீடுகளுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது.

    இயற்கை எரிவாயுவை வீடுகளுக்கு வினியோகம் செய்ய பதிவுகள் நடந்து வருகிறது. இதற்கு டெபாசிட் கட்டணமாக ரூ.6,000, முன்பணமாக ரூ.500, இணைப்பு கட்டணமாக ரூ.590 வசூலிக்கப்படுகிறது. இதில் ரூ.6,500 திரும்ப பெறும் கட்டணம் ஆகும்.

    இந்நிலையில் முதல்முறையாக சென்னை அண்ணாநகர் அருகில் உள்ள மெட்ரோ சோன் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள 50 வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு வினியோகம் தொடங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து அரும்பாக்கம், கோயம்பேடு, மூலக்கடை உள்ளிட்ட பகுதிகளுக்கு இயற்கை எரிவாயு குழாய் மூலம் வினியோகம் செய்யப்பட உள்ளது.

    கியாஸ் சிலிண்டர் விலையை விட இயற்கை எரிவாயு விலை 30 சதவீதம் குறைவாக உள்ளது என்பதால் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இயற்கை எரிவாயு எவ்வளவு பயன்படுத்தப்படுகிறது என்பதை கண்டறிய மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. முதல் பில் இந்த மாத இறுதியில் வரும் என்று இயற்கை எரிவாயு நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×