என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jallikattu Competition"

    • வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
    • உசிலம்பட்டி போலீஸ் டி.எஸ்.பி.நல்லு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    உசிலம்பட்டி:

    தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்திற்கு அடுத்த படியாக உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்பநாயக்கனூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு பிரசித்தி பெற்றது.

    தொட்டப்ப நாயக்கனூரில் உள்ள ஜக்கம்மாள் கோவில் திருவிழாவின் போது ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதற்காக கோவில் அருகில் வாடிவாசல் அமைக்கப்பட்டிருந்தது. ஜல்லிக்கட்டில் மதுரை, தேனி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 681 காளைகளும், 480 மாடுபிடி வீரர்களும் பங்கேற்க பதிவு செய்திருந்தனர்.

    வாடிவாசல் முன்பு காளைகள் மற்றும் வீரர்கள் காயமடையாமல் இருப்பதற்காக தென்னை நார்கள் பரப்பப்பட்டிருந்தது. இருபுறமும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டி ருந்தது. இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. ஆர்.டி.ஓ. ரவிச்சந்திரன் தலைமையில் வீரர்கள் உறுதிமொழி ஏற்ற பின் போட்டி தொடங்கியது.

    வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனை யாரும் பிடிக்கவில்லை. அதனை தொடர்ந்து வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்க முயன்றனர். சில காளைகள் ஆக்ரோசமாக களத்தில் நின்று விளையாடின. வீரர்களும் அதற்கு நிகராக காளைகளுடன் மல்லுக்கட்டி அடக்க முயன்றனர்.

    ஒவ்வொரு சுற்றிலும் 50 வீரர்கள் களத்தில் இறக்கி விடப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டிகளை காண உசிலம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர். பல சுற்றுகளாக மாலை வரை நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக காளைகளை அடக்கும் வீரருக்கும், சிறந்த காளைகளுக்கும் டாடா ஏசி வேன், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள் பரிசாக வழங்கப்பட உள்ளது.

    மேலும் சிறப்பாக விளையாடிய வீரர்கள், காளைகளின் உரிமையாளர்களுக்கு சைக்கிள், மின்விசிறி, அண்டா, பீரோ, தங்க காசு போன்றவை பரிசாக வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு காயமடைந்த வீரர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க வாடிவாசல் அருகிலேயே மருத்துவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்தது.

    உசிலம்பட்டி போலீஸ் டி.எஸ்.பி.நல்லு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • 1,030 காளைகள், 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
    • போட்டிகள் பாதுகாப்பாக நடைபெற்று வருகிறது.

    அலங்காநல்லூர்:

    மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் அருகே கீழக்கரை கிராமத்தில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த வாரம் 10, 11 ஆகிய தேதிகளில் மதுரை வடக்கு சட்ட மன்ற தொகுதி சார்பில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தன. இதில் 1,500-க்கும் மேற்பட்ட காளைகள், 800-க்கும் அதி கமான மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர்.

    இதையடுத்து இன்று 3-வது முறையாக சோழ வந்தான் சட்டமன்ற தொகுதி சார்பில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த ஜல்லிக்கட்டு போட்டியை வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


    முன்னதாக வருவாய் கோட்ட அலுவலர் ஷாலினி ஜல்லிக்கட்டு பாதுகாப்பு உறுதிமொழியை வாசிக்க மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், அரசு அலுவலர்கள் பொது மக்கள் ஆகியோர் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

    சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், தெற்கு சட்டமன்ற உறுப்பி னர் பூமிநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் நரேந்திரன் மற்றும் வருவாய் துறையினர், மருத்துவ துறையினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த போட்டியில் சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 1,030 காளைகள், 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று களமாடி வருகிறார்கள். களத்தில் நின்று விளையாடும் காளையின் உரிமையாளருக்கும், காளை களை அடக்கும் வீரர்களுக்கும் தங்கநாணயம், சைக்கிள், மிக்சி உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

    இப்போட்டிகளில் பங்கேற்ற காளைகள் கால்நடை மருத்துவர்கள் பரிசோதித்து அனுப்புகின்றனர். மாடுபிடி வீரர்கள் சுகாதாரத்துறை மருத்துவர்கள் பரிசோதித்து தகுதி சான்று வழங்கிய வீரர்கள் 50 பேர் வீதம் ஒவ்வொரு சுற்றாக பங்கேற்றனர்.

    பொதுமக்கள் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை இலவசமாக கண்டு ரசிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

    இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஏராளமானோர் குடும்பத்துடன் வருகை தந்து குதூகலமாக பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்து ரசித்தனர்.

    இரண்டு அடுக்கு பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டு போட்டிகள் பாதுகாப்பாக நடைபெற்று வருகிறது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் தலைமையில் 350 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    இந்த ஜல்லிக்கட்டு போட்டியை பட்டிமன்ற பேச்சாளர் பிக்பாஸ் புகழ் அன்னபாரதி தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் பொதுமக்களுக்கு பொழுது போக்கு நிகழ்வாக ஜல்லிக்கட்டு போட்டி இடையே நவீன இசை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு வருகிறது.

    • ஜல்லிக்கட்டில் 750 காளைகள் கலந்து கொண்டன.
    • காளைகளை அடக்க 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கோவிலூர் முத்துமாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இங்கு இப்பகுதியைச் சேர்ந்த செங்கவள நாட்டார்களால் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் இருந்து 750 காளைகள் கலந்து கொண்டன.

    காளைகளை அடக்க 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். சீறிப்பாய்ந்த காளைகளுக்கும் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் கட்டில், பீரோ, கிரைண்டர், மிக்ஸி மற்றும் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது.

    சிறந்த காளைக்கும் சிறந்த மாடுபிடி வீரர்களு க்கும் அமைச்சர் மெய்யநாதன் சிறப்பு பரிசுகள் வழங்கினார். ஆலங்குடி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். 

    தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்குபெறும் காளை மாடுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    தஞ்சாவூர்:

    தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்குபெறும் காளை மாடுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் நாளை(14-ந் தேதி) நடைபெறும் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்வதற்காக தஞ்சை ஆடக்காரதெருவில் கார்த்தி மற்றும் கிருபாகரன் ஆகியோருக்கு சொந்தமான வெள்ளையன், கரிகாலன் என்ற 2 மாடுகளுக்கு இன்று பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் மாட்டை அடக்க வருபவர்களிடம் இருந்து எப்படி பிடிபடாமல் தப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் இந்த 2 மாடுகளுக்கும் அளிக்கப்பட்டது. இதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

    இது குறித்து மாட்டின் உரிமையாளர் கார்த்தி கூறியதாவது:-

    நாங்கள் பரம்பரை பரம்பரையாக காளை மாடுகள் வளர்த்து வருகிறோம். மாடு தான் எங்களது முதல் குழந்தை. அதனை நாங்கள் தெய்வமாக நினைத்து வழிபடுகிறோம். மாடுகளுக்கு வீரியம் குறையாமல் இருப்பதற்காக தினமும் நடைபயிற்சி உள்ளிட்ட ஏராளமான பயிற்சி அளித்து வருகிறோம்.

    பருத்திகொட்டை, சோளத்தட்டை, பச்சையரிசி, உளுந்து, பேரீச்சம்பழம் உள்ளிட்டவைகளை உணவுகளாக காளை மாடுகளுக்கு அளித்து வருகிறோம். மாடு பிடித்து செல்லும்போது காலில் செருப்பு அணிய மாட்டோம். திரும்ப அழைத்து வரும் வரை உணவு கூட சாப்பிட மாட்டோம். எங்களது மாட்டை இதுவரை யாரும் அடக்கவில்லை. புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டு பிரிட்ஜ், பேன், பீரோ உள்ளிட்ட ஏராளமான பரிசுகளை வாங்கியுள்ளது. எனது காலத்துக்கு பிறகும் எங்களது குழந்தைகள் தொடர்ந்து மாடுகளை வளர்ப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு நாளை முதல் உடல்தகுதி சோதனை செய்யப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. #Jallikattu

    அலங்காநல்லூர்:

    தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி நடத்தப்படும்.

    காளைகள் துன்புறுத்தப்படுவதை காரணம் காட்டி 2016-ம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் நடைபெற்ற எழுச்சி போராட்டம் காரணமாக ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் ஜல்லிக்கட்டுகள் நடத்தப்படுகின்றன.

    இருப்பினும் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய 3 இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலக பிரசித்தி பெற்றது.

    இங்கு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காளைகள் பங்கேற்கும். ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த உச்சநீதிமன்றம் கடுமையான விதிகளை பிறப்பித்துள்ளது. அதனை பின்பற்றி அரசின் மேற்பார்வையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    அதன்படி இந்த ஆண்டு வருகிற 15-ந்தேதி பொங்கல் பண்டிகை அன்று அவனியாபுரத்திலும், 16-ந்தேதி பாலமேட்டிலும், 17-ந்தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கின்றன. இதற்கான அரசாணைகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    மேற்கண்ட இடங்களில் நடைபெறும் போட்டிகளில் 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு போட்டிகளில் தங்களது காளைகளை பங்கேற்க செய்வோர் அதற்கான உரிய சான்றிதழை கால்நடைத்துறையிடம் இருந்து பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி 3 இடங்களில் உள்ள கால்நடை மருத்துவ மனைகளில் நாளை (2-ந் தேதி) முதல் வருகிற 12-ந்தேதி வரை காளைகளுக்கு உடல் தகுதி சோதனைகள் ஆய்வு செய்யப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும்.

    காளைகளின் உயரம் 120 செ.மீட்டராக இருக்க வேண்டும். காளையின் வயது குறைந்தபட்சம் 8 வயதுக்குள்ளாக இருக்க வேண்டும்.

    கொம்பின் கூர்மைத் தன்மை உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டு போட்டிகளில் பங்கேற்க தகுதி உள்ளதா? என்பது குறித்து கால்நடை மருத்துவர்கள் சான்றிதழ் வழங்குவார்கள்.

    பின்னர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க காளைகளுக்கு வரிசை எண் கொடுக்கப்பட்டு பதிவு செய்யப்படும். பதிவின் போது காளையின் உரிமையாளர்கள் 2 பாஸ்போர்ட் சைஸ்போட்டே, ஆதார், ரேசன் கார்டு நகல் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

    3 இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்க இன்னும் 2 வாரங்களே உள்ளதால் அதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பாலமேடு, அலங்காநல்லூரில் வாடிவாசல்கள் சுத்தம் செய்யப்பட்டு வர்ணம் பூசப்பட்டுள்ளன. கேலரிகளும், தடுப்பு வேலிகளும் அமைக்க சவுக்கு மரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு ஊட்டச்சத்து தீவனம், நீச்சல் பழகுதல், மண்ணை குத்தி கிளறுதல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் மாடுபிடி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். #Jallikattu

    தமிழகத்தில் 2019-ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நாளை மறுநாள் நடக்கிறது. #Jallikattu
    கந்தர்வக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே தச்சங்குறிச்சி கிராமத்தில் உள்ள புனித அடைக்கல மாதா ஆலய திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் ஜனவரி 1-ந்தேதி தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்.

    சுப்ரீம் கோர்ட்டு தடை காரணமாக சில ஆண்டாக போட்டி நடத்தப்படாததால் வாடிவாசல் பகுதி களையிழந்து காணப்பட்டது.

    இந்தநிலையில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் நடத்திய போராட்டத்துக்கு பின்னர் தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்றியதால் நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த கோர்ட்டு அனுமதி அளித்தது. இதையடுத்து தச்சங்குறிச்சியில் கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது.

    ஆண்டுதோறும் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சி கிராமத்தில்தான் நடத்தப்படும். அதன்படி 2019-ம் ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சியில் நாளை மறுநாள் 2-ந்தேதி நடத்தப்படுகிறது. இதற்காக ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் வாடிவாசலை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    ஜல்லிக்கட்டு போட்டிக்காக தச்சங்குறிச்சியில் கேலரி அமைக்கப்பட்டு வரும் காட்சி.

    மேலும் முக்கிய பிரமுகர்களுக்கான விழா மேடை மற்றும் பார்வையாளர்கள் பாதுகாப்புடன் அமர்ந்திருப்பதற்கான கேலரி, போட்டி நடத்தப்படும் திடலில் அமைக்க வேண்டிய அம்சங்கள் அனைத்தும் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் தயார் செய்யப்பட்டு வருகிறது.

    முதல் போட்டியில் தங்கள் காளை வெற்றி வாகை சூடவேண்டும் என்பதற்காக காளை மாடுகளுக்கு சிறப்பு பயிற்சிகளை காளையின் உரிமையாளர்கள் அளித்து வருகின்றனர். அதே போல் மாடுபிடி வீரர்களும் காளைகளை அடக்க தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். போட்டிக்கான அனுமதி டோக்கன் கடந்த 2 நாட்களாக கொடுக்கப்பட்டு வருகிறது. போட்டியில் கலந்து கொள்ள இதுவரை 850 காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்துள்ளனர். இதனால் தச்சங்குறிச்சி கிராமமே களை கட்டியுள்ளது. #Jallikattu


    ×