என் மலர்
நீங்கள் தேடியது "kaanum pongal"
- மாயமான 15 குழந்தைகள் இந்த அட்டை மூலம் அடையாளம் காணப்பட்டனர்.
- பெண்களை கேலி-கிண்டல் செய்த நபர்களை போலீசார் விரட்டி அடித்தனர்.
சென்னை:
காணும் பொங்கலையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. கூட்ட நெரிசலில் குழந்தைகள் மாயமானால் எளிதில் கண்டுபிடிப்பதற்காக அவர்கள் கையில் பெற்றோரின் செல்போன் எண்ணுடன் கூடிய அடையாள அட்டை கட்டி விடப்பட்டது. நேற்றிரவு 7 மணி நிலவரப்படி 10 ஆயிரம் குழந்தைகள் கையில் இந்த அட்டை கட்டப்பட்டது.
இந்த நிலையில் மாயமான 15 குழந்தைகள் இந்த அட்டை மூலம் அடையாளம் காணப்பட்டனர். ஒலிப்பெருக்கி மூலம் தகவல் கொடுத்து குழந்தைகளை குடும்பத்தினருடன் பத்திரமாக ஒப்படைத்தனர். சமூக விரோதிகள் நடமாட்டம் இருக்கிறதா? என்பதை மாறுவேடத்தில் மக்களோடு மக்களாக 9 தனிப்படை போலீசார் கண்காணித்தனர். அப்போது பெண்களை கேலி-கிண்டல் செய்த நபர்களை விரட்டி அடித்தனர்.
குற்ற வழக்கு பின்னணி உள்ளவர்கள் வருகிறார்களா என்பதை முக அடையாள கண்காணிப்பு கேமரா மூலம் போலீசார் கண்காணித்தனர். இந்த கேமராவில் சிக்கியவர்களை போலீசார் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர்.
திருவல்லிக்கேணி உதவி கமிஷனர் எம்.எஸ்.பாஸ்கர் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை 3 இடங்களில் தற்காலிக போலீஸ் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
- காணும் பொங்கல் அன்று கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
பொங்கல் பண்டிகையையொட்டி தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை வந்துள்ளதால் சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
காணும் பொங்கல் தினமான நாளை கூட்டம் அலைமோதும் என்பதால் சென்னையில் மெரினா கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். சென்னை மாநகர் முழுவதும் 15,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
சென்னையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக மாநகர போலீசார் விரிவான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக போலீசார் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
காணும் பொங்கலையொட்டி, போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில் சென்னையில் 15,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். 1500 ஊர்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை 3 இடங்களில் தற்காலிக போலீஸ் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. 7 சர்வீஸ் சாலைகளின் நுழைவு வாயில்களிலும் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 8 ஆம்புலன்ஸ் வாகனங்கள், 2 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. 200-க்கும் மேற்பட்ட நீச்சல் வீரர்களும் கடற்கரை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையில் 12 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் ஏற்படுத்தப்பட்டு 13 கேமராக்களும் கூடுதலாக பொருத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு கோபுரங்களில் நின்றபடி 3 போலீசார் பைனாகுலரில் கண்காணிக்க உள்ளனர். அங்கிருந்தபடியே மெகாபோன் மூலமாக அவர்கள் தேவையான அறிவுரைகளை வழங்குவார்கள். தகவல்களை பரிமாறிக்கொள்வதற்காக வாட்ஸ்அப் குழுக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
காணும் பொங்கல் அன்று கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக கடற்கரையோரமாக தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. குதிரைப்படையினருடன், கடற்கரை மணல் பரப்பில் செல்லக்கூடிய 3 வாகனங்கள் மூலமாகவும் ரோந்து சென்று குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் போலீசார் கண்காணிக்க உள்ளனர்.
சென்னை போலீஸ் மற்றும் கடலோர காவல் குழுமத்தின் கடற்கரை உயிர்காக்கும் பிரிவின் 85 போலீசார் அடங்கிய தனிப்படையும் பொதுமக்கள் கடலில் இறங்காமல் இருப்பதற்காக கடலோர பகுதிகளில் கண்காணிக்க உள்ளனர்.
மெரினாவை போன்று பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையிலும் தற்காலிக போலீஸ் கட்டுப்பாட்டு அறை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. 3 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மெரினாவை போன்று பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
கடற்கரைக்கு பெற்றோருடன் வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போனால் அவர்களை உடனடியாக மீட்பதற்காக சென்னை பெருநகர காவல் மூலம் தயாரிக்கப்பட்டு அடையாள அட்டைகள் காவல் உதவி மையங்கள் மற்றும் தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறைகளில் வைக்கப்பட்டுள்ளது. இந்த அடையாள அட்டைகள் குழந்தைகளுடன் வரும் பெற்றோர்களை நிறுத்தப்பட்டு, அடையாள அட்டையில் குழந்தையின் பெயர் பெற்றோர் பெயர், முகவரி மற்றும் பெற்றோர் கைபேசி எண் ஆகியவற்றை எழுதி, குழந்தைகளின் கைகளில் கட்டி அனுப்பி வைக்கப்படுவர்.
ஆகவே குழந்தைகளுடன் வரும் பெற்றோர் மேற்கூறிய காவல் உதவி மையங்களில் அடையாள அட்டையை பெற்றுக்கொண்டு கடற்கரைக்குள் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
மெரினா கடற்கரை மணல் பரப்புகளில் 4 டிரோன் கேமராக்கள் மற்றும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை மணல் பரப்புகளில் 4 டிரோன் கேமராக்கள் என மொத்தம் 8 டிரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட உள்ளது.
காணும் பொங்கலை முன்னிட்டு, பொதுமக்கள் அதிகளவு கூடும் மற்ற முக்கிய இடங்களான கிண்டி சிறுவர் பூங்கா, தீவுத்திடலில் உள்ள தமிழக அரசு சுற்றுலா பொருட்காட்சி, கேளிக்கை பூங்காக்கள், மற்றும் திரை அரங்குகள் கொண்ட வணிக வளாகங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
அனைத்து இடங்களிலும் சிறப்பு வாகன தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, குடிபோதையில் வாகனம் ஓட்டி வருபவர்கள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
காணும் பொங்கல் அன்று சாலை பாதுகாப்பு குழுக்கள் இருசக்கர வாகனத்தில் ரோந்து சென்று பொதுமக்களுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வாகன ஓட்டிகளுக்கு உரிய அறிவுரைகள் மற்றும் தேவையான உதவிகளையும் வழங்குவார்கள்.
இதுமட்டுமின்றி கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை, துரைப்பாக்கம், மதுரவாயல் பைபாஸ் சாலை, ஜி.எஸ்.டி. ரோடு மற்றும் முக்கிய சாலைகளில் பைக்ரேஸ் தடுப்பு நடவடிக் கையாக கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டு பைக் சாகசங்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை பெருநகர காவல் துறையின் அறிவுரைகள் மற்றும் கட்டுப்பாடுகளை கடைபிடித்து பொதுமக்கள் மகிழ்ச்சியான பொங்கலை கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு.
- தற்காலிக கட்டுப்பாட்டு அறைகளை அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணிப்பு.
பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் தமிழர்கள் மத்தியில் களைகட்டி வருகிறது. தை திருநாளை முன்னிட்டு, நேற்று மாட்டுப் பொங்கலும், இன்று காணும் பொங்கலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
காணும் பொங்கலான இன்று தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்களில் பொது மக்கள் கூட்டம் கூட்டமாக கூடியுள்ளனர். இதனால் கடற்கரை பகுதிகள், பூங்காக்கள் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதுகிறது.
இந்த ஆண்டும் காணும் பொங்கலை வழக்கமான உற்சாகத்தோடும், மிகுந்த ஆர்வமுடன் கொண்டாடி வருகின்றனர்.
இதேபோல், சென்னையில் மெரினா கடற்கரையில் இன்று ஆயிரக்கணக்கான மக்கள் கூடியுள்ளனர்.
முன்னதாக, மெரினாவில் கூடும் மக்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்துள்ளனர்.

போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில் கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா, இணை கமிஷனர் தர்மராஜ் ஆகியோர் மேற்பார்வையில் மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளனர்.
மெரினா கடற்கரை எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட கடலோர பகுதிகள் முழுவதிலும் தற்காலிக கட்டுப்பாட்டு அறைகளை அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
காணும் பொங்கல் தினத்தில் திரளாக மக்கள் கூடுவார்கள் என்பதால் அன்றைய தினம் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் கடலில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- பழவேற்காடு கடலில் படகு சவாரி மற்றும் குளிக்க தடை செய்யப்பட்டுள்ளது.
- கடற்கரையில் ஆபத்தான பகுதி கண்டறியப்பட்டு அதில் சிவப்பு நிற அபாய கொடி நடப்பட்டுள்ளது.
பொன்னேரி:
காணும் பொங்கல் விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சுற்றுலா தலங்கள் மற்றும் பூங்காக்கள், கடற்கரைக்கு பொதுமக்கள் குடும்பத்துடன் சென்று சமைத்து கொண்டு சென்ற உணவை சாப்பிட்டு உற்சாகமாக பொழுதை கழிப்பது வழக்கம். அதன்படி நாளை வண்டலூர் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, மெரினா, பெசன்ட் நகர், மாமல்லபுரம் கடற்கரையில் திரளானோர் குவிவார்கள். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
இதேபோல் சிறந்த சுற்றுலா தலமாக விளங்கும் பழவேற்காடு கடற்கரையிலும் ஏராளமானோர் நாளை காலை முதல் மாலை வரை குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடற்கரைக்கு வருபவர்கள் அங்குள்ள டச்சு கல்லறை, நிழல் கடிகாரம், பழமை வாய்ந்த சிவன் கோவில், ஆதிநாராயண பெருமாள் கோவில், பழமை வாய்ந்த மசூதி, பழவேற்காடு ஏரி, பழவேற்காடு பறவைகள் சரணாலயம், உள்ளிட்டவைகளை பார்த்து ரசிப்பார்கள்.
இதையொட்டி பழவேற்காடு பகுதியில் உதவி ஆணையாளர் வீரக்குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் காளிராஜ், குணசேகரன், சாம் வில்சன், வேலுமணி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் பொன்னேரி அடுத்த ஆண்டார்மடம், மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளி ஆகிய 2 இடங்களில் போலீசார் சோதனை சாவடி அமைத்து உள்ளனர். வாகனங்களை நிறுத்த தனியிடம் ஒதுக்கி உள்ளனர்.
பழவேற்காடு கடற்கரையில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு முன்னதாகவே வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்து உள்ளனர். அங்கிருந்து கடற்கரை பகுதிக்கு நடந்து செல்ல வேண்டும்.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, பழவேற்காடு கடலில் படகு சவாரி மற்றும் குளிக்க தடை செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளோடு வருபவர்கள் பத்திரமாக குழந்தையை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். நகை, பணம் மற்றும் பொருட்களை பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் உடனடியாக அருகில் உள்ள போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும். சாலைகளில் பைக் ரேசில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
வனத்துறையினர் கூறும்போது, வனத்துறையினர் 5 பேர் கடற்கரையில் ரோந்து செல்வார்கள். வழிமாறி ஊருக்குள் சென்று கடற்கரைக்கு வரும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படும். பழவேற்காடு தன்னார்வலர்கள் மூலமாக 25 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, படகில் ரோந்து செல்லப்படும். கடற்கரையில் ஆபத்தான பகுதி கண்டறியப்பட்டு அதில் சிவப்பு நிற அபாய கொடி நடப்பட்டுள்ளது என்றனர்.
- அனைத்து வாகனங்களையும் புறவழிச்சாலை, கிழக்கு கடற்கரை சாலையில் நிறுத்த மாமல்லபுரம் போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.
- பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு சென்று வருவதற்கு வசதியாக 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.
காணும் பொங்கல் பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதையடுத்து சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காணும் பொங்கல் விழா, இன்று காலையிலேயே களை கட்டியது. இன்று காலை முதலே சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் குவிந்தனர்.
சென்னையில் உள்ள சுற்றுலா தலங்களை பொருத்தவரை பொதுமக்கள் அதிகம் பேர் கூடுவது மெரினா கடற்கரை ஆகும். காணும் பொங்கலையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் இன்று காலையில் இருந்தே பொதுமக்கள் குவியத் தொடங்கினார்கள். நேரம் செல்லச்செல்ல பொதுமக்கள் கூட்டம் அதிகரித்தது. இன்று மதியத்துக்கு மேல் லட்சக்கணக்கான பொதுமக்கள் மெரினாவில் திரண்டனர்.
இதனால் மெரினா கடற்கரையில் எங்கு பார்த்தாலும் மனித தலைகளாகவே காணப்பட்டது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து குடும்பத்துடன் மெரினாவில் குவிந்த மக்கள் மகிழ்ச்சியாக பொழுதை கழித்தனர். குழந்தைகள் கடற்கரை மணலில் உற்சாகமாக விளையாடினார்கள்.
மெரினா கடற்கரையில் இன்று கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி யாராவது கடலில் இறங்கி மூழ்கினால் அவர்களை மீட்பதற்காக நீச்சல் தெரிந்த 200 பேர் தயாராக உள்ளனர். உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை 3 தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. மெரினா கடற்கரைக்கு செல்பவர்களின் வசதிக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. பொங்கல் பண்டிகையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கடந்த 2 நாட்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருகை தந்து விலங்குகள் மற்றும் பறவைகளை பார்த்தனர்.
காணும் பொங்கலையொட்டி இன்று காலையில் இருந்தே வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் வரத்தொடங்கினார்கள். நேரம் செல்லச்செல்ல பொதுமக்கள் வருகை அதிகரித்தது. இன்று மதியம் ஏராளமான மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வந்து குவிந்தனர். அவர்கள் பூங்காவில் உள்ள விலங்குகள், பறவைகளை பார்வையிட்டனர்.
மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டன. குழந்தைகளுக்கு பெற்றோரின் தொடர்பு விவரங்களுடன் கை வளையம் வழங்கப்பட்டது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள சிறுவர் பூங்காவில் 5 வயது முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான விளையாட்டு அம்சங்கள் அதிகம் உள்ளது. இந்த சிறுவர் பூங்கா பராமரிப்பு பணிகள் முடிவடைந்து சிறுவர்களுக்காக திறந்து விடப்பட்டுள்ளது. இங்கும் ஏராளமான சிறுவர்கள் விளையாடி மகிழ்ந்தனர்.

காணும் பொங்கலை கொண்டாட இன்று காலை முதலே, சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் குடும்பம் குடும்பமாக மாமல்லபுரத்திற்கு வரத் தொடங்கினர். மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களான அர்ச்சுனன் தபசு, கடற்கரை கோவில், ஐந்துரதம், புலிக்குகை, வெண்ணை உருண்டைக்கல் பாறை உள்ளிட்ட சிற்பங்களை கண்டுகளித்தனர். சுற்றுலா பயணிகளின் வசதிக்காக செங்கல்பட்டு, தாம்பரம், திருவான்மியூர் பகுதிகளில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் வழிபாட்டிற்கு வரும் கர்நாடக மாநில செவ்வாடை பக்தர்களும், மாமல்லபுரம் கடலில் குளித்து செல்ல வந்தனர்.
அனைத்து வாகனங்களையும் புறவழிச்சாலை, கிழக்கு கடற்கரை சாலையில் நிறுத்த மாமல்லபுரம் போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். புறவழிச்சாலையில் இருந்தும், ஓ.எம்.ஆர். பகுதியில் இருந்தும் பயணிகள் மாமல்லபுரம் நகருக்குள் வருவதற்கு வசதியாக மினி பஸ் இயக்கப்படுகிறது. மாமல்லபுரம் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு நீச்சல் தெரிந்த வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். பெண்களை கேலி செய்வோர், பாலியல் சீண்டல் செய்வோரை கண்காணித்து பிடிக்க சாதாரண உடையில் பெண் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று அதிகளவில் கூட்டம் வரும் என்பதால் புராதன சின்னங்களை பார்க்க தொல்லியல்துறை இலவசமாக அனுமதிக்கும் என சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்தனர். ஆனால் வெளிநாட்டு பயணிகளுக்கு ரூ.600-ம், உள்நாட்டு பயணிகளுக்கு ரூ.40-ம் வசூலிக்கப்பட்டது.
சென்னையை அடுத்துள்ள பழவேற்காட்டில் இன்று காலை 8 மணி முதல் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் பழவேற்காட்டில் உள்ள டச்சு கல்லறை நிழல் கடிகாரம், பழமை வாய்ந்த சிவன் கோவில், ஆதிநாராயண பெருமாள் கோவில், பழமை வாய்ந்த மசூதி, பழவேற்காடு ஏரி, பறவைகள் சரணாலயம் உள்ளிட்டவைகளை பார்த்து ரசித்தனர்.
பொதுமக்களின் பாதுகாப்புக்காக 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 10 தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனத்துடன் தயார் நிலையில் உள்ளனர். அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் மற்றும் நடமாடும் மருத்துவமனை வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது. பழவேற்காடு ஏரியில் படகு சவாரி மற்றும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் சென்னை பெசன்ட் நகர் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, கோவளம் கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கேளிக்கை பூங்காக்கள் ஆகிய சுற்றுலா தலங்களிலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
சென்னையில் காணும் பொங்கலையொட்டி இன்று பாதுகாப்பு பணியில் 16 ஆயிரம் போலீசாரும், 1,500 ஊர்க்காவல் படையினரும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். சென்னையில் பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு சென்று வருவதற்கு வசதியாக இன்று 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.
- விநாயகர் சதுர்த்தியைப் போல காணும் பொங்கல் பண்டிகைக்கும் விதிமுறைகளை வகுக்க வேண்டும்.
- காணும் பொங்கல் பண்டிகைக்கு ஒன்று கூடுவது தான் நம் கலாச்சாரம்.
சென்னை:
காணும் பொங்கல் தினத்தில் மெரினாவில் திரண்ட மக்களால் கடற்கரை குப்பை கூளமான விவகாரம் தொடர்பாக தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
காணும் பொங்கலுக்கு திரளும் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் போலீசார் நியமிக்கப்பட்டு, அறிவிப்புகள் அறிவிக்கப்படுவதைப் போல், குப்பை போட்டால் அபராதம் விதிக்கப்படும் என ஏன் அறிவிப்புகள் வெளியிடக் கூடாது எனக் கேள்வி எழுப்பிய தீர்ப்பாயம், விநாயகர் சதுர்த்தியைப் போல காணும் பொங்கல் பண்டிகைக்கும் விதிமுறைகளை வகுக்க வேண்டும் என அறிவுறுத்தியது.
மேலும், காணும் பொங்கல் பண்டிகைக்கு ஒன்று கூடுவது தான் கலாச்சாரமே தவிர குப்பை போடுவது கலாச்சாரம் அல்ல எனத் தெரிவித்த தீர்ப்பாயம், இந்த விஷயத்தில் தமிழக அரசு முன் மாதிரியாக செயல்பட வேண்டும் எனக் கூறி, வழக்கு தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 5-ந் தேதிக்கு தள்ளி வைத்தது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ளது கீழ்அருங்குணம். இந்த பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 35). இவர் அண்ணா கிராமம் ஒன்றிய விடுதலை சிறுத்தை கட்சி செயலாளராக உள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் (50). அ.தி.மு.க. பிரமுகர்.
இவர்கள் 2 பேருக்கும் இடையே தேர்தலையொட்டி முன்விரோதம் இருந்து வந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் இருபிரிவுகளாக பிரிந்து அடிக்கடி மோதி வந்தனர்.
காணும் பொங்கலையொட்டி நேற்று இரவு தாமோதரன் தரப்பினரும், சுபாஷ் தரப்பினரும் தனித்தனியாக மது குடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களுக்கிடையே திடீரென்று வாய்த் தகராறு ஏற்பட்டது. பின்னர் அது மோதலாக மாறியது. இருதரப்பினரும் கத்தி, கம்பு, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொண்டனர்.
இந்த தாக்குதலில் தாமோதரன் தரப்பை சேர்ந்த தங்கவேல் (37), முத்துக்குமரன் (30), சுபாஷினி (10), ஞானவேல் (21) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
சுபாஷ் தரப்பை சேர்ந்த மணிகண்டன், சேதுபதி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் 6 பேரையும் மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அரிவாள் வெட்டில் பலத்த காயம் அடைந்த தங்கவேல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மணிகண்டனை மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த மோதல் சம்பவம் தொடர்பாக நெல்லிக்குப்பம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கட லூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி தலைமையில் நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் 30-க்கும் மேற்பட்ட போலீசார் கீழ்அருங்குணம் கிராமத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக நெல்லிக்குப்பம் போலீசார் 10 பேரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள திருநாளூர் வடக்கு பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 40). இவரது மனைவி தாமரை செல்வி (33). இவர்களது மகள் தர்ஷினி (12). சேகரும், தாமரைசெல்வியும் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்தனர்.
இதனால் தர்ஷினி, புதுக்கோட்டை மாவட்டம் ஆவனத்தான்கோட்டையில் உள்ள அவரது பாட்டி பானுமதி வீட்டில் தங்கியிருந்து அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள்.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக தாமரைச்செல்வி அவரது தாய் வீட்டிற்கு வந்திருந்தார். நேற்று காணும் பொங்கலையொட்டி ஆட்டு இறைச்சி வாங்கி சமைத்து சாப்பிட்டனர். அதனை சாப்பிட்ட சிறிது நேரத்தில் தாமரைசெல்விக்கும், தர்ஷினிக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த பானுமதி மற்றும் அப்பகுதி பொதுமக்கள் இருவரையும் அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு இருவருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி தர்ஷினி இறந்தாள். தாமரைசெல்விக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் , மகள் இறந்ததை அறிந்து கதறி துடித்தார்.
தர்ஷினி உடலை அவரது உறவினர்கள் வீட்டிற்கு கொண்டு சென்றனர். அப்போது தாமரைச்செல்வியும் உடன் சென்றார். போகும் வழியில் திடீரென தாமரைச் செல்வியும் வாந்தி மயக்கம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் அறந்தாங்கி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் தாய்-மகள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இருவரும் எப்படி இறந்தார்கள் என்பது தெரியவில்லை. ஆட்டு இறைச்சியை சமைத்து சாப்பிட்ட பிறகே இருவருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட் டுள்ளது. மேலும் தலைக்கறியை சமைத்து சாப்பிட்டுள்ளனர்.
இதனால் ஆட்டு இறைச்சியை விற்பனை செய்த வியாபாரி பழைய இறைச்சியை விற்பனை செய்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்ததா? அல்லது ஏதாவது கலப்படம் செய்யப்பட்ட ஆட்டு இறைச்சியை வாங்கி சாப்பிட்டதன் காரணமாக இறந்தனரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்காக அவர்கள் சமைத்து சாப்பிட்ட ஆட்டு இறைச்சியை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர். அதன் முடிவில் இந்த சம்பவம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது. ஆட்டு இறைச்சியை சமைத்து சாப்பிட்ட தாய்-மகள் பலியான சம்பவம் அறந்தாங்கி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொங்கல் பண்டிகை மறு நாளான கரிநாள் அன்று அறந்தாங்கி பகுதியில் ஆட்டு இறைச்சி அதிக அளவில் விற்பனையானது. பொதுமக்கள் பலர் போட்டி போட்டு வாங்கினர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வியாபாரிகள் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த ஆட்டு இறைச்சியை, புதிதாக வெட்டப்பட்ட ஆட்டு இறைச்சியுடன் கலந்து விற்பனை செய்திருக்கலாம் என போலீசார் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்த அறந்தாங்கி பகுதியில் உள்ள ஆட்டு இறைச்சி கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.
பொங்கல் பண்டிகை கடந்த செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. அதற்கு மறுநாள் புதன்கிழமை, விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் மாட்டுப்பொங்கல் விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
நேற்று காணும் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காணும் பொங்கலையொட்டி மக்கள் சுற்றுலா தலங்களுக்கும், பொழுதுபோக்கு மையங்களுக்கும் சென்று மகிழ்ச்சியுடன் பொழுதை கழிப்பது வழக்கம். அதன்படி நேற்று கடற்கரை, பூங்கா போன்ற இடங்களுக்கு சென்று மக்கள் காணும் பொங்கலை உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடினார்கள்.
சென்னையில் மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் கடற்கரைகள், கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் உயிரியல் பூங்கா, பொருட்காட்சி ஆகிய இடங்களுக்கு நேற்று காலை முதலே குடும்பம் குடும்பமாக மக்கள் வந்து குவிய தொடங்கினார்கள். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து கார், வேன், பஸ், மாட்டுவண்டி, மோட்டார் சைக்கிள்களில் படையெடுத்து வந்தனர்.
இதனால் அந்த இடங்களில் கொண்டாட்டம் களை கட்டியது. போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. அதை போக்குவரத்து போலீசார் சரிசெய்தனர்.
சுற்றுலாதலங்களில் 5 லட்சம் பேர் திரண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மெரினா கடற்கரைக்கு மட்டும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் வந்திருந்ததாக அவர்கள் கூறினார்கள்.
மெரினா கடற்கரைக்கு அதிக அளவில் மக்கள் வருவார்கள் என்பதால் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு ஏற்பாடுகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். மெரினா கடற்கரையில் மட்டும் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டு இருந்தனர்.
அதுமட்டுமில்லாது 13 உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து, பொதுமக்களை கண்காணித்தனர். கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால், மெரினா கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதை கண்காணிக்கவும் போலீசார் பணியமர்த்தப்பட்டு இருந்தனர். அவர்கள், தடையை மீறி குளிக்க முயன்றவர்களை கண்டித்தும், எச்சரிக்கை செய்தும் அனுப்பினர்.
மெரினா கடற்கரையில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால் பெற்றோருடன் வந்திருந்த சிறுவர்-சிறுமிகளுக்கு போலீசார் கையில் அடையாள ‘பேட்ஜ்’ அணிவித்தனர். அதில் குழந்தை மற்றும் பெற்றோரின் பெயர், செல்போன் எண் எழுதப்பட்டு இருந்தது. கூட்டத்தில் சிறுவர்-சிறுமிகள் காணாமல் போனால் அடையாளம் காண்பதற்கு இது பெரும் உதவியாக இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
கடற்கரை மணற்பரப்பில் இருந்த ராட்டினங்களில் விளையாடுவது, சிற்றுண்டி கடைகளில் சாப்பிடுவது என மக்கள் பொழுதை மகிழ்ச்சியுடன் கழித்தனர். குடும்பமாக வந்திருந்தவர்களில் பெரும்பாலானோர் சாப்பாடு கொண்டு வந்து வட்டமாக அமர்ந்து உணவு பரிமாறி சாப்பிட்டதையும் பார்க்க முடிந்தது.
இதேபோல், பெசன்ட்நகர், திருவான்மியூர் கடற்கரைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்கள் கடற்கரை மணற்பரப்பில் கோ-கோ, கண்ணாமூச்சி போன்ற விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர்.
கிண்டி சிறுவர் பூங்காவுக்கு காலை 8 மணி முதல் ஏராளமானோர் வேன்கள், மோட்டார் சைக்கிள்களில் கூட்டம் கூட்டமாக வந்தனர்.
பிளாஸ்டிக் தடையை அரசு அமல்படுத்தி இருப்பதால், கிண்டி சிறுவர் பூங்காவுக்குள் பிளாஸ்டிக் பைகளை கொண்டு செல்ல தடை விதித்து, அதற்கு மாற்றாக பேப்பர் கவர்களை வழங்கி, அதில் பொருட்களை வைத்து கொண்டு செல்ல வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
சிறுவர் பூங்காவில் இருந்த ஊஞ்சல், சறுக்கல்கள் உள்ளிட்ட விளையாட்டு சாதனங்களில் குழந்தைகள் ஏறி உற்சாகமாக விளையாடினார்கள். பூங்காவில் கூண்டுக்குள் இருந்த வன விலங்குகள், பறவைகளை கண்டு ரசித்தனர். பிற்பகல் நேரத்தில் குடும்பத்துடன் வந்திருந்தவர்கள் மரங்களின் நிழலில் இளைப்பாறி, தாங்கள் கொண்டு வந்திருந்த உணவுகளை பரிமாறி உண்டு மகிழ்ந்தனர்.
வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு சென்னை மட்டுமல்லாது திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் இருந்து பஸ், வேன், கார், மோட்டார் சைக்கிள்களில் ஏராளமானோர் வந்திருந்தனர். வழக்கத்தைவிட முன்னதாகவே வண்டலூர் உயிரியல் பூங்கா நேற்று திறக்கப்பட்டது. பஸ், வேன், கார், மோட்டார் சைக்கிள்களை நிறுத்துவதற்கு தனி இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது.
உயிரியல் பூங்காவில் உள்ள குரங்குகள், புலி, சிங்கம், யானை, நீர் யானை, ஒட்டகச்சிவிங்கி உள்ளிட்ட வன விலங்குகளை மக்கள் கண்டு மகிழ்ந்தனர். பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் வனத்துறை அதிகாரிகள் சிறப்பாக செய்து இருந்தனர்.
சென்னை நுங்கம்பாக்கம், கதீட்ரல் சாலையில் உள்ள செம்மொழி பூங்கா, கிண்டி காந்தி மண்டபம், காமராஜர் நினைவு மண்டபம் மற்றும் மாநகராட்சி பூங்காக்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. சிலர் திரையரங்குகள், தனியார் பொழுதுபோக்கு பூங்காக்களிலும் பொழுதை கழித்தனர்.
சென்னை தீவுத்திடலில் தமிழக அரசின் சார்பில் நடைபெற்று வரும் சுற்றுலா பொருட்காட்சியிலும் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர். குடும்பத்துடனும், உறவினர்களுடனும் பொருட்காட்சியை பார்க்க வந்திருந்தவர்கள், அங்கிருந்த பல்வேறு வகையான ராட்டினங்களில் ஏறி குதூகலம் அடைந்தனர்.
மாமல்லபுரத்திலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கும் ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர்.
கடற்கரை, சுற்றுலா தலங் களை போலவே கோவில்களிலும் நேற்று மக்கள் கூட்டம் காணப்பட்டது. சென்னையில் உள்ள பல்வேறு வழிபாட்டு தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
கடற்கரை, சுற்றுலாதலங்கள், பூங்காக்கள் மற்றும் கோவில்களுக்கு எளிதில் சென்று வரும் வகையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. அதன் மூலம் மக்கள் எவ்வித சிரமும் இல்லாமல் பயணத்தை எளிதாக மேற்கொண்டனர்.
சென்னையைப் போல் திருச்சி, ஈரோடு, மதுரை, தஞ்சை, கன்னியாகுமரி போன்ற ஊர்களிலும் மக்கள் முக்கிய சுற்றுலா தலங்களுக்கு சென்று காணும் பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். #KaanumPongal
தமிழகத்தில் தற்போது பொங்கல் பண்டிகையை யொட்டி தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சுற்றுலா இடங்களுக்கு சென்று வருகின்றனர். மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தற்போது தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
இன்று காணும் பொங்கல் என்பதால் குடும்பத்துடன் பல்வேறு இடங்களுக்கு பொதுமக்கள் சென்று வந்தனர். கொடைக்கானலில் கடும் குளிர் நிலவியபோதும் கூட்டம் அலைமோதியது. இதனால் முக்கிய சுற்றுலா இடங்களான மோயர்பாயிண்ட், தூண்பாறை, கோக்கர் ஸ்வாக், பைன்பாரஸ்ட், குணாகுகை, பிரையண்ட் பூங்கா ஆகிய இடங்களில் மக்கள்வெள்ளம் அலைமோதியது.
மேலும் நகரின் மத்தியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் ஆனந்தமாக படகுசவாரி செய்தனர். மேலும் சைக்கிள் மற்றும் குதிரை சவாரி செய்து சிறுவர்கள் மகிழ்ந்தனர்.
நேற்று மதியம் முதல் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. இன்றும் வாகனங்கள் அதிகளவில் வந்ததால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் விரைந்து சென்று சீரமைத்தனர். நீண்டநாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் வருகையால் வியாபாரிகள், விடுதி உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சென்னை தீவுத்திடலில் அரசு பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 9-ந் தேதி தொடங்கிய பொருட்காட்சியில் சிறுவர்களை கவரும் விளையாட்டு சாதனங்கள், மத்திய, மாநில அரசுகளின் அரங்குகள், நூற்றுக்கணக்கான ஸ்டால்கள் இடம் பெற்று உள்ளன.
தாமதமாக தொடங்கப்பட்ட பொருட்காட்சி பொங்கல் விடுமுறையை யொட்டி களைகட்டி வருகிறது. கடந்த சில நாட்களாக கூட்டமின்றி காணப்பட்ட பொருட்காட்சியில் பொங்கல் முதல் கூட்டம் கூடியது.
நேற்று மாட்டு பொங்கல் ஒரே நாளில் மட்டும் 60 ஆயிரம் பேர் பொருட்காட்சியை கண்டுகளித்தனர். இதுவரையில் 1 ¼ லட்சம் பேர் பொருட்காட்சிக்கு வந்துள்ளனர்.
இன்று காணும் பொங்கலையொட்டி கூட்டம் நிரம்பி வழிகிறது. குடும்பம், குடும்பமாக பொருட்காட்சிக்கு படையெடுக்க தொடங்கினர். புதுமண தம்பதிகள், காதல் ஜோடிகள் என பிற்பகல் முதல் கூட்டம் கூட தொடங்கியது. இன்று சுமார் 1 லட்சம் பேர் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொருட்காட்சியில் சிறுவர்களை கவரும் ராட்டினங்கள், விளையாட்டு சாதனங்கள் அதிகம் உள்ளதால் அதில் சிறுவர்களை அமர்த்தி பெற்றோர்கள் மகிழ்வித்தனர். எப்போதும் போல சோலா பூரி, பஜ்ஜி, அப்பளம் போன்ற உணவு கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பொருட்காட்சி இன்னும் 2 மாதம் வரை நடைபெறுகிறது. #KaanumPongal
காணும் பொங்கல் கொண்டாட்டங்கள் இன்று தமிழகம் முழுவதும் களை கட்டியது.
சென்னையில் மெரினா கடற்கரையில் மக்கள் வெள்ளமென திரண்டனர். காலையில் இருந்தே கார் மற்றும் மோட்டார்சைக்கிள்களில் கடற்கரையை நோக்கி மக்கள் படையெடுத்த வண்ணம் இருந்தனர். சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து மினி லாரிகளிலும் மக்கள் வந்திருந்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கலையொட்டி மெரினாவில் மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடி வருகிறார்கள்.
இந்த ஆண்டும் வழக்கமான உற்சாகத்துடன் காணும் பொங்கல் கொண்டாடப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் மெரினாவில் திரண்டனர்.
தங்களது வீடுகளில் இருந்து சமைத்து எடுத்து வந்திருந்த உணவுகளை கடற்கரை மணலில் ஒன்றாக அமர்ந்து அனைவரும் சாப்பிட்டனர்.
சிறுவர்களும் பெரியவர்களும் பாரபட்சமின்றி கூடி விளையாடி மகிழ்ந்தனர். கடற்கரை மணலில் பலர் கபடி விளையாடினார்கள்
கண்ணாமூச்சி ஆட்டம் மற்றும் பந்து எறிதல் உள்ளிட்ட விளையாட்டுகளிலும் ஈடுபட்டனர். இதனால் மெரினா கடற்கரையில் உற்சாகம் கரைபுரண்டது.
காணும் பொங்கலையொட்டி சென்னை மாநகரம் முழுவதும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில், கூடுதல் ஆணையர்கள், கமிஷனர்கள் மகேஸ்குமார், தினகரன், இணை கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆகியோரது மேற்பார்வையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
உழைப்பாளர் சிலை மற்றும் காந்தி சிலை அருகில் தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையிலுள்ள சர்வீஸ் சாலை நுழைவு வாயில்களில் 11 காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவசர மருத்துவ உதவிக்காக 7 ஆம்புலன்ஸ் வாகனங்களில் மருத்துவக் குழுவினர் மற்றும் மீட்புப் பணிக்காக தீயணைப்பு வீரர்கள் அடங்கிய 2 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது. மீட்புப் பணிக்காக மோட்டார் படகுகள் மற்றும் 140 நீச்சல் தெரிந்த நபர்கள் தயார் நிலையில் இருந்தனர்.
மணல் பரப்பில் 13 உயர்கோபுரங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு கோபுரத்திலும் 3 போலீசார் பணியமர்த்தப்பட்டிருந்தனர். அங்கிருந்து பைனாகுலர் மூலம் கண்காணித்து வாக்கி-டாக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன. கட்டுப்பாட்டறைக்கு வாக்கிடாக்கி மூலமும் வாட்சப் குழுவிலும் உடனுக்குடன் தகவல்கள் வழங்கினர். 3 பறக்கும் பொம்மை விமானத்தில் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. தடுப்பு வேலிகளை அமைத்து போலீசார் கண்காணித்தனர். ஆயுதப்படையின் குதிரைப் படையுடன் கூடுதலாக 16 குதிரைகள் மூலமும் கண்காணிக்கப்பட்டது.
கடற்கரைக்கு பெற்றோருடன் வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போனால் உடனடியாக மீட்பதற்காக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. அடையாள அட்டையில் குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர் மற்றும் பெற்றோர் கைபேசி எண் ஆகியவற்றை எழுதி, குழந்தைகளின் கைகளில் கட்டப்பட்டது.
இதே போன்று பொதுமக்கள் அதிகம் கூடும் மற்ற இடங்களான கிண்டி சிறுவர் பூங்கா, தீவுத்திடலில் உள்ள தமிழக அரசு சுற்றுலா பொருட்காட்சி, கேளிக்கை பூங்காக்கள் மற்றும் இதர இடங்களிலும் தற்காலிக காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன. #KaanumPongal