என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karti Chidambaram"

    • பல்வேறு கருத்துகள் ஊடகங்களில் வந்துகொண்டு இருக்கின்றன.
    • இந்த கூட்டணி, விரும்பி வந்தது போல் தெரியவில்லை.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வருகிற 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்காக அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்துள்ளது. இதனை சென்னை வந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தெரிவித்தார். அப்போது அமித்ஷா, தேர்தலுக்கு பின்னர் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்றார். இது மிகப்பெரிய விவாதப்பொருளாகியது.

    இதுகுறித்து விளக்கம் அளித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கூட்டணி அரசு என மத்திய மந்திரி அமித்ஷா கூறவில்லை. அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி, தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்று தான் சொன்னார். வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி ஜெயித்தாலும், ஆட்சியில் பங்கு இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்தார். இருப்பினும் இதுபற்றி பல்வேறு கருத்துகள் ஊடகங்களில் வந்துகொண்டு இருக்கின்றன.

    இதனால் கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து கட்சி தலைமையின் அனுமதி இன்றி கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று நிர்வாகிகளுக்கு அ.தி.மு.க. கட்டுப்பாடு விதித்துள்ளது.

    இந்த நிலையில், அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையேயான கூட்டணி, துப்பாக்கி முனையில் கடத்திக் கொண்டு போய் கட்டாயத் திருமணம் செய்தது போன்றதுதான் என்று சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் கூறியதாவது:- இந்த கூட்டணி, விரும்பி வந்தது போல் தெரியவில்லை. அ.தி.மு.க.வின் அடிமட்ட தொண்டர்களிடம் பேசியபோது, அவர்கள் இக்கூட்டணியை விரும்பவில்லை என்பதை உணர முடிந்தது என்றார். 

    • தங்கள் பள்ளிகளில் தமிழில் பாடம் நடத்த எத்தனை ஆசிரியர்கள் உள்ளனர் என்ற விவரங்களை உத்தரப்பிரதேச அரசு வெளியிடுமா?
    • எத்தனை மாணவர்கள் தமிழை ஒரு மொழி விருப்பமாகப் படித்துள்ளனர்?.

    தேசிய கல்விக்கொள்கையில் இடம்பெற்ற மும்மொழிக் கொள்கையை இந்து திணிப்பு என தமிழக அரசு குற்றம்சாட்டி வருகிறது. இதனால் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ.2000 கோடி வரையிலான கல்வி நிதியை மத்திய அரசு தர மறுத்துவிட்டது.

    இந்நிலையில் மொழியை வைத்து குறுகிய அரசியல் செய்வதாக மு.க. ஸ்டாலினை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் விமர்சித்து வருகிறார்.

    செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில் பேசிய யோகி ஆதித்யநாத், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் மொழி சர்ச்சையை குறுகிய அரசியல் நலன்களுக்காக உருவாக்குகிறார்கள். இதன்மூலம் அவர்கள் தங்கள் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம், ஆனால் இளைஞர்களின் வேலைவாய்ப்பைத் தடுக்கிறார்கள்.

    உ.பி.யில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி மொழிகளைக் கற்பிக்கிறோம், அதனால் உ.பி. சிறியதாகிவிட்டதா?. மாறாக உத்தர பிரதேசத்தில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில் யோகி ஆதித்யநாத் கருத்துக்கு காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தங்கள் பள்ளிகளில் தமிழில் பாடம் நடத்த எத்தனை ஆசிரியர்கள் உள்ளனர் என்ற விவரங்களை உத்தரப்பிரதேச அரசு வெளியிடுமா?.

    எத்தனை மாணவர்கள் தமிழை விருப்பம மொழிப் பாடமாக படித்துள்ளனர்?. தமிழ்நாட்டில் மாணவர்கள் கட்டாயமாக இந்தி கற்க வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாட்டிற்கு வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் யாரும் தமிழ் குறித்த முன் அறிவு இல்லாமல் வருகிறார்கள். இந்தி திணிப்பை நிறுத்துங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

    முன்னதாக யோகி ஆதித்யநாத்தின் முந்தைய விமர்சனத்துக்கு பதிலளித்திருந்த முதல்வர் ஸ்டாலின், "எந்த மொழிக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல. மொழி திணிப்பையும் ஆதிக்கத்தையுமே நாங்கள் எதிர்க்கிறோம். வாக்கு வங்கி அரசியலுக்காக பேசவில்லை, இது கண்ணியம் மற்றும் நீதிக்கான போராட்டம். வெறுப்பு குறித்து யோகி ஆதித்யநாத் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்" என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • மோடி அரசின் ஆதரவோடு அதானி இந்த ஊழலை நடத்திக்கொண்டிருக்கிறார்.
    • பொதுமக்களின் பணம் சம்பந்தப்பட்டு இருக்கிறது.

    புதுடெல்லி

    பாராளுமன்றத்தில் நேற்று அதானி குழும விவகாரம் பெரும் புயலைக் கிளப்பியது. எம்.பி.க்களின் அமளியால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டைச்சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளியே வந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

    அது வருமாறு:-

    கனிமொழி (தி.மு.க. எம்.பி.):- அதானி குழுமத்தின் நிலையால் பொதுத்துறைகளில் சாமானிய மக்கள் முதலீடு செய்த பணம் என்ன ஆனது என நாடாளுமன்ற இரு அவைகளிலும் எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினோம். ஆனால் பா.ஜனதா இதை காதில் வாங்கவில்லை. அவையை ஒத்தி வைத்துவிட்டனர். நாங்கள் கூட்டுக்குழு விசாரணை கேட்டு இருக்கிறோம். தமிழக முதல்-அமைச்சரும் இதை வலியுறுத்துகிறார். நிச்சயம் நாங்கள் இதைத் தொடர்ந்து வலியுறுத்துவோம்.

    கார்த்தி ப.சிதம்பரம் (காங்கிரஸ் எம்.பி.):- வெளிப்படையான, தரமான சந்தை பரிமாற்றம் உள்ள ஒரு நாட்டில் வெளிநாட்டு அமைப்பு சில கருத்துகளை சொன்னால் அந்த நாட்டின் பொருளாதாரத்தை கவனிக்கும் மந்திரியோ, அதிகாரியோ மக்களை சந்தித்து நாட்டின் நிலை என்ன? என்று வெளிப்படையாக சொல்லி இருக்க வேண்டும். சாதாரண மக்களின் பணம் பாதுகாப்பாக இருக்கிறதா? இல்லையா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும். பொதுத்துறைகளை நிர்வகிக்கும் செபி, ரிசர்வ் வங்கி போன்ற அமைப்புகளும் இதில் சம்பந்தப்பட்டு உள்ளன. இதையெல்லாம் பற்றி அரசு ஒரு வார்த்தைகூட பேசவில்லை. மக்கள் பிரச்சினைகளை பேசுவதற்கு எதிர்க்கட்சிகளுக்கும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அவையை ஒத்திவைத்து விட்டனர். இதுபற்றி முதலில் அரசு பதில் அளிக்கட்டும். அது திருப்தியா? இல்லையா? என்பதை பார்த்துவிட்டு அடுத்தகட்ட நடவடிக்கைக்கு செல்வோம்.

    வெளிநாட்டு அமைப்பு சொல்வதாலேயே அது உண்மை என ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லித்தானே ஆக வேண்டும்?. இதில் பொதுமக்களின் பணமும் சம்பந்தப்பட்டு இருக்கிறது. அது பத்திரமாக இருக்கிறதா என்பதையும் விளக்க வேண்டும்.

    ஜோதிமணி (காங்கிரஸ் எம்.பி.):- அதானி குழுமம் வீழ்ச்சியால் அதில் முதலீடு செய்துள்ள எல்.ஐ.சி.யில் ஒரே நாளில் மக்கள் பணம் ரூ.30 ஆயிரம் கோடி நாசமாகியுள்ளது. மிகப்பெரிய அதிர்ச்சி அலைகளை இந்த பிரச்சினை ஏற்படுத்தி உள்ளது. மோடி அரசின் ஆதரவோடு அதானி இந்த ஊழலை நடத்திக்கொண்டிருக்கிறார். ராகுல்காந்தி கடந்த 8 ஆண்டுகளாக இது அதானி அரசு என்று சொல்வது தற்போது நிரூபணமாகி இருக்கிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • வாக்குப்பதிவு இயந்திரமானது நெட்வொர்க் தொடர்பு இன்றி தனித்து இயங்கக்கூடியது.
    • கட்சியின் நிலைப்பாடு வேறாக இருக்கலாம். அது குறித்து என்னால் பேச முடியாது.

    ராய்பூர்:

    சத்தீஸ்கா் மாநிலம் ராய்பூரில் காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85-வது மாநாடு நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில், தேர்தல், வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஜம்மு-காஷ்மீர் மாநில அந்தஸ்து உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பான 58 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் குறிப்பாக தேர்தல்களில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து 14-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள், தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் பலர் தேர்தல் ஆணையத்திடம் சந்தேகம் எழுப்பியதாகவும், ஆனால் அதற்கு தக்க பதில் கிடைக்கவில்லை என்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாக காங்கிரஸ் எம்.பி.யும், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

    மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் கூறியதாவது;

    "வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இது எனது தனிப்பட்ட கருத்து. கட்சியின் நிலைப்பாடு வேறாக இருக்கலாம். அது குறித்து என்னால் பேச முடியாது. நான் துவக்கத்தில் இருந்தே இதை வலியுறுத்தி வந்திருக்கிறேன். வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் நடந்த தேர்தல்களில் நாம் வெற்றியும் பெற்றிருக்கிறோம். வாக்குப்பதிவு இயந்திரமானது நெட்வொர்க் தொடர்பு இன்றி தனித்து இயங்கக்கூடியது. அதன் செயல்திறன் மீது எனக்கு முழுமையான நம்பிக்கை இருக்கிறது." இவ்வாறு கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்துள்ளார்.

    • காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ராகுல் காந்தி வந்திருந்தார்.
    • வீடியோக்களை பார்த்த பலரும் கருத்துக்களையும், விமர்சனங்களையும் பதிவிட்டவண்ணம் உள்ளனர்.

    புதுடெல்லி:

    அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததற்கும், அவரை எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ததற்கும் எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விஷயத்தில் ராகுல் காந்திக்கு ஆதரவாக எதிர்க்கட்சி தலைவர்கள் குரல் கொடுத்தனர்.

    நாடு முழுவதும் காங்கிரசார் போராடி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரமோ போராட்டங்களில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. அவரது செயலை பலரும் விமர்சித்தனர்.

    இந்நிலையில், பாராளுமன்றத்தில் இன்று காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ராகுல் காந்தி வந்திருந்தார். அவரை வரவேற்க காங்கிரஸ் எம்பிக்கள் பலரும் காத்திருந்தனர். எல்லோருக்கும் வரிசையாக கைகொடுத்தபடி உள்ளே சென்ற ராகுல் காந்தி, கைகொடுக்க காத்திருந்த கார்த்தி சிதம்பரத்தை கண்டுகொள்ளவில்லை என தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. இந்த வீடியோக்களை பார்த்த பலரும் கருத்துக்களையும், விமர்சனங்களையும் பதிவிட்டவண்ணம் உள்ளனர். 

    • ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் பெறப்பட்டதாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.
    • கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான 4 சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.

    புதுடெல்லி :

    காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் இருந்தபோது, ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் அன்னிய முதலீட்டை பெற ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    இதற்கு பிரதி உபகாரமாக ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் பெறப்பட்டதாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. அதில், சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததாக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்குகளில், சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி.யும், ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டார். பின்னர், ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

    நிலுவையில் உள்ள இந்த வழக்கில், கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான 4 சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.11 கோடியே 4 லட்சம் ஆகும். அவற்றில், கர்நாடக மாநிலம் கூர்க் மாவட்டத்தில் உள்ள அசையா சொத்தும் அடங்கும்.

    • எனக்கு மன உளைச்சல் எல்லாம் கிடையாது. நேரத்தை வீணடிக்கிறார்கள்.
    • அமலாக்கத்துறை என்பதெல்லாம் ஒன்றுமில்லை. எதிர்கட்சிகளை அடக்கும் இலாகா.

    கார்த்திப.சிதம்பரம் அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது :-

    அமலாக்கத்துறையால் கிடுக்கிப்பிடி அப்படி... இப்படி... என்கிறார்கள். அதெல்லாம் ஒன்றும் கிடையாது. எனக்கு 20 முறை சம்மன் அனுப்பி இருக்கிறார்கள். இது நேரத்தை வீணடிக்கவும், மன உளைச்சலை ஏற்படுத்தவும் தான். எனக்கு மன உளைச்சல் எல்லாம் கிடையாது. நேரத்தை வீணடிக்கிறார்கள்.

    அமலாக்கத்துறை என்பதெல்லாம் ஒன்றுமில்லை. எதிர்கட்சிகளை அடக்கும் இலாகா. அவ்வளவு தான். அவர்களுக்கு வேறு எந்த வேலையும் கிடையாது.

    • ராஜிவ் காந்தியுடன் 17 பேர் கொல்லப்பட்டதை மூடி மறைக்க கூடாது என்றார் கார்த்தி சிதம்பரம்
    • ராஜிவ் காந்தியின் முடிவு அவரே தேடி கொண்ட ஒன்று என்றார் வன்னி அரசு

    தி.மு.க.வின் தென் சென்னை பாராளுமன்ற உறுப்பினரான தமிழச்சி தங்கபாண்டியன் ஒரு நேர்காணலில் "சரித்திர புகழ் வாய்ந்த தலைவர் ஒருவருடன் உணவருந்த வேண்டும் என்றால், விடுதலை புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரனுடன் உணவு அருந்த விரும்புகிறேன். அப்போது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்காக அவரிடம் மன்னிப்பும் கேட்பேன்" என கருத்து தெரிவித்தார்.

    இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், தனது அதிகாரபூர்வ எக்ஸ் சமூக வலைதள கணக்கில் பதிவிட்டார்.

    அதில் அவர் கூறியதாவது:

    பிரபாகரனை பாராட்டி பேசுவது இந்திய காங்கிரஸ் கட்சியினருக்கு இசைவான கருத்து அல்ல. ராஜிவ் காந்தியும், அவருடன் 17 பேரும் விடுதலை புலிகளால் கொல்லப்பட்ட படுகொலை சம்பவத்தை மூடி மறைத்து பிரபாகரனின் புகழ் பாட நினைப்பது தவறு. இந்துத்துவா தேசியவாதம் போல்தான் பிரபாகரனின் தமிழ் தேசிய சித்தாந்தங்களும் மிக சிறுமையானது.

    இவ்வாறு கார்த்தி சிதம்பரம் பதிவிட்டார்.

    இதற்கு பதிலளிக்கும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

    அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

    எந்த விதத்திலும் சமரசம் செய்து கொள்ளாமல் புத்த, சிங்கள ஆதிக்க நடவடிக்கைகளுக்கு எதிராகவும், சிறுபான்மை தமிழ் சமூகத்திற்கு ஆதரவாகவும் போராடிய பெரும் தலைவர், மேதகு பிரபாகரன்.

    சனாதன இந்துத்துவம் ஆதிக்க மனப்பான்மையை வலியுறுத்துகிறது. மேதகு பிரபாகரனின் அரசியல், இந்துத்துவா சித்தாந்தத்திற்கு எப்போதுமே ஆதரவு அளித்ததில்லை.

    திரு. ராஜிவ் காந்தியின் படுகொலையை காரணம் காட்டி எத்தனை நாட்கள் தமிழ் மக்களை நீங்கள் இழிவு படுத்துவீர்கள்? தமிழ் ஈழத்தில் தமிழர்கள் சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்து வருகிறார்கள். தங்கள் நிலைப்பாட்டில் ஒரு மாற்றத்தை காங்கிரஸ் கொண்டு வர வேண்டிய தருணம் இது என்பதை உணருங்கள்.

    சிறுபான்மை தமிழர்களுக்கு ஆதரவாக நின்றதால் மேதகு பிரபாகரனுக்கும் விடுதலை புலிகளுக்கும் திருமதி இந்திரா காந்தி ஆதரவு அளித்தார்.

    ராஜிவ் காந்தியின் படுகொலையை யாரும் கொண்டாடவில்லை. அவரது முடிவு அவரே தேடி கொண்ட ஒன்றாகும்.

    மேதகு பிரபாகரனுக்கு ஆதரவு அளிப்பதுதான் இந்துத்துவாவை எதிர்ப்பதற்கு ஒப்பாகும்.

    இவ்வாறு வன்னி அரசு பதிவிட்டுள்ளார்.

    தி.மு.க.வுடன் தமிழகத்தில் ஒரே கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் முக்கிய பிரமுகர்களின் இந்த சித்தாந்த கருத்து மோதல் அரசியல் விமர்சகர்களால் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது.

    • 5 மாநில தேர்தல் நடந்ததால் சற்று தொய்வாக இருந்த நிலையில் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
    • தலைவர் பதவிக்காக முயற்சிக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியில் டெல்லியில் காய் நகர்த்தி வருகிறார்கள்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் தலைவர் பதவியை பிடிக்க பலர் முயற்சி செய்தும் மேலிடம் இன்னும் எந்த சிக்னலும் காட்டவில்லை.

    ஆனால் அனைவரையும் அரவணைத்து இணக்கமாக செல்லும் உணர்வு படைத்தவரை தலைவராக நியமிக்க மேலிடம் யோசித்து வருவதாக கூறப்படுகிறது.

    முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கார்த்தி சிதம்பரம், விஷ்ணுபிரசாத், ஜோதி மணி ஆகிய நால்வரில் ஒரு வரை நியமிக்கலாம் என்றார். 5 மாநில தேர்தல் நடந்ததால் சற்று தொய்வாக இருந்த நிலையில் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.


    தலைவர் பதவிக்காக முயற்சிக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியில் டெல்லியில் காய் நகர்த்தி வருகிறார்கள். தலைவர் பதவி மீது தனக்கு ஆசையாக இருப்பதாக வெளிப்படையாகவே கார்த்தி ப.சிதம்பரம் கூறினார்.

    நேற்று முன்தினம் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கேவை சந்தித்து பேசினார். அப்போது தனக்கு தலைவர் பதவி தந்தால் சிறப்பாக செய்வேன் என்று தெரிவித்துள்ளார். கர்நாட காவில் டி.கே.சிவகுமாரும், தெலுங்கானாவில் ரேவந்த் ரெட்டியும் தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கட்சி நடத்தியதால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. அதேபோல் தமிழ்நாட்டின் தலைமை பதவி எனக்கு வழங்கினால் தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து காங்கிரஸ் ஆட்சிக்கு வர உழைக்க தயாராக இருப்பதாக கார்கேவிடம் உறுதியளித்துள்ளார். அதை கேட்டுக் கொண்ட கார்கே பார்க்கலாம் என்று கூறியதாக கூறப்படுகிறது.

    • தன் மீதான குற்றச்சாட்டுகளை கார்த்தி சிதம்பரம் மறுத்தார்.
    • என் மீது 3 வகையான வழக்குகள் உள்ளன. அவை மிகவும் போலியானது.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடந்த 2011-ம் ஆண்டு மத்திய மந்திரியாக இருந்தபோது அவரது மகன் கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கை பயன்படுத்தி சட்ட விரோதமாக 263 சீனர்களுக்கு விசா வழங்கியதாகவும், இதற்காக ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாகவும் அவர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து இருந்தது.

    பஞ்சாப்பில் டி.எஸ்.பி.எல். எனும் நிறுவனத்தின் சார்பில் மின் நிலைய பணிகளில் ஈடுபடுவதற்காக 263 சீனர்களுக்கு விதிகளை மீறி விசா பெற்றுதர அந்த நிறுவனம் கார்த்தி சிதம்பரத்திற்கும், அவரது ஆடிட்டர் பாஸ்கர் ராமன் என்பவரும் லஞ்சம் கொடுத்ததாக சி.பி.ஐ. தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

    இதுதொடர்பாக பல்வேறு இடங்களில் சோதனையும் நடத்தப்பட்டது. தன் மீதான குற்றச்சாட்டுகளை கார்த்தி சிதம்பரம் மறுத்தார்.

    இந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ.யின் முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

    இந்த நிலையில் பண மோசடி வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டும் என்று அவருக்கு அனுப்பியுள்ள சம்மனில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ஆனால் அவர் இன்று அமலாக்கத்துறை முன்பு ஆஜராகவில்லை. தற்போது பாராளுமன்ற கூட்டத்தொடரில் தான் பங்கேற்று இருப்பதாக அவர் அமலாக்கத்துறையிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் கார்த்தி சிதம்பரம் கூறும்போது, "என்மீது 3 வகையான வழக்குகள் உள்ளன. அவை மிகவும் போலியானது. எனது வக்கீல்கள் குழுவால் இது கையாளப்படும்" என்றார்.

    • இருவரும் திரவ நிலையில் எதையோ வீசியதாக கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்தார்.
    • பாராளுமன்ற சபை வளாகத்துக்குள் பாதுகாவலர்கள் யாரும் இல்லை என ஆதிரஞ்சன் சவுத்ரி எம்.பி. கூறினார்.

    பாராளுமன்றத்தில் 2 பேர் நுழைந்த சம்பவம் குறித்து கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறுகையில், "பாராளுமன்றத்தில் உள்ள பார்வையாளர் மாடத்தில் இருந்து 2 பேர் குதித்தனர். அவர்கள் இருவரும் திரவ நிலையில் எதையோ வீசினார்கள். அது விழுந்து மஞ்சள் நிற புகையாக வெளிப்பட்டது. அப்போது கண்களில் எரிச்சல் ஏற்பட்டது" என்றார்.

    ஆதிரஞ்சன் சவுத்ரி எம்.பி. கூறுகையில், "பாராளுமன்ற சபை வளாகத்துக்குள் பாதுகாவலர்கள் யாரும் இல்லை. இதனால் எம்.பி.க்களே மர்ம மனிதர்கள் இருவரையும் பிடித்தனர். பின்னர் அவர்கள் சபை காவலர்களை வரவழைத்து அவர்களிடம் 2 பேரையும் ஒப்படைத்தனர்" என்றார்.

    • கே.எஸ்.அழகிரி மாற்றப்பட்டால் தனக்குத்தான் தலைவர் பதவி என்று தனது ஆதரவாளர்களிடம் கூறியிருக்கிறார்.
    • தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் கேட்டபோது, தலைவரை நியமிப்பதற்கு முன்பு சில நடைமுறைகளை கட்சி மேலிடம் செய்யும்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் பதவிக்காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து கடந்த ஒரு ஆண்டாகவே தலைவர் பதவிக்காக பலர் டெல்லியில் போராடி ஓய்ந்து விட்டார்கள். இதில் தொடர்ந்து தீவிரமாக இருப்பவர் கார்த்தி சிதம்பரம் எம்.பி.

    எனக்கு தலைவர் பதவி மீது நீண்ட நாள் ஆசை. எனக்கு தலைவர் பதவியை கொடுத்தால் மகிழ்ச்சி அடைவேன். கட்சியையும் வளர்த்து காட்டுவேன் என்று வெளிப்படையாகவே பேசி வருகிறார்.

    மாநிலத்தில் வெளிப்படையாக பேசுவதுபோல் டெல்லியில் முகாமிட்டு மேலிட தலைவர்களை சந்தித்து எப்படியாவது தலைவர் பதவியை பெற்றே தீருவது என்பதில் தீவிரமாக உள்ளார்.

    அவருக்கு ஆதரவாக அவரது தந்தையும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரமும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    கடந்த 11-ந்தேதி டெல்லியில் பிரியங்கா காந்தியையும் கார்த்தி ப.சிதம்பரம் சந்தித்து பேசியிருக்கிறார். அவரிடமும் தலைவர் பதவி மீதான தனது விருப்பத்தை தெரிவித்து இருக்கிறார். ஏற்கனவே ராகுல், மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரையும் சந்தித்து பேசி இருக்கிறார்.

    தனக்கு எம்.பி. பதவியும் வேண்டாம். வேறு எந்த பதவியும் வேண்டாம். தலைவர் பதவி மட்டும் போதும். அது தனது நீண்ட நாள் ஆசை என்பதையும் தெரிவித்துள்ளார்.

    மேலும் வருகிற பாராளுமன்ற தேர்தலில், 2026 சட்டமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு பக்கபலமாக நின்று அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் தயார் என்று உத்தரவாதம் அளித்துள்ளார். எனவே கே.எஸ்.அழகிரி மாற்றப்பட்டால் தனக்குத்தான் தலைவர் பதவி என்று தனது ஆதரவாளர்களிடம் கூறியிருக்கிறார்.

    இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் கேட்டபோது, தலைவரை நியமிப்பதற்கு முன்பு சில நடைமுறைகளை கட்சி மேலிடம் செய்யும். அதாவது தமிழகம் உள்பட சில மாநிலங்களுக்கு இன்னும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படவில்லை.

    முதலில் பொறுப்பாளரை நியமிப்பார்கள். அவர் மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய நிர்வாகிகளுடன் கலந்து பேசி தலைவர் பதவிக்கு தகுதியானவர்கள் பெயர் பட்டியலை தயார் செய்து மேலிடத்துக்கு வழங்குவார். அதை வைத்து தான் புதிய தலைவரை தேர்வு செய்வார்கள்.

    இதற்கிடையில் சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்த 4 மாநிலங்களிலும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர்களை தேர்வு செய்து அறிவிக்க வேண்டியது உள்ளது. எனவே இன்னும் நிறைய காலஅவகாசம் எடுப்பார்கள். அதற்குள் பாராளுமன்ற தேர்தல் வேறு நெருங்கி வருகிறது. எனவே டெல்லி மேலிடம்தான் முடிவு செய்யும் என்றார்கள்.

    ×