என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kerala"

    • மாவட்ட மார்க்சிஸ்ட் செயலாளருக்கு, மேயர் கடிதம் எழுதியதாக புகார்.
    • மாநகராட்சிக்குள் பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கவுன்சிலர்கள் மோதல்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு, திருவனந்தபுரம் மாநகராட்சியில் பணி நியமனம் வழங்க மேயர் ஆர்யா ராஜேந்திரன் சிபாரிசு கோரியதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக நவம்பர் 1ஆம் தேதி கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் அனவூர் நாகப்பனுக்கு மேயர் ஆர்யா ராஜேந்திரன் எழுதிய கடிதம் ஊடகங்களில் வெளியானது.

    திருவனந்தபுரம் மாநகராட்சியின் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் 74 மருத்துவர்கள், 66 பணியாளர்கள் செவிலியர்கள் மற்றும் 64 மருந்தாளுநர்கள் பணியிடங்கள் உள்பட 295 தற்காலிக பணியிடங்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் பெயரை சிபாரிசு செய்யும்படி அதில் மேயர் கோரியிருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த கடிதம் கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. திருவனந்தபுரம் மாநகராட்சி முன்பு பாஜக மற்றும் இளைஞர்கள் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்ததுடன் கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நீடித்தது. 


    மேயரின் கடிதம் தொடர்பாக, திருவனந்தபுரம் மாநகராட்சிக்குள் பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கவுன்சிலர்கள் இடையே மோதல் வெடித்தது. ஒருவரை ஒருவர் தாக்கிய நிலையில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

    இந்த நிலையில், தான் அந்த கடிதத்தை அனுப்பவில்லை, கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் திருவனந்தபுரத்தில் நான் இல்லை, இந்த விவகாரம் பற்றி முறையான விசாரணை நடத்தப்படும் என்று மேயர் ஆர்யா ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். 

    • முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
    • ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையிலான மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் அரசுக்கும், ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே  கடும் பனிப்போர் நிலவி வருகிறது. பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர் பதவிகளில் அரசு நியமிப்பவர்களுக்கு கவர்னர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுதான் இதற்கு காரணம். இதையடுத்து, துணைவேந்தர் நியமனங்களில் ஆளுநரின் அதிகாரத்தை குறைக்கும் மசோதா, இரு மாதங்களுக்கு முன் கேரள சட்டசபையில் கொண்டு வரப்பட்டது. ஆனால், அந்த மசோதாவில் இதுவரை ஆளுநர் ஆரிப் கையெழுத்து போடவில்லை.

    இதையடுத்து ஆளுநரை பல்கலைக் கழக வேந்தர் பதவியிலிருந்து நீக்க அவசர சட்டம் கொண்டு வர கேரள அரசு தீர்மானித்தது. இதுதொடர்பாக முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி அவசர சட்டம் தயாரிக்கப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    ஆளுநரை பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து மாற்றி, அந்த பதவியில் பிரபல கல்வியாளர்களை நியமிப்பதற்கான அவசரச் சட்டம், ஆளுநர் ஆரிப் முகமது கானின் ஒப்புதலுக்காக வந்துள்ளதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

    எனினும், இந்த விவகாரத்தில் ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையிலான மோதல் இன்னும் முடிவுக்கு வராததால், ஆளுநர் உடனடியாக இந்த அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்து பிரகடனம் செய்வது சாத்தியமில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    • சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து வெளியில் கூறிய பின்னரே வெளிச்சத்திற்கு வந்தது.
    • பத்தனம்திட்டா போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவின் பத்தனம்திட்டாவில் 45 வயது நபர் ஒருவரின் மனைவி நீண்ட காலத்திற்கு முன்பு குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றுள்ளார். அதன்பின்னர் அந்த நபர் மனநலம் பாதித்த மகளை வளர்த்து வந்துள்ளார். அந்த சிறுமி 13 வயது நிரம்பிய நிலையில், பல சந்தர்ப்பங்களில் மகள் என்றும் பாராமல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 2020ல் இந்த கொடுமை நடந்துள்ளது. சிறுமி தனது பக்கத்து வீட்டுக்காரர்களிடமும் தனது பள்ளியில் உள்ள ஆசிரியர்களிடமும் இதைப் பற்றி கூறிய பின்னரே வெளிச்சத்திற்கு வந்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மருத்துவ பரிசோதனையில் சிறுமி அவரது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. பல்வேறு பிரிவுகளில் அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு, பத்தனம்திட்டா போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில், அந்த சிறுமியின் தந்தை மீதான குற்றச்சாட்டு நிரூபணமானது. இதையடுத்து அவரை குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம், அவருக்கு 107 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 4 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

    சில பிரிவுகளுக்கான தண்டனைகளை ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என்பதால், குற்றவாளி மொத்தம் 67 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்.

    • சரியான சமயத்தில் தோழி தடுத்திருக்காவிட்டால் தலையில் வெட்டு விழுந்து உயிருக்கே ஆபத்தாகியிருக்கும்
    • போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளியை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    கொச்சி:

    கேரளாவின் கொச்சி நகரில் இன்று பட்டப்பகலில் பெண்ணை கத்தியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கொச்சி ஆசாத் சாலையில் இன்று காலை 11 மணியளவில் ஒரு வாலிபருக்கும், இரண்டு பெண்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது அந்த வாலிபர் மறைத்து வைத்திருந்த வெட்டுக்கத்தியை எடுத்து திடீரென ஒரு பெண்ணை நோக்கி வெட்டுவதற்கு ஓங்கி உள்ளார். அப்போது உடனிருந்த மற்றொரு பெண் லாவகமாக கையால் தடுத்துள்ளார். இதில் அந்த பெண்ணுக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சரியான சமயத்தில் தடுத்திருக்காவிட்டால் அந்த பெண்ணின் தலையில் வெட்டு விழுந்து உயிருக்கே ஆபத்தாகியிருக்கும்.

    பாதிக்கப்பட்ட பெண், உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தப்பி ஓடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. குற்றவாளி விட்டுச் சென்ற கத்தியை போலீசார் கைப்பற்றினர். அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளியை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    • கொட்டாரக்கரை சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. அலுவலகத்தை தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் திறந்து வைத்தார்.
    • உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஏழை குடும்பத்திற்கு சோலார் விளக்குகள் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரை சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. அலுவலகத்தை கேரள மாநில அமைப்பாளர் முருகேசன் தலைமையில் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் திறந்து வைத்தார்.

    அவருக்கு புனலூர் எல்கையில் கேரள மாநில தி.மு.க. சார்பில் மேளதாளத்துடன் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.கொல்லம் கிழக்கு மாவட்ட செயலாளர் ரிஜுராஜ் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியின் போது ஏழை குடும்பத்திற்கு உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சோலார் விளக்குகள் வழங்கப்பட்டது.

    பின்னர் ஊர்வலமாக சென்று கொட்டாரக்கரை நகராட்சி அலுவலகம் வரை சிறப்பு பேரணி நடத்தப்பட்டது.கேரள மாநிலம் புனலூரைத் தொடர்ந்து கொட்டார கரையில் தி.மு.க. அலுவலகம் திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கேரள நிர்வாகிகள் அஜ்மல், சரவணன், பிச்சை பிலால் ரினு சியாம்லால், செய்யது, அஜித் வினேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பா.ஜனதா மற்றும் மாற்றுக் கட்சியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

    நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர்கள் ரஹீம், சாமிதுரை, தமிழ்ச்செல்வி, ஒன்றிய செயலாளர்கள் சீனித்துரை, ரவிசங்கர், அழகு சுந்தரம், செங்கோட்டை நகரச் செயலாளர் வெங்கடேசன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ஹக்கீம், முத்துவேல், பேரூர் செயலாளர்கள் சுடலை, சங்கர் என்ற குட்டி முத்து மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் வேலுச்சாமி, முருகன் அமைப்பாளர் முத்துராமலிங்கம்,உதயநிதி நற்பணி மன்ற மாவட்ட துணை செயலாளர் சிவ அருணன் ஊராட்சி மன்ற தலைவர்கள் இசக்கி பாண்டியன், ராம்குமார் ஒன்றிய துணை பெருந்தலைவர் ராஜாமணி, குற்றாலம் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணா ஸ்ரீதர் தகவல் தொழில் நுட்ப அணி முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் லிங்கராஜ், ஹபிப் நிஷா, இஸ்மாயில்,சாகுல் ஹமீது, தீபன் சக்கரவர்த்தி மாணவர் அணி மாரியப்பன், சுந்தர், தளபதிமுருகேசன், ஸ்டீபன், மகேந்திரன், சேக்மைதீன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • கேரள மலைகிராமங்களில் பாம்புகள் அதிக அளவில் காணப்படுகின்றன.
    • கண்ணூர் மாவட்டத்தில் மட்டும் 3712 பாம்புகள் பிடிபட்டுள்ளன.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் காடுகள் நிறைந்த பகுதியாகும். இங்குள்ள மலைகிராமங்களில் பாம்புகள் அதிக அளவில் காணப்படுகின்றன. விஷ பாம்புகள் கடித்து பலர் பலியாகி உள்ளனர். இந்த பாம்புகளை பிடிக்க வனத்துறையினரும், பாம்பு பிடிக்கும் நிபுணர்களும் உள்ளனர்.

    கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் கேரளாவில் பிடிபட்ட பாம்புகளின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 325 என தகவல் வெளியாகி உள்ளது. இதில் கண்ணூர் மாவட்டத்தில் மட்டும் 3712 பாம்புகள் பிடிபட்டுள்ளன. கோட்டயத்தில் 1635 பாம்புகளும், வயநாட்டில்1616 பாம்புகளும் பிடிபட்டுள்ளன.

    தலைநகர் திருவனந்தபுரம் மாவட்டத்தில் 1415 பாம்புகள் சிக்கியுள்ளது. ஏராளமான பாம்புகள் பிடிப்பட்டுள்ளதால் இரவு நேரங்களில் நடந்து செல்லும் பொதுமக்கள் கவனமுடன் செல்லவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    • யானை தந்த பொம்மைைய கேரளாவில் இருந்து கடத்தி வந்த 2 பேருக்கு வனத்துறை வலைவீசி வருகின்றனர்.
    • யானை தந்தத்தில் கலைப்பொருட்கள் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    மதுரை

    மதுரையில் யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொம்மைகள் விற்பனை செய்யப்படுவதாக வனத்துறை அலுவலருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து வனத்துறையினர் பல்வேறு இடங்களுக்கு சென்று சோதனை நடத்தினர்.

    அப்போது மதுரை ஜெ.ஜெ. நகர் பகுதியில் யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொம்மைகள் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது. அங்கு யாைன தந்த பொம்மைகளை விற்பனை செய்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில் அவர்கள் ஜெ.ஜெ. நகரை சேர்ந்த இருளன் என்ற முத்து, பாண்டியன் நகரை சேர்ந்த பீட்டர் சகாயராஜ் என்பது தெரிய வந்தது. அவர்கள் நாங்கள் இந்த பொம்மைகளை செய்யவில்லை. சாத்தூரை சேர்ந்த ரஞ்சித்ராஜா என்பவரிடம் வாங்கி வந்து கமிஷன் அடிப்படையில் விற்பனை செய்து வருகிறோம் என்று தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து மதுரை சரக வனத்துறை அதிகாரிகள் சாத்தூருக்கு சென்று ரஞ்சித்ராஜாவை பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், யானை தந்த பொம்மைகள் கேரளாவில் இருந்து கடத்தி வரப்பட்டு மதுரை மற்றும் விருதுநகரில் விற்பனை செய்து வருவது தெரி வந்தது.

    இந்த சிலைகளை கடத்திவரும் 2 பேர் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

    யானை தந்த பொம்ைம விற்பனை தொடர்பாக பிடிபட்ட பொன்இருளன், பீட்டர்சகாயராஜ், ரஞ்சித்ராஜா ஆகிய 3 பேரையும் வனத்துறையினர் கைது செய்து மதுரை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    அப்போது 3 பேரையும் 15 நாள் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில் மதுரை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    இது தொடர்பாக மதுரை மாவட்ட வனத்துறை அதிகாரி குருசாமி தபாலா கூறுகையில், மதுரை வன குற்றங்களின் மையமாக மாறிவிடக்கூடாது என்பதற்காக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். வன உயிரினங்களை வேட்டையாடுவோர், மயில் இறகு, யானை தந்தத்தில் கலைப்பொருட்கள் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • ஏப்ரல் 25 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கேரளா மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை துவங்கி வைத்தார்.
    • வந்தே பாரத் ரயிலுக்கு அடுத்த 15 நாட்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கேரளா மாநிலத்தின் மல்லப்புரம் மாவட்டத்தில் திருநவ்யா மற்றும் திருர் இடையே சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தாக்குதல்காரர்கள் ரயிலின் சி4 பெட்டி மீது கற்களை வீசி கடுமையாக தாக்கினர். இதில் ரயிலின் கண்ணாடி ஜன்னல்களில் விரிசல் ஏற்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக மல்லப்புரம் காவல் துறை விசாரணையை துவங்கி, அந்த பகுதியில் தேடுதல் வேட்டையை நடத்தி வருகிறது. ரயில்வே காவல்துறையும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சம்பவம் நடைபெற்ற பகுதியின் கள நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் தெற்கு ரயில்வே வந்தே பாரத் ரயிலுக்கு அடுத்த 15 நாட்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்துள்ளது.

    கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி தான் பிரதமர் நரேந்தி மோடி திருவணந்தபுரம் செண்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கேரளா மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை துவங்கி வைத்தார். மல்லப்புரம் மாவட்டத்தின் திருர் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் நிற்க வலியுறுத்தி ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. முந்தைய அறிவிப்பின் போது வந்தே ரயில் திருரில் நின்று செல்லும் என்றே கூறப்பட்டது. எனினும், இந்த திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு திருரில் வந்தே பாரத் ரயில் நிற்காது என்று அறிவிக்கப்பட்டது.

    வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு தாக்குதல் சம்பவத்திற்கு கேரளா மாநிலத்தின் பாஜக தலைவர் கே சுரேந்திரன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். மல்லப்புரத்தில் வந்தே பாரத் ரயில் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த சம்பவம் கேரளாவுக்கு அவப்பெயரை கொண்டு சேர்த்துள்ளது. முதல் நாளில் இருந்தே எதிர்ப்புக்குரல் இருந்து வந்தது. இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டறிந்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தனது டுவிட்டரில் தெரிவித்தார்.

    • விரிவான விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் உறுதி அளித்துள்ளார்.
    • இந்திய மருத்துவ சங்கம் மற்றும் கேரள அரசு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

    கொல்லம்:

    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டாரக்கரை தாலுகா மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்தவர் வந்தனா தாஸ் (23). இன்று அதிகாலையில் அவர் பணியில் இருந்தபோது, சந்தீப் என்ற நபருக்கு காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளிப்பதற்காக போலீசார் கொண்டு வந்துள்ளனர்.

    குடும்பத்தினருடன் ஏற்பட்ட சண்டையின்போது சந்தீப்புக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு டாக்டர் வந்தனா சிகிச்சை அளித்தபோது திடீரென ஆவேசமாக எழுந்த சந்தீப், ரகளையில் ஈடுபட்டுள்ளார். கத்தரிக்கோலை எடுத்து அங்கிருந்தவர்களை தாக்கி உள்ளார்.

    இதில் டாக்டர் வந்தனா, போலீஸ்காரர்கள் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் டாக்டர் வந்தனா தாஸ் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் கேரளாவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. டாக்டரின் மரணம் குறித்து பல்வேறு தலைவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடத்திய நபர் போதையில் இருந்துள்ளார்.

    மருத்துவர் உயிரிழப்புக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது இரங்கல் தெரிவித்ததுடன், இந்த தாக்குதல் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    இந்திய மருத்துவ சங்கம், மற்றும் கேரள அரசு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தைச் சேர்ந்த டாக்டர்கள் இன்று மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தினர்.

    ஊடக தகவல்களின் அடிப்படையில் தாமாக முன்வந்து விசாரணை நடத்திய கேரள மாநில மனித உரிமைகள் ஆணையம், இது தொடர்பாக 7 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யும்படி கொல்லம் மாவட்ட காவல்துறை தலைவருக்கு உத்தரவிட்டுள்ளது.

    • நடுவேலம்பாளையம், கிடாத்துறை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன.
    • ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே காளிவேலம்பட்டி, நடுவேலம்பாளையம், கிடாத்துறை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன.

    இந்த நிலையில் அந்த பகுதிகளில் இருந்து கேரளாவிற்கு அதிக அளவில் எம்-சாண்ட்,ஜல்லி உள்ளிட்ட கனிமங்கள் பாரத்தை ஏற்றிக்கொண்டு கனகர வாகனங்கள் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயமும், சாலை பழுது ஏற்படுவதாக கூறி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, சுக்கம்பாளையம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். மேலும் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பும் இது பற்றி பாதகையும் கிராம மக்கள் வைத்தனர். இந்த நிலையில் கிராம மக்களின் எதிர்ப்பையும் மீறி அதிக அளவில் ஜல்லி மற்றும் எம்-சாண்ட் பாரம் ஏற்றி சென்ற நான்கு கேரளா மாநில லாரிகளை சுக்கம்பாளையம் கிராம மக்கள் சிறை பிடித்தனர். இது குறித்து தகவல் அறிந்த பல்லடம் போலீசார்,மற்றும் வருவாய் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தத்தின் பேரில் கிராம மக்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கேரளாவில் ஆண்டுதோறும் ஜூன் முதல் நாள் தென்மேற்கு பருவமழை தொடங்கும்.
    • தென் அரபிக்கடலில் மேகமூட்டம் அதிகரித்து வருகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் ஆண்டுதோறும் ஜூன் முதல் நாள் தென்மேற்கு பருவமழை தொடங்கும். கடந்த ஆண்டு ஒருவாரம் முன்கூட்டியே பருவமழை தொடங்கியது.

    ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்க தாமதம் ஆகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி கடந்த 1-ந் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கவில்லை. இதற்கான அறிகுறிகளும் தென்படவில்லை.

    இதுபற்றி இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்க இன்னும் 4 நாட்கள் ஆகும் என்று கூறியுள்ளது.

    தென் அரபிக்கடலில் மேகமூட்டம் அதிகரித்து வருகிறது. இது தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சூழ்நிலைகளை காட்டுகிறது. எனவே இன்னும் 4 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கலாம் என வானிலை ஆய்வு மையத்தினர் கூறியுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • லட்சத்தீவு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறி தென்பட தொடங்கின.
    • தென்மேற்கு பருவமழை காலத்தில்தான் இந்தியாவில் அதிக மழை பொழிவு இருக்கும்.

    திருவனந்தபுரம்:

    தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் மாதம் 1-ந் தேதி தொடங்கும். இதற்கான அறிகுறிகள் கேரளாவின் லட்சத்தீவில் தென்படும். அதனை மையமாக வைத்தே தென்மேற்கு பருவமழை தொடங்குவதை வானிலை ஆய்வு மையம் உறுதி செய்யும்.

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. அதன்படி கடந்த 1-ந் தேதி பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.

    இந்த நிலையில்தான் அரபிக்கடலில் பிபோர்ஜோய் புயல் உருவானது. இந்த புயல் காரணமாக தென்மேற்கு பருவமழை உருவாகுவதற்கான பகுதிகளில் உள்ள காற்றின் ஈரப்பதம் உறிஞ்சப்படும் என்பதால் தென்மேற்கு பருவமழை தொடங்குவது தள்ளிப்போகும் என்று வானிலை ஆய்வு மையத்தினர் தெரிவித்தனர். அதற்கேற்ப கடந்த வாரம் முழுவதும் தென்மேற்கு பருவமழைக்கான எந்த அறிகுறிகளும் தெரியவில்லை.

    தற்போது பிபோர்ஜோய் புயல் கராச்சிக்கு தெற்கே, ஓமன் நோக்கி நகர்ந்து விட்டது. இதன்காரணமாக லட்சத்தீவு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறி தென்பட தொடங்கின. இதன்மூலம் அடுத்த 24 மணி நேரத்தில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

    அதற்கேற்ப மாலத்தீவு-லட்சத்தீவு முதல் கேரளா கடற்கரை வரை நிலையான மேகமூட்டம் ஏற்பட்டது. இது தென்மேற்கு பருவமழை ஆரம்பம் ஆகி விட்டதை காட்டுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதற்கேற்ப மாநிலம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. ஆலப்புழா, கொல்லம், பத்தினம்திட்டா, திருவனந்தபுரம் மாவட்டங்களில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது.

    தென்மேற்கு பருவமழை காலத்தில்தான் இந்தியாவில் அதிக மழை பொழிவு இருக்கும். ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழை செப்டம்பர் மாதம் வரை பெய்யும். இது விவசாயத்திற்கு உகந்தது என்பதால் நாட்டில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் தென்மேற்கு பருவமழை காலத்தில்தான் சாகுபடி பணிகளில் ஆர்வமாக ஈடுபடுவார்கள்.

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்புக்கும் குறைவாக இருக்கும் என்று தனியார் வானிலை ஆய்வு மையங்கள் தெரிவித்து உள்ளன. பிபோர்ஜோய் புயல் காரணமாக மழை பொழிவு குறைய வாய்ப்பு உள்ளதாகவும் கூறியிருந்தனர். ஆனால் இந்திய வானிலை ஆய்வு மையம் தென்மேற்கு பருவமழை இயல்பான அளவுக்கு பெய்யும் என்று கூறியுள்ளது.

    ×