என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kumbakonam"

    • கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • மங்கல வாத்தியங்கள் முழங்க கருட பகவான் உருவம் வரையப்பட்ட கொடி ஏற்றப்பட்டது.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ராமசாமி கோவில் அமைந்துள்ளது. 'தென்னக அயோத்தி' என அழைக்கப்படும் இக்கோவிலில் ஆண்டுதோறும் ராமநசமி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, இந்த ஆண்டுக்கான ராமநவமி விழா இன்று (சனிக்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் சீதா, ராமர், லெட்சுமணன், ஆஞ்சநேய சுவாமிகள் கொடிமரம் முன்பு எழுந்தருளினர்.

    தொடர்ந்து, கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், மங்கல வாத்தியங்கள் முழங்க கருட பகவான் உருவம் வரையப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து, சுவாமிகளுக்கும், கொடிமரத்திற்கும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழா நாட்களில் தினமும் சிறப்பு அலங்காரத்தில் உற்சவ மூர்த்திகள் இந்திர விமானம், சூரியபிரபை, சேஷம், கருடர், அனுமன், யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா காட்சிகள் நடைபெறுகிறது.

    முக்கிய நிகழ்வான 4-ம் நாளன்று இரவு ஓலை சப்பரத்தில் கருட சேவையும், 7-ம் நாளன்று இரவு கோரதம் புறப்பாடும், அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை தேரோட்டமும், இரவு கோவில் வளகத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    முடிவில் 7-ந்தேதி சப்தாவர்ணமும், 8-ந்தேதி விடையாற்றி விழாவும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

    • போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் காளிதாஸ் அடித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
    • விசாரணை முடிவில் கொலையாளி யார் என்பது தெரியவரும்.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த சுவாமிமலை அருகே உள்ள திருவலஞ்சுழி எம்.ஜி.ஆர் நகரை கிராமத்தை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 36). கூலி தொழிலாளி. இவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

    காளிதாசுக்கு குடிப்பழக்கம் அதிகம் இருந்து வந்தது. இதனால் அவர் எப்போதும் குடிபோதையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று காலை வீட்டு வாசலில் தலையில் பலத்த காயத்துடன் காளிதாஸ் இறந்து கிடந்தார். இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து சுவாமிமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பார்வையிட்டனர்.

    அதில் தலையில் ரத்த காயம் இருந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் காளிதாஸ் அடித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காளிதாசை கொலை செய்தது யார்? என்ன காரணம்? என்ற பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் கொலையாளி யார் என்பது தெரியவரும். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதனிடையே காளிதாசின் சகோதரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சக்கரராஜா.. சக்கரராஜா... என பக்தி கோஷம் முழங்க வடம் பிடித்தனர்.
    • திரளான பக்தர்கள் திரண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற வைணவ தலங்களில் ஒன்றான சுதர்சனவல்லி தாயார், விஜயவல்லி தாயார் சமேத சக்கரபாணி கோவில் அமைந்துள்ளது.

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக பெருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா கடந்த 4-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாட்களில் தினமும் பெருமாள்-தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிஉலா காட்சிகள் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை விமரிசையாக நடந்தது.

    முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் சுதர்சனவல்லி, விஜயவல்லி தாயாருடன் சக்கரபாணி பெருமாள் தேரில் எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து, தொடங்கிய தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சக்கரராஜா.. சக்கரராஜா... என பக்தி கோஷம் முழங்க வடம் பிடித்தனர்.

    மேலும், வீதிகள் தோறும் திரளான பக்தர்கள் திரண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். தொடர்ந்து, தேரானது 4 மாட வீதிகள் வழியாக வலம் வந்து நிலையை அடைந்தது. தேரோட்ட நிகழ்வை யொட்டி பாதுகாப்பு பணியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

    • விஷேச நாட்கள் மட்டு்மின்றி தினந்தோறும் வெளி மாநில, மாவட்டத்திலிருந்து கார், பேருந்துகளில் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
    • கடந்த 10-ம் தேதி தாராசுரம் புறவழிச்சாலையிலிருந்து, தஞ்சாவூர் ஆதிமாரியம்ம ன்கோயில் புறவழிச்சாலை வரை சாலையின் பள்ளம் மேடுகள், அகலம், சாலையின் அளவீடுகள் உள்ளிட்ட பணிகள் தொடங்கியுள்ளது.

    பாபநாசம்:

    தேசிய நெடுஞ்சாலை யான தஞ்சாவூர் முதல் கும்பகோணம் சாலை 2015-ம் ஆண்டு புதியதாக போடப்பட்டது.

    கடந்த 8 ஆண்டுகளில், மராமத்து பணிகள் மட்டும் செய்து வருவதால், தற்போது சாலை மிகவும் மோசமாக உள்ளது. மேலும், சாலைகள் பெயர்ந்து குண்டும் குழியுமாகவும், தற்போது பெய்து வரும் மழையினால் ஜல்லிகள் பெயர்ந்து, சாலையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இரவு நேரங்களில் வாகனத்தில் வருபவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் விழுந்தும், பகல் நேரத்தில் வருபவர்கள் பள்ளம் இருப்பதை, அருகில் வந்து பார்த்து விட்டு, உடனே பக்கவாட்டில் திருப்பும் போது பின் புறம் வரும் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின்றனர்.

    மேலும், கும்பகோணம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நவக்கிரஹ மற்றும் பழமையான கோயில்கள் இருப்பதால், விஷேச நாட்கள் மட்டு்மின்றி தினந்தோறும் வெளி மாநில, மாவட்டத்திலிருந்து கார், பேருந்துகளில் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரில், பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா, இந்த சாலை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    இதற்கு பதிலளித்து பேசிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ. வ. வேலு "மத்திய சாலை போக்கு வரத்து அமைச்சகத்திடம் தமிழக முதலமைச்சர் உத்தரவின் படி இந்த சாலையை சீரமைப்பது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தியு ள்ளோம்.

    மிக விரைவில் இந்த சாலையை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்படும்" என்று தெரிவித்தார்.

    தற்போது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தஞ்சாவூர்- கும்பகோணம் - அணைக்கரை சாலைகளை மேம்படுத்த ரூ.79 கோடி அனுமதித்துள்ளது.

    இந்நிலையில், புதிய சாலை அமைப்பதற்கான பூர்வாங்கப்பணிகள் கடந்த 10-ம் தேதி தாராசுரம் புறவழிச்சாலையிலிருந்து, தஞ்சாவூர் ஆதிமாரியம்ம ன்கோயில் புறவழிச்சாலை வரை சாலையின் பள்ளம் மேடுகள், அகலம், சாலையின் அளவீடுகள் உள்ளிட்ட பணிகள் தொடங்கியுள்ளது.

    தற்போது பாபநாசம், ராஜகிரி, பண்டாரவாடை, ரெகுநாதபுரம், வழுத்தூர் சக்கராப்பள்ளி, அய்யம்பேட்டை, பசுபதி கோவில் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து சாலைகளின் அளவீடு பணிகள் நடைபெற்று வருகிறது.

    வரும் ஜனவரி மாதம் புதிய சாலைகள் அமைக்கும் பணி தொடங்கும் என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    • வருகிற 22-ந்தேதி மற்றும் 23-ந்தேதி ஆகிய இரண்டு நாட்கள் நடை பெறுகிறது.
    • 23-ந்தேதி அன்று கணிதம், இயற்பியல், உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கும் பொதுக்கலந்தாய்வு நடைபெறும்.

    கும்பகோணம்:

    கும்பகோணம், அரசு கலைக் கல்லூரி முதல்வர் மாதவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்ப தாவது:-

    கும்பகோணம், அரசினர் கலைக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவ மாணவியர்களுக்கான பொதுக் கலந்தாய்வு வருகிற 22-ந் தேதி மற்றும் 23 ந் தேதி ஆகிய இரண்டு நாட்கள் நடை பெறுகிறது.

    வருகிற 22 ந் தேதி அன்று தமிழ், ஆங்கிலம், பொருளியல், வரலாறு, இந்திய பண்பாடு மற்றும் சுற்றுலாவியல், வணிகவியல், வணிக மேலாண்மை மற்றும் புவியியல் ஆகியப் பாடப்பிரிவுகளுக்கும்

    23-ந் தேதி அன்று கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், புள்ளியியல், கணினி அறிவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் பொதுக்கலந்தாய்வு நடை பெறும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • டெல்டா மாவட்டத்திற்கு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை கடந்த 12-ந்தேதி திறக்கப்பட்டது.
    • கல்லணையில் இருந்து நேற்று முன்தினம் தண்ணீர் திறக்கப்பட்டது.

    கும்பகோணம்:

    டெல்டா மாவட்டத்திற்கு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை கடந்த 12-ந்தேதி திறக்கப்பட்டது.

    காவிரி நீர் கல்லணைக்கு வந்து அடைந்தது. கல்லணையில் இருந்து நேற்று முன்தினம் தண்ணீர் திறக்கப்பட்டது.

    காவிரி நீர் கும்பகோணம், மணஞ்சேரி, கல்யாணபுரம், பருத்திக்குடி ஆகிய பகுதிகளை கடந்து சென்றது.

    அப்போது கும்பகோணம் விஜயீந்திர மடம் சார்பில் காவிரி படித்துறையில் காவிரி ஆற்றில் பொதுமக்கள் சிறப்பு வழிபாடு செய்து காவிரி நீரில் பாலை ஊற்றி தீபாராதனை காண்பித்தனர்.

    பின்னர் மலர் தூவியும், தேவார பாடலை பாடியும் காவிரி நீரை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

    27-ம்தேதி காலை 11 மணிக்கு மாற்றுத் திறனாளிகள் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது.

    கும்பகோணம்:

    கும்பகோணம் பழைய நகராட்சி அலுவலக கட்டிடத்தில், 27-ம்தேதி காலை 11 மணிக்கு மாற்றுத் திறனாளிகள் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது.

    கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில், கும்பகோணம் கோட்டத்துக்குட்பட்ட மாற்றுத் திறனாளிகள் பங்கேற்று, தங்களது குறைகளை நேரில் தெரிவித்துக் தீர்வு காணலாம் என கோட்டாட்சியர் எஸ்.பூர்ணிமா தெரிவித்துள்ளார்.

    • மன நோய் கொண்டுள்ளோர், இத் திருக்கோயிலின் வெளிச்சுற்றை வலம் வந்தால் குணம் பெறுவர்.
    • அதிலும், மிக குறிப்பாக, புற்று நோய் தீர்க்கும் மருந்தாக கருதப்படுகிறது.

    மன நோய் அகற்றும் திருவிடைமருதூர்

    சிவ பெருமான் தன்னை தானே பூஜித்து, வழிபட்ட லிங்கமானதால் இவர் " மகாலிங்கமானார்".

    இவரை தரிசிப்போர் மன நோய் நீங்கப் பெறுவர்.

    நீண்ட நாட்கள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், இத்தல நாயகனை வழிபட்டு வந்தால் குணம் அடைவர்.

    மன நோய் கொண்டுள்ளோர், இத் திருக்கோயிலின் வெளிச்சுற்றை வலம் வந்தால் குணம் பெறுவர்.

    கும்பகோணத்தில் இருந்து மாயவரம் செல்லும் சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் இந்த கோவில் உள்ளது.

    புற்றுநோய் தீர்க்கும் " திருந்துதேவன்குடி அருமருந்தம்மை

    கற்கடேஸ்வரர் வீற்றிருக்கும் " திருந்துதேவன்குடியின் " நாயகி, தீரா நோய்கள் தீர்க்கும் அருமருந்தம்மை.

    இங்கு, அம்மனுக்கு சார்த்தப்படும் எண்ணெய், பின்னர் வேண்டுவோர்க்கு, பிரசாதமாய் வழங்கப்படுகிறது. இது, சர்வ வியாதிகளுக்குமான ஒரு நிவாரணி.

    அதிலும், மிக குறிப்பாக, புற்று நோய் தீர்க்கும் மருந்தாக கருதப்படுகிறது.

    நோய் தீர்க்கும் தலம் இது என்பதை உணர்த்தும் வண்ணம், வைத்தியர் ஒருவரின் சிற்பம் ஒன்று கோயிலின் வெளிப்புறம், அவர் மருந்து தயாரிப்பதைப் போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.

    கடன் தொல்லைகள் தீர்க்கும் திருச்சேறைருண விமோச்சனர்

    ஒருவர் முற்பிறவிகளில் செய்த பாவங்கள் அனைத்தும் அடுத்தடுத்த பிறவிகளில் தொடர்கிறது.

    முன்வினைப் பயன்கள் அனைத்தும் பிறவிக் கடன்களாகின்றன.

    முற் பிறவி தீவினைகள் நீங்கவும், இப் பிறவியின் கடன்கள் தீரவும், வறுமை நீங்கி சுபிட்சமான வாழ்க்கை கிடைத்திடவும் வணங்க வேண்டிய இறைவன், திருச்சேறையில் செந்நெறியப்பர் ஆலயத்தில், தனி சந்நதி கொண்டுள்ள " ருண விமோச்சன லிங்கேஸ்வரர் ".

    கும்பகோணம் - திருவாரூர் சாலையில் கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம்.

    ரிண விமோஷனரை 11 திங்கட்கிழமைகள் அபிஷேக, ஆராதனை செய்து வழிபட்டு, பின்னர் மகாலஷ்மியையும், ஜேஷ்டா தேவியையும், பைரவரையும் வணங்கினால் வழிபடுபவரது வறுமையும், கடன்களும் தீரும்.

    இச் சந்நதியின் முன் நின்று " கூறை உவந்தளித்த கோவே யென்று அன்பர் தொழச் சேறை உவந்திருந்த சிற்பரமே " என மனமுருக 11 முறை பாராயணம் செய்தால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும்.

    இத்தலத்தில் துர்க்கை சிவ துர்க்கை, விஷ்ணு துர்க்கை, வைஷ்ணவி என மூன்று வடிவங்களாக அருளுகிறாள்.

    • காசி தேசத்தில் புண்ணியமும் வளரும். பாவமும் வளரும். ஆனால் இங்கு புண்ணியம் மட்டுமே வளரும்.
    • இங்கு ஆயுஷ் ஹோமம், சஷ்டியப்த பூர்த்திகள் செய்ய நீண்ட ஆயுள் கிட்டும்.

    பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர , வணங்க வேண்டிய 'ஸ்ரீவாஞ்சியம்'

    மன வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்று சேர வழிபட வேண்டிய திருத்தலம், காசிக்கு இணையாக கருதப்படும், கும்பகோணத்தை அடுத்துள்ள "ஸ்ரீவாஞ்சியம்".

    காசி தேசத்தில் புண்ணியமும் வளரும். பாவமும் வளரும். ஆனால் இங்கு புண்ணியம் மட்டுமே வளரும்.

    ராகுவும், கேதுவும் ஒரே திருமேனியில் காட்சி தரும் இத்தலம் பிள்ளைப் பேறு அருளும் தலம்.

    ஏழரை, அஷ்டம மற்றும் கண்டகச் சனி திசைப் பரிகாரத் தலமாகும்.

    இங்கு ஆயுஷ் ஹோமம், சஷ்டியப்த பூர்த்திகள் செய்ய நீண்ட ஆயுள் கிட்டும்.

    இங்குள்ள குப்த கங்கையில் நீராடி பித்ரு காரியங்களைச் செய்தால் பித்ரு தோஷ நிவர்த்தி கிடைக்கும்.

    ராகு கேதுவை வழிபட கால, சர்ப்ப தோஷம் நீங்கும்.

    இத்தலத்தில் ஓர் இரவு தங்கினாலே செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்து முக்தி கிடைக்கும்.

    ஸ்ரீயாகிய திருவை (மகாலட்சுமி) பரந்தாமன் தனது வாஞ்சையில் விரும்பி சேர்த்ததால் இத் தலம் ஸ்ரீவாஞ்சியம் எனப் பெயர் பெற்றது.

    இங்குள்ள குப்த கங்கையில் நீராடி இறைவனையும், அம்பாளையும், மகாலட்சுமியையும் வழிபட்டால் பிரிந்துள்ள தம்பதியர் பிணக்குகள் அனைத்தும் தீர்ந்து ஒன்று சேர்வர்.

    • கிழக்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் விளங்குகிறது.
    • தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் உள்ள பெரிய நந்திகளில் இதுவும் ஒன்றாகும்.

    செல்வம் பெற வணங்க வேண்டிய தலம் "திருவாடுதுறை"

    கும்பகோணம் - மாயவரம் சாலையில் கும்பகோணத்திலிருந்து சுமர் 10 கி.மீ. தொலைவில் உள்ளது ஆடுதுறை எனப்படும் "திருவாடுதுறை".

    கிழக்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் விளங்குகிறது.

    கோபுர வாயிலுக்கு எதிரில் கோமுகி தீர்த்தம் உள்ளது.

    கோபுர வாயிலின் இருபுறமும் பசுவான உமைக்குத் துணையாக வந்த விநாயகர், முருகன் சன்னதிகள் உள்ளன.

    கோபுர வாயிலைக் கடந்தால் நீண்ட நடைபாதை அதன் முடிவில் உள்ள மண்டபத்தில் பெரிய நந்தி உள்ளது.

    தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் உள்ள பெரிய நந்திகளில் இதுவும் ஒன்றாகும்.

    ஞானசம்பந்தரிடம் அவர் தந்தை யாகம் செய்ய தேவையான பொருள் கேட்க, சம்பந்தரும் இத்தல இறைவன் மாசிலாமணி ஈஸ்வரரை வேண்டி பதிகம் பாட,

    பரம் பொருளும் 1000 பொற்காசுகள் கொண்ட பொற்கிளியை பலி பீடத்தின் மீது வைத்தருளினார்.

    எனவே செல்வம் பெற விரும்புபவர்கள் இத்தலம் சென்று வழிபட்டால் பலன் கிடைக்கும்.

    • கும்பகோணம் கோவிந்தபுரத்தில் ஸ்ரீவிட்டல் ருக்மணி ஸம்ஸ்தான் கோவில் உள்ளது.
    • ஸ்ரீஸ்ரீவிட்டல்தாஸ் மகராஜ் கோவிந்தபுரத்தில் பலகோடி மதிப்பில் கோவில் அமைத்துள்ளார்.

    தலச்சிறப்பு

    கும்பகோணம் அருகே கோவிந்தபுரத்தில் ஸ்ரீவிட்டல் ருக்மணி ஸம்ஸ்தான் கோவில் உள்ளது. சேங்காலிபுரம் நாராயண தீஷிதர் புதல்வர் ராமதீஷீதர். இவர் இன்றும் பிரவசனம் செய்து கொண்டு வருபவர். இவரது புத்திரர் ஸ்ரீஸ்ரீவிட்டல்தாஸ் மகராஜ்.

    நாமசங்கீர்த்தனமே நாதன்தாள் பற்றுவதற்கான நல்ல வழி என்பதை உலகெங்கும் பறைசாற்றிய ஞானானந்த சுவாமிகள் சீடரான குருஜி ஹரிதாஸ் கிரி சுவாமிகளையும், ஸ்ரீஸ்ரீகிருஷ்ண பிரேமி மகராஜ் ஆகியோரை தமது குருவாக ஏற்று நாடெங்கும் நாமசங்கீர்த்தனத்தை நடத்தி வருபவர் ஸ்ரீஸ்ரீவிட்டல்தாஸ் மகராஜ் ஆவார்.

    வடமாநிலத்தில் பண்டரிபுரத்தில் உள்ள ஸ்ரீபாண்டுரங்கனின் கோவிலை போன்று அனைத்து பக்தர்களும் கோவில் கர்ப்பகிரகத்தினுள் சென்று பகவானை தரிசிக்க வேண்டும் என்று ஜாதி, மதம், இனம், மொழி என்ற வேறுபாடு இல்லாமல் ஸ்ரீஸ்ரீவிட்டல்தாஸ் மகராஜ் கோவிந்தபுரத்தில் பலகோடி மதிப்பில் கோவில் அமைத்துள்ளார்.

    பண்டரிபுரத்தில் இருந்து வந்தருளிய பாண்டுரங்கனும், ருக்மணியும் புதிய கோவிலில் அருள்பாலிக்கின்றனர். மகாமண்டபம், அர்த்தமண்டபம், நாமசங்கீர்த்தனை கூடம், அன்னதானக்கூடம், மகாபக்த விஜயத்தில் இடம்பெற்றுள்ள பக்த சிரோண்மனிகளின் கதை சிற்பங்கள், பொன் போன்ற ஒளிரும் மேல் விதானம் மடப்பள்ளி போன்றவைகள் தெய்வீகமாக அமைக்கப்பட்டுள்ளது.

    இங்கு பசுக்களுக்கான பிரத்தியேக கோசாலை அமைந்துள்ளது. ஸ்ரீஸ்ரீவிட்டல்தாஸ் மகராஜ் நாடெங்கும் நாமசங்கீர்த்தனம் செய்தே பக்தர்களின் கைங்கர்யத்துடன் கோவில் திருப்பணி செய்யப்பட்டுள்ளது.

    தல வரலாறு

    கும்பகோணம் அருகே உள்ள கோவிந்தபுரத்தில், ஸ்ரீவிட்டல் ருக்மணி பாண்டுரங்கன் கோவில் கும்பாபிஷேகம் ஜூலை 15, 2011 ம் ஆண்டு நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். ஜெயகிருஷ்ண தீட்சிதர் என்ற விட்டல்தாஸ் மகராஜ், பல கோடி ரூபாய் மதிப்பில், மகாராஷ்டிர மாநிலம், பண்டரிபுரத்தில் உள்ள போலவே, இக்கோவிலை அமைத்துள்ளார்.

    பண்டரிபுரத்தில் இருந்து வந்தருளிய பாண்டுரங்கனும், ருக்மணியும், புதிய கோவிலில் அருள்பாலிகின்றனர். மகாமண்டபம், அர்த்தமண்டபம், நாமசங்கீர்த்தன கூடம், அன்னதானக்கூடம், மகாபக்த விஜயத்தில் இடம்பெற்றுள்ள பக்த சிரோண்மணிகளின் சுதை சிற்பங்கள், பொன் போன்று ஒளிரும் மேல் விதானம், மடப்பள்ளி போன்றவை, பல கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளன.இங்கு பசுக்களுக்கான பிரத்யேக கோசாலை அமைந்துள்ளது.

    விட்டல்தாஸ் மகராஜ், நாடெங்கும் நாமசங்கீர்த்தனம் செய்து, பக்தர்களின் கைங்கர்யத்துடன் கோவில் திருப்பணி செய்துள்ளார். விமான கும்பாபிஷேகத்தை, விட்டல்தாஸ் மகராஜ் நடத்தி வைத்தார். தொடர்ந்து சுவாமி, தாயார் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விசேஷ தீபாராதனை காட்டப்பட்டது. மண்டலாபிஷேக துவக்கத்தையொட்டி, மகாஅபிஷேகம் நடைபெற்றது.

    காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரசரஸ்வதி சுவாமிகள், சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், குருஜி ஹரிதாஸ் கிரி சுவாமிகள், அண்ணா கிருஷ்ண பிரேமி சுவாமிகள் ஆகியோரின் அருளாசியுடன் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    சேங்காலிபுரம் ராமதீட்ஷிதர் முன்னிலை வகிக்கிறார். கோவில் திருப்பணி வேலைகளில் மஹாராஷ்டிரா ஸ்தபதி பாலாஜி, சென்னை ஸ்தபதி செல்வநாதன், பொறியாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் ஈடுபட்டனர். எங்கும் பார்க்கமுடியாத வகையில் பைபர் கிளாஸில் சீலிங் மோல்டு டெக்கரேஷன் செய்துள்ளனர். 100 கோடி விட்டல் நாமங்களை கீழே உள்ள அறையில் வைத்து அதன் மேலே மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது சிறப்பு ஆகும்.

    ஆயிரம் பசுக்கள்:

    ஸ்ரீவிட்டல் ருக்மணிதேவி சம்ஸ்தானத்தில் 2,000 பசுக்கள் கொண்ட மிகப்பெரிய கோசாலை உள்ளது. ஏகாதசி, கோகுலாஷ்டமி, ஆஷாட ஏகாதசி போன்ற தினங்களில் விசேஷ வழிபாடுகள் இங்கு நடைபெறுகின்றன.

    தினசரி இந்த சந்நிதியில் புஐயதேவரின் 24 அஷ்டபதியும் பாடப்படுவது வேறு எங்கும் காண முடியாத சிறப்பாகும். ஸ்ரீபாண்டுரங்கன். ருக்மணித் தாயார் திருத்தலத்தில் வருஷம் 365 நாள்களும் பகவானின் நாமாவளி ஒலித்துக் கொண்டிருக்கும்.

    அமைவிடம்:

    திருவிடைமருதூர் அருகிலுள்ள கோவிந்தபுரத்தில் ஸ்ரீவிட்டல் ருக்மணி சம்ஸ்தான வளாகத்தில் அமைந்துள்ளது ஸ்ரீபாண்டுரங்கன், ருக்மணித்தாயார் திருத்தலம்

    நடைதிறப்பு

    காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.

    • துலாம் - அபிமுகேஸ்வரர் கோவில்
    • கும்பம் - ஆதிகும்பேஸ்வரர் ஆலயம்

    கும்பகோணத்தில் உள்ள ஆலயங்களில் 12 ஆலயங்கள் ராசி கோவில்களாக வரையறுக்கப்பட்டுள்ளன.

    அந்த கோவில்கள் விபரம் வருமாறு

    மேஷம் - வரதராஜபெருமாள் ஆலயம்

    ரிஷபம் - சாரங்கபாணி கோவில்

    மிதுனம் - சக்கரபாணி ஆலயம்

    கடகம் - காளஹஸ்தீஸ்வரர் கோவில்

    சிம்மம் - பாணபுரீஸ்வரர் ஆலயம்

    கன்னி - காசி விசுவநாதர் கோவில்

    துலாம் - அபிமுகேஸ்வரர் கோவில்

    விருச்சிகம் - கவுதமேஸ்வரர் ஆலயம்

    தனுசு - நாகேஸ்வரர் கோவில்

    மகரம் - சோமேஸ்வரர் ஆலயம்

    கும்பம் - ஆதிகும்பேஸ்வரர் ஆலயம்

    மீனம் - பிரம்மன் வேத நாராயண பெருமாள் கோவில்

    ×