என் மலர்
நீங்கள் தேடியது "mekedatu dam"
- மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
- கர்நாடக அரசு அனுமதியின்றி செயல்படுத்தும் நீர் திட்டங்களை தடுக்க காவிரி மேலாண்மை ஆணையம் தவறிவிட்டது.
சென்னை:
கர்நாடகாவில் உள்ள மேகதாது என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே அணை கட்ட அம்மாநில அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் முயற்சியை தீவிரப்படுத்தியது. இதற்கு தமிழக அரசு சார்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்திலும் கர்நாடக அரசு மேகதாது அணையை கட்டுவதற்கு தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மேலும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
அந்த பதில் மனுவில் கூறி இருப்பதாவது:-
மேகதாது அணை திட்டத்தை கொண்டு வரும் கர்நாடக அரசின் முயற்சி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மீறுவதாகும்.
மேகதாது அணை விவகாரத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் முடியும் வரை காவிரி மேலாண்மை ஆணையம் ஆலோசனை உள்ளிட்ட எதையும் செய்ய முடியாது.
புதிய திட்டங்களுக்கான அனுமதி போன்றவற்றை பரிசீலிப்பது காவிரி மேலாண்மை ஆணையத்தின் பணி கிடையாது. காவிரி விவகாரத்தில் தீர்ப்பு செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிப்பதே காவிரி மேலாண்மை ஆணையத்தின் பணியாகும்.
கர்நாடக அரசு அனுமதியின்றி செயல்படுத்தும் நீர் திட்டங்களை தடுக்க காவிரி மேலாண்மை ஆணையம் தவறிவிட்டது.
இவ்வாறு அந்த பதில் மனுவில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
- தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இப்போதும் நிலுவையில் உள்ளது.
- விசாரணை முடியும் வரை ஆணையக் கூட்டத்தில் விவாதிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கர்நாடக முதல்-அமைச்சர் பசவராஜ் பொம்மை டெல்லியில் நேற்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு தேவையான சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதிகளை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில், அதையொட்டி அரசியல் லாபம் தேடும் நோக்குடன் கர்நாடக முதல்-அமைச்சர் பசவராஜ் பொம்மை விடுத்துள்ள கோரிக்கை சட்ட விரோதமானது.
தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இப்போதும் நிலுவையில் உள்ளது. விசாரணை முடியும் வரை ஆணையக் கூட்டத்தில் விவாதிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வர இருக்கும் நிலையில், காவிரி ஆணையக் கூட்டத்தில் இனி எந்த காலத்திலும் மேகதாது அணை குறித்து விவாதிக்கக் கூடாது என ஆணையிட வேண்டும் என்று கோரி கடந்த 21-ந்தேதி தமிழக அரசு மனுத்தாக்கல் செய்திருக்கிறது.
எனவே, மத்திய அரசே நினைத்தாலும் மேகதாது அணைக்கு அனுமதி அளிக்க முடியாது. இத்தகைய சூழலில் மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு அனுமதி கோரியிருப்பது அரசியல் லாபம் தேடும் நாடகம் என்பதை தவிர வேறில்லை.
அதே நேரத்தில் கர்நாடகத்தை இப்போது ஆளும் கட்சி, அதன் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள மேகதாது அணையை தான் முக்கிய கருவியாக நம்பிக் கொண்டிருக்கிறது.
அதனால், விதிமுறைகள், மரபுகள் ஆகியவற்றை புறந்தள்ளிவிட்டு, மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு எதிராக மத்திய அரசு எந்த முடிவை வேண்டுமானாலும் எடுக்கலாம்.
எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும். எத்தகைய நிலையிலும், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகத்திற்கு அனுமதியளிக்கக் கூடாது என்று மத்திய அரசிடம் தமிழகம் வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளது.
- காவிரியிலிருந்து எடுக்கப்படும் நீரை கண்காணிக்க காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்
புதுடெல்லி:
கர்நாடகம்-தமிழ்நாடு இடையே மேகதாது அணை விவகாரத்தில் பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வருகிறது. இது தொடர்பான வழக்கு விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு மாநகர குடிநீர் திட்டத்திற்கு காவிரி நதியிலிருந்து நீரை எடுக்க கூடாது என கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு மனுவில் கூறியுள்ளது.
காவிரி நதியிலிருந்து எடுக்கப்படும் நீரை கண்காணிக்க காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மேகதாது அணை பாதுகாப்பு விவசாயிகள் நாளை டெல்லியில் பேராராட்டம் நடத்த உள்ள நிலையில், தமிழக அரசு தாக்கல் செய்துள்ள கூடுதல் மனு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
- மேகதாது திட்டத்தை தொடங்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கினால், பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி உடனடியாக பணிகளை தொடங்க அரசு தயாராக உள்ளது.
- மேகதாது அணை கட்டும் திட்டத்தில் விரிவான திட்ட அறிக்கைக்கு அனுமதி இல்லாத பட்சத்தில் எதுவும் செய்ய சாத்தியமில்லை.
பெங்களூரு:
கர்நாடகம்-தமிழ்நாடு எல்லையில் ராமநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட மேகதாது பகுதியில் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்ட முடிவு செய்து அதற்காக முயற்சித்து வருகிறது. இதை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வரும் நிலையில், கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அடிக்கடி டெல்லி சென்று மேகதாது திட்டத்திற்கு அனுமதி வழங்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார்.
இந்த நிலையில் பெங்களூரு விதானசவுதாவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களிடம் கூறியதாவது:-
மேகதாது அணை கட்டும் திட்டத்தை தொடங்கும் முன்பாகவே, முந்தைய அரசு பல தவறுகளை செய்திருந்தது. அதனால் தற்போது மேகதாது திட்டம் பிரச்சினையில் சிக்கி உள்ளது. அன்றைய அரசு மேகதாது திட்டத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறியது. தற்போது மேகதாதுவில் அணை கட்டும் திட்டம் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது. இதனால் மேகதாது திட்டத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேகதாது திட்டத்தை தொடங்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கினால், பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி உடனடியாக பணிகளை தொடங்க அரசு தயாராக உள்ளது. ஏற்கனவே பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியை பயன்படுத்தி கொண்டு, அதற்கான பணிகள் தொடங்கப்படும். மேகதாது அணைகட்டும் திட்டத்தில் விரிவான திட்ட அறிக்கைக்கு அனுமதி இல்லாத பட்சத்தில் எதுவும் செய்ய சாத்தியமில்லை.
திட்ட அறிக்கை கூடிய விரைவிலேயே அணை கட்டும் பணிகள் தொடங்கப்படும். முந்தைய பட்ஜெட்டிலேயே மேகதாது திட்டத்திற்காக அரசு ரூ.1,000 கோடியை ஒதுக்கி இருந்தது. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், கர்நாடகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்காக கூடிய விரைவில் நிதி கிடைக்க உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் என்னுடைய நண்பர்கள் தான்.
- கர்நாடகாவில் யார் ஆட்சி அமைத்தாலும் அது அந்த கட்சியின் முடிவு.
சென்னை:
சென்னை தியாகராயநகரில் உள்ள கமலாலயத்தில் பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடகா தேர்தல் முடிவு எதிரொலியாக, திராவிட நிலப்பரப்பில் இருந்து பா.ஜ.க. அகற்றப்பட்டதாக தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். 2019-ம் ஆண்டு தேர்தலில் ஏன் இதை கூறவில்லை? அல்லது 2018 தேர்தல் முடிந்து 104 எம்.எல்.ஏ.க்கள் இருக்கும்போது ஏன் இதை சொல்லவில்லை? எனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசியலுக்காக இந்த கருத்தை தெரிவிக்கிறார்
அவருக்கு, பா.ஜ.க.வினுடைய வளர்ச்சியை பார்த்து பயம் வந்துவிட்டது. தமிழகத்தில் பா.ஜ.க. மக்கள் மத்தியில் அன்பை பெற்றுவிட்டது என்று முதலமைச்சருக்கு தெரியும். எனவே தான் தினந்தோறும் பா.ஜ.க. புராணம் பாடிக்கொண்டிருக்கிறார். பா.ஜ.க. ஒரு தேசிய கட்சி ஒரு தேர்தலில் தோற்கும். ஒரு தேர்தலில் வெற்றி பெறும். ஆனால் வரக்கூடிய பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் மனங்களை வென்று பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெறும்.
சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் என்னுடைய நண்பர்கள் தான். சித்தராமையா ஆட்சியின்போது நான் எஸ்.பி.யாக இருந்தபொழுது என் மீது அதிக அன்புடன் இருப்பார். அரசியல் ரீதியாக மட்டுமே எங்களிடம் கருத்து வேறுபாடு உள்ளது.
கர்நாடகாவில் யார் ஆட்சி அமைத்தாலும் அது அந்த கட்சியின் முடிவு. அதில் நான் கருத்து சொல்லமுடியாது. ஆனால் நல்ல ஆட்சியை காங்கிரஸ் கொடுக்க வேண்டும். தயவு செய்து தேர்தல் அறிக்கையில் கூறியதைப் போல மேகதாது அணையை கொண்டு வந்து விடாதீர்கள். நீங்கள் மேகதாதுவை கொண்டு வந்தால், அதை எதிர்த்து நடக்கும் முதல் போராட்டம் பா.ஜ.க. சார்பில் என்னுடையதாக இருக்கும். கர்நாடகாவில் அமையவுள்ள புதிய ஆட்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தியை பதிவிட்டுள்ளார் அதில் 'மேகதாது மட்டும் வேண்டாம்' என்ற வார்த்தை உள்ளதா? என்று நானும் தேடி பார்த்தேன். ஆனால் அதைப் பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாயை திறக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- பெங்களூருவில் முதல் முறையாக நீர்வளத்துறை அதிகாரிகளுடன் டிகே சிவக்குமார் ஆலோசனை.
- கர்நாடக மாநிலத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது மேகதாது அணை திட்டம்.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி என்று கர்நாடக மாநில துணை முதல்வர் டிகே சிவக்குமார் தெரிவித்து இருக்கிறார். மேகதாது அணை கட்ட விரைவில் டெல்லி சென்று ஒன்றிய அமைச்சர்களை சந்தித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க இருப்பதாக அவர் தெரிவித்தார்.
கர்நாடக மாநிலத்தின் துணை முதல்வராக பொறுப்பேற்று இருக்கும் அம்மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் நீர்வளத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்று உள்ளார். அதன்படி பெங்களூருவில் முதல் முறையாக நீர்வளத்துறை அதிகாரிகளுடன் டிகே சிவக்குமார் ஆலோசனை நடத்தினார். அதில் துறைரீதியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

ஆலோசனை கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டிகே சிவக்குமார், "காங்கிரஸ் கட்சி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றும். கர்நாடக மாநிலத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள முக்கிய திட்டம், மேகதாது அணை மற்றும் மகதாயி அணை திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக விரைவில் டெல்லி சென்று ஒன்றிய அமைச்சர்களை சந்திப்பேன்."
"விரைவில் அனுமதி பெறுவதற்கான பணிகளை மேற்கொள்வேன். மேகதாது அணை கட்டுவது எங்கள் உரிமை. வேறு மாநிலங்களுக்கு துரோகம் செய்யும் எண்ணம் எங்களுக்கு இல்லை, " என்று தெரிவித்தார்.
- கர்நாடக துணை முதலமைச்சர் அவர்கள் கூறி இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும்.
- காவேரி ஆற்றின் குறுக்கே எந்தவொரு திட்டத்தையும் கர்நாடக அரசு தன்னிச்சையாக மேற்கொள்ள இயலாது.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி என்று கர்நாடக மாநில துணை முதல்வர் டிகே சிவக்குமார் தெரிவித்த கருத்துக்கு தமிழ் நாட்டில் பெரும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
மேகதாது அணை கட்ட விரைவில் டெல்லி சென்று ஒன்றிய அமைச்சர்களை சந்தித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக கர்நாடக மாநில துணை முதல்வர் டிகே சிவக்குமார் கூறியதற்கு, தமிழ் நாடு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது..,

"கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிப் பொறுப்பேற்றதை அடுத்து, 30-05-2023 அன்று நடைபெற்ற நீர்பாசனத் துறை உயர் அதிகாரிகளுக்கான கூட்டத்திலேயே மேகதாது திட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதற்குத் தேவையான ஏற்பாடுகளை உடனடியாக செய்ய வேண்டுமென்றும் கர்நாடக துனை முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டு இருப்பது தமிழக மக்களிடையே, குறிப்பாக தமிழக விவசாயிகளிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது."
"உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி ஆண்டுதோறும் தமிழ்நாட்டிற்கு 177,25 டிஎம்.சி. நீரை மாதாந்திர அட்டவணை படி கர்நாடகம் அளிக்காத நிலையில், மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மான்புமிகு கர்நாடக துணை முதலமைச்சர் அவர்கள் கூறி இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும்."
"தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையேயான காவேரி நதிநீர்ப் பங்கீடு என்பது 1892 மற்றும் 1924 ஆம் ஆண்டுகளில் மெட்ராஸ் மாகாணத்திற்கும், மைசூர் மாகானாத்திற்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலானது. மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்டபோது, இந்திய அரசமைப்புச் சட்டக் கூறு 262-ன்கீழ் 1956 ஆம் ஆண்டு பன்மாநில நதிநீர்த் தாவாச் சட்டத்தின்படி, பன்மாநில நதியான காவேரி ஆற்றின் குறுக்கே எந்தவொரு திட்டத்தையும் கர்நாடக அரசு தன்னிச்சையாக மேற்கொள்ள இயலாது."
"காவேரி ஆறு பாயும் மாநிலங்களில், கர்நாடகம் மேல் நதிக்கரை மாநிலமாக விளங்குவதால், கூடுதலாக அணை கட்டுவதற்கு கீழ்மடை மாநிலமான தமிழ்நாட்டின் அனுமதியை பெற்றே ஆகவேண்டும். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளது. இந்தச் சூழ்நிலையில், மேகதாது அணைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மாண்புமிகு கர்நாடக மாநில துணை முதலமைச்சர் அவர்கள் கூறுவது இந்திய அரசமைப்புச் சட்டத்தையும், உச்ச நீதிமன்றத்தையும் அவமதிப்பதாகும். கர்நாடக மாநில துணை முதலமைச்சரின் இந்தக் கூற்று தமிழகத்திற்கு வரும் காவேரி ஆற்றின் நீரைத் தடுத்து நிறுத்துவதற்கு சமம்."

"ஏற்கெனவே காவேரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீருக்குப் பதிலாக உபரி நீர் தான் கிடைத்துக் கொண்டிருக்கின்ற நிலையில், மேகதாது அணை திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் தமிழ்நாட்டிற்கு வருகின்ற நீர் முற்றிலும் நின்றுவிடும் அபாயம் ஏற்படும். மேகதாது அணைத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், அதன் மூலம் 67 டி.எம்.சி. நீரை கர்நாடகம் கூடுதலாக தேக்கிக் கொள்ளலாம். ஏற்கனவே போதிய நீர் இல்லாததன் காரணமாக சாகுபடி பரப்பு குறைந்துள்ள நிலையில் நிலத்தடி நீர் மூலம் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், மேகதாது அணை கட்டப்பட்டால் ஒட்டுமொத்த விவசாயமும் வெகுவாகப் பாதிக்கப்படும் தமிழ்நாடு பாலைவனமாக மாறிவிடும் சூழ்நிலை உருவாகும்."
"கர்நாடக மாநிலத்தின் இந்த நிலைப்பாடு காவேரி நதிநீர்ப் பங்கீட்டில் தமிழ்நாட்டிங்கு உள்ள உரிமையை பறிக்கும் செயலாகும். இதுபோன்ற நடவடிக்கை தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர முடியாது என்று சொல்வதற்கு சமம். இதன்மூலம் காவேரி ஆற்றிலிருந்து கீழ்மடை மாநிலமான தமிழ்நாட்டிற்கு வருகின்ற உபரி நீர் நின்று விடும் சூழ்நிலை ஏற்படுவதோடு, வேளாண் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டு வேளாண் தொழிலே முடங்கும் அபாயம் ஏற்படும்," என்று தெரிவித்தார்.
- மேகதாதுவில் அணைக்கட்ட கர்நாடக காங்கிரஸ் அரசு முயற்சிப்பது நியாயமில்லை.
- கர்நாடக அரசின் மேகதாது அணை தொடர்பான அறிவிப்பு அண்டை மாநிலமான தமிழ்நாட்டின் நட்பு உறவுக்கு உகந்ததாக அமையாது.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கர்நாடக துணை முதல்-அமைச்சர் மேகதாதுவில் அணைக்கட்டுவோம் என்று கூறியது கண்டிக்கத்தக்கது.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்டினால் காவிரி நீரினால் தமிழ்நாட்டின் விவசாயத்திற்கு காவிரி நீர் கிடைக்காமல் விவசாயத் தொழில் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் தொழிலை இழக்க நேரிடும்.
மேலும் தமிழ்நாட்டு மக்களுக்கு குடிநீராக கிடைக்கும் மேகதாது அணையின் காவிரி நீரும் கிடைக்காமல் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும். இப்பேற்பட்ட சூழலில் மேகதாதுவில் அணைக்கட்ட கர்நாடக காங்கிரஸ் அரசு முயற்சிப்பது நியாயமில்லை.
கர்நாடக அரசின் மேகதாது அணை தொடர்பான அறிவிப்பு அண்டை மாநிலமான தமிழ்நாட்டின் நட்பு உறவுக்கு உகந்ததாக அமையாது.
குறிப்பாக மேகதாது அணைக்கட்டுவது தொடர்பாக கர்நாடக மாநில அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே நீண்ட காலமாக கருத்து வேறுபாடு இருந்து வரும் வேளையில் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக கர்நாடக காங்கிரஸ் மேகதாது சம்பந்தமாக வாக்குறுதி அளித்த போதே தமிழக தி.மு.க அரசும், தமிழக காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளும் கடுமையாக எதிர்த்திருக்க வேண்டும்.
அதை விடுத்து கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் போதும், காவிரி நீர் பற்றி கவலைப்படாமல் தமிழக அரசும், காங்கிரசும் அப்போது ஆதரவு தெரிவித்துவிட்டு இப்போது என்ன காரணம் சொன்னாலும் இப்பிரச்சனையில் தமிழக அரசும், காங்கிரசும் இரட்டை வேடம் போடுவதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.
எனவே கர்நாடக அரசு, மேகதாதுவில் அணைக் கட்டும் முயற்சிக்கு தமிழக அரசு கடும் கண்டிப்பையும், எதிர்ப்பையும் தெரிவிப்பதோடு, அணைக்கட்டும் பேச்சுக்கே இடம் கொடுக்காமல், அணைக்கட்ட அனுமதிக்க முடியாத நிலையில் செயல்பட்டு தமிழக விவசாயிகள் நலன் காக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கருத்துக்கு ஓபிஎஸ் பதில்.
- தமிழ்நாட்டை பொறுத்தவரை மேகதாது அணைத் திட்டம் கைவிடப்பட வேண்டும் என்பதே கட்சிகளின் நிலைப்பாடு.
கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கான பணிகளை விரைவில் துவங்கப் போவதாக அம்மாநில துணை முதல்வர் டிகே சிவக்குமார் கூறிய கருத்துக்கள் தமிழ் நாடு மற்றும் கர்நாடகா அரசியலில் பேசுபொருளாகி இருக்கிறது. டிகே சிவக்குமார் கருத்துக்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த நிலையில், டிகே சிவக்குமார் கருத்துக்கு தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறிய கருத்துக்களுக்கு ஓபிஎஸ் பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது,
'கர்நாடக துணை முதலமைச்சருக்கு பதில் அளித்த மாண்புமிகு தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் அவர்கள், மேகதாது பற்றிய முழு விவரத்தை அதிகாரிகள் இன்னும் கர்நாடக துணை முதலமைச்சருக்கு சொல்லியிருக்க மாட்டார்கள் என்று கூறியிருக்கிறார்.'
'தற்போது கர்நாடக துணை முதலமைச்சராக உள்ள திரு. டி.கே. சிவகுமார் அவர்கள் கர்நாடக சட்டமன்றப் பேரவைக்கு எட்டு முறை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது தெரியாமல், பல ஆண்டு காலம் அமைச்சராக இருந்தவர் என்பது தெரியாமல், ஓராண்டு காலம் நீர்ப்பாசனத் துறை அமைச்சராக இருந்தவர் என்பது தெரியாமல், மேகதாது பற்றிய முழு விவரத்தை அதிகாரிகள் சொல்லி இருக்கமாட்டார்கள் என்று நீர்வளத் துறை அமைச்சர் சொல்வதில் இருந்து யார் விவரம் அறிந்தவர், யார் விவரம் அறியாதவர் என்பதையும், கர்நாடக மாநில துணை முதலமைச்சர் வேண்டுமென்றே மேகதாது அணைத் திட்டம் குறித்து பேசியிருக்கிறார் என்பதையும் அறிவார்ந்த தமிழ்நாட்டு மக்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள்.'

'கர்நாடக மாநில துணை முதலமைச்சர் அவர்கள் ஏதோ விவரம் தெரியாமல் பேசியிருக்கிறார் என்ற தொனியில் மான்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை நகைப்புக்குரியதாக உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் மேகதாது அணைத் திட்டம் முற்றிலுமாக கைவிடப்பட வேண்டும் என்பதுதான் அனைத்துக் கட்சிகளின் நிலைப்பாடு.'
'தமிழ்நாட்டில் நடைபெறுவது தி.மு.க. ஆட்சி, கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெறுகிறது. கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி வர பாடுபட்ட தமிழ்நாடு முதலமைச்சர், மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர வேண்டும் என்று பாடுபட்டுக் கொண்டிருக்கின்ற தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கர்நாடக அரசிடம் பேசியும், காங்கிரஸ் மேலிடத்தில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி கர்நாடக அரசுக்கு தேவையான அழுத்தத்தைக் கொடுத்தும், சட்டத்திற்கு புறம்பான மேகதாது அணை திட்டத்தை கர்நாடக அரசு கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு இசையலில்லை என்றால், காங்கிரஸ் கட்சியுடனான உறவை முறித்துக் கொள்வோம் என்று எச்சரிக்கை விடுத்து, தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்,' என்று தெரிவித்துள்ளார்.
- மேகதாது அணை கட்டினால் தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் என்பதையும் எடுத்துக் கூறியுள்ளேன்.
- மேகதாது விவகாரத்தில் நிர்வாகத் திறனற்ற தி.மு.க. அரசை நம்பி எந்த பிரயோஜனமும் இல்லை.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகாவின் முந்தைய அரசு, மேகதாதுவில் அணை கட்ட முயற்சி எடுத்தபோது, எனது தலைமையிலான அம்மாவின் அரசு சட்ட ரீதியாகவும், மத்திய அரசோடும் பேச்சுவார்த்தை நடத்தி அணை கட்டுவதை தடுத்து நிறுத்தியது.
மேலும், நான் முதலமைச்சராக இருந்த போதும், தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போதும், பாரதப் பிரதமர் அவர்களை நேரில் சந்திக்கும்போதெல்லாம் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் முயற்சிகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்ததோடு, அவ்வாறு அணை கட்டினால் தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் என்பதையும் எடுத்துக் கூறியுள்ளேன்.
பன்மாநில நதிநீர் தாவாச் சட்டம் 1956-ன்படி, நதிநீரை தடுப்பதற்கோ அல்லது திசை திருப்புவதற்கோ எந்த மாநிலத்திற்கும் உரிமை கிடையாது என்று தெள்ளத்தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், காவிரி நடுவர் மன்றம் அதன் இறுதி ஆணையில், எந்த ஒரு திட்டத்தினையும் செயல்படுத்தும் முன்னரே, கீழ்ப்பாசன மாநிலங்களின் ஒப்புதலைப் பெற வேண்டும் என தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.
மேகதாது விவகாரத்தில் இந்த நிர்வாகத் திறனற்ற தி.மு.க. அரசை நம்பி எந்த பிரயோஜனமும் இல்லை. மேகதாதுவின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக மாநில காங்கிரஸ் அரசின் முயற்சியை கடுமையாகக் கண்டிப்பதோடு, தமிழகம் வறண்ட பாலைவனமாக மாறாமல் தடுக்க, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அனைத்துப் போராட்டங்களையும் முன்னெடுக்கும் என்று கர்நாடக மாநில அரசை எச்சரிக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- துணை முதல்-மந்திரி சிவக்குமார் மேகதாது அணை கட்டப்படும் என உறுதியாக கூறியுள்ளார்.
- தமிழக உரிமைகளுக்கு எதிராக கர்நாடகா, கேரளா செயல்பட்டாலும் அது குறித்து முதலமைச்சர் எதிர்க்கவில்லை.
தூத்துக்குடி:
பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தூத்துக்குடியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடகா மேகதாதுவில் அணை கட்டுவதை கர்நாடகாவில் வைத்தே நான் எதிர்த்தேன். அம்மாநில துணை முதல்-மந்திரி சிவக்குமார் மேகதாது அணை கட்டப்படும் என உறுதியாக கூறியுள்ளார். இதுகுறித்து தமிழக காங்கிரசார் வாய் திறக்கவில்லை.
தமிழக உரிமைகளுக்கு எதிராக கர்நாடகா, கேரளா செயல்பட்டாலும் அது குறித்து முதலமைச்சர் எதிர்க்கவில்லை. அவர் தமிழக உரிமைகளை விட்டு கொடுத்து வருகிறார்.
மேகதாது அணை கட்டுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். அப்படி இல்லை என்றால் அதனை நாங்கள் தடுத்து நிறுத்துவோம். அந்த ஆற்றல் எங்களுக்கு உண்டு.
அமைச்சர் பொன்முடி ஓசி பயணம் என்றும், வடக்கன்ஸ் என்றும் பேசி வருகிறார். அவர் அமைச்சராக நீடிக்க தகுதியை இழந்துவிட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ்நாடு அமைச்சர்கள் கர்நாடகாவின் மேகதாது அணை கட்டும் முயற்சிக்கு கடும் கண்டனமும் தெரிவித்துள்ளனர்.
- வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவே அணை கட்டப்படுகிறது என டிகே சிவக்குமார் பேச்சு
கர்நாடக அரசு மேகதாது என்னுமிடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு நீண்டகாலமாக முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழகம் தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது ஆட்சிமாற்றம் ஏற்பட்டு காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றி உள்ள நிலையில், தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிப்படி மேகதாது அணை கட்டுவதற்கான முயற்சியை தொடங்கி உள்ளது.
தற்போதைய துணை முதல்வரான டி.கே.சிவகுமார், நீர்வளத்துறை அமைச்சராகவும் இருக்கிறார். நீர்வளத்துறை அதிகாரிகளுடனான முதல் ஆலோசனைக் கூட்டத்திலேயே, மேகதாது அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் அறிவித்தார். இதற்கு தமிழ்நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அமைச்சர்கள் கர்நாடகாவின் மேகதாது அணை கட்டும் முயற்சிக்கு கடும் கண்டனமும் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டின் இந்த எதிர்ப்பு தொடர்பாக டி.கே.சிவக்குமார் கூறுகையில், மேகதாது அணை கட்டும் விஷயத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்றார்.
'தண்ணீருக்காக நாங்கள் பாதயாத்திரை மேற்கொண்டோம். வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவே அணை கட்டப்படுகிறது. தமிழ்நாடு இந்த விவகாரத்தை சகோதரத்துவத்துடன் அணுக வேண்டும். மேகதாதுவில் அணை கட்டுவதால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது. அணையால் தமிழகத்திற்கு அதிக பயன் உள்ளது. உரிய நேரத்தில் அவர்களுக்கு அளிக்கப்பட்ட பங்கீடு நீர் கிடைக்கும்' என்று டி.கே.சிவக்குமார் கூறியிருக்கிறார்.
ஆனால் தமிழகம் தரப்பில் இந்த விளக்கத்தை ஏற்க தயாராக இல்லை. அணை கட்டும் முயற்சியை தடுப்பதில் அனைத்து கட்சிகளும் ஒருமித்த கருத்துடன் உள்ளன. இந்த விஷயத்தில் கர்நாடக அரசுடன் தமிழக அரசு மோதலுக்கு தயாராகிவிட்டது. இதன் காரணமாக மேகதாது அணை விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.