என் மலர்
நீங்கள் தேடியது "Nagercoil"
- முட்டை வழங்குவது தொடர்பாக மோதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
- அரை மணிநேர தாமத்திற்கு பிறகு விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டுச் சென்றது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு பல்வேறு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில்களில் பயணிகளின் வசதிக்காக உணவு தயாரித்து வழங்கும் பெட்டிகள் (பேண்டரி கார்) இணைக்கப்பட்டு இருக்கும்.
இந்த பிரிவில் பணியாற்றும் ஊழியர்கள், ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளிடம் ஆர்டர் பெற்று உணவு தயாரித்து வழங்கி வருகின்றனர்.
இதேபோல் ரெயில்களில் ஏ.சி. பெட்டியில் பயணம் செய்பவர்களுக்கு உதவ ஊழியர்களும் பணியில் உள்ளனர். இவர்கள் கம்பளி, போர்வை ஆகியவற்றை வழங்கி வருகின்றனர்.
நேற்று கன்னியாகுமரியில் இருந்து அசாம் மாநிலம் திப்ரூகருக்கு மாலை 5.25 மணிக்கு விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் அதில் பணியில் இருந்த உணவக ஊழியர் ஒருவருக்கும், ஏ.சி. பெட்டியில் பணியாற்றும் ஊழியருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அவர்கள் பயணிகளை பற்றி கவலைப்படாமல் வார்த்தை மோதல்களில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் ரெயில் 5.40 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. அங்கும் சில பயணிகள் ரெயிலில் ஏறினர். அப்போதும் ஊழி யர்கள் மோதல் நின்ற பாடில்லை. இதனை மற்ற ரெயில்வே பணியாளர்கள் யாரும் கண்டு கொள்ள வில்லை.
தொடர்ந்து நாகர்கோவில் சந்திப்பு நிலையத்தில் இருந்து ரெயில் புறப்பட்டது. ஆனால் சில வினாடிகளில் அந்த ரெயில் நடுவழியில் நின்றது. சந்திப்பு ரெயில் நிலையத்துக்கும், ஊட்டுவாழ்மடம் ரெயில்வே கேட் பகுதிக்கும் இடையே ரெயில் நின்றதால், ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்பு படையினரும், ரெயில்வே போலீசாரும் விரைந்து சென்று ரெயில் நின்றதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது ஓடும் ரெயிலில் மோதலில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு ஆதரவாக அவர்கள் பணிபுரியும் பிரிவைச் சேர்ந்த மேலும் 2 பேர் வந்ததும், அவர்கள் ஒருவருக்கொருவர் கை கலப்பில் ஈடுபடும் சூழல் ஏற்பட்டதாலும் ரெயிலில் பயணம் செய்தவர்களில் சிலர், அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததால் ரெயில் நின்றது தெரியவந்தது.
இது தொடர்பாக மோதலில் ஈடுபட்ட ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். முட்டை வழங்குவது தொடர்பாக மோதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து ஏ.சி. பெட்டியில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் திப்ரூ கரை சேர்ந்த தீப் கோகாய் (வயது28), அயன் கோகாய் (28) மற்றும் உணவக பிரிவில் பணியாற்றும் மேற்கு வஙகாளத்தை சேர்ந்த தபான் மொண்டல் (30), பீகாரை சேர்ந்த கைப் (20) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் பின்னர் கைதான 4 பேரையும் ஜாமீனில் விடுவித்தனர்.
இந்த சம்பவம் காரணமாக சுமார் அரை மணிநேர தாமத்திற்கு பிறகு விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டுச் சென்றது. ரெயிலில் பணி யாற்றிய ஊழியர்கள் மோதல் காரணமாக நடு வழியில் ரெயில் நிறுத்தப்பட்ட சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கோவில் திருவிழாவில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக விஜிகுமார் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
- இந்த கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 5 பேர் தவிர 9 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்
நாகர்கோவில்:
நாகர்கோவில் கோட்டார், பெரியவிளை, பாண்டியன் தெருவை சேர்ந்தவர் சுயம்புலிங்கம். இவரது மகன் விஜிகுமார் (வயது 26).
இவர் கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24-ந் தேதி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக விஜிகுமார் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இது தொடர்பாக இடலாக்குடி பட்டாரியர் தெருவை சேர்ந்த சுரேஷ் என்ற வாழைக்காய் சுரேஷ், பெரியவிளையை சேர்ந்த சுரேஷ், விக்னேஷ், பாஸ்கர், வருண் என்ற வருண் குமார் உள்பட 14 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்டவர்கள் ஜாமினில் விடுதலை ஆனார்கள்.
இது தொடர்பான வழக்கு நாகர்கோவில் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இன்று பட்டாரியர் தெருவை சேர்ந்த சுரேஷ், பெரியவிளையைச் சேர்ந்த சுரேஷ், விக்னேஷ், பாஸ்கர், வருண்குமார் உட்பட 14 பேரும் கோர்ட்டில் ஆஜராகி இருந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜோசப் ஜாய் தீர்ப்பு கூறினார். இதில் இடலாக்குடி பட்டாரியர் தெருவை சேர்ந்த சுரேஷ் என்ற வாழைக்காய் சுரேஷ், பெரிய விளையைச் சேர்ந்த சுரேஷ், விக்னேஷ், பாஸ்கர், வருண் என்ற வருண்குமார் ஆகிய 5 பேருக்கும் ஆயுள் தண்டனையும், ரூ.5ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மீதமுள்ள 9 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
மேலும் பட்டாரியர் தெருவை சேர்ந்த சுரேஷுக்கு கொலை முயற்சி வழக்குக்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. வழிமறித்து தாக்குதல் குற்றத்திற்காக 5 பேருக்கும் ஒரு மாதம் சிறை தண்டனையும், சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்த குற்றத்திற்காக 5 பேருக்கும் ஒரு வருட சிறை தண்டனையும் விதித்து நீதிபதி ஜோசப் ஜாய் தீர்ப்பு கூறினார்.
தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் அவர் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மதியழகன் ஆஜரானார்.
- நாகதோஷம் நீங்க வழிபட வேண்டிய கோவில்கள் பல உள்ளன.
- சர்ப்ப விநாயகர் படம் வைத்து வீட்டிலும் வழிபடலாம்.
நாகதோஷம் நீங்க வழிபட வேண்டிய புராதனக் கோவில்கள் பல உள்ளன. அவற்றில் திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம், கீழப்பெரும்பள்ளம், நாகர்கோவில், திருக்காளகஸ்தி, பேரையூர், நயினார்கோவில், ராமேஸ்வரம், திருச்செங்கோடு போன்றவை முக்கியமானவை. சர்ப்பத்தை அருகில் வைத்திருக்கும் தெய்வங்கள், சர்ப்பத்தை மாலையாக அணிந்துள்ள தெய்வங்கள் வீற்றிருக்கும் ஆலயங்களுக்கும், சர்ப்ப விநாயகர் அருளும் ஆலயங்களுக்கும் சென்று வழிபடலாம். சர்ப்ப விநாயகர் படம் வைத்து வீட்டிலும் வழிபடலாம்.
ஜாதகத்தில் ராகு-கேது ஆதிக்கம் அமைந்தவர்கள், திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், 4, 7, 13, 16, 22, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், ராகு - கேது ஆதிக்க எண்களில் பிறந்தவர்கள் ஆகியோர் ஆதிசேஷனுக்குரிய பெயர்களை வைத்துக் கொண்டால் வாழ்க்கை வளமாகும். செட்டிநாட்டுப் பகுதிகளில் நாகப்பன், நாகம்மை, நாகராஜன், நாகமுத்து, நாகவள்ளி, நாகலிங்கம், நாகா, நாகரத்னம், நாகமணி போன்ற பெயர்களை வைப்பது வழக்கம்.
எண்கணிதப்படி ஆராய்ந்து நாகர் பெயர் வைத்துக் கொண்டால் பெருமை சேரும். எப்படி இருந்தாலும் தோஷங்களிலேயே பெரிய தோஷமாகக் கருதப்படும் நாகதோஷம் ஒருவருக்கு ஜாதகத்தில் இருக்குமானால், முறையாக வழிபாடு செய்வதன் மூலமே முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்க முடியும். சுய ஜாதகத்தின் அடிப்படையில் யோகபலம் பெற்ற நாளை தேர்ந்தெடுத்து, உங்களுக்கு யோகம் தரும் ஆலயங்களில் வழிபாடுவது உகந்தது.
- அய்யா வைகுண்டரின் அவதார தினம்.
- திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வாகன பவனி.
நாகர்கோவில்:
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி ஜெயந்தி நாளான மாசி 20-ந்தேதியை அய்யாவழி மக்கள் அய்யா வைகுண்டரின் அவதார தினமாக கொண்டாடி வருகின்றனர். அதற்கு முந்தைய நாள் ஒவ்வொரு வருடமும் திருச்செந்தூரில் இருந்து நாகர்கோவிலுக்கும், திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கும் வாகன பவனி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு அய்யா வைகுண்டசாமி அவதார தினவிழா வருகிற 3-ந்தேதி (ஞாயிற்றுகிழமை) கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி 2-ந்தேதி திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோவில் வடக்கு வாசலில் இருந்து வாகன பேரணி தொடங்குகிறது. இந்த வாகன பேரணிக்கு வழக்கறிஞர் ஆனந்த் தலை மை தாங்குகிறார். பூஜிதகுரு தங்கபாண்டியன் முன்னி லை வகிக்கிறார்.
இந்த வாகன பேரணி திருவனந்தபுரம் பாறசாலை, நெய்யாற்றின்கரை, மார்த்தாண்டம், தக்கலை மற்றும் வெட்டூர்ணிமடம் வழியாக இரவு நாகர்கோவில் நாகராஜா திடல் வந்தடைகிறது.

அதேபோல் திருச்செந்தூர், செந்தூர் அவதார பதியில் இருந்து மற்றொரு வாகன பவனி நாகர்கோவிலை நோக்கி புறப்படுகிறது. இந்த வாகன பவனிக்கு என்ஜினீயர் அரவிந்த் தலைமை தாங்குகிறார். பூஜிதகுரு சாமி முன்னிலை வகிக்கிறார்.
இந்த வாகன பவனி திருச்செந்தூர், சீர்காய்ச்சி, கூடங்குளம், செட்டிகுளம், அம்பலவாணபுரம், ஆரல்வாய்மொழி வழியாக இரவு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை வந்தடைகிறது.
இதற்கிடையே 2-ந்தேதி மாலை ஆதலவிளை வைகுண்ட மாமலையில், சாமிதோப்பு தலைமைப்பதியிலிருந்து தீபம் கொண்டு சென்று ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சாமி தோப்பு பதியில் இருந்து பூஜிதகுரு ராஜசேகர் தீபம் ஏற்றி கொடுக்கிறார். ஆதல விளை மாமலையில் வழக்கறிஞர் அஜித் தீபம் ஏற்று கிறார்.
திருச்செந்தூர் மற்றும் திருவனந்தபுரத்தில் இருந்து வரும் வாகன பேரணி 2-ந்தேதி இரவு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை வந்தடைகிறது. இதேபோல் மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள நிழல் தாங்கல்களிலிருந்து அவதார தின ஊர்வலத்தில் கலந்துகொள்ள நடை பயணமாக வரும் பக்தர்கள் வருகிற 2-ந்தேதி இரவு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை வந்தடைகின்றனர்.
பின்னர் நாகராஜா கோவில் மண்டபத்தில் அய்யாவழி சமய மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டிற்கு பூஜிதகுரு ராஜசேகரன் தலைமை தாங்குகிறார். ஆனந்த், அரவிந்த், அஜித் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
அய்யா வைகுண்டசாமி 192-வது அவதார தின விழா ஊர்வ லம் 3-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) காலை 6 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் இருந்து சாமிதோப்பை நோக்கி புறப்படுகிறது.
ஊர்வலத்திற்கு பூஜிதகுரு. சாமி தலைமை தாங்குகிறார். ஆனந்த், அரவிந்த், அஜித் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். நாகராஜா திடலில் இருந்து தொடங்கும் ஊர்வலம் கோட்டார், இடலாக்குடி, சுசீந்திரம், வழுக்கம் பாறை, ஈத்தங்காடு, வடக்குத்தாமரைகுளம் வழியாக சாமிதோப்பு தலை மைப்பதியை வந்தடைகிறது. ஊர்வலத்தில் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.
அய்யா வைகுண்டர் அவதார தினத்தையொட்டி 2-ந்தேதி மதியம் முதலே சாமிதோப்பு பதிக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். அய்யா வைகுண்டர் அவதார தின மான 3-ந்தேதி காலையில் சாமிதோப்பு முழுவதும் அய்யாவழி பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழியும். எனவே பதி நிர்வாகம் சார்பில் பல்வேறு அடிப் படை வசதிகள் செய்யப் பட்டு வருகிறது.
- குளோரின் கலனில் இருந்து திடீரென வாயு கசிந்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- மீட்புப்பணிக்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் 2 பேர் மயக்கம் அடைந்தனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகராட்சிக்கு சொந்தமான குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தண்ணீர் சுத்திகரிப்புக்கான குளோரின் கலனில் இருந்து திடீரென குளோரின் வாயு கசிந்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து குளோரின் கசிவால் 3 பேர் மயக்கம் அடைந்தனர். அவர்களை மீட்ட சக பணியாளர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும் தகவல் அறிந்து மீட்புப்பணிக்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் 2 பேர் மயக்கம் அடைந்தனர்.
இதையடுத்து குளோரின் வாயு கசிவு நிறுத்தப்பட்டதால் சிறிது நேரத்தில் சகஜ நிலை ஏற்பட்டது.
- வெள்ளப்பெருக்கின் காரணமாக தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது.
- சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் முழுவதும் கொட்டி தீர்த்து வரும் கனமழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது. இந்த நிலையில் நேற்று காலையிலும் சாரல் மழை பெய்து வந்த நிலையில் மதியம் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதையடுத்து மலையோர கிராமங்களில் மக்கள் உஷார் படுத்தப்பட்டனர். பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மலையோர பகுதியான குற்றியாறு, மோதிரமலை, தச்ச மலை பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.
இதனால் அங்குள்ள தரைபாலத்தை மூழ்கடித்து தண்ணீர் சென்றது. இதனால் 12 மலையோர கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர். காளிகேசம் பகுதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் டெம்போவில் வந்த தொழிலாளர்களை காட்டாற்று வெள்ளம் இழுத்துச்சென்றது. டெம்போவில் சிக்கி தவித்த தொழிலாளர்களை வனத்துறையினர் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும் கனமழை கொட்டியதையடுத்து பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்தது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையில் இருந்து நேற்று மாலை உபரிநீர் திறக்கப்பட்டது.
இரு அணைகளில் இருந்தும் 4,008 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டதால் குழித்துறை ஆறு, கோதை ஆறு, வள்ளியாறு, பரளி ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. குழித்துறை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது.

கோதை ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. திற்பரப்பு அருவியை மூழ்கடித்து தண்ணீர் கொட்டுவதால் அங்குள்ள சிறுவர் பூங்காவை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது. இதனால் அருவியல் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அதற்கான அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டதையடுத்து அங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 45.70 அடியாக இருந்தது.
அணைக்கு 3,511 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து மதகுகள் வழியாக 636 கன அடி தண்ணீரும், உபரிநீராக 3,008 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.27 அடியாக உயர்ந்தது. அணைக்கு 2,123 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையிலிருந்து 1000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. முக்கடல் அணை நீர்மட்டம் 20.90 அடியாக உயர்ந்துள்ளது. அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் அணைகளை கண்காணித்து வருகிறார்கள்.
அணைகளுக்கு வரும் தண்ணீருக்கு ஏற்ப தண்ணீரை திறந்துவிட நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் ஆற்றின் கரையோர பகுதி மக்கள் மறுஅறிவிப்பு வரும் வரை பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் நேற்றும் 4 வீடுகள் இடிந்து விழுந்துள்ளது.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை 28.8,
பெருஞ்சாணி 32.4,
சிற்றார் 1-16.4,
சிற்றார் 2-18.2,
கன்னிமார் 6.2,
கொட்டாரம் 3,
மயிலாடி 4.8,
நாகர்கோவில் 5.4,
பூதப்பாண்டி 12.4,
முக்கடல் 10.4,
பாலமோர் 52.4,
தக்கலை 10,
குளச்சல் 5,
இரணியல் 6,
அடையாமடை 21,
குருந்தன்கோடு 3.8,
கோழிப்போர்விளை 12.4,
மாம்பழத்துறையாறு 6.4,
களியல் 18.6,
குழித்துறை 12.4,
புத்தன் அணை 29.2,
சுருளோடு 6.2,
ஆணைக்கிடங்கு 5,
திற்பரப்பு 14.8,
முள்ளங்கினாவிளை 14.8.
- ரெயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக வக்கீல்கள் அறிவித்திருந்தனர்.
- போலீசாருக்கும் வக்கீல்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
நாகர்கோவில்:
நாட்டில் அமலுக்கு வந்துள்ள மாற்றி அமைக்கப்பட்ட 3 குற்றவியல் வழக்குகளை வாபஸ் பெற கோரியும், மத்திய அரசை கண்டித்தும் வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குமரி மாவட்டத்திலும் நாகர்கோ வில், பூதப்பாண்டி, குழித்துறை, தக்கலை, இரணியல் கோர்ட்டுகளில் வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இன்று நாகர்கோவிலில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக வக்கீல்கள் அறிவித்திருந்தனர். இதையடுத்து நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நாகர்கோவில் கோர்ட்டில் இன்று காலை வக்கீல்கள் திரண்டனர்.
சங்கத் தலைவர் அசோக் குமார் மற்றும் மூத்த வக்கீல் பால ஜனாதிபதி, வெற்றி வேல், மரியஸ்டீபன், குழித்துறை வக்கீல்கள் சங்கத் தலைவர் சுரேஷ், பூதப்பாண்டி வக்கீல்கள் சங்க தலைவர் ரெஜினால்டு, இரணியல் வக்கீல்கள் சங்க தலைவர் பெஸ்லி பத்மநாபபுரம் வக்கீல்கள் சங்க தலைவர் பொன்ராஜ் உட்பட 300-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் ரெயில் நிலையம் நோக்கி புறப்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
ஆனால் கோர்ட்டில் இருந்து வக்கீல்கள், ஊர்வலமாக வேப்பமூடு வழியாக அண்ணா பஸ் நிலையம் வந்தனர். அவர்க ளை போலீசார் ரோட்டின் நடுவே பேரிகார்டுகள் வைத்து தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாரின் தடுப்புகளை மீறி வக்கீல்கள் செல்ல முயன்றனர்.
போலீசார் அவர்களை தடுத்ததால் நடுரோட்டில் அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். அதை தொடர்ந்து மீண்டும் வக்கீல்கள் தடுப்புகளை மீறி ரெயில் நிலையம் நோக்கி செல்ல முயன்றனர். போலீ சார் அவர்களை தடுத்து நிறுத்திய போது போலீசாருக்கும் வக்கீல்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ரோட்டில் வைக்கப்பட்டி ருந்த பேரிகார்டுகளை தூக்கி வீசிவிட்டு வக்கீல்கள் மீண்டும் அங்கிருந்து தடையை மீறி ஊர்வலமாக சென்றனர். கோட்டாறு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியின் முன்பகுதியில் மீண்டும் போலீசார் பேரிகார்டுகளை சாலையின் நடுவே வைத்து தடுத்து நிறுத்தினார்கள்.
போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கு மேற்பட்ட வக்கீல்களை போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டத்தில் நாகர்கோவில் வழக்கறிஞர்கள் மட்டுமின்றி பூதப்பாண்டி, இரணியல், குழித்துறை, தக்கலை பகுதிகளை சேர்ந்த வக்கீல்கள்களும் கலந்து கொண்டனர். வக்கீல்கள் போராட்டம் காரணமாக நாகர்கோவில் மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் தவிப்பிற்கு ஆளானார்கள்.
- அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று தடை.
- வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. மேலும் தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இவை காரணமாக இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக வட தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும்.
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று முதல் 18-ந் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்திலும், இடையிடையே 65 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் குமரி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்திருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டிருப்பதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது.
- பிரதமர் மோடி 31ந்தேதி காணொலி மூலம் தொடங்கி வைக்க உள்ளார்.
- சென்னை சென்ட்ரலில் தொடக்க விழா நடைபெற உள்ளது.
சென்னை:
சென்னை எழும்பூர்-நாகர்கோவில் இடையேயும் மதுரை-பெங்களூர் இடையேயும் வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி வருகிற 31ந்தேதி காணொலிக்காட்சி மூலமாக தொடங்கி வைக்க உள்ளார். சென்னை சென்ட்ரலில் இருந்து இந்த வந்தேபாரத் ரெயில் சேவை தொடக்க விழா நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பாக ரெயில்வே நிர்வாகம் ஆலோசனை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், இந்த இரண்டு ரெயில்கள் இயக்கப்படும் நேரம், நின்று செல்லும் ரெயில் நிலையங்கள் விவரம் உள்பட பல்வேறு தகவல்களை ரெயில்வே வாரியம் வெளியிட்டுள்ளது.

சென்னை எழும்பூர்-நாகர்கோவில் இடையே வந்தேபாரத் ரெயில் சேவை (20627-20678) வாரத்தில் புதன்கிழமை தவிர 6 நாட்கள் இயக்கப்படும். இந்தரெயில் எழும்பூரில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு, நாகர்கோவிலை அதேநாள் மதி யம் 1.50 மணிக்கு அடையும்.
மறுமார்க்கமாக, இந்த ரெயில் நாகர்கோவிலில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு, அதே நாள் இரவு 11 மணிக்கு எழும்பூர் ரெயில் நிலையத்தை வந்தடையும்.
இந்த ரெயில் தாம்பரம், விழுப்பு ரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயிலில் 16 பெட்டிகள் சேர்க்கப்பட உள்ளன.
மதுரை-பெங்களூரு கண்டோன்மெண்ட் இடையே வந்தே பாரத் ரெயில் சேவை (20671-20672) வாரத்தில் செவ் வாய்க்கிழமை தவிர 6 நாட்கள் இயக்கப்பட உள்ளன.
இந்த ரெயில் மதுரையில் இருந்து அதிகாலை 5.15 மணிக்கு புறப் பட்டு, அதே நாள் மதியம் 1 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்ட்டை அடையும்.
மறுமார்க்கமாக, இந்த ரெயில் பெங்களூரு கண் டோன்மெண்ட்-ல் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு, அதேநாள் இரவு 9.45 மணிக்கு மதுரையை சென்றடையும்.
இந்தரெயில் மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயிலில் 8 பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.
இவ்வாறு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- காமராஜர் படிப்பகத்தில் சிலை நிறுவ கோரிக்கை வைத்த நிர்வாகிகள்.
- தனது சொந்த செலவிலேயே காமராஜர் சிலையை நிறுவினார்.
நாகர்கோவில் பள்ளிவிளையில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் படிப்பகத்தில் பெருந்தலைவரின் சிலை நிறுவ வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியினர் மற்றும் படிப்பக நிர்வாகிகள் கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் எம்பி யிடம் கோரிக்கை வைத்தனர்.
இதனை நிறைவேறும் விதமாக விஜய்வசந்த் எம்பி தனது சொந்த செலவிலேயே காமராஜர் வெண்கல சிலையை நிறுவி அதனை அவரது தலைமையிலேயே திறந்து வைத்தார்.
இந்த விழாவில் நாகர்கோவில் மாநகர மேயர் ரெ. மகேஷ், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் நவீன் குமார், மாநகராட்சி மண்டல தலைவர் ஜவஹர், காங்கிரஸ் கட்சியின் மண்டல தலைவர் செல்வன், மாமன்ற உறுப்பினர் அனுஷா பிரைட் மற்றும் காங்கிரஸ் திமுக நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- முதல்வர் சிறப்பான திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருகிறார்.
- மீனவர் நலனில் எப்போதும் உறுதியாக இருப்பவர் முதல்வர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உலக மீனவ தினவிழா பொதுக்கூட்டம் நடந்தது. பொது கூட்டத்தில் பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

விழாவில் பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேசியதாவது:-
மீனவ மக்களுக்காக ராமநாதபுரத்தில் வரலாற்று சிறப்புமிக்க மீனவர் மாநாடு நடத்தியவர் முதல்வர். சென்னையில் வெள்ளம் வந்த போது ஒரே நாளில் வெள்ளத்தை அகற்றி மின்சாரம் வழங்கியவர் நமது முதல்வரின் ஆட்சி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மீன்பிடி தடைக்கால நிவாரண நிதியை 5 ஆயிரத்தில் இருந்து 8 ஆயிரமாக உயர்த்தி தந்தவர் முதல்வர் தான். மீனவர் நலனில் எப்போதும் உறுதியாக இருப்பவர் முதல்வர் தான் அதனை செயல்படுத்தியும் காட்டியுள்ளார்.
சாதி மதமின்றி இயங்கும் ஒரு இயக்கமாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆனாலும் சரி, திராவிட முன்னேற்ற கழகமானலும் சரி திராவிட கட்சிகள் தான் தமிழகத்தை ஆள வேண்டும் என்று நிர்பந்தம் உள்ளது. முதல்வர் சிறப்பான திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருகிறார்.
மீனவர் மீது அக்கறை உள்ளவர்கள் என இந்தியாவில் வேண்டுமானால் காங்கிரஸ் கட்சி என கூறலாம் ஆனால் தமிழகத்தில் தி.மு.க. தான் என்பதனை நீங்கள் உணர வேண்டும். மத்திய அரசோடு இணக்கமாக இருக்க வேண்டும். ஆனால் 1 ரூபாய்க்கு 29 பைசா தரும் மத்திய அரசு நமக்கு வேண்டாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் விழாவில் கலந்து கொண்ட தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசும் போது,
`பா.ஜ.க. கடல் தாமரை மாநாடு நடத்தி மோடி ஆட்சிக்கு வந்தால், மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது, படகுகள் இலங்கை அரசால் சிறை பிடிக்கப்படாது, அதையும் மீறி பிடித்தாலே பாதுகாப்புக்கு இந்திய ராணுவம் வந்து நிற்கும் என்றார்கள்.
ஆனால் 10 ஆண்டுகளாக வாக்குறுதியை காட்டில் பறக்கவிட்டு விட்டார்கள். மீனவர் தினம் கொண்டாடும் இந்நாளில் ஒரு பக்கம் கண்ணீரும் கம்பலையுமாக மீனவர்கள் உள்ளார்கள். மீனவர்கள் தான் பூர்வ குடிகள், மண்ணின் மக்கள்.

மீனவர்களை ஓரளவு தாங்கி பிடிப்பது தமிழகம் தான். ஆனால் இது போதாது அதிக பிரதிநிதித்துவம் வேண்டும். மீனவர்கள் விவகாரத்தில் வெளியுறவுக் கொள்கை தோல்வி அடைந்துள்ளது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்படுவது தொடர்கிறது' என்றார்.
விழாவில் மேயர் மகேஷ், மீனவர் அணி மாநில செயலாளர் ஜோசப் ஸ்டாலின், பிஷப் நசரேன் சூசை, டன்ஸ்டன், நிக்சன், மற்றும் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவின் இறுதியில் பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு வீர வாள் பரிசாக வழங்கப்பட்டது.
- முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் கிடந்த பார்சலை கைப்பற்றினர்.
- கஞ்சாவை கடத்தி வந்தது யார்? என்பது குறித்து விசாரணை.
நாகர்கோவில்:
புனேவில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்த மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு கன்னியாகுமரி ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. பின்னர் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் உள்ள யார்டுக்கு கொண்டு வரட்டது. அப்போது ரெயிலை சுத்தம் செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
முன்பதிவு செய்யப்படாத பெட்டி ஒன்றில் பார்சல் ஒன்று கிடந்தது. அதை எடுத்து பார்த்தபோது காக்கி கவரில் 8 பார்சல் இருந்தது. இது குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கும், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்ஜெயபால், ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் செரியன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் கிடந்த பார்சலை கைப்பற்றினர்.
அந்த பார்சல்களை சோதனை செய்தபோது கஞ்சா பொட்டலங்கள் என்பதும், அதில் 8 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட கஞ்சா பொட்டலங்களை நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட 8 கிலோ கஞ்சா பொட்டலங்களையும் மதுவிலக்கு போலீசில் ஒப்படைத்தனர்.
மதுவிலக்கு போலீசார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கஞ்சாவை கடத்தி வந்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்புதான் திப்ரூகரில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்த ரெயிலில் கடத்தி வந்த 13 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்தநிலையில் தற்போது 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.