என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nerthikadan"

    • மாரியம்மனின் திருவிழாக்காலங்களில் அக்னிசட்டி ஏந்தி வருவதும் ஒரு சடங்காகும்.
    • பூவோடு எடுப்பதால் சத்ருக்கள் பயம் நீங்குகிறது.

    மாரியம்மனுக்கு பக்தர்கள் செலுத்தும் ஒவ்வொரு நேர்த்திக்கடனிலும் கடவுளுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் ஒரு உன்னதம் மறைந்துள்ளது. அதன்படி இன்று வரை பக்தர்களால் கடைபிடிக்கப்படும் நேர்த்திக்கடன்கள் வருமாறு:-


    மாவிளக்கு போடுதல்

    ரேணுகாதேவி நெருப்பில் வீழ்ந்து எழுந்தவுடன் அவள் பசியைத் தணிக்க அவ்வூர் மக்கள் அவளுக்குக் துளிமாவு என்கிற வெல்லம் நெய் கலந்த பச்சரிசி மாவைக் கொடுத்தனர். அதன் ஞாபகார்த்தமாக மாரியம்மன் திருக்கோயில்களில் மாவிளக்கு ஏற்றி வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர் பக்தர்கள்.

    மாவிளக்கு செய்முறை:

    பச்சரிசியை ஊறவைத்து அரைத்து அத்துடன் வெல்ல சர்க்கரை சேர்த்து பிசைந்து உருண்டையாக உருட்ட வேண்டும். பின்னர் அதன் மத்தியில் குழிவாக செய்து, அக்குழியில் நெய்விட்டு பஞ்ச திரியிட்டு அதன் நான்கு புறமும் சந்தனம் குங்குமமிட்டு, மலர் மாலை சூட்டி அலங்கரிப்பர்.

    இந்த விளக்குகளை 2,4,6 என்றபடி தயார்செய்து அன்னையின் சந்நதியில் ஓரிடத்தை சுத்தம் செய்து, கோலமிட்டு, வாழையிலை போட்டு தேவியை மனதில் தியானித்து தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்ற வேண்டி தீபவிளக்குளை ஏற்றுவர்.

    பழம், தேங்காய், வெற்றிலை பாக்கு நிவேதனப் பொருட்களை வைத்து திருவிளக்குகளுக்கு நிவேதனம் செய்வர். தீபம் மலையேறும் வரை அன்னையின் சந்நதியில் அமர்ந்து பக்திப் பாடல்களைப் பாடுவர்.

    பின்னர் அன்னைக்கு கற்பூர ஆரத்தி செய்து தங்கள் பிரார்த்தனையை நிறைவு செய்வர். உடல் குறை உள்ளவர்கள் தங்கள் நோய் நீங்க வேண்டி, அன்னையின் திருச்சந்நதியில் படுத்துக் கொண்டு தங்களின் வயிற்றுப் பகுதியிலோ அல்லது மார்புப் பகுதியிலோ மாவிளக்கை ஏற்றி வழிபாடு செய்வதுமுண்டு.

    சிலர் மாவிளக்குகளை ஏற்றி அழகான தட்டுகளில் வைத்து அலங்கரித்து தங்கள் தலையில் சுமந்து ஊர்வலமாக எடுத்து வந்து அன்னையின் சந்நதியில் வைப்பர். சிலர் விளக்குகளை அழகாக அலங்கரித்த சப்பரங்களில் வைத்து மேளதாளம் முழங்க எடுத்து வருவர்.

    தீபம் மலையேறியதும் மாவிளக்குகளை ஒன்றாகச்சேர்த்து சிறுசிறு உருண்டைகளாக செய்து அங்குள்ள பக்தர்களுக்கு வழங்குவர். அன்னைக்கு மாவிளக்கேற்றி வழிபட உங்கள் குறைகள் நீங்கி வளமோடு வாழ அன்னை அருள்புரிவாள்.


    பொங்கலிடுதல்

    பொங்கலிடுதலை சில ஊர்களில் ஒரு திருவிழாவாகவே கொண்டாடுவர். பெரும்பாலும் அன்னையின் கோயிலருகிலேயே பொங்கல் செய்வர். சில கோயில்களில் இதற்கென்றே பெரிய இடம் இருக்கும்.

    திருக்கோயிலின் வீதி முழுவதும் அடைத்து பொங்கலிடுவதும் உண்டு. சில கோயில்களில் பொங்கல் வைக்கும் இடத்திற்கு 1 முதல் எண்கள் கொடுத்து பொங்கலிடுபவர்களின் பெயர்களை குலுக்கிப் போட்டு அவர்களை அந்த வரிசையில் பொங்கலிட அழைப்பர்.

    பொங்கலிடும் போது பெரும்பாலும் புதிய மண் பானையை வாங்கி சுத்தப்படுத்தி, மஞ்சள் சந்தனம் குங்குமமிட்டு வேப்பிலை கட்டி அடுப்பிலேற்றி பின் பொங்கல் வைப்பர்.

    பெரும்பாலும் சர்க்கரை பொங்கலே பிதானமாக செய்யப்பட்டாலும், வெண் பொங்கலும் செய்து படையலிடுவர். பொங்கல் தாயாரானதும் அதனைப்பெரிய வாழை இலையில் வைத்து அதனுடன் பலவகைப்பழங்கள், பாக்கு, வெற்றிலை, தேங்காய் எல்லாம் வைத்து அம்மனுக்குப் படைத்து பின் கற்பூரம் ஏற்றி காண்பித்து படையலை நிறைவு செய்வர். பின்னர் அதனை எல்லோருக்கும் விநியோகம் செய்வர்.


    பால்குடம்

    பால்குடம் எடுத்து வந்து அம்பாளுக்கு அபிஷேகம் செய்கிறோம். நம்முடைய சிரசில் பால் குடத்தை வைத்தவுடன் நம் எண்ணங்கள் நம் கபாலம் வழியாக பால் குடத்தின் உள்ளே செல்லும். பின் அந்த பாலை தெய்வத்திற்கு அபிஷேகம் செய்தால் நம் எண்ணங்கள், வேண்டுதல்கள் பால் மூலம் தெய்வத்தை சென்றடையும்.

    இதன் மூலம் தெய்வம் நம் நியாயமான கோரிக்கைகளை ஏற்று அதை நிறைவேற்றுகிறது. பால் குடம் எடுத்து நம் பக்தியை வெளிப்படுத்துவது மிகச் சிறந்த வழிபாடாகும்.


    அக்னி சட்டி / பூவோடு

    மாரியம்மனின் திருவிழாக்காலங்களில் அக்னிசட்டி ஏந்தி வருவதும் ஒரு சடங்காகும். மாரியம்மன் கோயில் திருவிழாவின் ஒரு பகுதியாக தீச்சட்டி எடுத்தல் பரவலாக எல்லா கோயில்களிலும் நடைபெறுகிறது. இதனையே தீசட்டி எடுத்தல் பூவோடு எடுத்தல் என்றும் அழைப்பர்.

    தீச்சட்டி எடுப்பவர் விரதமிருந்து அம்மன் கோயிலிலோ அல்லது அருகில் உள்ள நீர்நிலைகளிலோ ஸ்நானம் செய்து, மஞ்சளாடை உடுத்தி, வேப்பிலையை இடுப்பில் சொருகிக் கொண்டு அம்மன் கோயிலுக்கு வந்து அங்கு தயாராக வைத்திருக்கும், தீச்சட்டியை கையில் வேப்பிலையை வைத்துக் கொண்டு அதற்கு மேல் வைப்பர்.

    தீச்சட்டியானது பக்கவாட்டில் மூன்று துளைகளுடன் இருக்கும் அதன் அடியில் மணல் நிரப்பி, அதில் காய்ந்த மரக்குச்சிகளை இட்டு நெய் ஊற்றி கற்பூரம் ஏற்றி தீயை உண்டாக்குவர். பின்னர் அதனை சுற்றி வறட்டியை அடுக்கி தீயை வளர்ப்பர்.

    தீச்சட்டி எடுப்பவர் கையில் தீச்சட்டியுடன் கோயிலிலிருந்து புறப்பட்டு மேளதாளத்துடன் வீதிவழியாக எல்லோர் வீடுகளுக்கும் செல்வர். அவரை அம்மனாகக் கருதி அவரது பாதங்களைக் கழுவி மஞ்சள் குங்குமம் இட்டு கற்பூரம் காட்டி வழிபடுவர்.

    இறுதியில் மீண்டும் கோயிலுக்கு வந்து அம்மன் முன் தீச்சட்டியை வைத்துவிட்டு அம்மனை கற்பூரம் ஏற்றி வழிபட்டு வீடு திரும்புவர்.

    இவ்வாறு தீச்சட்டி எடுப்பது விழா காலங்களில் மட்டுமல்லாமல் மற்ற நாட்களிலும் அம்மனுக்கு நேர்ந்துகொண்டு செய்வதுண்டு. பக்தனுக்கு நெருப்பு, அனலாகத் தெரிவதில்லை. பூவாக குளிர்கிறது. அதனாலேயே இதனை பூவோடு எடுத்தல் என்று கூறுகிறார்கள்.

    இப்படி பூவோடு எடுப்பதால் சத்ருக்கள் பயம் நீங்குகிறது. விஷ ஜந்துக்களால் ஏற்படும் பயம், இயற்கை சீற்றங்களால் ஏற்படும் உபத்திரவங்கள் நீங்குகின்றன.

    • பொங்கல் பண்டிகை நாளில் மட்டுமே இக்கோவிலின் நடை பகலில் திறந்து இருக்கும்.
    • ஒவ்வொரு திங்கட்கிழமைதோறும் நள்ளிரவு மட்டுமே நடை திறக்கப்படுகிறது.

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ளது பரக்கலக்கோட்டை கிராமம். இங்கு உள்ள பொதுஆவுடையார் கோவில், பிரசித்திபெற்ற சிவன் கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் சிவபெருமான், ஆலமரத்தில் (வெள்ளாலமரம்) வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இந்த கோவில் இறைவனுக்கு மத்தியபுரீஸ்வரர் என்ற பெயரும் உண்டு.

    மற்ற கோவில்களை போல இக்கோவிலின் நடை அனைத்து நாட்களிலும் திறக்கப்படுவது இல்லை. ஒவ்வொரு திங்கட்கிழமைதோறும் நள்ளிரவு மட்டுமே நடை திறக்கப்படுகிறது.

    ஆண்டுதோறும் தை மாதம் 1-ந் தேதி பொங்கல் பண்டிகை நாளில் மட்டுமே இக்கோவிலின் நடை பகலில் திறந்து இருப்பதை காண முடியும். மற்ற நாட்களில் பகலில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவிலின் கதவு முன்பாக வழிபாடு செய்கிறார்கள்.

    ஆடு, கோழி, தேங்காய், நெல் உள்ளிட்ட பொருட்களை பக்தர்கள் இந்த கோவிலுக்கு காணிக்கையாக வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆல மரத்தையே ஆலயமாக போற்றி வணங்கப்படும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் (ஒவ்வொரு திங்கட்கிழமையும்) சோமவார திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த மாதம் (நவம்பர்) 21-ந் தேதி சோம வார திருவிழா தொடங்கியது. விழாவில் வாரந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, மன்னார்குடி, பேராவூரணி, தஞ்சை, ஒரத்தநாடு, திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், நாகப்பட்டினம், முத்துப்பேட்டை, கட்டுமாவடி, சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட பல ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள், பரக்கலக்கோட்டைக்கு இயக்கப்பட்டன.

    பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு தாங்கள் கொண்டு வந்த ஆடு, கோழி, நெல், தேங்காய், உளுந்து, நவதானியங்கள், தென்னங்கன்று, மாங்காய், பலாப்பழம் உள்ளிட்டவற்றை காணிக்கையாக கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்களுக்கு மத்தியபுரீஸ்வரர் வீற்றிருக்கும் ஆலமரத்தின் இலையும், விபூதியும் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாலை 6 மணிக்கு பக்தர்கள் காணிக்கையாக கொடுக்கும் பொருட்கள் பொதுமக்கள் முன்னிலையில் பகிரங்க ஏலம் விடப்பட்டது. நேற்று கடைசி சோம வார திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பல்வேறு பொருட்களை காணிக்கையாக செலுத்தினர். இவை ஏலம் விடப்பட்டன.

    வெளியூரில் இருந்து வருகை தந்த பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானங்கள் வழங்கப்பட்டன.

    இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்து சமய அறநிலையத்துறை தஞ்சை உதவி ஆணையர் நாகையா தலைமையில் பரக்கலக்கோட்டை பொது ஆவுடையார் கோவில் செயல் அலுவலர் வடிவேல் துரை, பரம்பரை அறங்காவலர்கள் ராதா, முரளிதரன், ஊராட்சி மன்ற தலைவர் விநாயகம், மற்றும் பரக்கலக்கோட்டை கிராமவாசிகள், ஊர் பிரமுகர்கள் செய்து இருந்தனர்.

    • ஏழு கங்கையம்மன் ஏழு வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
    • ஆற்று நீரில் ஏழு அம்மன் உருவங்களும் கரைக்கப்பட்டன.

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள ஏழு கங்கையம்மன் கோவில் திருவிழா நேற்று நடந்தது. ஏழு கங்கையம்மன்களான பொன்னாலம்மன், முத்தியாலம்மன், காவம்மன், அங்கம்மன், கருப்பு கங்கையம்மன், அங்காளம்மன், புவனேஸ்வரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நகரில் ஏழு வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    எழுந்தருளிய இடங்களில் அம்மன்களுக்கு பக்தர்கள் சிறப்புப்பூஜைகள் செய்தும், ஆடு மற்றும் கோழிகளை பலியிட்டும் நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர். பூஜைகள் முடிந்ததும் ஏழு அம்மன்களும் மீண்டும் ஒரே இடத்துக்கு கொண்டு வரப்பட்டு, அந்த இடத்தில் இருந்து ஊர்வலமாக சொர்ணமுகி ஆற்றுக்கு புறப்பட்டனர். ஆற்று நீரில் ஏழு அம்மன் உருவங்களும் கரைக்கப்பட்டன.

    திருவிழாவையொட்டி கோவில் வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. ஆங்காங்கே தோரணங்கள் கட்டுப்பட்டு இருந்தது. அம்மன்கள் ஊர்வலத்தின்போது பக்தர்களுக்கு அசம்பாவிதம் நடக்காமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நகருக்குள் கனரக வாகனங்கள் வராமல் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

    • இந்த ராட்சத அரிவாள் தயாரிக்க 15 முதல் 20 நாட்கள் ஆனது.
    • இந்த அரிவாள் மொத்த எடை 250 கிலோ கொண்டது.

    திருப்புவனத்தில் 10-க்கும் மேற்பட்ட அரிவாள் பட்டறைகள் உள்ளன. இங்கு விவசாய தேவைகளுக்கான மண்வெட்டி, கோடரி, கதிர் அறுக்கும் அரிவாள், வீட்டிற்கு பயன்படுத்தும் அரிவாள், விறகு வெட்ட பயன்படும் அரிவாள், மேலும் இறைச்சி வெட்ட பயன்படும் கத்திகள் உள்ளிட்ட பல பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இது தவிர பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக ராட்சத அரிவாள்களையும் தயாரித்து கொடுக்கின்றனர்.

    இதுகுறித்து 18 அடி நீள அரிவாள் தயாரித்துள்ள சதீஷ்குமார் நாகேந்திரன் கூறியதாவது:-

    எங்களிடம் மதுரை சர்வேயர்காலனி பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் 18 அடி நீளத்திற்கு கோவிலுக்கு நேர்த்திக்கடனாக வழங்க ராட்சத அரிவாள் தயார் செய்ய வேண்டும் என்றனர். அடிக்கு ரூ.2 ஆயிரம் வீதம் கூலி பேசி தயார் செய்துள்ளோம். இந்த ராட்சத அரிவாள் தயாரிக்க 15 முதல் 20 நாட்கள் ஆனது.

    இதில் அரிவாள் 15 அடி உயரத்திலும் கைப்பிடி 3 அடி உயரத்திலும் மொத்த 18 அடி உயரத்தில் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த அரிவாள் மொத்த எடை 250 கிலோ கொண்டது. இந்த ராட்சத அரிவாள் மதுரை அழகர்கோவிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பணசுவாமிக்கு நேர்த்திக்கடனாக வழங்க தயார் செய்துள்ளோம். இந்த அரிவாள் பெரிய சரக்கு வேன் மூலம் கொண்டு செல்லப்பட உள்ளது,

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்த கோவில் சுமார் 600 ஆண்டுகள் பழமையானது ஆகும்.
    • ஒரே நாளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிவாள்கள் நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது.

    திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே முத்துலாபுரம் கிராமத்தில் ஆயிரம் அரிவாள் கோட்டை கருப்பணசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் சுமார் 600 ஆண்டுகள் பழமையானது ஆகும்.

    இந்த கோவிலில் எழுந்தருளி இருக்கும் ஆயிரம் அரிவாள் கோட்டை கருப்பணசாமியிடம், பக்தர்கள் தங்களுடைய குறைகளை தீர்க்கும்படி வேண்டி கொள்வார்கள். அந்த குறைகள் தீர்ந்ததும், கோட்டை கருப்பணசாமிக்கு அரிவாள்களை காணிக்கையாக செலுத்தி வழிபடுகின்றனர்.

    பொதுவாக காணிக்கையாக செலுத்தப்படும் அரிவாள்கள் இரும்பு தகடுகளால் செய்யப்படுவது வழக்கம். ஆனால் ஒருசில பக்தர்கள் தங்கத்திலான அரிவாள்களையும் சாமிக்கு காணிக்கையாக செலுத்துகின்றனர். இதற்காக 5 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பரம்பரை, பரம்பரையாக அந்த ஊரில் அரிவாள் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    பல்வேறு சிறப்புக்கு சொந்தமான இந்த கோட்டை கருப்பணசாமி கோவில் திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் 3-ந்தேதி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா நேற்று நடைபெற்றது.

    இ்தையொட்டி காணிக்கை செலுத்துவதற்கு அரிவாள் செய்யும் பணி கடந்த மார்கழி மாதம் 1-ந்தேதி தொடங்கியது. இதற்காக விரதம் இருந்து தொழிலாளர்கள் அரிவாள் தயாரிப்பில் ஈடுபட்டனர்.

    இதை தொடர்ந்து திருவிழாவில் கோட்டை கருப்பணசாமிக்கு அரிவாள்களை காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்காக அரிவாள் செய்தவர்களின் வீட்டில் மொத்தமாக வைக்கப்பட்டு இருந்த அரிவாள்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    பின்னர் கோவில் சாமியாடிகள், பூசாரிகள் மற்றும் விரதமிருந்த பக்தர்கள் மேளதாளம், வாணவேடிக்கைகள் முழங்க ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக ஆயிரக்கணக்கான அரிவாள்களை ஊர்வலமாக எடுத்து சென்றனர்.

    இந்த ஊர்வலத்தை தொடர்ந்து கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, கோட்டை கருப்பணசாமி கோவிலில் அரிவாள்கள் காணிக்கையாக செலுத்தப்பட்டன. இதில் குறைந்தபட்சம் 2 அடி முதல் 15 அடி உயரம் கொண்ட அரிவாள்கள் இடம்பெற்றிருந்தன.

    இந்த திருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்களும் திரளாக கலந்து கொண்டனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிவாள்கள் பக்தர்களால் நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • பதினெட்டாம்படி கருப்பணசுவாமிக்கு பக்தர்கள் அரிவாள்களை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.
    • பக்தர் ஒருவர் 18 அடி உயரமுள்ள அரிவாளை காணிக்கையாக செலுத்தினார்.

    அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தானியங்கள், காசு, பண முடிச்சு மற்றும் கன்றுகுட்டிகளை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த கோவிலின் காவல் தெய்வமான பதினெட்டாம்படிகருப்பணசுவாமிக்கு பக்தர்கள் சந்தனம், எலுமிச்சம்பழ மாலைகள், பூவண்ண மாலைகள் மற்றும் அரிவாள்களையும் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்,

    இதில் நேற்று ஒரு பக்தர் தனது வேண்டுதல் நிறைவேறியதற்காக, இந்த கோவிலில் 18 அடி உயரமுள்ள அரிவாளை காணிக்கையாக செலுத்தி, சாமி தரிசனம் செய்தார். மேலும் ஏற்கனவே 10-க்கும் மேற்பட்ட அரிவாள்கள் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது அங்கு வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    • 18-ந்தேதி முதல் மார்ச் 21-ந்தேதி வரை 32 நாட்கள் நேர்த்தி நாடகங்கள் நடத்தப்படுகிறது.
    • இந்த கோவிலுக்குள் பெண் பக்தர்கள் செல்வது இல்லை.

    திருப்பரங்குன்றம் அருகே வலையங்குளத்தில் பழமையான தானா முளைத்த தனி லிங்க பெருமாள் கோவில் உள்ளது. பொதுவாக கோவில்களில் கிடாவெட்டுதல், அங்கபிரதட்சனம் செய்தல், அலகு குத்துதல், பால்குடம், பறவை காவடி எடுத்தல், முடிகாணிக்கை செலுத்தல் என்று பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

    ஆனால் தனி லிங்கபெருமாளுக்கு பக்தர்கள் நாடகங்கள் நடத்தி தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவது விசேஷம். நாடகங்கள் நடத்துவதற்காகவே கோவில் வளாகத்தில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

    பக்தர்கள் நேர்த்திக்காக நடத்தக்கூடிய நாடகங்களை வலையங்குளம் கிராம மக்கள் மட்டுமல்லாது சோளங்குருணி, கொம்பாடி உலகாணி நல்லூர், எலியார்பத்தி, பாரப்பத்தி உள்பட பல கிராம மக்கள் கண்டுரசித்து வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சமாக 30 முதல் 70 நாடகங்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் நேர்த்திக்கான நாடகங்கள் நடத்த கோவிலில் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

    இந்த வகையில் இந்த ஆண்டில் 70-க்கும் மேற்பட்ட நாடகங்கள் முன் பதிவு செய்யப்பட்டு இருப்பினும் முத்தாலம்மன் கோவில் திருவிழா கொண்டாடப்படுவதால் 32 நாடங்கள் நடத்துவது என்று ஊர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. வழக்கம்போல வருகிற 18-ந்தேதி மகா சிவராத்திரி முதல் மார்ச் மாதம் 21-ந்தேதி வரை 32 நாட்கள் நேர்த்தி நாடகங்கள் நடத்தப்படுகிறது. இந்த கோவிலுக்குள் பெண் பக்தர்கள் செல்வது இல்லை. கோவில் வாசல் முன்பு நின்று பெண்பக்தர்கள் வழிபடுகின்றனர். பெண் பக்தர்கள் வாசலை தவிர்த்து கோவிலுக்குள் செல்லாதது இந்த கோவிலின் தனி சிறப்பாக கருதப்படுகிறது.

    • அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • விளக்கு பூஜை மற்றும் சாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆரணியில் உள்ள தமிழர் காலனியை சேர்ந்த பக்தர்கள் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தையொட்டி அலகு குத்திக் கொண்டும், வேல் காவடி, பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி எடுத்து கொண்டும், பால் குடங்களை சுமந்து கொண்டும் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சாமி கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்று வழிபடுவர். இந்நிலையில் கடந்த மாதம் 28-ந் தேதி காப்பு கட்டிக்கொண்ட பக்தர்கள் 31-ம் ஆண்டாக பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நேற்று சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு அழகு குத்திக் கொண்டும், காவடிகளை சுமந்து கொண்டும் முருகனுக்கு அரோகரா! கந்தனுக்கு அரோகரா! என்று கோஷம் எழுப்பியவாறு ஊர்வலமாக சென்று வேண்டுதலை நிறைவேற்றினர்.

    முன்னதாக ஆரணி தமிழர் காலனியில் உள்ள கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், விளக்கு பூஜை மற்றும் சாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முருக பக்தர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

    • பல்வேறு இடங்களில் தேங்காய்களை சிதறு காயாக உடைத்தும் அம்மனை வழிபட்டனர்.
    • தேங்காய், பழம், கற்பூரம், ஊதுபத்தி தட்டில் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குண்டம் விழா கடந்த 20-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

    பின்னர் 21-ந் தேதி இரவு பண்ணாரி மாரியம்மன், சருகு மாரியம்மன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். இதையடுத்து அம்மன் வீதி உலா புறப்பட்டது.

    நேற்று முன்தினம் காலையில் இருந்து சிக்கரசம்பாளையம் கிராமம் முழுவதும் அம்மன் வீதி உலா நடைபெற்றது. பின்னர் இரவில் சிக்கரசம்பாளையம் புதூரில் உள்ள மாரியம்மன் கோவிலை அம்மனின் சப்பரம் சென்றடைந்தது.

    இதைத்தொடர்ந்து நேற்று காலை சிக்கரசம்பாளையம் புதூர் பகுதியில் வீதி உலா சென்றுவிட்டு இக்கரை நெகமம் காலனி பகுதியில் உள்ள பட்டத்தரசி அம்மன் கோவிலை அம்மனின் சப்பரம் சென்றடைந்தது. அப்போது ஆண், பெண் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தாரை, தப்பட்டை முழங்க அம்மனுக்கு வரவேற்பு அளித்தனர். மேலும் தேங்காய், பழம், கற்பூரம், ஊதுபத்தி ஆகியவற்றை தட்டில் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.

    பின்னர் அங்கிருந்து அம்மனின் சப்பரம் புறப்படும்போது ஏராளமான ஆண் மற்றும் பெண் பக்தர்கள் சப்பரம் வரும் வழியில் படுத்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர். அப்போது சப்பரத்தை தூக்கி வந்தவர்கள் மற்றும் பூசாரி ஆகியோர் ஒவ்வொரு பக்தர்களையும் தாண்டியபடி அம்மனின் சப்பரத்தை தூக்கி சென்றனர்.

    இதையடுத்து பக்தர்கள் பல்வேறு இடங்களில் தேங்காய்களை சிதறு காயாக உடைத்தும் அம்மனை வழிபட்டனர். பின்னர் அம்மனின் சப்பரம் இரவு வெள்ளியம்பாளையத்தில் உள்ள அம்மன் கோவிலை சென்றடைந்தது. இதைத்தொடர்ந்து அம்மனின் சப்பரம் அங்கு தங்க வைக்கப்பட்டது.

    • ஏப்ரல் 2-ந்தேதி புஷ்ப பல்லாக்கு விழா நடக்கிறது.
    • 9-ந்தேதி கடை ஞாயிறு திருவிழா நடக்கிறது.

    வலங்கைமான் குடமுருட்டி ஆற்றங்கரையில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கிராம வழிபாட்டுதலமாகவும், சக்தி தலமாகவும் போற்றப்படுகிறது. சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமை பாடை காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு பங்குனி திருவிழா கடந்த 10-ந்தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. தொடர்ந்து 12-ந்தேதி முதல் காப்பு கட்டுதல், 19-ந்தேதி 2-ம் காப்பு கட்டுதல் நடந்தது. விழா நாட்களில் தொடர்ந்து அம்மன் வீதிஉலா காட்சி நடைபெற்று வந்தது.

    இந்த கோவிலில் பக்தர்கள் பாடைகாவடி எடுக்கும் நிகழ்வு முக்கிய நிகழ்ச்சியாகும். அதாவது நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அதில் இருந்து குணமடைய, மகா மாரியம்மனை வேண்டிக்கொள்வர். நோயில் இருந்து குணமடைந்தவர்கள் இந்த கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடனாக பாடை காவடி எடுப்பர்.

    அதன்படி பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றும் வகையில் பாடைகாவடி நிகழ்ச்சி நேற்று நடந்தது. முன்னதாக பக்தர்கள் கோவில் அருகே உள்ள குடமுருட்டி ஆற்றிங்கரையில் இருந்து பச்சை ஓலை படுக்கையுடன், பச்சை மூங்கிலால் பாடைகட்டி இறந்தவரை போல படுக்க வைத்து இறந்தவருக்கு செய்யப்படும் அனைத்து இறுதி சடங்குகளையும் செய்வர்.

    பின்னர் அந்த பாடை காவடியை அருகிலுள்ள குடமுருட்டி ஆற்று பகுதியிலிருந்து உறவினர்கள் 4 பேர் தூக்கி வந்து, மகா மாரியம்மன் கோவிலை 3 முறை வலம்வந்து தங்கள் நேர்த்திக்கடனை அம்மனுக்கு செலுத்துவார்கள். நேற்று நடந்த இந்த திருவிழாவில் பாடை காவடி, பால்குடம், பால்காவடி, பறவைக்காவடி, செடில் காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகளை உள்ளூர் மட்டுமின்று, வெளி மாநிலம் மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை மாலையிலிருந்து பக்தர்கள் வருகை அதிகரித்த நிலையில், நேற்று(ஞாயிற்றுக்கிழமை) ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்தனர்.

    முன்னதாக கோவில் கருவறை அம்மனுக்கு பால் அபிஷேகம் மற்றும் பல்வேறு விதமான சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி அன்ன வாகனத்தில் வீதிஉலா நடைபெற்றது. இதில் விசலூர் கிராமத்தில் இருந்து செம்மறி ஆடு கரகம் அழைத்து வரப்பட்டு, கோவில் எதிரே அமைக்கப்பட்டுள்ள செடில் மரத்தில் செம்மரியாடு ஏற்றப்பட்டு 3 முறை வலம் வந்ததன் மூலம் திருவிழா நிறைவடைந்தது.

    நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவை முன்னிட்டு, திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவின் பேரில், நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு இலக்கியா தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பேரூராட்சி தலைவர் சர்மிளா சிவனேசன் மற்றும் செயல் அலுவலர் பரமேஸ்வரி மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் செய்திருந்தனர். மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கும்பகோணம், தஞ்சாவூர், திருவாரூர், திருவையாறு, மன்னார்குடி, மயிலாடுதுறை, பாபநாசம் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

    வருவாய்த்துறை, இந்துசமய அறநிலையத்துறை, தீயணைப்புத்துறை, போலீஸ் துறை, சுகாதாரத்துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தினர் பக்தர்கள் வசதிக்காகவும் பாதுகாப்பிற்காகவும் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டனர்.

    கோவில் மற்றும் சுற்றுப்புற வளாகம் நகரின் முக்கிய பகுதிகளில், கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டது. இதற்கான விரிவான ஏற்பாடுகளை திருவாரூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மணவழகன் தலைமையில், வலங்கைமான் மகா மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் ரமேஷ், தக்கார் ரமணி, மேலாளர் சீனிவாசன் உள்ளிட்ட கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர். தொடர்ந்து அடுத்த மாதம்(ஏப்ரல்) 2-ந்தேதி புஷ்ப பல்லாக்கு விழாவும், 9-ந்தேதி கடை ஞாயிறு திருவிழாவும் நடக்கிறது.

    • பொங்கல் வைத்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
    • ஆகாசராயர் சாமிக்கு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது.

    அவினாசியில் வரலாற்று சிறப்புமிக்க அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் மற்றும் ஆகாசராயர் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் பருவமழை தவறாமல் செய்ய வேண்டும் பொதுமக்கள் சுபிட்சமாக வாழ வேண்டும். தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெறவேண்டும் என்பதற்காக 1000 ஆண்டுகளாக அவினாசியை அடுத்து ராயம்பாளையத்திலிருந்து மண்ணால் உருவாக்கப்பட்டு வண்ணம் தீட்டிய குதிரையை அப்பகுதி மக்கள் ஆண்டுதோறும் சுமந்து வந்து ஆகாசராயர் கோவிலில் வைப்பது வைதீகம்.

    அதன்படி நேற்று ராயம்பாளையத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆகாசராயர் கோவிலுக்கு சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் மண் குதிரையை சுமந்து வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர். இதையடுத்து ஆகாசராயர் சாமிக்கு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. பின்னர் பொங்கல் வைத்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    • தலத்தெருவில், பழமை வாய்ந்த தங்கமாரியம்மன் கோவில் உள்ளது.
    • நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்தி க்கடனை செலுத்தினர்.

    காரைக்கால்:

    காரைக்கால் மாவட்டம் திருதெளிச்சேரி எனும் தலத்தெருவில், பழமை வாய்ந்த தங்கமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோ விலில் ஆண்டுதோறும் சித்திரத் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சித்திரை திருவிழா, கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொ டங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி நாளான நேற்று மாலை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆரா தனைகள் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தங்க மாரியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். முன்ன தாக சந்தன காப்பு அல ங்காரத்தில் அருள்பாலித்த மூலவர் தங்க மாரிய ம்மனுக்கும் உற்சவருக்கும் மகா தீபாரா தனை காட்டப்பட்டது. தீக்குளி அருகே தங்க மாரியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்தி க்கடனை செலுத்தினர். தீமிதியின் போது வான வேடிக்கை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. இதில் கோவில் அறங்காவல் குழுவினர்கள், ஊர் பொது நல சங்கம் மற்றும் இளைஞர் நற்பணி மன்றத்தினர் மற்றும் பெண்கள் குழந்தைகள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

    ×