என் மலர்
நீங்கள் தேடியது "Nitin Gadkari"
- பாராளுமன்ற மக்களவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ளது.
- பா.ஜ.க.வை வீழ்த்தி விட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது.
புதுடெல்லி :
பாராளுமன்ற மக்களவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ளது.
இந்த தேர்தலில் தொடர்ந்து 3-வது முறையாக வென்று ஆட்சியைப் பிடித்து, 'ஹாட்ரிக்' அடிக்க பா.ஜ.க. முனைப்பாக உள்ளது.
ஆனால் இந்த முறை பா.ஜ.க.வை வீழ்த்தி விட வேண்டும் என்று எதிர்க்கட்சிகளை ஒரே அணியில் இணைத்துப் போட்டியிடச்செய்யும் முயற்சியில் ஐக்கிய ஜனதாதளம் தலைவரான பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தீவிரம் காட்டி வருகிறார்
இந்த நிலையில் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பா.ஜ.க. மூத்த தலைவரும், மத்திய சாலை போக்குவரத்து மந்திரியுமான நிதின் கட்காரி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
2024 மக்களவை தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம்.
நாங்கள் நல்ல பணியாற்றி உள்ளோம். பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் அரசு அமைப்போம். நாட்டின் வளர்ச்சிக்காக மக்கள் எங்களை தேர்ந்தெடுப்பார்கள்.
இந்தியாவின் மிகப்பெரிய பிரச்சினைகள் பட்டினி, ஏழ்மை, வேலையில்லா திண்டாட்டம் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நாட்டின் ஜனநாயக வரலாறை நாம் மறக்க கூடாது.
- நாட்டின் எதிர்காலம் சிறப்பாக உள்ளது.
மும்பை :
மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி நேற்று மராட்டிய மாநிலம் பண்டாராவில் நடந்த பிரதமர் மோடி அரசின் 9 ஆண்டு கால அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். விழாவில் அவர், பல ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீகாந்த் சிச்கர் என்ற தலைவர் அவரை காங்கிரசில் சேருமாறு அறிவுரை கூறியதை நிராகரித்தது குறித்து நினைவு கூர்ந்தார்.
இது தொடர்பாக நிதின் கட்காரி பேசியதாவது:-
ஸ்ரீகாந்த் சிச்கர் ஒருமுறை என்னிடம் 'நீ நல்ல கட்சி தொண்டன், தலைவன். நீ காங்கிரசில் சேர்ந்தால் உனக்கு நல்ல எதிர்காலம் உள்ளது' என்றார். நான் அவரிடம், நான் கிணற்றில் குதித்தாலும் குதிப்பேன், காங்கிரசில் சேரமாட்டேன் என்றேன். ஏனெனில் எனக்கு பா.ஜனதா மற்றும் அதன் சித்தாந்தத்தில் அதிக நம்பிக்கை இருந்தது. எனவே அதற்காக தொடந்து உழைப்பேன்.
காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்டது முதல் அந்த கட்சி பல முறை உடைந்து உள்ளது. நமது நாட்டின் ஜனநாயக வரலாறை நாம் மறக்க கூடாது. கடந்த காலம் மூலம் நாம் எதிர்காலத்துக்கு கற்றுக்கொள்ள வேண்டும். தனது 60 ஆண்டுகால ஆட்சியின் போதும் வறுமையை ஒழிப்போம் என காங்கிரஸ் முழங்கி வந்தது. ஆனால் அவர்கள் தங்கள் சொந்த லாபத்துக்காக கல்வி நிறுவனங்களை தான் திறந்தார்கள். பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையால் நாடு பொருளாதாரத்தில் சிறந்த நிலையை அடைந்து உள்ளது. நாட்டின் எதிர்காலம் சிறப்பாக உள்ளது. காங்கிரஸ் 60 ஆண்டுகளில் செய்ததைவிட 2 மடங்கு அதிகமான நலத்திட்ட பணிகளை 9 ஆண்டில் பா.ஜனதா அரசு செய்து உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
- பா.ஜனதா மூன்று முக்கிய பணிகளை வரையறுத்துள்ளது.
- இந்த நாடு அனைவருக்கும் சொந்தமானது.
நாக்பூர் :
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய மந்திரி நிதின் கட்காரி பேசியதாவது:-
பா.ஜனதா மூன்று முக்கிய பணிகளை வரையறுத்துள்ளது. அதில் முதலாவது தேசியவாதம். இது எங்கள் கட்சியின் ஆன்மா. நாட்டின் எல்லை பாதுகாப்பாக இருக்க வேண்டும். மேலும் நாடு பொருளாதார ரீதியாகவும், கல்வி ரீதியாகவும், சமூக ரீதியாகவும் வலுபெற வேண்டும். இரண்டாவது நல்லாட்சி மற்றும் வளர்ச்சியுடன் முன்னேறி சுயசார்புடைய நாடாக மாற வேண்டும் என்பது பா.ஜனதாவின் விருப்பம்.
அதேபோல சமூக, பொருளாதார மற்றும் கல்வியில் பின்தங்கிய மற்றும் தலித்துகளுக்கு சேவை செய்வதே கட்சியின் 3-வது நோக்கம்.இந்த நாடு தனி நபருக்கோ, ஒரு சமூகத்திற்கோ, ஒரு மதத்திற்கோ சொந்தமானது அல்ல. இந்த நாடு அனைவருக்கும் சொந்தமானது. நீதித்துறை, நிர்வாகம், சட்டமன்றம் மற்றும் ஊடகம் ஆகிய 4 தூண்களில் நிற்கும் ஜனநாயகத்தின் தாய் நாங்கள்.
எங்களுக்கு அரசியலமைப்பு என்பது பகவத் கீதை, பைபிள் மற்றும் குரான் போன்றதுபோன்றது. அதன் கொள்கைப்படி நமது சமுதாயத்தை வடிவமைத்தால், அனைவரும் மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் இருக்க முடியும். ஒவ்வொரு தரப்பினரையும் மகிழ்ச்சியடைய செய்ய நாங்கள் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சாலைகளில் எத்தனால் மற்றும் மின்சார வாகனங்கள் அதிகரிக்கும்போது பெட்ரோல் விலையை குறைக்க இயலும்.
- இறக்குமதிக்கு செலவிடப்படும் ரூ.16 லட்சம் கோடி விவசாயிகளின் குடும்பங்களுக்கு வந்து சேரும்.
இந்தியாவில் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை ஆகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வேகமாக குறைந்தும், பல மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைக்கவில்லை. பொதுமக்களை அதிகம் பாதிக்கக்கூடிய இந்த விஷயத்தில் மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுத்து, விலையை குறைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய மந்திரி நிதின் கட்கரி ராஜஸ்தானில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது, பெட்ரோல் விலையை லிட்டருக்கு வெறும் 15 ரூபாய்க்கு கொடுக்க முடியும் என்று கூறினார். ஆனால் இதை சாத்தியமாக்குவதற்கான வழிமுறைகளையும் அவர் தெரிவித்தார். அவர் கூறியதாவது:-
வாகனங்களில் நாம் பயன்படுத்தும் எரிபொருள்களில் 60 சதவீதம் எத்தனாலுக்கு மாறவேண்டும். 40 சதவீதம் மின் பயன்பாட்டிற்கு மாறவேண்டும் (மின்சார வாகனம்). சாலைகளில் எத்தனால் மற்றும் மின்சார வாகனங்கள் அதிகரிக்கும்போது பெட்ரோல் விலையை நம்மால் குறைக்க இயலும்.
இனி விவசாயிகள் உற்பத்தி செய்யும் எத்தனால் மூலமாக வாகனங்கள் இயங்கவேண்டும் என்ற எண்ணத்தில் அரசு இருக்கிறது. வாகன பயன்பாட்டிற்கு சராசரியாக 60% எத்தனால் மற்றும் 40% மின்சாரம் எடுத்துக் கொண்டால், பெட்ரோல் லிட்டருக்கு 15 ரூபாய் என்ற விகிதத்தில் கிடைக்கும். மேலும் மக்களும் பயனடைவார்கள். இது நடைமுறைக்கு வந்தால் மாசுபாடு குறைவதுடன், இறக்குமதிக்கு செலவிடப்படும் ரூ.16 லட்சம் கோடி விவசாயிகளின் குடும்பங்களுக்கு வந்து சேரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதிக்கு அரசு ரூ.16 லட்சம் கோடி செலவிடுகிறது. உள்நாட்டிலேயே எத்தனால் உற்பத்தி மற்றும் தேவையான மின்சாரம் தயாரிக்க முடிந்தால், நாம் எரிபொருட்களுக்காக வெளிநாடுகளை நம்பியிருக்க தேவையில்லை என்பதே அவரது கருத்தாக உள்ளது.
கரும்பு சக்கை, வைக்கோல், கோதுமை போன்றவற்றில் இருந்து எத்தனால் தயாரிப்பதால், அந்த பொருட்களை கொள்முதல் செய்வதன்மூலம் விவசாயிகளின் வருமானம் பன்மடங்கு உயரும். நம் தேவை குறையும்போது கச்சா எண்ணெய்யை குறைந்த விலைக்கு கேட்க முடியும்.
மத்திய மந்திரி நிதின் கட்காரியின் கருத்தின்படி, அனைத்து வாகனங்களும் எத்தனால் மற்றும் மின்சாரத்திற்கு மாறும் நடைமுறைகள் நாடு முழுவதும் செயல்பாட்டிற்கு வரும்போது பெட்ரோல் விலை குறையும்.
அனைத்து வாகனங்களும் மின்சாரம் மற்றும் எத்தனாலுக்கு மாறிவிட்டால், அதற்கு பிறகு ஒருசில பயன்பாடுகளுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் தேவைப்படும். ஒருசிலர் வைத்திருக்கும் பழைய வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் தேவைப்படும். ஆனால் இது நடைமுறைக்கு வர 20-30 ஆண்டுகள் ஆகலாம்.
ஏனென்றால் இந்தியாவில் எத்தனால் மூலம் இயங்கும் முதல் வாகனம் இனிமேல்தான் வர உள்ளது. முதல் வாகனத்தை ஆகஸ்ட் மாதம் நிதின் கட்காரி அறிமுகம் செய்ய உள்ளார். அதன்பிறகு எத்தனால் வாகனங்கள் அதிகரிக்க வேண்டும், மின்சார வாகனங்களும் அதிகரிக்கவேண்டும். அப்போதுதான், பெட்ரோல்-டீசல் தேவை குறைந்து விலை குறையும். அப்படியே குறைந்தாலும், பெரும்பாலான வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் தேவைப்படாது என்பதே நிதர்சனம்.
- நிதி, சேது பாரதம் யோஜனாவின் கீழ் வழங்கப்படுவதாகவும் அதிகாரப்பூர்வ அறிக்கையின் மூலம் தகவல்.
- நிலம் சரியும் இடங்களைக் கண்டறிந்து நிரந்தரத் தீர்வு காணுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு கட்காரி உத்தரவு.
இமாச்சலப் பிரதேசத்தில் தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் சேதமடைந்த சாலைகள் மற்றும் பாலங்களை புனரமைக்க ரூ. 300 கோடி ஒதுக்கீடு செய்வதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதியளித்துள்ளதாக அம்மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் விக்ரனாதித்ய சிங் தெரிவித்துள்ளார்.
இந்த நிதி, சேது பாரதம் யோஜனாவின் கீழ் வழங்கப்படுவதாகவும் அதிகாரப்பூர்வ அறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லியில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை சிங் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். அப்போது, தேசிய நெடுஞ்சாலைகளைச் சுற்றி நிலச்சரிவு ஏற்படும் இடங்களைக் கண்டறிந்து நிரந்தரத் தீர்வு காணுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு கட்காரி உத்தரவிட்டுள்ளதாக சிங் கூறினார்.
மேலும், சமீபத்தில் பெய்த கனமழையால் சேதமடைந்த பாலங்களை சீரமைக்கவும், மாநில பொதுப்பணித்துறை சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளுடன் இணைக்கவும் நிதி வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு கட்கரி உத்தரவிட்டதாக சிங் கூறினார்.
- செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டியதால் 1,040 பேர் உயிரிழந்துள்ளனர்.
- அதிவேகமாக வாகனம் ஓட்டிச் சென்று 40 ஆயிரத்து 450 பேர் பலியாகினர்.
புதுடெல்லி:
சாலை விபத்தில் பலியானவர்களின் விவரங்கள் தொடர்பாக பாராளுமன்ற மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி. ராஜேஷ்குமாரின் கேள்விக்கு மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்து இருந்தார்.
அதில், கடந்த 2021-ம் ஆண்டு மொத்தம் 4 லட்சத்து 12 ஆயிரத்து 432 விபத்துகள் நடைபெற்றது. இந்த விபத்துகளில் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 972 பேர் இறந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிவேக இயக்கம், குடிபோதை, செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுதல் போன்ற போக்குவரத்து விதிமீறல்களால் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 825 விபத்துகள் ஏற்பட்டதாகவும், அதில் 56 ஆயிரத்து ஏழு பேர் இறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிவேகமாக சென்று 40,450 பேரும், செல்போன் பேசியதால் ஏற்பட்ட விபத்தில் 1,040 பேரும் பலியாகியது குறிப்பிடத்தக்கது
- கடந்த 2021-ம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைந்தது.
- கடந்த ஆண்டு ஜூலை மாதம் டெண்டர் விடுவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
சென்னை:
சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை உயர்மட்ட பறக்கும் சாலை அமைக்கும் திட்டம் கடந்த 2009-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், முதலமைச்சர் கருணாநிதி ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது.
கனரக வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்தி விரைவாக துறைமுகத்திற்கு சென்று வர இத்திட்டம் தொடங்கப்பட்டது. இதன்மூலம் சென்னை நகரின் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று கருதப்பட்டது.
இந்தநிலையில் 2011-ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் இப்பணிகள் கிடப்பில் போடப்பட்டன. கூவம் ஆற்றில் தூண்கள் அமைப்பதால் சுற்றுச்சூழல் பிரச்சினை ஏற்படும் எனக்கூறி ஜெயலலிதா இந்த திட்டத்தை முடக்கினார். பின்னர் 10 ஆண்டுகளாக பணிகள் நடைபெறாமல் இருந்தது.
கடந்த 2021-ம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைந்தது. இதையடுத்து மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் மீண்டும் புத்துயிர் பெற்றது.
இத்திட்டத்தை செயல்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட முயற்சிகளால் உயர்மட்ட சாலை அமைக்க தமிழ்நாடு அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை துறைமுக கழகம், இந்திய கடற்படை ஆகியவற்றிக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் டெண்டர் விடுவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ஆனால் பணிகள் மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டதால் தாமதமானது. பின்னர் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் டெண்டர் கோரப்பட்டது. இத்திட்டம் முதலில் ரூ.3,204 கோடியில் செயல்படுத்த முன்மொழியப்பட்டது. ஆனால் உயர்த்தப்பட்ட மேம்பாலம் இரண்டு நிலைகளாக (டபுள் டெக்கர்) மறுவடிவமைப்பு செய்யப்பட்டதால் பின்னர் ரூ.5,721.33 கோடியாக மாற்றப்பட்டது. மேம்பால பணிகள் 4 பகுதிகளாக பிரித்து செயல்படுத்தப்படுகிறது. மேம்பாலத்தின் மொத்த நீளம் 20.565 கி.மீ. ஆகும். இந்த சாலைக்கு சுற்றுச்சூழல், ரெயில்வே துறை, கடலோர ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவற்றிடம் இருந்து அனுமதி பெறப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான உயர்மட்ட வழித்தடத்தின் ஒரு பகுதி இரட்டை தளமாக அமைக்கும் பணி ஒரு மாதத்தில் தொடங்கப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அரசு மேற்கொண்டுள்ள திட்டங்களை ஆய்வு செய்த மத்திய மந்திரி கட்கரி, அனைத்து நெடுஞ்சாலைப் பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதுகுறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கூறுகையில், மேம்பாலம் கட்டுவதற்கான ஒப்பந்ததாரர் இறுதி செய்யப்பட்டுள்ளார். ஆனால் இன்னும் வங்கி உத்தரவாதத்தை சமர்ப்பிக்காததால் பணிக்கான உத்தரவு இன்னும் வழங்கப்படவில்லை. உத்தரவாதத்தை சமர்ப்பித்ததும், வேலை தொடங்கும் என்று தெரிவித்துள்ளது.
மேம்பாலத்தின் ஒரு பகுதி டபுள் டெக்கராக இருக்கும். துறைமுகத்தை நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் மேலே இருக்கும் பாலத்தை பயன்படுத்தும் வகையில் அமைக்கப்படவுள்ளது.
மேல் பாலத்தில் மற்ற வாகனங்கள் உள்ளே நுழையவோ வெளியேறவோ வழிகள் இருக்காது.
முன்னதாக, நுழைவு மற்றும் வெளியேறும் பாதைகள் துறைமுகம் மற்றும் பாலத்தின் முடிவில் மட்டுமே இருக்கும்படி முன்மொழியப்பட்டது. இப்போது, 13 பகுதிகளில் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் வழிகள் வகுக்கப்பட்டுள்ளது.
இந்த மேம்பாலம் துறைமுக வளாகத்தில் தொடங்கி, கோயம்பேடு வரை கூவம் ஆற்றின் கரையில் தொடரும். தொடர்ந்து மதுரவாயல் வரை தற்போதைய பூந்தமல்லி நெடுஞ்சாலையுடன் இணைக்கப்பட்டு மேம்பாலம் அமைய உள்ளது. சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், அமைந்தகரை, நுங்கம்பாக்கம், அரும்பாக்கம் வழியாக மேம்பாலம் செல்லும். மேம்பாலத்திற்கான நிலத்தை அரசு ஏற்கனவே கையகப்படுத்தியுள்ளது.
சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்திடம் இருந்து இதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பறக்கும் சாலை திட்டம் முடிவுக்கு வரும்போது சென்னை துறைமுகம்-மதுரவாயல் இடையே போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.
- டீசல் வாகனங்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
- மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி பரிந்துரை செய்துள்ளார்.
புதுடெல்லி:
இந்தியாவில் டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைக்கும் வகையில் இந்த வாகனங்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி பரிந்துரை செய்துள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், மாசு வரி என்ற பெயரில் டீசல் வாகனங்களுக்கு கூடுதல் ஜி.எஸ்.டி. வரி விதிக்க மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி விளக்கம் அளித்துள்ளார்.
- டீசல் எரிபொருளுக்கு எதிரானவன் அல்ல, டீசல் வாகனங்களுக்கு நாங்கள் எந்த வரியும் விதிக்கப்போவதில்லை.
- மாசுபாட்டைக் குறைக்க மாற்று எரிபொருளில் கவனம் செலுத்துவதே சிறந்த வழி என்பதை தொழில்துறைக்கு பரிந்துரைக்கிறேன்.
புதுடெல்லி:
டெல்லியில் கடந்த 12-ந்தேதி நடைபெற்ற மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் ஆண்டு கூட்டத்தில் மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் "காற்று மாசினை குறைக்கும் வகையில் டீசல் என்ஜின் வாகனங்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்க மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு கோரிக்கை விடுத்துள்ளேன்" என கூறினார். இது சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து டீசல் வாகனங்களுக்கு கூடுதல் வரிவிதிக்கும் திட்டம் அரசிடம் இல்லை என நிதின் கட்காரி விளக்கமளித்தார்.
இந்த நிலையில் டெல்லியில் தனியார் செய்தி சேனலுக்கு பேட்டியளித்த நிதின் கட்காரி இந்த விவகாரம் குறித்து மீண்டும் விளக்கமளித்தார். இதுபற்றி அவர் கூறுகையில், "நான் டீசல் எரிபொருளுக்கு எதிரானவன் அல்ல, டீசல் வாகனங்களுக்கு நாங்கள் எந்த வரியும் விதிக்கப்போவதில்லை. மாசுபாட்டின் பார்வையில், டீசல் மிகவும் ஆபத்தானது. அது உண்மையில் நாட்டில் சுகாதார பிரச்சினையை ஏற்படுத்துகிறது. எனவே மாசுபாட்டைக் குறைக்க மாற்று எரிபொருளில் கவனம் செலுத்துவதே சிறந்த வழி என்பதை தொழில்துறைக்கு பரிந்துரைக்கிறேன்" என கூறினார்.
- மழை சேதத்தால் நெடுஞ்சாலைகளில் குண்டு-குழிகள் உருவாவதால் அது குறித்து கவனம் செலுத்தப்படும்.
- தேசிய நெடுஞ்சாலைகளில் தண்ணீர் தேங்குவது குறித்து புகார்கள் வருகின்றன.
புதுடெல்லி:
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி கூறியதாவது:-
இந்த ஆண்டு இறுதிக்குள், நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளை குண்டு-குழி இல்லாதது ஆக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான கொள்கை உருவாக்கப்படுகிறது.
நெடுஞ்சாலைகளில் பள்ளங்கள் உருவாவதை தவிர்க்கும் வகையில், ஒப்பந்ததாரர்களின் செயல்திறன் அடிப்படையிலும், குறுகிய கால அளவிலும் ஒப்பந்தங்கள் அளிப்பதில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் உறுதியாக உள்ளது.
கட்டி, இயக்கி, மாற்றம் செய்யும் முறையில் நெடுஞ்சாலைகள் நன்றாக பராமரிக்கப்படுவதால் அந்த முறை விரும்பப்படுகிறது. மழை சேதத்தால் நெடுஞ்சாலைகளில் குண்டு-குழிகள் உருவாவதால் அது குறித்து கவனம் செலுத்தப்படும்.
தேசிய நெடுஞ்சாலைகளில் தண்ணீர் தேங்குவது குறித்து புகார்கள் வருகின்றன. அதுதொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
நகராட்சி கழிவுகள் போன்றவற்றை சாலை கட்டுமானத்தில் பயன்படுத்துவது தொடர்பாக மற்றொரு தேசிய கொள்கையை உருவாக்குவது குறித்தும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. கழிவுகளே தற்போது பெரும் பிரச்சினையாக உள்ள சூழலில், இது எல்லோருக்கும் நன்மை பயப்பதாக அமையும். வரும் 2070-ம் ஆண்டு பூஜ்ஜிய கார்பன் வெளியேற்றம் என்ற பிரதமர் மோடியின் இலக்கை நனவாக்கவும் இது உதவும்.
பிரதமர் மோடி துவங்கியுள்ள 'தூய்மையே சேவை' திட்டத்தின்கீழ் பல்வேறு பசுமை முயற்சிகளை நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- புது டெல்லியில் ஒரு சந்திப்பில் நிதின் கட்கரி உரையாற்றினார்
- சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அந்நிறுவனங்கள் விலையை ஏற்றுகின்றன
இந்தியாவின் ஆளும் பா.ஜ.க. அரசாங்கத்தின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருப்பவர் நிதின் கட்கரி (66).
இந்திய தலைநகர் புது டெல்லியில், "க்ரிசில் இந்தியா இன்ஃப்ராஸ்ட்ரக்சர் கான்க்லேவ் 2023" எனும் இந்தியாவின் உள்கட்டமைப்பில் பங்கு பெறும் நிறுவனங்களுக்கான ஒரு சந்திப்பில் அவர் உரையாற்றினார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது;
அரசாங்கம் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதை ஊக்குவித்தாலும் உள்கட்டமைப்பு அமைப்பதில் பங்கு பெறும் நிறுவனங்கள் தற்போதைய தொழில்நுட்பங்களுக்கு மாற தயங்குகின்றன. இதனால் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தனது திட்டங்களுக்கு டிபிஆர் எனும் 'விரிவான திட்ட அறிக்கைகள்' (Detailed Project Reports) தயாரிக்க மிகுந்த சிரமங்களை சந்திக்கின்றன. இது மட்டுமின்றி சிமெண்ட் மற்றும் எக்கு தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களுக்குள் 'ரகசிய கூட்டமைப்பு' ஒன்றை உருவாக்கி விலை குறையாமல் பார்த்து கொள்கின்றன. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அந்நிறுவனங்கள் விலையை ஏற்றுவதையும் வழக்கமாக கொண்டுள்ளன. நிலையின்றி அடிக்கடி உயரும் விலையினால் டிபிஆர் உருவாக்குவது மிக கடினமாக உள்ளது. எங்குமே ஒரு முழுமையான டிபிஆர் உருவாக்கப்படுவதில்லை. தயாரிக்கப்படும் திட்ட அறிக்கைகளிலும் பல தவறுகள் இடம்பெறுகின்றன. சரக்கு போக்குவரத்திற்கான செலவினங்கள் இந்தியாவில் 14லிருந்து 16 சதவீதம் உள்ளது. ஆனால் சீனாவில் 8லிருந்து 10 சதவீத அளவிலேயே உள்ளது. இதனால் திட்டங்களுக்கான செலவுகள் வரையறுக்கப்பட்டதை விட அதிகமாகி விடுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- ஏக்நாத் ஷிண்டே உத்தவ் தாக்கரேயிடம் இருந்து சிவசேனா கட்சியை கைப்பற்றிக் கொண்டார்
- பாலாசாகேப் தாக்கரே உருவாக்கி உத்தவ் தாக்கரேயிடம் ஒப்படைத்ததுதான் உண்மையான சிவசேனா- சுலே
மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி மோதல் ஏற்பட்டு சரத் பவார்- அஜித் பவார் இடையே போட்டி நிலவி வருகிறது. அதற்கு முன்னதாக சிவசேனா கட்சியை உத்தவ் தாக்கரேயிடம் இருந்து, ஏக்நாத் ஷிண்டே கைப்பற்றிக் கொண்டார்.
அம்மாநிலத்தில் பா.ஜனதா- சிவசேனா- தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யும், சரத் பவாரின் மகளுமான சுப்ரியா சுலே கூறியதாவது:-
என்னைப் பொறுத்தவரையில் பா.ஜனதா கட்சியில் உண்மை பேசும் ஒரே நபர் நிதின் கட்கரிதான். அதேபோல் மகாராஷ்டிராவில் ஒரேயொரு சிவசேனாதான். அது மறைந்த பாலாசாகேப் தாக்கரேவால் உருவாக்கப்பட்டது. அவர் உயிரோடு இருக்கும்போது உத்தவ் தாக்கரேயிடம் பொறுப்பை ஒப்படைத்தார். தற்போது அதன் நகல் உள்ளது. ஆனால் மக்களுக்கு தங்கத்திற்கும், வெண்கலத்திற்கும் இடையிலான வேறுபாடு தெரியும்.
இவ்வாறு தெரிவித்தார்.
ஒரு பேட்டியின்போது உண்மையான சிவசேனா குறித்து நிதின் கட்கரி கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக சுப்ரியா சுலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.