என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nuclear Weapons"

    • நம்மிடம் உள்ள ஏவுகணைகள், காட்சிக்காக அல்ல.
    • இன்னும் 10 நாட்களுக்கு தொடர்ந்தால், இந்திய விமான நிறுவனங்கள் திவாலாகிவிடும்

    காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா தளத்தில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர்.

    இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

    இந்த தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது. அதில் முக்கியமாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா விலகியுள்ளது.

    மேலும், பாகிஸ்தானுக்கு பாயும் சிந்து நதியை இந்தியா நிறுத்தியுள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கை போருக்கான அறிவிப்பு என பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி வருகிறது.

    இந்நிலையில், இந்தியாவை தாக்க அணு ஆயுதங்கள் தயாரக இருப்பதாக பாகிஸ்தான் அமைச்சர் ஹனிப் அப்பாசி மிரட்டல் விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது, சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தினால் அந்நாடு போருக்கு தயாராக வேண்டும். நம்மிடம் உள்ள இராணுவ உபகரணங்கள், நம்மிடம் உள்ள ஏவுகணைகள், காட்சிக்காக அல்ல.

    நாடு முழுவதும் நமது அணு ஆயுதங்களை எங்கு வைத்திருக்கிறோம் என்பது யாருக்கும் தெரியாது. நான் மீண்டும் சொல்கிறேன். இந்த அணு ஆயுதங்கள் தாங்கிய ஏவுகணைகள் அனைத்தும் உங்களை (இந்தியாவை) குறிவைக்கின்றன" என்று தெரிவித்தார்.

    மேலும் பாகிஸ்தான் தனது வான்வெளிக்குள் இந்திய விமானங்கள் நுழைவதற்கு தடை விதித்துள்ளது. பாகிஸ்தானின் இந்த முடிவு இந்தியாவில் விமானப் போக்குவரத்து அமைப்பை சீர்குலைத்துள்ளதாகவும், இந்த தடை இன்னும் 10 நாட்களுக்கு தொடர்ந்தால், இந்திய விமான நிறுவனங்கள் திவாலாகிவிடும் என்றும் அப்பாசி கூறினார்.

    பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியா தனது பாதுகாப்புத் தோல்விகளை ஒப்புக்கொள்வதற்குப் பதிலாக பாகிஸ்தானைக் குறை கூறுவதாக அவர் மேலும் குற்றம் சாட்டினார்.

    • அவர் ஈரானுக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் இதனை ஈரான் ஏற்க மறுத்து விட்டது.
    • அரசு கட்டுப்பாட்டில் உள்ள டெஹ்ரான் டைம்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது.

    அணுஆயுத உற்பத்தியில் வளைகுடா நாடுகளில் ஒன்றான ஈரான் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதை அந்நாடு மறுத்து வருகிறது.

    இந்த நிலையில் ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதைத் தடுக்க புதிய ஒப்பந்தத்தைக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சி செய்து வருகிறார்.

    இது தொடர்பாக அவர் ஈரானுக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் இதனை ஈரான் ஏற்க மறுத்து விட்டது. இதனால் ஈரான் அணு ஆயுதம் தொடர்பான ஐ.நா. சபையின் உடன்பாட்டுக்கு வராவிட்டால் ஈரான் மீது பாதுகாப்பு சார்ந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும், ஈரான் மீது அமெரிக்கா குண்டுகளை வீசும் என்றும் டிரம்ப் மிரட்டல் விடுத்தார்.

    மேலும் அந்நாட்டின் மீது 2- வது கட்ட வரி விதிப்புகளை சுமத்த வேண்டி இருக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

    டிரம்பின் இந்த பகிரங்க மிரட்டல் ஈரானை கொதிப்படைய செய்துள்ளது. அவரது இந்த மிரட்டலுக்கு ஈரான் பணியவில்லை.

    அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கும் மறுத்து விட்டது. மாறாக அமெரிக்காவுக்கு எதிராக அதி நவீன ஆயுதங்களுடன் ஏவுகணை தாக்குதல் நடத்த ஈரான் தயாராகி வருவதாக அரசு கட்டுப்பாட்டில் உள்ள டெஹ்ரான் டைம்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது.

    ஈரான், நாடு முழுவதும் தனது நிலத்தடி ஏவுகணை ஆயுதக்கிடங்கை தயார் செய்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டு உள்ளது. கெய்பர், ஹேகான், ஹக் காசெம், செஜ்ஜில், எமாத் உள்ளிட்ட அதி நவீன ஏவுகணைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

    இந்த ஏவுகணைகள் வான்வழி தாக்குதல்களை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளதாக தெரிய வந்துள்ளது. இது தொடர்பான வீடியோக்களை ஈரான் அதிகாரிகள் சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளனர்.

    அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி கொடுக்க தயாராகி வருவது உலக நாடுகள் மத்தியில் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. 

    • ஐ.நா. சபையால் 1957ல் உருவாக்கப்பட்டது சர்வதேச அணுசக்தி அமைப்பு
    • 202.8 கிலோகிராம் மட்டுமே அதிகபட்சமாக வைத்து கொள்ள அனுமதிக்கப்பட்டது

    அணு சக்தியை அமைதி நடவடிக்கைகளுக்கு மட்டுமே உலக நாடுகள் பயன்படுத்த ஐக்கிய நாடுகள் சபையால் 1957ல் உருவாக்கப்பட்டது சர்வதேச அணுசக்தி அமைப்பு.

    மேற்காசிய நாடான ஈரான், அணு சக்தியை அமைதி வழிக்கே பயன்படுத்துவதாக தெரிவித்து வந்தது. ஆனால், சர்வதேச அணு சக்தி அமைப்பு இதனை ஏற்க மறுத்தது. தேவைப்பபட்டால் உடனடியாக அணு ஆயுதங்களை உருவாக்கி கொள்ளும் வகையில் போதுமான அளவு செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் சேமித்து வைத்துள்ளதாக இந்த அமைப்பு கூறி வந்தது.

    2015-இல் உலக நாடுகளுடன் ஈரான் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி அதிகபட்சமாக 202.8 கிலோகிராம் அளவு யுரேனியம் மட்டுமே அந்நாடு சேகரித்து வைத்து கொள்ள அனுமதிக்கப்பட்டு இருந்தது. உலக நாடுகளுடன் ஈரான் செய்து கொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்தை மீறும் விதமாக சில வருடங்களாக அந்நாடு செயல்பட்டு வந்தது.

    இதனால் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதட்டம் நிலவி வந்தது. சமீபத்தில் இதை தணிக்கும் விதமாக இரு நாடுகளும் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டன. அதன்படி, இரு நாட்டின் சிறைகளிலும் உள்ள தங்கள் நாட்டு கைதிகளை பரிமாற்றம் செய்து கொள்ளவும், தென் கொரிய வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்ட ஈரானுக்கு சொந்தமான பல நூறு கோடிகளை விடுவிக்கவும் அமெரிக்கா ஒப்பு கொண்டால், ஈரான் தனது அணு ஆயுத முயற்சிகளை மட்டுப்படுத்தி கொள்வதாக கூறி இருந்தது.

    இந்நிலையில், ஈரானின் அணு சக்தி திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து சமீபத்தில் சர்வதேச அணு சக்தி அமைப்பு ஒரு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, கடந்த பிப்ரவரியில் 87.5 கிலோகிராம் எனும் அளவிலும், பிறகு மே மாதம் 114 கிலோகிராம் எனும் அளவிலும் இருந்த 60 சதவீதம் செறிவூட்டப்பட்ட யுரேனிய சேகரிப்பு, தற்போது 121.6 கிலோகிராம் எனும் அளவிலேயே உள்ளது. ஆக யுரேனிய சேகரிப்பை ஈரான் குறைத்துள்ளதாக இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

    ஒரு அணு ஆயுதத்தை பரிசோதனை செய்ய தேவைப்படும் எந்தவிதமான அணு ஆயுத நடவடிக்கைகளிலும் ஈரான் ஈடுபடவில்லை என அமெரிக்க உளவு அமைப்புகள் கடந்த மார்ச் மாதம் கூறி வந்தன.

    ஆயுத மட்ட அளவிலான யுரேனியம் என்பது 90 சதவீதம் செறிவூட்டப்பட்டதாகும். 60 சதவீதம் செறிவுட்டப்பட்ட யுரேனியம், இதிலிருந்து சற்றே குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரஷியாவை எதிரி என்ற பிம்பத்தை உருவாக்க வேண்டாம்.
    • தலிபான் அரசுடன் நாங்கள் உறவுகளை உருவாக்க வேண்டும்.

    மாஸ்கோ:

    உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்த தொடங்கி 2 ஆண்டுகளை கடந்து விட்டது. இந்த போரில் பொதுமக்கள், வீரர்கள் பலர் கொல்லப்பட்டாலும் இன்னும் சண்டை முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீடித்து வருகிறது.

    உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜெர்மனி,இங்கிலாந்து போன்ற சில ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. ஆயுத உதவியும் செய்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் ரஷியா மீது உக்ரைன் திடீர் தாக்குதல் நடத்தியது.

    இதில் ஜெர்மனி நாட்டு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ரஷியா மீது தாக்குதல் நடத்த ஜெர்மனியின் ஆயுதங்களை உக்ரைன் பயன்படுத்தி இருப்பது ஆபத்தான நடவடிக்கை ஆகும். மேற்கு நாடுகளை தாக்க நீண்ட தொலைவு சென்று தாக்கக்கூடிய ஆயுதங்களை வேறு சில நாடுகளுக்கு ரஷியா வழங்கும்.

    எங்களுடைய நாட்டின் இயைாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என தெரிய வந்தால் ரஷியா தன்னை தற்காத்துக்கொள்ள அனைத்து வழிகளையும் பின்பற்றும். அணு ஆயுதங்களை பயன் படுத்தவும் தயாராக இருக்கிறோம். ரஷியாவை எதிரி என்ற பிம்பத்தை உருவாக்க வேண்டாம்.

    எதார்த்தத்தை சமாளிக்க வேண்டும் என நாங்கள் எப்போதும் நம்புகிறோம். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியில் உள்ளனர். தலிபான் அரசுடன் நாங்கள் உறவுகளை உருவாக்க வேண்டும்.

    இவ்வாறு புதின் கூறினார்.

    2003-ம் ஆண்டு தலிபான்களை தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு என ரஷியா அறிவித்தது. தற்போது ரஷியா இந்த நிலைமாற்றத்தில் மனம் மாறி உள்ளது.

    கடந்த வாரம் ரஷியா வெளியுறவு துறை மந்திரி செர்ஜிலால் ரோஸ் கூறும் போது தலிபான்களை தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு மாஸ்கோ திட்டமிட்டுள்ளது என தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியாவிடம் 172 அணு ஆயுதங்கள் இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.
    • சீனா ஜனவரி 2024-ன்படி 500 வரை உயர்த்தியுள்ளதாக தகவல் SIPRI தெரிவித்துள்ளது.

    பாகிஸ்தானை விட இந்தியாவிடம் அணு ஆயுதங்கள் அதிகமாக உள்ளது. அதேவேளையில் சீனா அணு ஆயுதங்களை அதிகரித்துள்ளது என ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) வெளியிட்ட தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.

    கடந்த இரண்டு ஆண்டுகளில் உலகம் இரண்டு போர்களை பார்த்துள்ளது. ஒன்று உக்ரைன்- ரஷியா போர். மற்றொன்று இஸ்ரேல்- காசா போர். இதன் மூலமாக இந்தியா, பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட அணு ஆயுங்களை கொண்ட 9 நாடுகள் அவர்களுடைய அணு ஆயுதங்களை நவீனப்படுத்த தொடங்கியுள்ளன எனத் தெரிவித்துள்ளது.

    உலகளவில் உள்ள அணு ஆயுதங்களில் அமெரிக்கா மற்றும் ரஷியா ஆகிய இரண்டு நாடுகள் மட்டும் 90 சதவீதத்தை பெற்றுள்ளன. 2023-ல் மற்ற பல நாடுகள் புதிய அணு ஆயுதம் திறன் கொண்ட ஆயுதங்களை குவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

    மொத்தம் 2100 அணு ஆயுதங்களில் பெரும்பாலும் அமெரிக்கா மற்றும் ரஷியாவிடம் இருப்பதாக நம்பப்படும் நிலையில், பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் செலுத்தப்படும் வகையில் வைக்கப்பட்டுள்ளது.

    இந்தியா 172 அணுஆயுதங்கள் வைத்துள்ளதாகவும், 2024 ஜனவரி கணக்குப்படி இது பாகிஸ்தானைவிட எண்ணிக்கைளில் இரண்டு அதிகம் எனவும் தெரிவித்துள்ளது. 2023 இந்தியா- பாகிஸ்தான் அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் சிஸ்டத்தை முன்னேற்றத்தில் தொடர்ந்து ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளது.

    இந்தியாவின் அணு ஆயுதத்தை தடுப்பதில் பாகிஸ்தான் முக்கிய கவனம் செலுத்தி வருகிறது. அதேவேளையில் சீனா முழுவதும் இலக்குகளை அடையும் திறன் கொண்ட நீண்ட தூர ஆயுதங்களுக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.

    சீனா மற்ற நாடுகளை விட அதிகவேகமாக அணுஆயுதங்களை வேகப்படுத்து வருவதாகவும், 2023-ல் 410 அணுஆயுதங்கள் வைத்திருக்கும் நிலையில், 2024 ஜனவரி நிலவரப்படி அதை 500 ஆக உயர்த்தாகவும் தெரிவித்துள்ளது.

    • நமக்கும் நமது நேச நாடுகளுக்கும் உருவாகியுள்ள புதிய அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
    • 1,572 அணு ஆயுதங்கள் ஏவுகணைகளில் பொருத்தப்பட்டு முக்கிய இடங்களில் எந்நேரமும் தாக்குதலுக்கு தயார் நிலையில் உள்ளன

    2022 ஆம் ஆண்டு தொடங்கிய ரஷிய உக்ரைன் போர் இரண்டு ஆண்டுகளைக் கடந்த நீடித்து வருகிறது. மேற்கு நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ கூட்டமைப்பில் சேர உக்ரைன் முயற்சித்ததால் தங்களுக்கு ஆபத்து என்று கூறி ரஷியா இந்த போரை துவங்கியது. ரஷியா பக்கம் வட கொரியா, சீனா உள்ளிட்ட நாடுகள் இருக்கின்றன. போரில் உக்ரைனுக்கு பக்க பலமாக அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ஆயுத மற்றும் பொருளாதார ரீதியாக உக்ரைனுக்கு உதவி வருகிறது. உக்ரைனுக்கு பிரிட்டன் ஸ்டார்ம் ஷேடோ என்ற அதிநவீன ஏவுகணைகளை வழங்கியுள்ளது. இதை ரஷியா மீது உக்ரைன் பய்னபடுத்தும்பட்சத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு புதின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

     

    இந்நிலையில்தான் இந்த ஒட்டுமொத்த போரானது எந்நேரமும் மூன்றாம் உலகப் போருக்கு இட்டுச் செல்லும் என்று நிலவி வரும் அச்சத்துக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் ரஷிய அதிபர் புதின் முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  இன்று தொலைக்காட்சி வாயிலாக பேசிய புதின், அதிகரித்து வரும் சர்வதேச பாதுகாப்பு அச்சறுத்தல் காரணமாக ரஷியாவின் அணு ஆயுதங்கள் பயன்பாடு [பயன்படுத்தாமல் இருப்பது உள்ளிட்ட கொள்கைகளில்]  திருத்தங்களைக் கொண்டுவர வேண்டியுள்ளது.

    சர்வதேச ராணுவ மற்றும் அரசியல் சூழல் தொடர்ச்சியாக மாறி வருகிறது, அதற்கு ஏற்ற முடிவுகளை நாம் எடுத்தாக வேண்டும். நமக்கும் நமது நேச நாடுகளுக்கும் உருவாகியுள்ள புதிய அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் ரஷிய ராணுவ தளபதிகளுடனான கூட்டத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

    அணு ஆயுதங்களைக் கொண்டுள்ள நாடுகள் உக்ரைனுக்கு உதவி வருவதால் உக்ரைன் ரஷியாவை எதிர்ப்பது என்பது உக்ரைன் வழியாக அதற்கு உதவும் அணு ஆயுத நேரடியாக ரஷியாவை எதிர்ப்பதாகக் கருதப்படும். எனவே தாங்களும் தங்களின் அணு ஆயுதங்களை உபயோகிக்கும் நிர்பந்தம் ஏற்படலாம் என்ற வகையில் புதின் பேசியுள்ளது மேற்கத்திய நாடுகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

     

    உலகில் உள்ள மொத்த அணு ஆயுதங்களில், 8-0 சதவீதம், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம் உள்ளன. ரஷியாவிடம் மட்டுமே 6,732 அணு ஆயுதங்கள் உள்ளன. இதில், 1,572 அணு ஆயுதங்கள் ஏவுகணைகளில் பொருத்தப்பட்டு முக்கிய இடங்களில் எந்நேரமும் தாக்குதலுக்கு தயார் நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. 

    • கடந்த 2006 ஆம் ஆண்டு, முதல் அணு ஆயுத சோதனையை மேற்கொண்ட வட கொரியா மேற்கொண்டது
    • தென் கொரிய ராணுவம் அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து கூட்டாக அணு ஆயுத விவகாரங்களில் செயல்பட்டு வருகிறன.

    கொரிய சாம்ராஜ்யம் 

    தென் கொரியா மற்றும் அமெரிக்கா மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவேன் என்று வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரிய தீபகற்பத்தில் ஒரே நாடக இருந்த கொரிய சாம்ராஜ்யம் 1910 முதல் 1945 வரை ஜப்பானின் காலனியாக இருந்தது. இரண்டாம் உலகப் போரில் தோல்வியை ஒப்புக்கொண்டு ஜப்பான் சரணடைந்த பின்னர் அதே வருடத்தில் சுதந்திரம் பெற்ற கொரியா இரண்டாகப் பிரிந்தது.

    வட கொரியா 

    வரலாற்றின் போக்கில் இரண்டு நாடுகளுக்குமிடையேயான பகைமை வளர்ந்து வந்தது. உலகின் இருந்து தன்னை முற்றிலுமாக துண்டித்து வாழும் வட கொரியா சமீப காலங்களாக ரஷியாவுடன் நெருக்கம் காட்டி வருகிறது. தென் கொரியவுக்கு குப்பை பலூன்களை அனுப்புவது, எல்லையில் ராணுவ சோதனைகளைச் செய்வது என உலக நாடுகளையும் பயத்திலேயே வட கொரியா வைத்துள்ளது.

     

    அணு ஆயுதம் 

    கடந்த 2006 ஆம் ஆண்டு, முதல் அணு ஆயுத சோதனையை மேற்கொண்ட வட கொரியா அதுமுதல் உலகின் அணு ஆயுத சக்தி கொண்ட நாடுகளுள் முக்கியமானதாக மாறியது, இந்தியா உள்ளிட்ட மற்றைய அணு ஆயுத நாடுகள் மேற்கு நாடுகளுக்குக் கட்டுப்பட்டிருக்கும் நிலையில் வட கொரியா சுதந்திரமாகச் செயல்பட்டு வருவதால் எப்போது என்ன செய்யும் என்று யூகிக்க முடியாமல் மேற்கு நாடுகள் குழம்பிப்போயுள்ளது.

     

    கிம் ஜாங் உன் 

    கடந்த 2011 ஆம் ஆண்டு தனது தந்தையின் மறைவுக்குப் பின்னர் அதிகாரத்துக்கு வந்த கிம் ஜாங் உன் [40 வயது] மேற்குலகுக்குக் கடந்த காலங்களிலும் அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்திருந்தாலும்,தற்போதைய எச்சரிக்கை நவம்பர் 5 வர உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலை ஒட்டி வந்துள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

     

    எச்சரிக்கை

    நேற்றைய தினம் [ திங்கள்கிழமை] 'கிம் ஜாங் உன்' பல்கலைக்கழகத்தில் வைத்து நடந்த அரசு நிகழ்ச்சியில் உரையாற்றிய கிம் ஜாங் உன், நமக்கு எதிராக அவர்கள் ஆயுதப்படையை உபயோகித்தால் எந்த தயக்கமும் இல்லாமல் எதிரிகள் மீது தாக்குதல் நடத்தும் திறன் நம்மிடம் உள்ளது. தாக்குதல் என்று நான் சொன்னதில் அணு ஆயுதங்களும் அடங்கும் என்று தெரிவித்துள்ளார்.

    இந்த எச்சரிக்கையானது தென் கொரிய ராணுவம் அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து கூட்டாக அணு ஆயுத விவகாரங்களில் செயல்பட்டு வரும் சூழலுக்கிடையில் கிம் ஜாங் உன் தரப்பில் இருந்து வந்துள்ளதாகவும் பார்க்கவேண்டியுள்ளது. 

    • அமெரிக்காவுக்கு வட கொரியா தொடர்ந்து அணு ஆயுத மிரட்டல் விடுத்து வருகிறது
    • இந்திய நேரப்படி இன்று மாலை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்குகிறது

    உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு இந்திய நேரப்படி இன்று மாலை தொடங்குகிறது. இந்நிலையில் தென் கொரியாவையும் அதற்கு உதவும் அமெரிக்காவையும் பரம எதிரியாக கருதும் வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை செய்து சர்வதேச அரங்கில் பீதியை கிளப்பியுள்ளது.

    சமீப காலங்களாகவே அமெரிக்காவுக்கு தொடர்ந்து அணு ஆயுத மிரட்டல் விடுத்துவரும் வட கொரியா எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் ரஷியாவுடன் நட்பு பாராட்டி வருகிறது. உக்ரைன் போர் சூழலில் ரஷியாவுக்கு 12 ஆயிரம் வரையிலான வட கொரிய ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். தென் கொரியாவும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் இதை உறுதிப்படுத்தி உள்ளனர்.

    இந்நிலையில் இன்றைய தினம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சில மணி நேரங்களுக்கு முன்னதாக வட கொரிய ராணுவம் குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை கிழக்கு கடல் நோக்கி ஏவி சோதனை செய்துள்ளது. இதை தென் கொரியாவும், ஜப்பானும் உறுதிப்படுத்தியுள்ளது.

     

    அந்த ஏவுகணைகள் சுமார் 400 கி.மீ. தூரம் வரை பாய்ந்து சென்று கடலில் விழுந்ததாக கூறப்படுகிறது. சர்வதேச அரசியல் களம் அமெரிக்க தேர்தலை நோக்கி திரும்பியிருக்க வடகொரியாவின் இந்த சோதனை உலக நாடுகளிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

    • டேல்கான் 2 [Taleghan 2 ] ஆராய்ச்சி கூடம் இஸ்ரேல் தாக்குதலில் அழிக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்தது.
    • ஒரு அணு ஆயுத்ததில் யுரேனியத்தை சுற்றி உள்ள பிளாஸ்டிக் எக்ஸ்புளோசிவ்ஸ் குண்டை வெடிக்கச் செய்ய முக்கியமாக தேவைப்படும் பொருள்.

    அக்டோபர் 26 தாக்குதல்  

    காசா போருக்கு எதிராக இஸ்ரேல் மீது கடந்த 1 ஆம் தேதி சுமார் 180 ஏவுகணைகளை ஏவி ஈரான் திடீர் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்க காத்திருந்த இஸ்ரேல் சுமார் 25 நாட்கள் கழித்து கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி ஈரான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.

    100 க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய F-35 'Adir' ஸ்டெல்த் ஃபைட்டர்கள் விமானங்கள் 2000 கிலோமீட்டர்கள் பயணித்து ஈரான் வான் பரப்புக்குள் நுழைந்து மூன்று கட்டங்களாக குண்டு மழை பொழிந்தன. இந்த தாக்குதலால் தங்களுக்கு அதிக பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்று ஈரான் தெரிவித்திருந்தது.

     

    பார்சின் மிலிட்டரி காம்பிளக்ஸ்

    ஆனால் ஈரானில் உள்ள ரகசிய அணு ஆயுத ஆராய்ச்சி தளம் கடந்த மாதம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தகர்க்கப்பட்டதாக 3 அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரான் படு ரகசியமாக வைத்திருக்கும் பார்சின் மிலிட்டரி காம்பிளக்ஸ் [Parchin military complex] அணு ஆயுத ஆராய்ச்சித் தளத்தில் உள்ள டேல்கான் 2 [Taleghan 2 ] ஆராய்ச்சி கூடம் இஸ்ரேல் தாக்குதலில் அழிக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.

     

     ஆராய்ச்சி

    முன்னதாக தனது அணு ஆயுத ஆராய்ச்சிகளை வெளியுலகில் ஈரான் மறுத்து வந்த நிலையில் இந்த டேல்கான் 2 கூடம் செயல்படாமல் இருந்ததாக கருதப்பட்டது. கடந்த 2003 ஆம் ஆண்டில் ஈரான் தனது அணு ஆயுத ஆராய்ச்சி திடமான அமாட் நியூக்கிலியர் புரோகிராமில் இந்த டேல்கான் 2 ஒரு அங்கமாக இருந்தது.

    ஆனால் செயலிழந்ததாக நம்பப்பட்ட இந்த டேல்கான் 2 தளத்தில் கடந்த ஆண்டு முதல் மீண்டும் ஈரான் ஆராய்ச்சிகளை தொடங்கியதாக அமெரிக்க மற்றும் இஸ்ரேல் உளவு அமைப்புகள் தெரிவித்திருந்தன. இந்த நிலையில்தான் இந்த தளம் இஸ்ரேல் தாக்குதலில் தகர்க்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

     

    டேல்கான் 2

    அணு ஆயுதத்தில் உள்ள யுரேனியத்தை சுற்றி அமைக்கப்படும் பிளாஸ்டிக் எக்ஸ்புளோசிவ்ஸ் வெடிமருந்துகள் அணுகுண்டை வெடிக்கச் செய்ய முக்கியமாக தேவைப்படும் பொருள் ஆகும். இந்த பிளாஸ்டிக் எக்ஸ்புளோசிவ்ஸ் தயாரிக்க பயன்பட்ட சாதனம் இஸ்ரேல் கடந்த மாதம் நடத்திய தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளது என்றும் இதனால் ஈரானின் அணு ஆயுத ஆராய்ச்சியில் பின்னடைவு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • நேற்றுடன் போர் 1000 வது நாளை எட்டிய நிலையில் ரஷியா மீது உக்ரைன் நீண்ட தூரம் சென்று தாக்கும் பால்சிடிக் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
    • ஜோ பைடன் தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்னர் இன்னொரு உலகப் போரை துவக்க பார்க்கிறார் என்றும் ரஷியா தெரிவித்தது.

     உக்ரைன் போர்

    அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ கூட்டமைப்பில் ரஷியாவின் அண்டை நாடான உக்ரைன் முயற்சி மேற்கொண்டது. இதனால் தங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு மேற்கு நாடுகளால் அச்சுறுத்தல் ஏற்படும் என்று கூறி ரஷியா கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது போர் தொடுத்தது.

    1000 வது நாள்  

    நேற்றுடன் போர் 1000 வது நாளை எட்டிய நிலையில் ரஷியா மீது உக்ரைன் நீண்ட தூரம் சென்று தாக்கும் பால்சிடிக் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்கா வழங்கிய இந்த ATACMS பால்சிடிக் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு கட்டுப்பாடு இருந்த நிலையில் அதை ஜோ பைடன் தளர்த்திய நிலையில் நேற்றைய தினம் ரஷியா மீது முதல் முறையாக பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது.

     

    Bryansk

    நேற்று இரவு ரஷியாவின் பிரையன்ஸ்க் [Bryansk] பகுதியில் இருந்த ராணுவக் கிடங்கை தங்களின் ஏவுகணை தாக்கியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

    இந்த தாக்குதலை குறித்து பேசியுள்ள ரஷிய பாதுகாப்பு அமைச்சகம், அமெரிக்காவால் வழங்கப்பட்ட 5 ATACMS ஏவுகணைகள் ரஷியாவின் பிரையன்ஸ்க் [Bryansk] வான்பகுதிக்குள் வந்ததாகவும் அவற்றை தாங்கள் அழித்ததாகவும், அதில் ஒரு ஏவுகணையின் சேதமடைந்த பாகங்கள் ராணுவ தளவாடம் அருகே விழுந்து தீ விபத்து ஏற்பட்டதாகவும் இதில் எந்த உயிர் சேதமும், பொருள் சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளது.

     

     உலகப் போர்

    முன்னதாக உக்ரைன் பாலிஸ்டிக் ஏவுகணைகளை பயன்படுத்த அமெரிக்கா உத்தரவிட்டிருப்பது மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் என்றும் ஜோ பைடன் தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்னர் இன்னொரு உலகப் போரை துவக்க பார்க்கிறார் என்றும் ரஷியா தெரிவித்தது. மேலும், உக்ரைனுக்கு இந்த அனுமதியை அளித்ததன் மூலம் அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் நேரடியாக தங்களுடன் மோதுவதாக ரஷியா கருதும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே போர் தொடங்கி நேற்றைய 1000 வது நாளில் ரஷிய அதிபர் புதின் அணு ஆயுத பயன்பாட்டு கட்டுப்பாடுகளை தளர்த்தி கொள்கைகளில் மாற்றம் செய்துள்ளார்.

     

    அணு ஆயுத கொள்கை

    இந்த கொள்கைப்படி, அணு ஆயுதம் கொண்ட ஒரு நாடு, ரஷியாவின் மீது ஏதேனும் ஒரு வகையில் தாக்குதல் நடத்தினால் கூட, அதற்கு அணு ஆயுதங்கள் மூலம் பதிலடி கொடுக்க இந்த புதிய கொள்கை வழிவகை செய்கிறது.

    இந்த உத்தரவுக்கு வெளிவந்த அதே நாளிலேயே உக்ரைன் பாலிஸ்டிக் தாக்குதல் நடத்தி ரஷியாவை சீண்டியுள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது. இதன்படி ரஷியா அணு ஆயுத்தங்களை பயன்படுத்தினால் அது மனித குல வரலாற்றின் மீது மேலும் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

    • போரில் பயன்படுத்த அமெரிக்கா திரும்பி வழங்கலாம் என்று நியூ யார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது
    • ஜோ பைடன் பதவியை விட்டு செல்வதற்கு முன் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கலாம்

    உக்ரைன் போர்  

    உக்ரைன் மேற்குலகின் நேட்டோ நாடுகளுடன் இணைய முயன்றால் தங்கள் நாட்டுக்கு ஆபத்து என்று கூறி ரஷியா கடந்த 2022 பிப்ரவரியில் போரை தொடங்கியது. 1000 நாட்களுக்கு மேலாக நீடித்து வரும் போரில் இரண்டு பக்கமும் இழப்புகள் அதிகம் உள்ளன. இந்நிலையில் தாங்கள் வழங்கிய நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அனுமதி வழங்கினார்.

     

    இதனால் உக்ரைன் முதல் முறையாக கடந்த மாதம் ரஷியா மீது அந்த பாலிஸ்டிக் மிசைல்களை பயன்படுத்தியது. அவற்றை தாக்கி அழித்த ரஷியா உக்ரைன் மீது தாங்கள் கண்டுபிடித்த புதிய ரக பாலிஸ்டிக் மிசலை ஏவியது. இந்நிலையில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்யும் அமெரிக்கா அடுத்ததாக அணு ஆயுதங்களை வழங்கலாம் என்ற செய்திகள் பரவின.

     

     புதின் மிரட்டல் 

    ரஷிய அதிபர் புதின், தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தும் நாட்டுக்கு எந்த அணு ஆயுதம் கொண்ட நாடு உதவினாலும் தங்களின் அணு ஆயுதங்களை அவர்கள் மீது பயன்படுத்தலாம் என ரஷியவின் அணு ஆயுத விதியை திருத்தி எழுதினார். இதன் பிறகே அமெரிக்கா உக்ரைனுக்கு அணு ஆயுதங்களை வழங்கலாம் என்ற யூகங்கள் எழுந்தன.

    சோவியத் யூனியன்

    கடந்த 1991 ஆம் ஆண்டில் சோவியத் யூனியன் உடைந்த சமயத்தில் ரஷியா உக்ரைன் தனித்தனி நாடானது. அப்போது சோவியத் யூனியனில் உருவாக்கப்பட்ட அணு ஆயுதங்களில் ஒரு பங்கு புதிதாக உருவான உக்ரைன் நாட்டுக்கு கிடைத்தது.

    ஆனால்  1994 புடாபெஸ்ட் உடன்படிக்கையின் படி உக்ரைன் தனது அணு ஆயுதங்களைத் துறந்தது. இந்நிலையில் உக்ரைன் துறந்த அந்த அணு ஆயுதங்களை மீண்டும் இந்த போரில் பயன்படுத்த அமெரிக்கா திரும்பி வழங்கலாம் என்று நியூ யார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. ஆனால் இதை அமெரிக்கா மறுத்துள்ளது.

     

    ஜேக் சல்லிவன்

    இது தொடர்பாக நேற்று [ஞாயிற்றுக்கிழமை] ஏபிசி செய்தி நிறுவனத்திடம் பேசிய வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், சில மேற்கத்திய அதிகாரிகள் ஜோ பைடன் பதவியை விட்டு வெளியேறுவதற்கு முன் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்க பரிந்துரைத்ததாகக் கூறுகின்றனர்.

     

    ஆனால் அது பரிசீலனையில் இல்லை, போரில் உக்ரைனின் இயல்பான திறன்களை அதிகரிப்பதே நாங்கள் செய்வது, இதனால் அவர்கள் திறம்பட தங்களைத் தற்காத்துக் கொள்ள முடியும, ஆனால் அவர்களுக்கு அணுசக்தி திறன் வழங்கப்படாது என்று தெரிவித்தார்.  நேட்டோ நாடுகளுடன் தங்களை இணைத்துக்கொள்வதே போருக்கு தீர்வு என்று உக்ரைன் அதிபர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • இந்த ஆண்டு உற்பத்தி இலக்கையும் தாண்டி தயாரிக்க கிம் உத்தரவிட்டுள்ளார்.
    • ரஷியா மற்றும் வடகொரியா இடையில் ராணுவ ஒத்துழைப்பு உடன்படிக்கை கையெழுத்தானது.

    அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி 20 ஆம் தேதி டிரம்ப் பதவியேற்றது முதல் சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலையை  ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், தங்கள் நாட்டின் அணு ஆயுத உற்பத்தி மையத்தை பார்வையிட்டு அமெரிக்காவிடம் தனது இருப்பை மீண்டும் நிரூபித்துள்ளார்.

    கிம் ஜாங் உன் அணு ஆயுத கூடத்தில் ஆய்வு செய்யும் புகைப்படங்கள் வெளியாகி அந்நாட்டின் அணுசக்தி போர்த் திறனை குறித்து உலக நாடுகளைக் கவலை கொள்ளச் செய்துள்ளது. முன்னதாக கடந்த 2019 இல் அதிபராக இருந்த சமயத்தில் டிரம்ப் வடகொரியா சென்று கிம் ஜாங் உன் - ஐ சந்தித்தார். வடகொரியாவுக்கு ஒரு அமெரிக்க அதிபர் செல்வது அதுவே முதல் முறை.

    ஆனால் அதன்பின் அமைந்த ஜோ பைடன் அரசுடன் வடகொரியா நல்லுறவைப் பேணவில்லை. மாறாக மேற்கு நாடுகளைப் பகைத்து உக்ரைனுடன் போரிடும் ரஷியாவுடன் வட கொரியா கைகோர்த்தது. ரஷியா மற்றும் வடகொரியா இடையில் ராணுவ ஒத்துழைப்பு உடன்படிக்கை கையெழுத்தானது. உக்ரைன் உடனான போரில் வடகொரிய வீரர்களை ரஷியா பயன்படுத்தியது.

    இதற்கிடையே அவ்வப்போது கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகளை சோதனை செய்து வட கொரியா தனது திறனை பறைசாற்றி வருகிறது. கடந்த நவம்பரில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்ற சமயத்திலும் வடகொரியா ஏவுகணை சோதனை செய்தது.

    மேலும் கடந்த செப்டம்பரில் அணு ஆயுதம் தயாரிப்பதற்கான யுரேனியம் செறிவூட்டல் மையத்தில் கிம் ஜாங் உன் ஆய்வு செய்யும் புகைப்படங்கள் வெளியாகி மேற்கு நாடுகளை மிரள வைத்தது. இந்நிலையில் நேற்று அணு ஆயுத உற்பத்தி மையத்தில் கிம் ஜாங் உன் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது அணு ஆயுத உற்பத்திக்குத் தேவையான யுரேனியம் செறிவூட்டலை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று நாட்டின் அணுசக்தி கேடயத்தை வலுப்படுத்த இந்த ஆண்டு உற்பத்தி இலக்கையும் தாண்டி தயாரிக்க கிம் உத்தரவிட்டுளளார் என்று கூறப்படுகிறது.

     

     

    எதிரி நாடான தென் கொரியா மீது எந்நேரமும் வடகொரியா அணு ஆயுதத்தைப் பயன்படுத்தலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. இதற்கிடையில் அமெரிக்க அதிபர் பதவியேற்ற பின் ஒரு பேட்டியில், கிம் ஜாங் உன் புத்திசாலி என்றும் வடகொரியாவுடன் நல்லுறவை பேண விரும்புவதாக டிரம்ப் பேசியிருந்தார்.

    தென் கொரியாவின் அனுமானப்படி 2018 ஆம் ஆண்டிலேயே வட கொரியா 20 முதல் 60 அணு ஆயுதங்களை தயாரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டது. ஆனால் வடகொரியாவிடம் 100 க்கும் அணு ஆயுதங்கள் இருக்கலாம் என்ற வல்லுநர்கள் சந்தேகிக்கின்றனர். 

    ×