என் மலர்
நீங்கள் தேடியது "perumal temple"
- சென்னகேசவப் பெருமாள், பெண் உருவில் இத்தலத்தில் காட்சியளிக்கிறார்.
- இந்த ஆலயத்தில் 42 அடி உயரம் கொண்ட தூண் நிறுவப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ளது, பேளூர் என்ற இடம். இது ஹோய்சாலப் பேரரசின் ஆட்சி காலத்தில் தலைநகராக இருந்த ஊர் ஆகும். இங்கு சென்னகேசவர் கோவில் இருக்கிறது. இந்த ஆலயம் முன் காலத்தில் 'விஜயநாராயணர் கோவில்' என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது. திருமாலை முக்கிய கடவுளாகக் கொண்டிருக்கும் இந்த ஆலயம், வைணவர்களின் வழிபாட்டு யாத்திரையில் சிறப்பிடம் பெறுகிறது.
இந்த ஆலயம் ஹோய்சால அரசர்களில் ஒருவரான விஷ்ணுவர்த்தனன் என்பவரால், கி.பி. 1117-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்தக் கோவிலின் மூலவரான கேசவநாராயணர், கல்லால் ஆன பீடத்தையும் சேர்த்து 15 அடி உயரம் கொண்டவர். சென்னகேசவப் பெருமாள், பெண் உருவில் இத்தலத்தில் காட்சியளிக்கிறார்.
இந்த ஆலயம் மூன்று வாசல்களைக் கொண்டுள்ளது. இந்த ஆலயம் அதன் சிற்ப வேலைப்பாடுகளினால் முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. இந்த ஆலயம் இரண்டு கர்பக்கிரகத்துடன் விளங்குகிறது. இரண்டாவது கர்பக்கிரகம் பின்னாளில் இணைக்கப்பட்டுள்ளது. இதிலும் கேசவநாராயணரே மூலவராக இருக்கிறார். இதனை, விஷ்ணுவர்த்தனனின் அரசியாகிய சாந்தலாதேவி கட்டியிருக்கிறார்.
இந்த ஆலயத்தில் 42 அடி உயரம் கொண்ட தூண் நிறுவப்பட்டுள்ளது. இதனை 'மகாஸ்தம்பம்' என்றும், 'கார்த்திகை தீபோற்சவ ஸ்தம்பம்' என்றும் அழைக்கிறார்கள். சென்னகேசவப் பெருமாள் கோவிலில் பக்தர்களை கவர்ந்திருக்கும் சிறப்பம்சம் கொண்டதாக இந்த தூண் விளங்குகிறது. ஏனெனில் இந்த தூணுக்கு அடித்தளம் இல்லை. ஒரே கல்லால் செய்யப்பட்ட மேடையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்தத் துண், அதன் அடிப்பாக மேடையை தொடாமல் உள்ளது. இதனை இடையில் ஒரு தாளையோ, துணியையோ விட்டால், மறு மூலையில் அதனை எடுக்க முடியும். இந்த ஸ்தம்பம், பீடத்தோடு ஒட்டாமல் நிற்பது புரியாத புதிராகவே இருக்கிறது.
- பள்ளி கொண்ட பெருமாள் அனந்த சயனத்தில், 30 அடி நீளத்தில் திருமேனியுடன் சேவை அளிக்கிறார்.
- புதுக்கோட்டையிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் இந்த கோவில் அமைந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள சத்தியமூர்த்தி பெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். பெருமாள் கோவில்கள் பலவற்றில் மூலவர் நின்ற கோலத்திலோ அல்லது சயன கோலத்திலோ காணப்படுவது உண்டு. ஆனால் இந்த ஆலயத்தில் நின்ற கோலத்திலும், அனந்த சயனத்திலும் பெருமாள் எழுந்தருளி காட்சி அளிப்பது தனிச்சிறப்பாகும்.
தல வரலாறு
முற்காலத்தில் திருமயம் மூங்கில் காடாக இருந்துள்ளது. பூலோகத்தை அசுரர்கள் ஆக்கிரமித்த போது, ரிஷிகள் எல்லாம் பயந்து மலைகள், குகைகளில் மறைந்து கொண்டனர். இதனால் உலகத்தில் யாகம் முதலான நல்ல காரியங்கள் நடைபெறவில்லை. தேவர்கள் கலக்கம் அடைந்தனர். சத்திய தேவதையும், தர்ம தேவதையும் வறுமையால் மிகுந்த துன்பமுற்றன. அந்த நேரத்தில் தர்ம தேவதை, காளையின் உருவம் கொண்டு அழகர் கோவிலை அடைந்து சித்திபெற்றது.
சத்திய தேவதையோ மானாக மாறி, மூங்கில் காடான திருமயத்தை அடைந்தது. இங்குள்ள அழகிய மெய்யனை, சத்தியமூர்த்தியை வணங்கி வழிபட்டது. மேலும் உலகில் சத்தியம் நிலைக்க வேண்டும். வாய்மை வெல்ல வேண்டும் என்ற உயர்ந்த குறிக்கோளுடன், இங்குள்ள சத்திய தீர்த்தக்கரையில் தவம் செய்து சித்தி அடைந்தது.
ஆலய அமைப்பு
இந்தக் கோவிலின் உள்ளே நுழைந்து, கொடிமரத்தை தாண்டி செல்லும் போது, பள்ளி கொண்ட திருமெய்யன் சன்னிதியை காணலாம். அதற்கு அடுத்ததாக சத்தியமூர்த்தி பெருமாள் நின்ற கோலத்தில் காணப்படும் சன்னிதி உள்ளது. இதில் பள்ளி கொண்ட பெருமாள் சன்னிதி கருவறை, மலையை குடைந்து அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி கொண்ட நிலையில் பெருமாள் சேவை அளிக்கும் கருவறையில், வைகுண்டத்தை காட்சிப்படுத்தும் வகையில் சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன. 5 தலைகளை உடைய ஆதிசேஷன் மீது அனந்த சயனத்தில் இருக்கிறார் பெருமாள். அவரது காலடியில் பூதேவி, இதய கமலத்தில் ஸ்ரீதேவி, இடமிருந்து வலமாக கருடன், எம தர்மராஜன், சித்திரகுப்தன், சந்திரன், சூரியன், ராகு, பிரம்மா, தேவர்கள், ரிஷிகள், வலது கடைக்கோடியில் அசுரர்கள் உள்ளனர். பள்ளி கொண்ட பெருமாள் அனந்த சயனத்தில், 30 அடி நீளத்தில் திருமேனியுடன் சேவை அளிக்கிறார்.
கோவிலின் சத்திய புஷ்கரணி தீர்த்த குளம், தாமரை மலர் தோற்றத்தில் எண் கோண வடிவில் 8 படித்துறைகளுடன் அமைந்துள்ளது. இங்கு இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் முதலான அஷ்டதிக்கு பாலகர்கள் வீற்றிருந்து அருள்பாலித்து வருகின்றனர். இந்த தீர்த்த குளத்தில் தண்ணீரை தொட்டாலோ அல்லது சத்திய தீர்த்தம் என வாயினால் சொன்னாலோ போதும் பாவங்கள் விலகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த தீர்த்தகுளத்தில் தண்ணீர் எப்போதும் வற்றாத நிலையில் காணப்படும்.
இந்தக் கோவிலில் வைகாசி விசாக திருவிழா, வைகுண்ட ஏகாதசி திருவிழா, ஆடிப்பூர திருவிழா, ஆவணி மாதத்தில் பவித்ர உற்சவம், சித்ரா பவுர்ணமி விழா ஆகியவை விமரிசையாக நடை பெறும்.
திருமணம் மற்றும் குழந்தைப்பேறு வேண்டி வரும் பக்தர்கள் சத்தியமூா்த்தி பெருமாள் மற்றும் தாயாரை மனதால் வேண்டினால், அவர்கள் கேட்ட வரம் கிடைக்கும்.
புதுக்கோட்டையிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் இந்த கோவில் அமைந்துள்ளது.
- இந்த திருத்தலம் பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று.
- தாயாரின் திருப்பெயர் பரிமள ரங்கநாயகி நாச்சியார் ஆகும்.
இறைவன்: பரிமள ரங்கநாதர்
இறைவி: பரிமள ரங்கநாயகி நாச்சியார்
தீர்த்தம்: சந்திர புஷ்கரணி தீர்த்தம்
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்
கோவிலின் சிறப்புகள்:
மங்களா சாசனம் பெற்ற திருத்தலங்களில் இது 26வது திருத்தலம். காவிரியின் வடகரையில் மயிலாடுதுறை நகரில் அமைந்துள்ள திருஇந்தளூர் திருத்தலம் பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. பஞ்சரங்க தலங்களில் பஞ்சரங்கம் மற்றும் அந்தரங்கம் என்று சொல்லப்படுகிறது. வேதசக்ர விமானத்தின் கீழ் பரிமளரங்கநாதர் சதுர் புஜங்களுடன் ஆதிசேஷன் மீது கிழக்கு முகமாக வீரசயன திருக்கோலத்தில் அருள்புரிகிறார்.
பெருமாள் சந்நிதியின் கால்மாட்டில் ஸ்ரீதேவி கங்கையாகவும், தலைமாட்டில் பூதேவி காவிரியாகவும் காட்சியளிப்பது இத்தலத்தின் சிறப்பாகும். மயிலாடுதுறையில் கங்கையை விட காவிரி புனிதமான நதி. பரிமளரங்கநாதர் திருவடிகளில் யமதர்மராஜரும், அம்பரீஷ சக்ரவர்த்தியும் அமர்ந்து இரவும், பகலும் பூஜித்துக் கொண்டிருக்கிறார்கள். தாயாரின் திருப்பெயர் பரிமளரங்கநாயகி ஆகும். சந்திரன், சந்திர புஷ்கரிணி தீர்த்தத்தில் நீராடித் தன் சாபம் நீங்கப்பெற்றமையால் இவ்வூர் திருஇந்தளூர் எனப் பெயர் பெற்றது.
அம்பரீஷன் என்ற மன்னன் தன்னுடைய 100வது ஏகாதசி விரதத்தை இத்தலத்தில் முடிக்க விரும்பினான். மக்கள் மகிழ்ச்சியோடு இருந்தார்கள். ஆனால் தேவர்கள் இவன் 100வது விரதத்தை முடித்தால் தேவலோக பதவி பெற்று விடுவான் என்று பயந்து துர்வாசரிடம் முறையிட அவரும் விரதத்தை தடுத்துவிடுவதாக கூறி இங்கு வருகிறார்.
ஆனால் மன்னன் ஏகாதசி விரதத்தை முடித்து விடுகிறான். ஏகாதசி விரதம் முடித்து விட்டாலும் துவாதசி நேரத்துக்குள் உணவருந்தினதால்தான் முழு பயன் கிடைக்கும். துவாதசி நேரம் துவங்கியதும் மன்னன் உணவருந்த தயார் ஆனான். அப்போது அங்கு வந்த துர்வாசரை அவரது உள்நோக்கம் அறியாமல் அவரையும் தன்னுடன் உணவருந்த அழைத்தான். அவரும் நதியில் நீராடி வந்து விடுகிறேன், பின்பு உணவருந்தலாம் என்று கூறி நீராட செல்கிறார்.
தாமதமாக சென்றால் மன்னன் விரதம் முடிக்க முடியாது என்று நினைத்து தாமதம் செய்கிறான். மன்னன் தான் மட்டும் விரதம் முடித்தால் சாபம் இடுவார் என்று கலங்கி வேதியர்களிடம் ஆலோசனை கேட்டார். அவர்கள் ஆலோசனை படி பெருமாளை வேண்டி உள்ளங்கையில் முழு அளவு தீர்த்தம் மூன்று முறை அருந்தி விரதத்தை முடித்தான்.. இதை உணர்ந்த துர்வாசர் கோபம் அடைந்து ஒரு பூதத்தை ஏவி மன்னனை கொல்ல ஆணையிட்டார். மன்னன் இறைவன் திருவடியில் சரணடைய பூதத்தை பெருமாள் விரட்டினார். மன்னிப்பு கேட்ட துர்வாசரை மன்னித்தார். மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்கி இத்தலத்தில் அருள் புரிகிறார். ஏகாதசி விரதம் இருக்க சிறந்த தலம்.
இந்த ஊரில் கொண்டப்படும் கடைமுழுக்கு மிகவும் சிறப்பானது, ஐப்பசி மாதம் கடைசி நாளில் மயிலாடுதுறையில் உள்ள சிவாவிஷ்ணு கோவில் தெய்வங்கள் காவிரி ஆற்றங்கரையில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறும். பல்லாயிரக்கணக்கான மக்கள் காவேரியில் நீராடுவர்.
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
மயிலாடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து மாப்படுகை சாலையில் 2 கி.மீ. தொலைவில் இவ்வாலயம் உள்ளது. பேருந்து வசதிகள் உள்ளன.
கோவில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6.00 – 11.30 மற்றும் மாலை 5.00 – 8.30
கோவிலின் முகவரி:
அருள்மிகு பரிமள ரங்கநாதர் திருக்கோவில்,
திருஇந்தளூர்,
மயிலாடுதுறை 609003.
- இங்கு வில்வம் தல விருட்சமாகும்.
- சனி தோஷம், இராகுதோஷம் நீங்கவும் இவரை வழிபடலாம்.
மூலவர் - சேவுகப் பெருமாள்
தல விருட்சம் - வில்வம்
தீர்த்தம் - புஷ்கரணி, விரிசிலை ஆற்று நீர், ஆலய உட்பிரகாரத்திலுள்ள வற்றாக்கிணற்று நீர்
பழமை - 500 வருடங்களுக்கு முன்
பல்லாண்டுகளுக்கு முன்பு, வில்வ வனமாக இருந்த இப்பகுதிக்கு வேட்டையாட வந்த வேடுவர் ஒருவர், மானைக்கண்டு அதன்மீது அம்பு எய்தார். தப்பிய மான் இங்கிருந்த மரப்பொந்து ஒன்றுக்குள் புகுந்து மறைந்தது. அதனை பிடிக்க வேடுவர் முயன்றபோது, புதருக்குள் ஒரு அய்யனார் சிலை இருந்தது. வியப்படைந்த வேடுவன், "சேவுகபெருமாளே. மானைத் தேடிப் போன நான் இன்று முதல் உனக்கு சேவகம் செய்யும் பாக்கியம் பெற்றேன்" என்றதுடன், "பெருமாளே" என்று சொல்லியும் வணங்கினான். அன்று முதல் இவர்,"சேவுகப்பெருமாள் அய்யனார்" என்ற பெயரில் காவல்தெய்வமாக அருளுகிறார்.
சாஸ்தா என்றும் ஐயப்பன் என்றும் போற்றப்படும் தெய்வங்களின் அம்சமான அய்யனார் காவல் தெய்வமாகப் பல தலங்களில் அருள்பாலிக்கிறார். இத்தல சேவுகப் பெருமாள் அய்யனார் மிகவும் சக்தி வாய்ந்தவர். சிவனுக்குரிய வில்வ இலையைக் கொண்டு இங்கு பூஜை செய்யப்படுகிறது. மேலும் பெருமாளின் திருநாமம் பெற்றுள்ளார். சிவவிஷ்ணுவின் கூட்டணியில் பிறந்ததால், இத்தகைய சிறப்பு இவருக்கு தரப்பட்டுள்ளது.
தேவர்களின் அரசன் இந்திரன் சாஸ்தாவை வளர்த்து வந்தார். அவரால் வளர்க்க இயலாத சூழ்நிலையில் பூலோகத்தில் உள்ள வேடுவ இனத்தவரிடம் ஒப்படைத்து வளர்க்கக் கூறினார். அவர்கள் அவரை அய்யனாராக பாவித்து காட்டில் மிருகங்களிடம் இருந்து பாதுகாப்பு தர வேண்டி வணங்கினர். காலப்போக்கில் காடுகள் குறைந்து ஊர்கள் பெருகவே ஊரின் எல்லையில் காவல் தெய்வமாக இருக்க வேண்டினர். இவ்வாறு, சாஸ்தாவின் அம்சமான அய்யனார் வழிபாடு உருவாயிற்று.
அய்யனாரைப் போல அய்யப்பனும் இராகு, மாந்தி போன்ற கோள்களின் தீமையை நீக்கும் கடவுளாகத் திகழ்கிறார். ஐ என்ற முதல் நிலையோடு அப்பன் என்ற தந்தையை உணர்த்தும் சொல் இணைந்து அய்யப்பன் என்ற சொல் விளங்குகிறது. அய்யனார், அய்யப்பன் இரண்டும் ஒருவரையே குறிப்பிடக்ககூடிய சொற்கள். அய்யனார் என்பதில் அன், ஆர் என்பன சேர்ந்திருக்க அய்யப்பனில் அப்பன் சேர்ந்திருக்கிறது. சொல்லில் சேரும் சேர்க்கைகள் தான் வேறாகின்றன. உணர்த்தும் பொருளும் சொற்களின் பொருளும் ஒன்றே. சேரநாட்டு அய்யப்பனும் காடுகளுக்கு இடையே மேடான இடத்தில் தான் வீற்றிருக்கிறான். சபரிமலை அய்யப்பன் வழிபாடும் தமிழகத்தின் அய்யனார் வழிபாடும் ஒன்றுபோல விளங்குகின்றன. இரண்டும் அந்தந்த சூழலுக்கு ஏற்ப வளர்ச்சி பெற்று இன்று புகழ் பெற்று விளங்குகின்றன.
முழுமுதற்கடவுள் மூவருள்ளும் தலைமை பெற்றவர்கள் அரியும் அரனும். இருவரும் ஈன்ற மகனே அரிகரன். அதனால் தான் இந்தப் பகுதியில் (சிவகங்கை மாவட்டத்தில்) சிவன்ராத்திரி அன்று அய்யனார் கோவில்களில் பெரும் சிறப்புடன் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அய்யப்பன் வரலாறு சேரநாட்டுக்குத் தக்கவாறு மன்னன் மகனாகப் பந்தளநாட்டு இளவரசனாக ஐயப்பன் விளங்குவதை எடுத்துரைக்கிறது. அவன் வாழ்வில் சாதிக்க முடியாதவற்றைச் சாதித்து அவன் மிகச் சிறந்த தலைவனாக காட்சி தருகிறான். சபரிமலை அய்யப்பன் திருவுருவத்திற்கும் அய்யனார் திருவுருவத்திற்கும் பெரும் வேறுபாடு இல்லை. அய்யனைப் போல அய்யனாரும் வீராசனமாகவே வீற்றிருக்கிறார். இரண்டு கைகளை அபயவரதமாக அல்ல செண்டாயுதத்தைப் பற்றிக் கொண்டு அய்யனார் வீற்றிருப்பார். யோகப்பட்டை அணிந்திருப்பார். தலையில் மகுடம் உண்டு. அய்யானாருக்கும் அய்யப்பனுக்கும் உருவ அமைப்பில் பெரும் வேற்றுமை இல்லை.
இத்திருகோவில் அமைந்த இடம் வில்வவனமானபடியால், இங்கு வில்வம் தல விருட்சமாகும். பரிவாரத் தேவதைகள் உட்பட இங்குள்ள அனைத்துத் தெய்வங்களும் வில்வ இலைகளினாலேயே அர்ச்சிக்கப் பெறுகின்றன.
இத்திருக்கோவிலின் தல தீர்த்தம் (புஷ்கரணி) விரிசிலை ஆற்று நீரும், ஆலய உட்பிரகாரத்திலுள்ள வற்றாக்கிணற்று நீரும் ஆகும். பிரகாரத்தில் கன்னிமூல கணபதி, வள்ளி தெய்வானை உடனாய முருகன், பரிவார தேவதைகள், கருப்பண்ணசாமி, கருப்பர், சப்தகன்னியர், நவக்கிரகங்கள், சண்டிகேஸ்வரர் ஆகியோர் உள்ளனர். இத்தலத்து அய்யனார் வீராசனத்தில், தலையில் மகுடம், யோகப்பட்டை அணிந்து, பூரணை, புஷ்கலையுடன் அருள்பாலிக்கிறார். அய்யனாருக்கு வலதுபுறம் காவல் தெய்வமான பிடாரியம்மன், இடதுபுறம் சுயம்பிரகாசேஸ்வரர் என்னும் பூவைவல்லி உடனாய தான்தோன்றீஸ்வரர் தனித்தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளனர்.
திருவிழா:
வைகாசியில் தேர்த்திருவிழா. தேர்நிலைக்கு வரும்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் நேர்த்திக்கடனாக தேங்காய்களை அருகிலுள்ள சுவரில் அடித்து உடைப்பர்.
கோரிக்கைகள்:
கேட்டதை கொடுப்பதில் வல்லவரான அய்யனார், ஊரைக்காப்பவராகவும், நெல் விளைச்சலைப் பெருக்குபவராகவும், கால்நடைகளைக் காப்பாற்றுபவராகவும் போற்றப் பெறுகிறார். சனி தோஷம், இராகுதோஷம் நீங்கவும் இவரை வழிபடலாம்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறியதும் கன்றுகள் நேர்த்திக்கடனாக செலுத்தப்படுகிறது. சுவாமி அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
அருள்மிகு சேவுகப் பெருமாள் திருக்கோவில்,
சிங்கம்புணரி,
திருப்புத்தூர் தாலுகா,
சிவகங்கை மாவட்டம்.
- பெருமாள் கோவிலில் வருடாபிஷேகம் நடந்தது
- சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது
புதுக்கோட்டை
கந்தர்வகோட்டை பெருமாள் கோவிலில் வருடாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டு சென்றனர்.புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை யாதவர் தெருவில் அமைந்துள்ள கோதண்ட ராமர் சீதாலட்சுமி திருக்கோவில் ஐந்தாவது ஆண்டு வருடம் அபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சிறப்பு ஹோமங்களும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது. இந்த அபிஷேக விழாவை முன்னிட்டு சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பெருமாளை வழிபட்டு சென்றனர். விழா குழு சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- இத்தலத்தில் மிகப்பழமையான சக்கரத்தாழ்வார் சன்னதி உள்ளது.
- பெருமாள் தலமான இங்கு வில்வம் தல விருட்சமாக உள்ளது.
மூலவர் -காளமேகப் பெருமாள்
தாயார் -மோகன வல்லி
தலவிருட்சம் -வில்வம்
தீர்த்தம் -தாள தாமரை புஷ்கரிணி ,பாற்கடல் தீர்த்தம்
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 94 வது திவ்ய தேசம்.
தல வரலாறு:
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்து எடுத்த அமுதத்தை பங்கிட்டுக் கொள்வதில் சர்ச்சை உண்டானது .தேவர்கள் தங்களுக்கு உதவும்படி மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர் .பெருமாள் அவர்களின் வேண்டுதலை ஏற்று ,மோகினி வேடத்தில் வந்தார். அசுரர்கள் அவரது அழகில் மயங்கியிருந்த வேளையில் தேவர்களுக்கு அமுதத்தை பரிமாறினார். இதனால் பலம் பெற்ற தேவர்கள் அசுரர்களை ஒடுக்கி வைத்தனர். பின் புலஸ்தியர் எனும் முனிவர் மகாவிஷ்ணுவின் மோகினி அவதாரத்தை தரிசிக்க வேண்டும் என விரும்பினார். எனவே சுவாமி அவருக்கு அதே வடிவில் காட்சி கொடுத்தார். அவரது வேண்டுகோளின்படி பக்தர்களின் இதயத்தைக் கவரும் வகையில் மோகன வடிவத்துடன் இங்கே காட்சி தந்து அருளுகிறார்.
இத்தலத்தில் மிகப்பழமையான சக்கரத்தாழ்வார் சன்னதி உள்ளது. இவருக்கான உற்சவர் சிலை 154 மந்திரங்களும் ,மூலவர் சிலையில் மந்திரங்களுக்குரிய ளை 48 அதி தேவதைகளும் பொறிக்கப்பட்டுள்ளன. பதினாறு கைகளில் ஆயுதங்களுடன் காட்சி தரும் இவர் அக்னி கிரீடத்துடன், ஓடி வரும் நிலையில் காட்சி தருகிறார். ராகு கேது தோஷம் நீங்குவதற்கு பிரகாரத்திலுள்ள விநாயகர் சன்னதியில் ராகு காலத்தில் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.
மோகன வல்லி தாயார் சன்னதியை விட்டு வெளியே வருவதில்லை. இவளுக்கென விழாவும் கிடையாது இவளது சன்னதியில் சடாரி சேவை ,தீர்த்த பிரசாதமும் தரப்படுவதில்லை .நவராத்திரியின் போது மட்டும் விசேஷ பூஜை செய்யப்படுகிறது .பங்குனி உத்திரத்தன்று சுவாமி, தாயார் சன்னதிக்கு வந்து இருவரும் சேர்ந்து மூன்று மணி நேரம் மட்டுமே காட்சி கொடுக்கிறார்கள்.எனவே சுவாமியுடன் ஆண்டாளே பிரதானமாக புறப்படுகிறாள்.
பங்குனி உத்திரம் அதற்கு மறுநாள் நடக்கும் தெப்பத் திருவிழா மற்றும் மார்கழி 28 ஆகிய நாட்களிலும் சுவாமியுடன் ஆண்டாளை தரிசிக்கலாம். கஜேந்திரனுக்கு மோட்சம் கொடுக்கும் வைபவம் நடக்கும். சிவ பூஜைக்கு உகந்த வில்வம் அவருக்கான தலங்களில் பிரதான விருட்சமாக இருக்கும். ஆனால் பெருமாள் தலமான இங்கு வில்வம் தல விருட்சமாக உள்ளது.
இத்தலத்துப் மோகனவல்லிக்கும் வில்வ இலை அர்ச்சனை செய்யப்படுகிறது. பித்ருக்களுக்கு திதி தர்ப்பணம் செய்பவர்கள் ,செய்ய மறந்தவர்கள் காளமேகப் பெருமாளை வேண்டி அரிசி மாவில் செய்த தீபத்தில் நெய் விட்டு தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். இதை மோட்ச தீபம் என்பர் 3, 5 அல்லது 9 என்ற எண்ணிக்கையில் இந்த தீபம் ஏற்றப்படுகிறது.
பெருமாள் சன்னதியில் தரும் தீர்த்தத்தை பெற்று சென்று உயிர் பிரியும் நிலையில் இருப்பவர்களுக்கு புகட்டு கிறார்கள் ,அவர்கள் அமைதியான மரணத்தை சந்திப்பர் என்பதுடன் மோட்சமும் பெறுவர் என்பது நம்பிக்கை. இத்தலத்தில் மகாவிஷ்ணு மக்களுக்கு வேண்டும் வரத்தை அருள் மழையாக தருகிறார் .எனவே இவர் காளமேகப்பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். இங்குள்ள உற்சவர் "ஆப்தன்' என்று அழைக்கப்படுகிறார். "நண்பன்' என்பது இதன் பொருள். தன்னை வேண்டுபவர்களுக்கு உற்ற நண்பனாகவும் ,அவர்களது இறுதி காலத்திற்கு பிறகு வழித்துணையாக அருளுவதால் இவருக்கு இப்பெயர் ஏற்பட்டது என சொல்லப்படுகிறது.
அழகில்லாத காரணத்தால் திருமணம் தடை படுபவர்கள், கோயில் முன்மண்டபத்தில் எதிரெதிரே உள்ள மன்மதன் ,ரதி சிற்பங்கள் தூண்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆண்கள் மன்மதனுக்கும் ,பெண்கள் ரதிக்கும் சந்தனம் பூசி நெய் தீபம் ஏற்றி கல்கண்டு படைத்து வழிபட்டால் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.
திறக்கும் நேரம் -காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை சனிக்கிழமைகளில் மட்டும் காலை 5 30 மணி முதல் திறக்கப்படும்.
- வைகுண்ட ஏகாதசி பெருவிழாவையொட்டி பகல்பத்து பாசுரங்கள் உற்சவம்தொடங்கியது.
- சொர்க்கவாசல் திறப்பு வருகிற ஜனவரி மாதம் 2-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 5 மணிக்கு நடக்கிறது.
உடுமலை :
உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவையொட்டி பகல்பத்து பாசுரங்கள் உற்சவம்தொடங்கியது. அடுத்தமாதம் (ஜனவரி) 2-ந்தேதி சொர்க்கவாசல் திறப்பு விழா நடக்கிறது. பகல் பத்து உற்சவம் முதல்நாளில் கோவில்வளாகத்தில் பெரியாழ்வார் திருமொழி 200 பாசுரங்கள் பாடப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் வேங்கடேச பெருமாள் முத்தங்கி சேவை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோன்று தினசரி காலை 6.30 மணிமுதல் 8.30 மணிவரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சியாக திருப்பாவை, நாச்சியார் திருமொழி, பெருமாள் திருமொழி, திருச்சந்தவிருத்தம், திருமாலை,திருப்பள்ளியெழுச்சி, அமலனாதிபிரான், கண்ணிணுள் சிறுத்தாம்பு, பெரியதிருமொழி, திருநெடுந்தாண்டகப்பாசுரங்கள் பாடப்படுகிறது.
பகல்பத்து உற்சவம் நிகழ்ச்சி ஜனவரி 1-ந்தேதி வரை நடக்கிறது. சொர்க்கவாசல் திறப்பு வருகிற ஜனவரி மாதம் 2-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 5 மணிக்கு நடக்கிறது. 2-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை இராப்பத்து உற்சவம் நிகழ்ச்சி நடக்கிறது.
இதில் தினசரி மாலை5.30 மணிமுதல் 7 மணிவரை திருவாய்மொழி பாசுரங்கள் பாடப்படுகிறது. 12-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 7 மணி முதல் 8 மணிவரை நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சியும், காலை 9 மணி முதல் மாலை 3 மணிவரை இயற்பா, தேசிக பிரபந்தம் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை உடுமலை திருப்பதி ஸ்ரீபாலாஜி சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் ராமகிருஷ்ணன், அறங்காவலர்கள் மற்றும் திருப்பணிக்குழுவினர் செய்து வருகின்றனர்.
- இத்தலத்தில் மகாவிஷ்ணுவின் ஐந்து வடிவங்களையும், மூன்று கோலங்களையும் தரிசிக்கலாம்.
- ராமர் சயன நிலையில் இருப்பது இத்தலத்தின் சிறப்பம்சம்.
உற்சவர் - கல்யாண ஜெகந்நாதர்
அம்மன் - கல்யாணவல்லி, பத்மாசனி
தல விருட்சம் - அரசமரம்
தீர்த்தம் - ஹேம, சக்ர, ரத்னாகர தீர்த்தம்
முன்னொரு காலத்தில் புல்லவர், காலவர், கண்ணவர் ஆகிய மூன்று மகரிஷிகளும் தர்ப்பை புல் நிரம்பிய, தற்போது கோவில் அமைந்துள்ள இடமான திருப்புல்லாணி காட்டில் பெருமாளைவேண்டி கடும் தவம் செய்து வந்தனர். 3 மகரிஷிகள் உலக நன்மைக்காக தவம் இயற்றும் பொழுது அரக்கர்களால் துன்புறுத்தப் பெற்றனர். மகரிஷிகளின் வேண்டுகோளுக்கு இணங்க எம்பெருமான் மகாவிஷ்ணு முதலில் அரசமர ரூபமாய் அவர்களை காப்பாற்றி பின் ஸ்வரூபமாய் அதாவது சங்குசக்ர தரியாய் அபய முத்திரையுடன் ஆதிஜெகநாத பெருமாளாக காட்சியளித்தார். அந்த திருத்தலமே தற்போது திருப்புல்லாணியில் உள்ள இத்திருத்தலம். பிற்காலத்தில் தாயார் பத்மாசனிக்கு தனியாக சன்னதி எழுப்பப்பட்டது. "தசரதன் இங்குள்ள பெருமாளின் புத்திர பாக்கிய மூலமந்திர உபதேசத்தை பெற்று, ஸ்ரீ ராம பிரானை மகனாகப் பெற்றெடுத்தார்".
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஆதி ஜெகநாதர் கோவிலும் ஒன்றாகும். ராமர் சயன நிலையில் இருப்பது இத்தலத்தின் சிறப்பம்சம். திருமங்கையாழ்வார் தன்னை பெண்ணாகப் பாவித்து, இத்தலத்து பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளார். தவிர, ஆண்டாள், திருமழிசையாழ்வார், குலசேகராழ்வார் ஆகியோர் இங்குள்ளசேது பாலம் பற்றி பாடியுள்ளனர். பஞ்ச தரிசனம்பூரி தலத்தில் பாதியளவே (சிலையின் அளவு) காட்சிதரும் ஜெகந்நாதர், இங்கு முழுமையாக காட்சியளிக்கிறார். இதனால் இத்தலம் தட்சிண ஜெகந்நாதம் என்று அழைக்கப்படுகிறது. புல்லாரண்யம், தர்பசயனம் என்று பலபேராலும் புகழ் பெற்றதாகும்.
ஆதிஜெகந்நாதர் (அமர்ந்த கோலம்), சயனராமர் (கிடந்த கோலம்), பட்டாபிராமர் (நின்ற கோலம்), அரசமர பெருமாள், பட்டாபிராமர் என இத்தலத்தில் மகாவிஷ்ணுவின் ஐந்து வடிவங்களையும், மூன்று கோலங்களையும் தரிசிக்கலாம்.
பொதுவாகப் பெருமாள் தலங்களில் சுவாமி, குறிப்பிட்ட சில நாட்கள் மட்டும் தாயாருடன் இணைந்து (சேர்த்தி) காட்சி தருவார். ஆனால், இங்கு சுவாமி வெள்ளிதோறும் தாயாருடன் சேர்ந்து காட்சி தருகிறார். அன்று ஊஞ்சல் உற்சவம் நடக்கும்.
சீதையை மீட்க இலங்கை சென்ற ராமர், கடலில் பாலம் அமைப்பதற்காக சமுத்திரராஜனிடம் அனுமதிகேட்டு மூன்று நாட்கள் காத்திருந்தார். அப்போது, தர்ப்பைப்புல்லின் மீது சயனம் கொண்டார். இதன் அடிப்படையில் இங்கு ராமர், ஆதிசேஷன் மீது தர்ப்பை விரித்து, அதில் சயனிக்கும் வகையில் சிலை வடிக்கப்பட்டுள்ளது. சீதையை மீட்கச் செல்லும் முன் தங்கிய தலமென்பதால் சீதை இல்லை. லட்சுமணனின் வடிவமாக ஆதிசேஷன் இருப்பதால், லட்சுமணரும் இல்லை. ஆஞ்சநேயர் மட்டும் உள்ளார். மூலஸ்தான சுவரில் பாலம் அமைக்க ஆலோசனை செய்த சூரியன், சந்திரன், தேவர்கள் இருக்கின்றனர்.
பிள்ளை வரம் கேட்டல்தான் இத்தலத்தின் மிகச் சிறப்பு பெற்ற பிரார்த்தனை. சேது தீர்த்தத்தில் நீராடினால் நமது முன்ஜென்ம பாவங்கள் விலகும். மேலும் இத்தலத்தில் வழிபட்டால் கிரக தோஷங்கள் நீங்கும். திருமணத்தடை உள்ளவர்கள் உற்சவர் கல்யாண ஜெகந்நாதரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.
தாயாருக்குப் புடவை சாத்துதல், தவிர பெருமாளுக்குத் துளசி மாலை அணிவித்தல், அபிஷேக ஆராதனைகள் ஆகியவற்றை செய்யலாம். மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம். பிரசாதம் செய்து பெருமாளுக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு கொடுக்கலாம்.
கோவில் திறக்கும் நேரம்: காலை 7:30 மணி முதல் 12:15 மணி வரை, மாலை 3:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை திறந்திருக்கும். விசேஷ நாட்களில் மாறுதலுக்குட்பட்டது.
- சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
- ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஜெனகை நாராயண பெருமாள் சர்வ அலங்காரத்துடன் சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சோழவந்தான்
சோழவந்தான் ஜெனகை நாராயணபெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை உலக நன்மைக்காக ஹோமம் நடந்தது. இதைத் தொடர்ந்து நம்மாழ்வார் வரவேற்க சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.வாசலுக்கு முன்பு கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா நாராயணா, என்று கோஷமிட்டனர்.
ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஜெனகை நாராயண பெருமாள் சர்வ அலங்காரத்துடன் சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவிலை வலம் வந்து தீவட்டி ஊர்வலத்தில் சுவாமி வீதி உலா நடந்தது. அதிகாலை என்பதால் பக்தர்களுக்கு சுவாமி உருவம் கூட தெரியவில்லை. உபயதாரர் சிவஞானம்பிள்ளை குடும்பத்தினர் பிரசாதம் வழங்கினர். நவநீத கிருஷ்ணானந்த கொண்டல்ரவ்த் பாண்டுரங்க பஜனை குழுவினர், சந்தான கோபால கிருஷ்ணன் கோவில் பஜனைக் குழுவினர் பக்திப் பாடல்கள் பாடி வலம் வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று இரவு கருடாழ்வார் வாகனத்தில் சுவாமி வீதி உலா நடக்கிறது.
- கோயிலைச் சுற்றி 21 கோபுரங்கள் உள்ளன.
- திருவரங்கப் பெரியகோவில் 6,13,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது.
வைணவர்களின் திருத்தலமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பல்வேறு அதிசயங்களையும், ரகசியங்களையும் தாங்கி நிற்கிறது. அதன் தொகுப்பு இதோ...
* திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், 'பூலோக வைகுண்டம்' என்ற பெருமை பெற்றது. வைணவர்களின் 108 வைணவ திருத்தலங்களில் தலைமைச் செயலகம் போல் செயல்படுகின்றது.
* பன்னிரு ஆழ்வார்களில் 11 ஆழ்வார்கள், 'மங்களாசாசனம்' பெற்று பாடிய திருத்தலமாகும். 108 வைணவத் திருத்தலங்களில் இரண்டு திருத்தலங்கள், பூமியில் இல்லை. ஒன்று பரமபதம். மற்றொன்று திருப்பாற்கடல்.
* இந்தியாவிலேயே ஸ்ரீரங்கம் கோவில்தான் ஏழு பிரகாரங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலைச் சுற்றி 21 கோபுரங்கள் உள்ளன.
* 1961 ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கின்படி இங்கு 42 ஆயிரம் மக்கள் மட்டுமே வாழ்ந்து வந்தனர். தற்போது, இதன் மக்கள் தொகை 3 லட்சத்தைத் தாண்டி விட்டது.
* கோவில், 'நாழிக்கேட்டான் வாயில்' வெளிப்புற முகப்பின் இருபக்கங்களிலும் உள்ள மாடங்களில் பத்திரர், சுபத்திரர் ஆகிய துவார பாலகர்கள் உள்ளனர்.
* கோவிலின் உட்புற முகப்பில் பெரியபெருமாள் மூலஸ்தானத்தை நோக்கி, மகாவிஷ்ணுவுக்கு உரியவராக முறையே சங்கு, தாமரை வடிவங்களில், 'சங்க நிதி', 'பதும நிதி' உருவங்களுடன் இருக்கின்றனர்.
* விஜயரங்க சொக்கநாத நாயக்கர், அவரது மனைவி, மகன், மருமகள் ஆகியோரின் உருவங்கள் தந்தத்தால் இயற்கை முறையில், வண்ணம்தீட்டி வைக்கப்பட்டுள்ளன.
* மூலவர், உற்சவர், தாயாருக்கு அணிவிக்கப்படும் மாலைகள் அனைத்தும் அம்மா மண்டபம் ரோட்டில் உள்ள மதுரகவி நந்தவனத்தில் பூக்கள் பறிக்கப்பட்டு, மாலை கட்டப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது.
* மூலவர் சுதையினால் இருப்பதால் திருமஞ்சனம் செய்யப்படுவதில்லை. அதற்குப் பதில் கோவில் பணியாளரைக் கொண்டு இயற்கை மூலிகைகளினால் தயாரிக்க ப்பட்டதைலக்காப்புடன் மெருகூட்டப்படுகிறது.
* கோவில் கருவறையின்மேல் தங்கத் தகடுகளால் வேயப்பட்ட விமானம் உள்ளது. விமானத்தின் மேல் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களைக் குறிக்கும் வகையில் நான்கு தங்கக்கலசங்கள் உள்ளன.
* இந்தத் திருத்தலத்துக்கு வந்து ஆண்டாள், திருப்பாணாழ்வார், துலுக்க நாச்சியார் ஆகியோர் அரங்கனின் திருவடியை அடைந்து உள்ளனர்.
* வருடத்துகொருமுறை,பங்குனி உத்திர நாளில் பெருமாளும், தாயாரும். தாயார் சன்னதியில் இருக்கும் சேர்த்தி சேவை மண்டபத்தில் சேர்ந்து பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர்.
* கோவிலில் உள்ள நகைகளின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய்களுக்கு மேல் இருக்கும். பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வாரால் கட்டமைக்கப்பட்ட ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள 1,000 தூண்களும் முழுமையாக கட்டி முடிக்கப்ப டாமல் போய்விட்டது. 951 தூண்கள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன. மீதமிருக்கும் 49 தூண்கள், வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும் காலத்தில் மணல்வெளியில் 49 மரத்தூண்கள் நடப்பட்டு ஆயிரம் தூண்களுடன் விழா நடைபெறுகிறது.
கோவில் தீர்த்தங்கள்: சந்திர புஷ்கரணி, சூர்ய புஷ்கரணி, வகுள தீர்த்தம், சம்பு தீர்த்தம், அசுவத்த தீர்த்தம், பலாச தீர்த்தம், புன்னாக தீர்த்தம், பில்வ தீர்த்தம், கதம்ப தீர்த்தம், ஆம்பர தீர்த்தம், தென்திருக்காவிரி, வட திருக்காவிரி கோவிலில் நிர்வாக முறையை ஏற்படுத்திய ராமானுஜர் 120 ஆண்டுகள் வாழ்ந்தார்.
ராமானுஜரது திருமேனி 5-வது 'திருச்சுற்று' எனப்படும் அகளங்கன் திருச்சுற்றில் வசந்தமண்டபத்தில் புதைக்கப்பட்டது. பிறகு தானாகவே அவரது திருமேனி பூமிக்கு வெளியே தோன்றியது. அதுவே தற்போது ராமானுஜர் சந்நிதி மூலஸ்தானமாக உள்ளது. தான் ஏற்படுத்திய நிர்வாகங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதைக் கண்காணித்து வருகிறார் ராமானுஜர் என்பது ஐதீகம்.
ஐந்து குழி மூன்று வாசல்
ஸ்ரீரங்கம் கோவிலின் தாயார் சந்நிதிக்கு வெளியே இருக்கும், ஐந்து குழி மூன்று வாசல் அற்புதமானது. இங்குள்ள ஐந்து குழிகள் வழியே, ஐந்து விரல்களை வைத்து தெற்கு பக்கம் பார்த்தால் பரமபத வாசல் தெரியும். இப்படித்தான் தாயார் பெருமாளை சேவிக்கிறார் என்பது ஐதீகம். அர்த்த பஞ்சக ஞானத்தைக் குறிப்பதே ஐந்து குழி என்றும் மூன்று வாசல் என்பது பிரம்மத்தின் வழி என்பதும் பெரியோர்கள் வாக்கு.
கல்லிலே கலை வண்ணம் திருவரங்கம்
திருச்சியில் காவிரியும் கொள்ளி டமும் உருவாக்கிய மணல் தீவு முக்கொம்பு தொடங்கி கல்லணை வரை உள்ளது. அரங்கம் என்றால் ஆற்றிடைக்குறை என்றும் பொருள்படும். சிறப்பு கருதி திருவரங்கம் ஆனது. அங்கு பெருமாள் வந்து தங்கியது ஒரு சுவையான புராணம். திருவரங்கப் பெரியகோவில் 6,13,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. அதாவது 156 ஏக்கர். கோவில் சுவர்களின் மொத்த நீளம் 32,592 அடி. பெரிய கோவில் 7 திருச்சுற்றுக்களோடு அமைந்துள்ளது. இந்தியாவிலேயே 7 சுற்றுக்களைக் கொண்ட கோவில் இது மட்டுமே. பெருமாள் தென்திசை நோக்கிப் பள்ளி கொண்டுள்ளார். கருவறை விமானத்தில் 4 கலசங்கள் உள்ளன. இவை நான்கு வேதங்களை குறிப்பதாக நம்புகிறார்கள். சுந்தர பாண்டியன் விமானத்துக்கு தங்கம் பதித்தான். அதனால் பொன்வேய்ந்த பெருமாள் என அழைத்தனர்.
நாம் ஸ்ரீரெங்கநாதரை தரிசிக்க ஏழாம் சுற்றின் தெற்கு வாசலில் உள்ள ராஜகோபுரத்தின் வழியாக நுழைகிறோம். முடிவடையாமல் இருந்த அந்த மொட்டை கோபுரத்தை 1979-ல் தொடங்கி 1987 மார்ச்சில் அஹோபில மடத்து 44-ம் ஜூயர் அழகிய சிங்கர் ஜூயர் 236 அடி உயரத்தில் முழுமையாக்கினார். ஆசியாவிலேயே பெரிய கோபுரமிது. இந்த ஏழாவது திருச்சுற்றில் சித்திரை திருவிழா நடப்பதால் சித்திரை திருவீதி என்று அழைக்கிறோம்.
பங்குனித் திருநாளில் நம்பெருமாள் உலா வரும் கோரதம் இங்குதான் உள்ளது. கோட்டை வாசல் அருகில் உள்ள கண்ணன் சந்நிதியும் இங்குள்ளது.திருவரங்கப் பெருமாள் தென்திசை நோக்கி பள்ளி கொண்டிரு க்கிறார். குணதிசை முடியை வைத்து, குடதிசை பாதம் நீட்டி, வடதிசை முதுகு காட்டி, தென்திசை இலங்கை நோக்கி அரிதுயிலில் இருப்பதை காணும் பக்தர்கள் பரவசம் அடைகிறார்கள். அரங்கன் மீது கொண்ட காதலால் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து திருவரங்கம் வந்தவர் ஆண்டாள். அவரையே மணக்க விரும்பி அரங்கன் சந்நிதியில் திருமணத்தூணில் புகுந்து மறைந்தார் என்பது வரலாறு.
திருவரங்கம் கோவிலிலும், சுற்றியுள்ள மண்டபங்களிலும் உள்ள சிற்பங்களை பார்க்கும் போது கல்லிலே கலை வண்ணம் கண்டான் என்ற பாடலை நினைவுபடுத்தும்.இங்குள்ள கலைக்கூடத்தில் பழங்கால உலோக சிற்பங்கள் வாள்கள், நாணயங்கள், ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்படுகின்றன. 1966-ல் யுனெஸ்கோ செய்த உதவியால் சிற்பங்களும் ஓவியங்களும் புதுப்பிக்கப்பட்டன. பொதுவாக கோவில்களில் வருடத்தில் ஒன்றோ இரண்டோ விழாக்கள் நடக்கும்.
ஆனால், வருடத்தில் 322 நாட்களும் பெருமாளுக்கு விசேஷம் என்பது திருவரங்கத்தில்தான். இதில்21 நாள் நடக்கும் மார்கழி மாத வைகுண்ட ஏகாதசியும் மிக முக்கியமானவை. அதுமட்டுமல்ல, பெருமாள் வீதியில் உலா வரும்போது அவருக்கு முன்பாக தமிழ் மறை ஓதுவரும் இங்குள்ள சிறப்பாகும்.ஆழ்வார்களிடையே அரங்கனை தவிர மற்றொரு பெருமானைப் பாடாமல் வாழ்நாள் முழுவதும் ஸ்ரீரெங்கத்திலேயே வாழ்ந்து மறைந்தவர் தொண்டரடிப்பொடி ஆழ்வார்தான். அவர் திருவரங்கத்தின் பெருமை உணர்ந்தே, இந்திரலோகம் கூட வேண்டாம்... அரங்க மா நகரமான திருவரங்கம் போதும் என்றார். கி.பி. 10-ம் நூற்றாண்டு வரை இந்தக் கோவிலுக்கு வரலாற்று சான்றே இல்லை.
எல்லாம் இலக்கியச் சான்றுகளே. கோவிலின் மூன்றாம் சுற்றை திருமங்கை மன்னன் கட்டியதாக கூறுகிறது. ஆதித்ய சோழன் கா லம் தொட்டு 644 கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இவற்றின் மூலமாகவே சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள், நாயக்கர்கள் செய்த திருப்பணிகளையும், கொடுத்த நிலம், பொன் போன்றவையும் அறிய முடிகிறது. இது குறித்து கல்வெட்டுகள் தமிழ், சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, மராட்டியம், ஒடியா முதலிய 6 மொழிகளில் கிடைக்கின்றன.
கம்பீரம் காட்டும் ராஜகோபுரம்
ஸ்ரீரங்கம் கோவில் ஏறத்தாழ 156 ஏக்கர் பரப்பளவில் அதா வது 6,31,000 சதுர மீட்டர் கொண்டதாக, நாட்டிலேயே மிகப்பெரிய கோவில்களில் ஒன்றாக விளங்குகிறது. மையப் பகுதியில் ரெங்கநாத சுவாமி சன்னதி உள்ளது. இது தெற்கு நோக்கிய வண் ணம் அமைந்துள்ளது. ராஜ கோபுரத்துடன்கூடிய பிரதான வாயில் தெற்குப் பக்கத்தில் அமைந்துள்ளது.
கோவிலைச் சுற்றி உட்புற மாக அமைந்துள்ள நான்கு சுற்றுக்களும் கோவில் சார்ந்த பயன்பாடுகளுக்கு உரியவை. வெளிப்புறமாக உள்ள மூன்று சுற்றுக்களும் வீடுகள், வணிக நிறுவனங்கள், தெருக்கள் என முழு நகரத்தையும் உள்ள டக்கியுள்ளது.
ஸ்ரீரங்கம் கோவில் வளாகத் துக்குள் அமைந்துள்ள ஏழு மதில் சுற்றுக்களும், ஏழு லோகத்தை குறிப்பதாக சொல் லப்படுகிறது. மாடங்கள் சூழ்ந்துள்ள திருச்சுற்று- பூலோ கம், திரிவிக்ரம சோழன் திருச்சுற்று புவர்லோகம், அகலங்கனென்னும் கிளிச் சோழன் திருச்சுற்று சுவர் லோகம், திருமங்கை மன் னன் திருச்சுற்று -மகர்லோகம், குலசேகரன் திருச்சுற்று -ஜநோ லோகம், ராஜமகே ந்திர சோழன் திருச்சுற்று -தபோ லோகம், தர்மவர்ம சோழன் திருச்சுற்று -சத்யலோகம்.
தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய ராஜகோபுரம்
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி கோவில் 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தல மாகவும், சோழநாட்டு திருப்பதிகளில் முதன்மை தலமாகவும் திகழ்கிறது. பரந்து விரிந்த இக் கோயில் வளாகத் தில் அமைந்துள்ள ஏழு சுற்று மதில்களின் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட் டுள்ளன. இவற்றுள் மிகப் பெரிதான ராஜகோபுரம், 72 மீட்டர் (236 அடி) உயரத்துடன், தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகிறது. இது 17 -ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதானாலும், 1987 -ம் ஆண்டு தான் முழுமை யாகக் கட்டி முடிக்கப்பட்டது. சோழநாட்டு காவிரி ஆற்ற ங்கரையில் அமைந்து ள்ள முதல் திவ்யதேச தலம்.
கட்டுமான பொருட்கள்
ஸ்ரீரங்கம் கோவிலின் பிரமாண்டமான ராஜகோபு ரத்தை கட்டுவதற்கு 1.7 கோடி எண்ணிக்கையிலான செங்கற்கள், 20,000 டன் மணல், 1,000 டன் கருங்கல், 12 ஆயிரம் டன் சிமெண்ட், 130 டன் இரும்பு கம்பி கள், 8,000 டன் வர்ண பூச்சுக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ராஜ கோபு ரத்தின் மொத்த எடை 1.28 லட்சம் டன் ஆகும்.
சகல சவுபாக்கியம் தரும் கோவில்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மூலவர் ரெங்க நாதப்பெருமாள் புஜங்க சயனத்தில் தெற்கு நோக்கி ஆதிசேஷன் மீது பள்ளிகொண்டு காட்சி அளிக்கிறார். உற்சவராக நம்பெருமாள், தாயார் ஸ்ரீரங்க நாச்சியார், தீர்த்தம் சந்திர புஷ்கரணி, காவிரி கொள்ளிடம், கோவிலின் விமான மாக பிரண வாக்ருதி, தல விருட்சமாக புன்னை மரம் உள்ளது.
சூரிய குலத்தைச் சேர்ந்த மனுகுமாரன் பிரம்மனை நோக்கித் தவம் புரிந்து திருமாலின் திருவாரா தன விக்ரகத்தை கேட்டு வாங்கி அயோத்தியில் வைத்து வழிபட்டு வந்தார். இந்த விக்ரகத்தை ஸ்ரீராம பிரானும் வழிபட்டார். ஸ்ரீராமன், ராவணனை வென்று சீதா பிராட்டியை மீட்டு அயோத்திக்கு வந்த போது தம் முன்னோர்கள் வழிபட்டு வந்த திருமாலின் திருவாராதன விக்ரகத்தை, அன்பு காணிக்கையாக விபீஷணனுக்கு வழங்கினார். விபீஷணன் அதை எடுத்து இலங்கைக்குக் கொண்டு செல்லும் போது காவிரி, கொள்ளிடம் நதிக்கரையில் வைத்து இளைப்பாறினார்.
மறுபடியும் அந்த விக்ரகத்தை எடுக்க முயன்றபோது விக்ரகத்தை எடுக்க முடிய வில்லை. தான் இனிமேல் இங்கு தான் நிரந்தரமாக இருக்கப் போவதாக பெருமாளே விபீ ஷணனிடம் கூறியதால் விபீஷணனும் மனம் உவந்து அந்த விக்ரகப் பெருமாளை வணங்கி விட்டு இலங்கைக்கு சென்றான். பெருமாளும் விபீஷணனுக்கு அருளும் வகையில் இலங்கையை நோக்கித் தன் பார்வை வரும்படி சயனித்துக் கொண்டார்.சோழநாட்டு அரசனான தர்மவர்மன் பெருமாளுக்கு முதலில் சிறு கோவிலைக் கட்டினார். இதற்கு பிறகு சேர, பாண்டிய அரசர்களும் இக்கோவிலைக் கட்டி முடிக்க அரும்பாடுபட்டார்கள்.
அது நாளடைவில் மிகப்பெரிய கோவிலாக உருவெடுத்து இன்றைக்கு வைண வத் தலங்களில் முதலாவது கோவிலாக, புகழ்பெற்ற 108 வைணவ தலங்களில் முன்னிலையில் நிற்கிறது.பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பா ணாழ்வார், திருமங்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம். கம்பனது ராமாயணம் அரங்கேறியதும் இங்கே தான்.
ஸ்ரீராமானுஜர் இறுதியில் திருநாடு அடைந்தாலும் அவரது திருமேனியை வசந்த மண்டபத்தில் - கெடாதவாறு மூலிகைச் சாந்து பூசி இன்று வரை வைத்திருக்கிறார்கள். இத்தலத்திலுள்ள மூலவரை - வெள்ளியன்று அதிகாலை விஸ்வரூப தரிசனம் கண்டு வந்தால் திருமணமாகாதவர்களுக்கு சுக்கிர தோஷம் விலகி திருமணம் நடக்கும். பணக்கஷ்டம் உள்ளவர்கள் அந்த சங்கடத்திலிருந்து மீண்டு விடுவார்கள். வெளி நாடு சென்று முன்னுக்குவர வேண்டும் என்று துடிப்பவர்கள், வேலை தேடுபவர்கள், சொந்தத் தொழில் செய்ய ஆசைப்படுபவர்கள் அனைவருக்கும் யோகத்தையும் சவுபாக்கியத்தையும் தரக் கூடிய கோவில் என்பது மிகப் பெரிய சிறப்பு.
வளரும் நெற்குதிர்கள்
20 அடி விட்டமும் 30 அடி உயரமும் கொண்ட 5 பிரம்மாண்ட நெற்குதிர்கள் சக்கரத்தாழ்வார் சந்நிதிக்கு அருகே அமைந்துள்ளன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உருவான இந்த நெல் சேமிப்பு கிடங்கிகள் வட்டவடிவமாக அமைந்தவை. மொத்தமாக 1500 டன் அளவுக்கு இந்த கிடங்கியில் நெல் சேமிக்க முடியுமாம். எந்தக் காலத்திலும் இந்த குதிர்களில் நெல் இல்லாமல் போனதே இல்லை என்ற பெருமையைக் கொண்டதாம் இவை. அதுபோல எத்தனை நெல் கொட்டினாலும் விரிவடைந்து ஏற்றுக் கொள்ளும் தன்மை கொண்டது என்றும் அதிசயமாக இந்தக் குதிர்களைச் சொல்கிறார்கள்.
- விஷ்ணுவே வீரராகவப் பெருமாளாக இக்கோவிலில் குடி கொண்டுள்ளார்.
- தீராத நோய்களை வீரராகவர் தீர்த்து வைப்பார்.
மூலவர்:வீரராகவப் பெருமாள்
தாயார்:கனக வல்லித் தாயார் (வசுமதி).
தீர்த்தம்: ஹ்ருத்தபாப நாசினி
108 திவ்ய தேசங்களில் ஒன்றான இத்தலம் திருமழிசை ஆழ்வார், திருநங்கை ஆழ்வார், துப்பூர் வேதாந்த தேசிகன் உள்ளிட்டோரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது என்பது இதன் தனிச்சிறப்பு.
இத்திருக்கோவிலை அகோபில மடம் பராமரித்து வருகிறது. இத்திருக்கோவில் ஐந்தடுக்கு இராசகோபுரத்துடன் (பிரதான வாயில்) பல்லவர்களால் கட்டப்பட்டது ஆகும். கனகவள்ளி அம்மையார், கணேச ஆழ்வார், கஜலட்சுமி தாயார், கோபாலன், நம்மாழ்வார், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், வேதாந்த தேசிகன், இராமானுச ஆச்சாரியார், லட்சுமி நரசிம்மர் ஆகியோருக்கு இங்கு தனித் தனியே சிறு ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன. இங்குதான் இறைவன் அரசன் தர்மசேனனின் மகள் வசுமதியைத் திருக்கல்யாணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இங்குள்ள கல்வெட்டுகள் பொ.ஊ. 9 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பல்லவர்களின் இரண்டாவது பாதியைக் குறிப்பிடுகின்றன. இக்கோவில் 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என உள்ளூரில் புழக்கத்திலுள்ள புராணக் கதைகள் தெரிவிக்கின்றன. விஷ்ணுவே வீரராகவப் பெருமாளாக இக்கோவிலில் குடி கொண்டுள்ளார்.
தல வரலாறு
புரு எனும் முனிவரின் யாகத்தின் பயனாய்ப் பிறந்த சாலிஹோத்ரர் எனும் முனிவர் இங்கு தவம் செய்து வந்தார். தினமும் அதிதிக்குப் படைத்த பின்பு உண்பவரான சாலிஹோத்ர முனிவரின் அதிதியாகப் பெருமாளே வயோதிகர் வடிவில் வந்து உணவு பெற்றார். பசி தீராததாகக் கூறி முனிவரின் பங்கையும் உண்டு பசியாறிய பின்னர், உண்ட களைப்புத் தீர எங்கே படுப்பது என முனிவரிடம் வினவ, முனிவர் தம் ஆசிரமத்தைக் காட்டினார். அங்கே பெருமாளாக சயனித்தார். "படுக்க எவ்வுள்" என்று கேட்டதால் ஊர் பெயர் எவ்வுள்ளூர் என்றும் எவ்வுட்கிடந்தான் என்பது பெருமாள் திருப்பெயருமாயிற்று.
ஸ்ரீதேவித் தாயார் வசுமதி எனும் பெயரில் திலிப மகாராஜாவிற்குப் பெண்ணாக அவதரித்து வாழ்ந்து வர, வீரநாராயணன் எனும் பெயருடன் வேட்டைக்குச் சென்ற பெருமாள், தாயாரை மணமுடித்ததாகத் தல வரலாறு.
அதன் பின்னரே பெருமாள் பெயர் மாறிற்று, அது வரை கிங்கிருஹேசன் எனும் பெயரே பெருமாளுக்கு முக்கியத் திருப்பெயராக விளங்கிற்று.
இக்கோவிலின் இறைவன் "வைத்திய வீரராகவர்" என்றும் அழைக்கப்படுகிறார். தீராத நோய்களை வீரராகவர் தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கையில் மக்கள் சிறிய உலோகத் தகட்டில் நோயினால் பாதிக்கப்பட்ட உறுப்பைச் செதுக்கி அந்நோயைத் தீர்த்து வைக்குமாறு கடவுளிடம் கோரிக்கை சமர்ப்பிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இறைவனுக்கு இங்கு சந்தன எண்ணெயால் மட்டும் அபிசேகம் செய்யப்படுகிறது.
ஐந்தடுக்கு ராஜகோபுரத்துடன் காணப்படும் இக்கோவிலில் வீரராகவப் பெருமாள் வைத்திய வீரராகவப் பெருமாள் எனவும் அழைக்கப்படுகிறார். பெருமாள் புஜங்க சயனத்தில் கிழக்கு நோக்கிக் காணப்படும் வகையில் காணப்படுகிறார். மூலவரின் வலது புறம் சாலி கோத்திர மகரிஷி, இடதுபுறம் பிரம்மாவுக்கு உபதேசிக்கும் ஞான முத்திரையும் நிறுவப்பட்டுள்ளது.
மூலவர் பெருமாளுக்கு சந்தன தைலத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது. கனகவல்லி தாயார் சன்னதி அருகில் ஆழ்வார், கணேசர், கஜலட்சுமி தாயார், கோபாலன், நம்மாழ்வார், ஆண்டாள், வேதாந்த தேசிகர், ராமானுஜாச்சாரியார், லட்சுமி நரசிம்மர், ஸ்ரீ ரங்கநாதர், அனுமான் சன்னதிகளும் அமைந்துள்ளன.
இக்கோவிலில் இடம்பெற்றுள்ள சாலி கோத்திர மகரிஷிக்கு, தை அமாவாசை அன்று பெருமாள் காட்சி தந்ததால் தை அமாவாசை வழிபாட்டுக்கு உகந்ததாகவும் இத்தலம் கருதப்படுகிறது. இத்தினத்தில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்து வழிபடுவதும் சிறந்த பலனைத் தரும் என்பது ஐதீகம்.
சிவபெருமான் தனது தோஷம் நீங்க இத்தலத்துப் பெருமாளை வணங்கி தோஷம் நீங்கப் பெற்றதாகவும் தல வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. தீராத நோயால் வருந்துபவர்கள் இத்தலத்தில் ஒன்பது கரைகளுடன் அமைந்துள்ள தீர்த்தத்தில் நீராடி, பெருமாளைத் தரிசித்தால் நோய்கள் அனைத்தும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இத்தலத்தில் அமாவாசை தினம் சிறந்த வழிபாட்டு நாளாகக் கருதப்படுகிறது. இது தவிரப் பிரம்மோற்சவம், சித்திரை உற்சவம் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாத சனிக்கிழமை, நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி போன்ற வழிபாட்டுத் தினங்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. பக்தவச்சத பெருமாளுக்கும் கண்ண மங்கை தாயாருக்கும் தினசரி ஆறு கால பூஜை பாரம்பரிய முறைப்படி நடத்தப்பட்டு வருகிறது.
- இங்கு ஆதிசேஷன் குடைபிடிக்க நின்றகோலத்தில் காட்சியளிப்பது சிறப்பு.
- சூரியனுக்குரிய தலமாக விளங்கும் “திருவைகுண்டம்”.
பாண்டிய நாட்டில் உள்ள வைணவ திவ்ய தேசங்களுள், தாமிரபரணி ஆற்றின்கரையில் அமையப்பெற்றுள்ள ஒன்பது தலங்களை "நவதிருப்பதிகள்" என்று சிறப்பித்துக்கூறுகிறார்கள். இந்த ஒன்பது தலங்களும், நவக்கிரக நாயகர்களின் பெயரில் வரிசைப்படுத்தப்படுகிறது. அவற்றுள் முதலாவதாக சூரியனுக்குரிய தலமாக விளங்கும் கோவில் "திருவைகுண்டம்".
108-வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்றாக விளங்கும் இக்கோவில், நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.
மூலவர் பெயர் : வைகுண்டநாதர் (நின்ற கோலம்).
உற்சவர் பெயர் : கள்ளர்பிரான் (சோரநாதர்).
தாயார்கள் : வைகுந்தநாயகி, சோரநாயகி.
விமானம் : இந்திர விமானம்.
கோவில் விருட்சம் : பவள மல்லி.
தீர்த்தம் : தாமிரபரணி, கலச தீர்த்தம்.
கோவில் வரலாறு
முற்காலத்தில் சத்யலோகத்தில் பிரம்மன் ஆழ்ந்த நித்திரையில் இருந்தபோது, கோமுகாசூரன் என்ற அரக்கன் அவரிடமிருந்து நான்கு வேதங்களையும் அபகரித்து சென்றான். துயில் நீங்கி எழுந்த பிரம்மன் இதனை அறிந்து வருந்தி, அதனை அவனிடமிருந்து மீட்கும் பொருட்டு மகாவிஷ்ணுவைக் குறித்து தவம் செய்ய எண்ணி, தன் கையிலிருந்த தண்டத்தை ஒரு பிரம்மாச்சாரியாக மாற்றி "பூவுலகில் தாமிரபரணி நதிக்கரையில் தவம் புரிய ஒரு இடத்தை பார்த்து வா" என்று அனுப்பி வைத்தார். அவனும் நதியின் இரு கரையிலும் பார்த்து விட்டு இறுதியாக திருக்கோளுருக்கு அருகில் உள்ள ஜெயந்திபுரிக்கு வந்தான். அங்கு ஒரு மோகினியைக் கண்டு மோகித்து அவளுடன் காலம் கழித்து நான்முகன் கட்டளையை மறந்தான்.
இதையறிந்த பிரம்மன் தன் கையிலிருந்த கெண்டியை ஓர் பெண்ணாக்கி " பெண்ணே! தவம் இயற்ற தாமிரபரணி நதிக்கரையில் ஒரு நல்ல இடம் பார்த்து வா" என்று அனுப்பி வைத்தார். அவளும் வெகு நாள் பூவுலகில் சுற்றி சோலைகள் நிறைந்த, தாமிரபரணி பாயும் இந்த திருவைகுண்டமே தவத்திற்குரிய சிறந்த இடம் என்று பிரம்மனிடம் தெரிவித்தாள்.
பிரம்மனும் இங்குவந்து கடும் தவம் செய்ய, திருமால் அதற்கு இரங்கி அவருக்கு நேரில் காட்சி கொடுத்து, கோமுகாசூரனை வதம்செய்து அவனிடமிருந்த நான்கு வேதங்களையும் மீட்டு பிரம்மனிடம் அளித்தார்.
பிரம்மன் அகம் மகிழ்ந்து, தனக்காக எப்படி வைகுண்டத்திலிருந்து இங்கு எழுந்தருளி சேவை சாதித்தீரோ, அவ்வண்ணமே இங்கு நித்யசேவை சாதித்து அடியவர்களுக்கு அருள்புரிய வேண்டும் என விண்ணப்பம் செய்ய பெருமாளும் இங்கு வைகுண்டநாதராக நித்யசேவை சாதிக்கிறார். இதனால் இத்திருப்பதியும் "திருவைகுண்டம்" என்றே சிறப்பிக்கப்படுகிறது. பிரம்மன் தனது கெண்டியால் தாமிரபரணி தீர்த்தத்தை எடுத்து பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்ததாலும், நதிக்கரையில் கலசத்தை நிறுவி பூசித்ததாலும், இங்கு தாமிரபரணி " கலச தீர்த்தம்" என்று சிறப்புப்பெற்றது.
பாண்டியர் காலத்தில் கோவில் எழும்பிய வரலாறு
முன்னர் பிரம்மனால் பூஜிக்கப்பட்ட வைகுண்டநாதர் எழுந்தருளியிருந்த சிறிய கோவில், பிற்காலத்தில் சிதிலமடைந்து மண்ணுக்குள் புதைந்துவிட்டது. பிற்காலத்தில் இப்பகுதியை பாண்டியர்கள் ஆட்சி செய்த போது, தற்போது கோவில் உள்ள பகுதிகளில் அரண்மனைப் பசுக்கள் மேய்வது வழக்கம், இப்பசுக் கூட்டத்தில் ஒரு பசு வைகுண்டபதி புதையுண்ட இடத்திற்கு நேர் மேலே உள்ள துவாரத்தில் தினமும் தனது பாலைச் சொறிந்தது.
இதைக் கண்ட பசு மேய்ப்பவர் அரசரிடம் தெரிவித்தார். அரசனும் தன் படை சூழ இங்கு வந்து பூமியை பயபக்தியுடன் தோண்ட, அங்கு ஆதிசேஷன் குடைபிடிக்க பெருமாள் சாளக்கிராம மாலையணிந்து,சங்கு, சக்கரம் மற்றும் கதை தாங்கி அபயமுத்திரையுடன் காட்சி தந்தார். இதன் பின்னர் தான் பாண்டிய மன்னன் இக்கோவிலை பிரம்மாண்டமாக கட்டியதாக வரலாறு கூறுகிறது.
கள்ளராக மாறிய பெருமாள் திருவிளையாடல்
முற்காலத்தில் திருவைகுண்டம் நகரில் காலதூசகன் என்பவன் வாழ்ந்து வந்தான். இவன் பிறர் பொருளை திருடும் குணம் கொண்டவன் என்றாலும் பெருமாள் மீது பக்தி கொண்டவன். இவன் திருடச்செல்லும் முன், தான் திருடும்பொழுது யாருடைய கண்ணிலும் படாமலும் யாரிடமும் பிடிபடாமலும் இருக்க வேண்டும் என்று திருவைகுண்டநாதரை வேண்டிக்கொள்வான். அதன்படி திருடிய பொருளில் பாதியை பெருமாள் சன்னதியில் சேர்த்துவிட்டு, மீதியிருப்பதை தன் நண்பர்களுக்கும் ஏழை, எளியவர்களுக்கும், கலைஞர்களுக்கும் தர்மம் செய்துவந்தான். முற்பிறவியில் செய்த புண்ணியத்தின் பலனாக திருவைகுண்ட தலத்தில் கலச தீர்த்தத்தில் நீராடி பெருமாளை தினமும் சேவித்து வாழ்ந்து வந்தான்.
இவ்வாறு இருக்க ஒரு நாள் நள்ளிரவில் மணப்படை அரண்மணையில் பெரும் பொக்கிஷங்களை கொள்ளையடித்து தப்பிவந்தான் காலதூசகன். ஆனால் இவனது சகாக்கள் அரண்மனை காவலாளிகளிடம் பிடிபட்டனர். இவர்களின் மூலம் விபரங்களைத் தெரிந்து கொண்ட அரசன் கால தூசகனை சிறைபிடித்து வர காவலாளிகளுக்கு உத்தரவிட்டான். இதை அறிந்த காலதூசகன் திரு வைகுண்டநாதரை சரணடைந்து தம்மிடம் உள்ள பொக்கிஷங்களை கோவில் கைங்கரியத்திற்கே அர்ப்பணித்துவிடுவதாக வேண்டிக் கொண்டான்.
சரணடைபவர்களை காப்பதை தன் சங்கல்பமாகக் கொண்ட பெருமாள், காலதூசகனின் தூய பக்திக்கு செவி சாய்த்து, பெருமாளே காலதூசகன் வேடம்புனைந்து அரசவைக்குச் சென்றார். அரசரும் கள்வர் வேடத்திலிருந்தவரை நோக்கி திருடிய உம்மை பார்க்கும் பொழுது எனக்கு கருணையே ஏற்படுகிறது நீ யார்? எனக் கேட்டார். கள்ளராக வந்த பெருமாள் அரசரை நோக்கி, அரசரே உன் தவறை நீ உணரவில்லை அரசாங்கத் தின் செல்வங்கள் யாவும் உம்மாலும் உம்மை சுற்றியுள்ளவர்களாலும் வீணடிக்கப்படுகிறது.
பணத்திற்கு நான்கு தாயாதிகள் (பங்காளிகள்) உண்டு. அதாவது தர்மம்,அரசன்,திருடன்,அக்னி ஆகியோராவர். இவர்களில் அரசன் என்பவன் தர்மத்தைக் கடைபிடித்து குடிமக்களைக் காக்கவேண்டும். நீவிர் அவ்வாறு செய்யத்தவறியதால் அதை உமக்கு உணர்த்தவே இத்திருவிளையாடலை நடத்தினோம் என்றும் நான் உலகைக் காக்கும் வைகுந்த பெருமாள் என்றும் கூறி அரசருக்கு காட்சியளித்து ஞானத்தையும் நல்ல புத்தியையும் எடுத்து ரைத்தார்.
இவ்வாறு கள்ளனை காத்து அருள் புரிந்ததால் திருவைகுண்டபதி, கள்ளபிரான் (சோரநாதன்) என்றும் அழைக்கப்பட்டார். இன்றும் இங்குள்ள உற்சவர் பெருமாள் "கள்ளர்பிரான்" என்றே அழைக்கப்படுகிறார்.
மூலவர் வைகுண்டநாதர்
கருவறையில் இந்திரவிமானத்தின் கீழ் ஆதிசேஷன் குடைபிடிக்க பெருமாள் நின்ற கோலத்தில், சங்கு, சக்கரம், கதை ஆகியவை ஏந்தியபடி, அபயமுத்திரை காட்டி கிழக்கு முகமாக காட்சியளிக்கிறார். இவருக்கு தினமும் இங்கு பாலால் திருமஞ்சனம் நடைபெறுவது சிறப்பம்சம் ஆகும்.
வைகுந்தநாயகி தாயார்
இங்கு ஸ்ரீ தேவியின் அம்சமான பெரியபிராட்டியாய் நான்கு கரங்கள் கொண்டு, அமர்ந்த கோலத்தில் காட்சித்தருகிறாள் வைகுந்தநாயகி தாயார். இவளுக்கு பெருமாளின் வலப்புறம் தனிசன்னதி அமையப்பெற்றுள்ளது.
சோரநாதநாயகி தாயார்
இங்கு பூ தேவியின் அம்சமான பூமிபிராட்டியாய் நான்கு கரங்கள் கொண்டு, அமர்ந்த கோலத்தில் காட்சித்தருகிறாள் சோரநாதநாயகி தாயார். இவளுக்கு பெருமாளின் இடப்புறம் தனிசன்னதி அமையப்பெற்றுள்ளது.
பழமையான சந்தன கருடன்
பெருமாள் சன்னதியின் முன்மண்டபத்தில் வடக்கு நோக்கியபடி ஒரு சன்னதியில் பழைய கருடவாகனம் உள்ளது. மிகவும் பழைமையான இக்கருடனுக்கு சந்தனம் பூசி காப்பு செய்துள்ளார்கள். இவரை இங்கு தரிசிப்பது சிறப்பு.
உற்சவர் கள்ளர்பிரான் சிறப்பு
இங்கு உற்சவரான கள்ளப்பிரான், ஸ்ரீ தேவி, பூ தேவி என இருதேவிகளும், இருபுறமிருக்க காட்சியளிக்கிறார். சாமுத்திரிகா லட்சணப்படி செல்வ செழுமை கொண்டவர் கள் சிரித்தால் கன்னத்தில் குழி விழும். அதுபோலவே இங்கு கள்ளர்பிரானின் கன்னத்தில் குழி விழுந்து காணப்படுகிறது. கள்ளர்பிரானை வடிவமைத்த சிற்பி இவரின் அழகில் மயங்கி, கன்னத்தில் செல்லமாக கிள்ளிவிட்டாராம். அதனால் ஏற்பட்ட அக்குழியே நிரந்தரமாக தங்கிவிட்டதாக சொல்கிறார்கள்.
கோவில் சிறப்புக்கள்
இந்த தலத்தை நம்மாழ்வார் திருவாய்மொழியின் 3571 மற்றும் 3575 ஆகிய பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார். இங்கு சித்திரை மாதம் ஆறாம் நாளிலும், ஐப்பசி மாதம் ஆறாம் நாளிலும், கருவறையிலுள்ள வைகுண்டநாதர் மீது சூரியனின் ஒளிக்கதிர்கள் விழுவது சிறப்பம்சம்.
ஆக நவதிருப்பதிகளுள் சூரியன் தலமாக விளங்கும் இங்கு பெருமாளை, சூரியனை வழிபடுவது கூடுதல் சிறப்பு. இத்தலத்தில் பல கல்வெட்டுக்கள் உள்ளன, அதில் ஒரு கல்வெட்டில் திருவரங்கப்பெருமான் பல்லவராயர் என்பவர் தான் இங்கு வைகுந்தநாயகி தாயாரை பிரதிஷ்டை செய்திருக்கிறார் என்று குறிப்பிடுகிறது. மேலும் இக்கல்வெட்டுப்படி இங்குள்ள பெருமாளின் திருநாமம். "திருவழுதி வள நாட்டு ஸ்ரீவைகுந்தத்து நாயனார் கள்ளபிரான்" என்று சிறப்பித்து கூறுகிறது.
மற்ற கோவில்களில் ஆதிசேஷன் மீது பள்ளிகொண்ட கோலத்தில் காட்சியளிக்கும் பெருமாள், இங்கு ஆதிசேஷன் குடைபிடிக்க நின்றகோலத்தில் காட்சியளிப்பது சிறப்பு. கி.பி.1801-ம் ஆண்டில் வீரபாண்டிய கட்டபொம்மன், ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட போது கோவிலை கோட்டையாக பயன்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அக்காலத்தில் இத்தென்பாண்டி நாட்டின் வைணவ தலங்கள் அனைத்தும், இத்திருவைகுண்டம் கோவிலை மையமாக வைத்தே நிர்வகிக்கப்பட்டுள்ளது.