என் மலர்
நீங்கள் தேடியது "Priyanka Gandhi"
- பாராளுமன்றத்தில் ஜனநாயக செயல்முறை திறம்பட செயல்படுவதை மத்திய அரசு தடுக்கிறது.
- அரசாங்கமே பாராளுமன்ற நடவடிக்கையை சீர்கலைக்கின்றன.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பேச அனுமதி கிடைப்பதில்லை. எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் என்னைக்கூட பேச அனுமதிப்பதில்லை என மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி ஏற்கனவே மத்திய அரசு மீது குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான பிரியங்கா காந்தியும், இதே குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக பிரியங்கா காந்தி கூறியதாவது:-
பாராளுமன்றத்தில் சில செசன்களில் நான் பார்த்த வரைக்கும், எதிர்க்கட்சிகள் சில கருத்துகள் குறித்து போராட்டம் நடத்த இருக்கிறார்கள் என்றால் அதை தடுக்கும் வகையில் அல்லது எதிர்க்கட்சி தலைவரை பேசவிடக்கூடாது என ஏதாவது ஒரு வகையில் விவாதத்தை தவிர்க்க பார்க்கிறார்கள்.
பாராளுமன்றத்தில் ஜனநாயக செயல்முறை திறம்பட செயல்படுவதை மத்திய அரசு தடுக்கிறது. இதற்கு எம்.பி.க்கள் காரணமாக இருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.
எதிர்க்கட்சிகள் பெரும்பாலும் பாராளுமன்ற நடவடிக்கையை சீர்குலைப்பதாக குற்றம்சாட்டப்படுகின்றன, ஆனால் இந்த அரசாங்கத்தின் கீழ் நாம் காணும் செயல்முறை இதுதான். அரசாங்கமே பாராளுமன்ற நடவடிக்கையை சீர்கலைக்கின்றன. இது பார்ப்பதற்கு அனைவருக்கம் மிகவும் புதியதாக இருக்கலாம்.
இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
- 100 நாள் வேலை திட்டத்தில் தொழிலாளர்கள் ஊதியம் உயர்த்தக் கோரி போராட்டம் நடந்தது.
- இதில் கேரள காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.
புதுடெல்லி:
100 நாள் வேலை உறுதி திட்டத்தில் தொழிலாளர்கள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறியும், அதிகரித்து வரும் பணவீக்கத்தைச் சமாளிக்க அவர்களின் ஊதியத்தை உயர்த்தக் கோரியும் கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி, வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி ஆகியோர் பங்கேற்றனர். மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கே.சி.வேணுகோபால், சசி தரூர் மற்றும் கேரளாவைச் சேர்ந்த பிற கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.
அப்போது பேசிய பிரியங்கா காந்தி, அரசாங்கத்தின் செயலற்ற தன்மை மில்லியன் கணக்கான குடும்பங்களை வாழ்வாதாரமின்றி விட்டுச் சென்றுள்ளது. வறுமை மற்றும் துன்பத்தை அதிகப்படுத்தியுள்ளது. இந்த நெருக்கடியில் உடனடியாக கவனம் செலுத்தி, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஊதியம் இல்லாததால் வாழ்க்கையை நடத்த போராடும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும், நிலுவையில் உள்ள ஊதியங்களை உடனடியாக விடுவித்தல், அதிகரித்து வரும் பணவீக்கத்தைச் சமாளிக்க ஊதியத்தை அதிகரித்தல், வேலை நாட்களை 150 நாளாக அதிகரித்தல் ஆகியவற்றை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும் என வலியுறுத்தியது.
- 1997-ம் ஆண்டு சோனியா காந்தி, கணவர் ராஜீவின் வழித்தடத்தில் அரசியலில் குதித்தார்.
- 2017-ம் ஆண்டு வரையில் சோனியா தான் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார்.
புதுடெல்லி :
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ந்தேதி தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டபோது படுகொலை செய்யப்பட்டார்.
அதைத் தொடர்ந்து 1997-ம் ஆண்டு சோனியா காந்தி, கணவர் ராஜீவின் வழித்தடத்தில் அரசியலில் குதித்தார். மறு ஆண்டிலேயே கட்சியின் தலைவரானார். 2017-ம் ஆண்டு வரையில் அவர்தான் தலைவராக இருந்தார். அதன்பின்னர் அவர் மகன் ராகுல் காந்தி, கட்சிக்கு தலைவரானார். ஆனால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு ஏற்பட்ட தோல்விக்கு தார்மீகப்பொறுப்பேற்று அவர் பதவி விலகினார். அதன்பின்னர் மீண்டும் சோனியாவே கட்சியின் இடைக்கால தலைவரானார்.
இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி நடந்த காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சோனியா, ராகுல், பிரியங்கா என அந்தக் குடும்பத்தினர் யாரும் போட்டியிடவில்லை. முன்னாள் மத்திய மந்திரிகள் மல்லிகார்ஜூன கார்கேயும், சசி தரூரும் நேருக்கு நேர் மோதினர். இதில் மல்லிகார்ஜூன கார்கே வென்றார். நேற்று அவர் முறைப்படி கட்சியின் தலைவர் பதவியை ஏற்றார். அவரிடம் காங்கிரஸ் தலைவர் பொறுப்பை சோனியா ஒப்படைத்தார்.
அப்போது சோனியாவுக்கு நினைவுப்பரிசாக ராஜீவ் காந்தியின் 'பிரேம்' செய்யப்பட்ட புகைப்படத்தை மல்லிகார்ஜூன கார்கே வழங்கினார். அந்தப் படத்தைப் பெற்று சோனியா உயர்த்திப்பிடித்தபோது, கட்சித்தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.
இதையொட்டி இன்ஸ்டாகிராம் சமூக ஊடக பக்கத்தில் பிரியங்கா ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர், " உங்களை எண்ணி பெருமைப்படுகிறேன் அம்மா. உலகம் என்ன சொன்னாலும் சரி, என்ன நினைத்தாலும் சரி, எனக்குத் தெரியும், நீங்கள் அன்புக்காகத்தான் எல்லாவற்றையும் செய்தீர்கள்" என உருகி உள்ளார்.
அத்துடன் அவர் தனது தாய் சோனியா, தந்தை ராஜீவ் இருவருடைய படத்தையும் வெளியிட்டுள்ளார்.
சோனியா காந்தி தலைவர் பதவியில் இருந்து விடைபெற்றதையொட்டி அந்தக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அஜய் மக்கான், " இந்த மகத்தான நாட்டின் மீது அவர் (சோனியா) கொண்டிருக்கும் ஆழ்ந்த அன்பில் இருந்து அவர் தனது அரசியல் உத்வேகத்தைப் பெறுகிறார். மக்களும் அதே அன்பையும், நம்பிக்கையையும் அவருக்கு திரும்ப அளித்தனர்" என உருக்கமாகக் கூறியது குறிப்பிடத்தக்கது.
- காங்ராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உரையாற்றினார்
- இளைஞர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் போதைப்பொருட்களை ஒழிக்க காங்கிரஸ் கட்சி போராடும் என பேச்சு
காங்ரா:
இமாச்சல பிரதேசத்தில் வரும் 12ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. பல்வேறு வாக்குறுதிகளையும் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், காங்ராவில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசும்போது, இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியமைத்தால் ஒரு லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்றும், பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்றும், குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1500 ரூபாய் வழங்குவோம் என்றும் வாக்குறுதி அளித்தார்.
இளைஞர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் போதைப்பொருட்களை ஒழிக்க காங்கிரஸ் கட்சி போராடும். ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஆங்கில வழிப் பள்ளிகளைக் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரியங்கா காந்தி கூறினார்.
இமாச்சல பிரதேசத்தை ஆளும் பாஜகவை கடுமையாக சாடிய அவர், பாஜக ஆட்சியின் கீழ் மாநிலம் கடனில் மூழ்கியுள்ளது என்றும, 63,000 அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன என்றும் தெரிவித்தார்.
தற்போது காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை சுட்டிக்காட்டிய பிரியங்கா, அதேபோன்று இமாச்சல பிரதேசத்திலும் தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் நிறைவேற்றும் என உறுதி அளித்தார்.
- ராகுல் காந்தி நாளை மத்தியப் பிரதேசத்தில் தனது பாதயாத்திரையை தொடங்குகிறார்.
- உத்தரப்பிரதேச மாநில பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி யாத்திரையில் கலந்துக் கொள்வது இதுவே முதல் முறை.
இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாதயாத்திரையை தொடங்கினார்.
தமிழ்நாடை தொடர்ந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா என தற்போது குஜராத்தில் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.
நேற்றுடன் குஜராத் பயணம் முடிவடைந்த நிலையில், ராகுல் காந்தி நாளை மத்தியப் பிரதேசத்தில் தனது பாதயாத்திரையை தொடங்குகிறார்.
இந்நிலையில், ராகுல் காந்தி நாளை மத்திய பிரதேசத்தில் நுழையும்போது பாதயாத்திரையில் பிரியங்கா காந்தி வத்ரா இணைந்துக் கொள்வார் என்று கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
உத்தரப்பிரதேச மாநில பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி யாத்திரையில் கலந்துக் கொள்வது இதுவே முதல் முறை.
இதுகுறித்து ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில், " பிரியங்கா காந்தி யாத்திரையில் கலந்துகொண்டு தொடர்ந்து நான்கு நாட்கள் பங்கேற்பார்" என்றார்.
- மத்தியபிரதேசம் வந்த ராகுல்காந்திக்கு, காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
- காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரை மத்திய பிரதேச மாநிலம் போர்கானில் இருந்து இன்று மீண்டும் தொடங்கியது.
இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாதயாத்திரையை தொடங்கினார்.
தமிழ்நாடை தொடர்ந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா என ராகுல் காந்தி பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார்.
கடைசியாக குஜராத்தில் நடைபயணம் முடிவடைந்த நிலையில், நேற்று காலை மத்தியபிரதேச எல்லையை ஒட்டிய மராட்டிய மாநில பகுதியில் இருந்து பாதயாத்திரை தொடங்கியது.
இருமாநில எல்லையில் உள்ள போடர்லி என்ற கிராமம் வழியாக மத்தியபிரதேசத்துக்கு வந்த ராகுல்காந்திக்கு, காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மத்தியபிரதேசத்தில், ராகுல்காந்தி பாதயாத்திரை 12 நாட்கள் நடக்கிறது.
அங்கு 380 கி.மீ. தூரம் நடைபயணம் செல்கிறார்கள். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரை மத்திய பிரதேச மாநிலம் போர்கானில் இருந்து இன்று மீண்டும் தொடங்கியது.
இந்த யாத்திரையில் ராகுல் காந்தியுடன், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் அவரது கணவர் ராபர்ட் வத்ரா ஆகியோர் இணைந்து நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பிரியங்கா காந்தி மகன் ரைஹான் வத்ராவும் யாத்திரையில் இணைந்துள்ளார்.
- அனைத்து தலைநகரங்களிலும் மகளிர் பேரணியை நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
- இந்த மகளிர் பேரணி 2 மாதங்களுக்கு நடைபெறும் என அக்கட்சி தெரிவித்தது.
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான பாதயாத்திரையில் ஈடுபட்டு உள்ளார். இந்த பாதயாத்திரை கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது.
தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாதயாத்திரை மேற்கொண்டார். பிறகு அவர் ராஜஸ்தான் சென்றுள்ளார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் எம்.பி. கே.சி. வேணுகோபால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
வரும் 2023-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி முதல் மார்ச் 26-ம் தேதி வரை நாட்டில் உள்ள அனைத்து தலைநகரங்களிலும் எங்களது கட்சி சார்பில் காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில் மகளிர் பேரணி நடத்தப்படும்.
இந்த மகளிர் பேரணி 2 மாதங்களுக்கு நடைபெறும். ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் நிறைவடையும்போது, அதன் தொடர்ச்சியாக, பிரியங்கா காந்தியின் மகளிர் பேரணி தொடங்கி நடைபெறும் என தெரிவித்தார்.
- முதல்வரை முடிவு செய்யும் அதிகாரம் கட்சி மேலிடத்துக்கு வழங்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- பிரியங்கா தேர்தல் பிரசாரத்துக்கு தலைமை தாங்கி பெற்ற முதல் வெற்றி என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இமாச்சல பிரதேசத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் அந்த கட்சி 40 இடங்களை கைப்பற்றியது. ஆட்சியை இழந்த பாஜகவுக்கு 25 தொகுதி கிடைத்தது.
தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பாஜக முதலமைச்சர் ஜெய்ராம் தாகூர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உள்ளதால் அங்கு புதிய முதல்வராக பதவி ஏற்க போவது யார்? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய முதல்வரை தேர்வு செய்ய எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று மாலை நடந்தது. காங்கிரஸ் மேலிட பார்வையாளர்கள் ராஜீவ் சுக்லா, பூபேந்தர் ஹூடா, பூபேஷ் பாகல் ஆகியோர் கலந்து கொண்டனர். முதல்வரை பதவிக்கு கடும் போட்டி நிலவியது. இதனால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இதையொட்டி முதல்வரை முடிவு செய்யும் அதிகாரம் கட்சி மேலிடத்துக்கு வழங்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் இமாச்சல பிரதேச முதல்வர் யார் என்பதை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா அறிவிக்கிறார். இதை கட்சி மேலிட வட்டாரங்கள் தெரிவித்தன. பிரியங்கா தேர்தல் பிரசாரத்துக்கு தலைமை தாங்கி பெற்ற முதல் வெற்றி என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மறைந்த முதல்வர் வீரபத்ர சிங்கின் மனைவியும், மாநில காங்கிரஸ் தலைவருமான பிரதீபா சிங், சுக்வீந்தர் சிங், முகேஷ் அக்னி கோத்ரி, ராஜீந்தர் ரானா ஆகிய 4 பேரது பெயர்கள் போட்டியில் உள்ளனர். இதில் பிரதீபா சிங்குக்கு குறைவான வாய்ப்பே இருக்கிறது.
- பெண்களுக்கான மாநாட்டில் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கலந்துகொண்டு உரையாற்றினார்.
- 1.5 கோடி குடும்பத் தலைவிகள் பயன்பெறுவார்கள் என்று கர்நாடக காங்கிரஸ் கமிட்டி கூறி உள்ளது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தில் மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளதால், காங்கிரஸ், பாஜக தலைவர்கள் பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். வாக்காளர்களை கவரும் வகையில் புதிய வாக்குறுதிகளை கொடுத்தவண்ணம் உள்ளனர்.
அவ்வகையில், காங்கிரஸ் சார்பில் நான் நாயகி என்ற தலைப்பில் பெண்களுக்கான மாநாடு நடத்தப்பட்டது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது, கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்கள் முன்னேற்றத்துக்காக, ஒவ்வொரு வீட்டிலுள்ள குடும்பத்தலைவிக்கும் மாதம், 2,000 ரூபாய் என, ஆண்டுக்கு, 24 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்ததார்.
கிரக லட்சுமி என்ற இந்த திட்டத்தின்கீழ் 1.5 கோடி குடும்பத் தலைவிகள் பயன்பெறுவார்கள் என்று கர்நாடக காங்கிரஸ் கமிட்டி கூறி உள்ளது. ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் கிடைக்கும் இந்த நிதியுதவியானது, விலைவாசி உயர்வு மற்றும் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு ஆகியவற்றின் சுமையை சமாளிக்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்காக பிரத்யேக தேர்தல் அறிக்கையை வெளியிட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
கர்நாடகாவில் ஒவ்வொரு வீட்டுக்கும் மாதம் 200 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்குவோம் என காங்கிரஸ் கட்சி சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது வாக்குறுதி இன்று வெளியாகி உள்ளது.
- பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பது சுலபம்.
- காங்கிரஸ் கட்சியால் கர்நாடகத்தில் ஆட்சிக்கு வர முடியாது.
பெங்களூரு :
தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
சட்டசபை தேர்தலில் ஆட்சிக்கு வர மாட்டோம் என்று காங்கிரசுக்கு நன்கு தெரியும். மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை கொடுக்க காங்கிரஸ் கட்சியினர் தயாராகி விட்டனர். ஒரு திட்டத்தை கொண்டு வந்து செயல்படுத்த சாத்தியமில்லை என்று தெரிந்திருந்தும், மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை காங்கிரசார் கொடுத்து வருகின்றனர். அதிகாரத்திற்கு வந்தால் தானே, அவர்கள் கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற சாத்தியமாக முடியும்.
ஆட்சிக்கு வர வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், காங்கிரசார் கொடுக்கும் வாக்குறுதிகளை மக்கள் நம்ப மாட்டார்கள். ஏனெனில் பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பது சுலபம். அதனை நிறைவேற்றுவது என்பது மிகவும் கடினம். பெண்களுக்காக தனியாக திட்டங்களை வகுத்து, வாக்குறுதிகளை அளித்து வருவதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறுகின்றனர். கண்டிப்பாக காங்கிரஸ் கட்சியால் கர்நாடகத்தில் ஆட்சிக்கு வர முடியாது.
ஏற்கனவே கர்நாடக மக்கள் பா.ஜனதாவை ஆதரிக்க தயாராகி விட்டனர். பிரியங்கா காந்தி பெங்களூருவுக்கு வந்துள்ளார். தான் தலைவி என்ற பெயரில் பெங்களூருவில் கூட்டத்தில் அவர் பங்கேற்றிருக்கிறார். அவர் பங்கேற்று இருக்கும் கூட்டத்திற்கு வைத்திருக்கும் தலைப்பே வேடிக்கையாக உள்ளது. 'நான் தலைவி' என்று புகைப்படத்தை வைத்து கொண்டு, தன்னை தானே பிரியங்கா காந்தி அறிவித்து கொண்டு இருக்கிறார். இதன்மூலம் காங்கிரஸ் கட்சியில் தலைவர்கள் இல்லை என்பது தெளிவாகிறது.
நான் தலைவி என்று பிரியங்கா காந்தி தனக்கு தானே அறிவித்து கொண்டாலும், அவரை தலைவியாக ஏற்றுக் கொள்ள கர்நாடக மாநில பெண்கள் தயாராக இல்லை. பா.ஜனதா ஆட்சியில் ஸ்ரீசக்தி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு பல்வேறு உதவிகளை அரசு வழங்கி வருகிறது. ஸ்ரீசக்தி திட்டத்திற்கு கர்நாடக பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
- கட்சிக்காக துணிச்சலுடன் செயல்பட்டு கொண்டிருக்கும் ஒவ்வொருவரையும் நான் பாராட்டுகிறேன் என்றார் பிரியங்கா காந்தி.
- காங்கிரஸ் தொண்டர்கள் துணிச்சலாக செயல்பட வேண்டும்.
காங்கிரஸ் கட்சியின் 85-வது மாநாடு சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நேற்று முன்தினம் தொடங்கியது. 2-வது நாளான நேற்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி பேசினார்.
அப்போது அவர் பாரத ஒற்றுமை யாத்திரையுடன் எனது பணி நிறைவடைகிறது என்பதில் மிகவும் மன நிறைவாக உள்ளது என்று பேசினார். இதனால் அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவார் என்று தகவல் பரவி உள்ளது.
இந்தநிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாநாட் டின் இறுதி நாள் நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் பங்கேற்று காங்கிரஸ் பொதுச் செயலா ளர்களில் ஒருவரான பிரியங்கா பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு தான் உள்ளது. நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்று மக்கள் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்க்கிறார்கள். எல்லா எதிர்க்கட்சிகளும் ஒற்றிணைந்து பாரதீய ஜனதாவை எதிர்க்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் இந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியிடம் மக்கள் அதிகம் எதிர்பார்க்கிறார்கள். எனவே எதிர்க்கட்சிகளை ஓரணியில் கொண்டு வரும் மிகப் பெரிய பொறுப்பு காங்கிரசுக்கு உள்ளது.
இந்த சூழ்நிலையில் பாரதீய ஜனதா கட்சியின் தவறுகளை காங்கிரஸ் தொண்டர்கள் ஒவ்வொருவரும் நாட்டு மக்களிடம் எடுத்து சென்று சொல்ல வேண்டும். மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை பிரசாரம் செய்ய வேண்டும். இதற்கான பணிகளை காங்கிரஸ் தொண்டர்கள்தான் மேற்கொள்ள வேண்டும்.
பாரதீய ஜனதாவை எதிர்த்து போராடும் தைரியமும், துணிச்சலும் காங்கிரஸ்காரர்களிடம் இருக்கிறது. கட்சிக்காக துணிச்சலுடன் செயல்பட்டு கொண்டிருக்கும் ஒவ்வொருவரையும் நான் பாராட்டுகிறேன். உங்கள் வீரத்தை நாங்கள் அறிவோம்.
உங்கள் துணிச்சலை நாட்டுக்காக வெளிப்படுத்த வேண்டிய காலம் வந்துவிட்டது. இதை சரியாக பயன்படுத்துங்கள்.
காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் வலிமைப்பெற்று வருகிறது. மண்டல அளவிலும் உள்கட்டமைப்புகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே காங்கிரஸ் தொண்டர்கள் துணிச்சலாக செயல்பட வேண்டும்.
இவ்வாறு பிரியங்கா பேசினார்.
- உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பிக்பாஸ் புகழ் அர்ச்சனா கவுதம் போட்டியிட்டார்.
- அர்ச்சனாவின் தந்தை அளித்த புகாரின் பேரில் மீரட் போலீசார் சந்தீப்சிங் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் காங்கிரஸ் மாநாடு கடந்த மாதம் நடந்தது. இதில் நாடு முழுவதிலும் இருந்து காங்கிரஸ் பிரதிநிதிகள் சுமார் 15 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இதில் உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பிக்பாஸ் புகழ் அர்ச்சனா கவுதம் கலந்து கொண்டார். அப்போது பிரியங்கா காந்தியை சந்திக்க அர்ச்சனா கவுதம் அவரது உதவியாளரான சந்தீப் சிங்கிடம் பேசி உள்ளார்.

பிரியங்கா காந்தியுடன் அர்ச்சனா கவுதம்
ஆனால் அர்ச்சனாவை, பிரியங்கா காந்திக்கு அறிமுகப்படுத்த சந்தீப் சிங் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் அர்ச்சனாவை, சந்தீப் சிங் ஜாதி பெயரை சொல்லி திட்டியதாகவும், அநாகரீக வார்த்தைகளால் பேசியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அர்ச்சனா புகார் கூறினார். இது தொடர்பாக அர்ச்சனாவின் தந்தை அளித்த புகாரின் பேரில் மீரட் போலீசார் சந்தீப்சிங் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.