என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public suffering"

    • மதுரை மாவட்டம் முழுவதும் விடிய விடிய கனமழை பெய்தது.
    • சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை நின்றிருந்த நிலையில் நேற்று இரவு பலத்த இடி மின்னலுடன் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் மதுரை மாவட்டம் முழுவதும் அனைத்து இடங்களிலும் ஆங்காங்கே சாலைகளில் மழைநீர் தேங்கியது.

    தாழ்வான பகுதிகளில் மழை நீர் ஆறு போல பெருக்கெடுத்து ஓடியது. மதுரையில் சேதம் அடைந்த சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். மாவட்டம் முழுவதும் கனமழை பெய்தாலும் உசிலம்பட்டி, வாடிப்பட்டி பகுதியில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    இதனால் அந்த பகுதியில் உள்ள கண்மாய் மற்றும் குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. விவசாய பணிகளும் தீவிரமடைந்துள்ளன.

    மதுரை மாவட்டத்தில் இரவு பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு-

    சிட்டம்பட்டி -17, கள்ளந்திரி -8, தனியா மங்கலம்- 2,மேலூர் -3, சாத்தையாறு அணை- 26, வாடிப்பட்டி -70, திருமங்கலம் -5, உசிலம்பட்டி -90, மதுரை வடக்கு -17, தல்லாகுளம் -12, விரகனூர் -20, விமான நிலையம் -63, இடைய பட்டி -29, புலிப்பட்டி -11, சோழவந்தான் -43, மேட்டுப்பட்டி -39, குப்பனம்பட்டி- 35, கள்ளிக்குடி -4, பேரையூர்- 20, ஆண்டிப்பட்டி -53.

    மதுரை மாவட்டம் முழுவதும் மொத்தமாக 56.2 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. சராசரியாக 28 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    மதுரை மாவட்டத்திற்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 134.20 அடியாக உள்ளது அணைக்கு வினாடிக்கு 587 கன அடி தண்ணீர் வருகிறது.அணையில் இருந்து 1667 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

    வைகை அணையை பொறுத்தவரை நீர்மட்டம் 69.49 அடியாக உள்ளது.அணைக்கு வினாடிக்கு 2308 கன அடி தண்ணீர் வரும் நிலையில் மதுரை நகர குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்காக 1819 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    மதுரை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சுமார் 70 சதவீத கண்மாய், குளங்கள் நிரம்பி உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை நிலையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
    • பெரும்பாலுமான தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.

    புதுச்சேரி: 

    வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தமானது ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறி சென்னை மற்றும் புதுச்சேரி நோக்கி நகர்ந்து வருவதால், அடுத்த 2நாட்களுக்கு தொடர்மழை மற்றும் கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை நிலையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி நேற்று இரவு முதல் காரைக்காலில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஒரு சில நேரங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக காரைக்காலில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு புதுச்சேரி அரசு 2 நாள் விடுமுறை அறிவித்துள்ளது. மேலும் சென்னை வானிலை நிலையம் எச்சரிக்கை தொடர்ந்து. காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 11 மீனவர் கிராம மீனவர்கள் சுமார் 12,000- க்கு மேற்பட்டோர் இன்று கடலுக்குச் செல்லவில்லை.

    ஏற்கனவே கடலுக்குச் சென்ற மீனவர்கள் நேற்று மாலை அவசரமாக கரை திரும்பினார். மழையின் காரணமாக காரைக்காலில் உள்ள பெரும்பாலுமான தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது .ஒரு சில இடங்களில் சாக்கடைகள் வடிகால் வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படாத காரணத்தால் மழை நீர் சாலைகளில்தேங்கி வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். மேலும் காரைக்கால் திருநள்ளார், நெடுங்காடு, சுரக்குடி , திருப்பட்டும் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வயல்களில் மழை நீர் தேங்கி நிற்கிறது.

    • இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தடுமாறி விழுந்து செல்கின்றனர்.
    • வடிகால் அமைத்து தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    உடுமலை:

    உடுமலை கணக்கம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ராமதாஸ் நகரில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள பள்ளங்களில் மழை நீர் தேங்கி வெளியே செல்ல முடியாமல் குளம் போல் காட்சி அளிக்கிறது. இதனால்இப்பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தடுமாறி விழுந்து செல்கின்றனர். மேலும் பள்ளி மாணவ மாணவிகள் இந்த வழியைத்தான் பயன்படுத்த வேண்டி உள்ளது. தேங்கி உள்ள மழை நீரால்அவர்களும் பள்ளிக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே வடிகால் அமைத்து தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 4 நாட்களுக்கு மேலாக மழைநீர் தேங்கி உள்ளது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லைஎனபொதுமக்கள் கூறினர்.

    • கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வந்தது.
    • காலை நேரங்களில் வழக்கத்தை விட அதிக அளவில் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகின்றது.

    கடலூர்:

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மிக கனமழை கொட்டி தீர்த்தது.இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் கீரப்பாளையம் குமராட்சி குறிஞ்சிப்பாடி மற்றும் கடலூர் பகுதிகளில் குடியிருப்புகள் மற்றும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளைநிலங்களில் தண்ணீர் சூழ்ந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

    இன்று முதல் மீண்டும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தனர் இதனை தொடர்ந்து மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வந்த நிலையில் காலை நேரங்களில் வழக்கத்தை விட அதிக அளவில் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகின்றது.

    இந்த நிலையில் காலை நேரங்களில் பனிப்பொழிவு இருப்பதால் கடும் குளிர் ஏற்பட்டு பொதுமக்கள் அவதி அடைந்து வருவதையும் காணமுடிந்தது மேலும் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை, சுட்டெரிக்கும் வெயில், தற்போது காலை நேரங்களில் பனிப்பொழிவு போன்றவற்றால் பொதுமக்கள் சீதோசன மாற்றம் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் காலை நேரங்களில் ஒருபுறம் வெயிலும் மற்றொரு புறம் குளிர்ந்து காற்றும் வீசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் காலை நேரங்களில் பனிப்பொழிவு காரணமாக வாகனங்களில் முகப்பு விளக்கு எரிய வைத்தபடி சென்றதையும் காணமுடிந்தது. 

    • புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது .
    • நேற்று மாலை முதல் மழை பெய்ய தொடங்கி காலை வரை நீடித்தது.

    கடலூர்: 

    வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் கரையை கடந்தாலும் இந்த புயலால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து வீடுகள் சேதமடைந்து பொதுமக்கள்பெரிதும் பாதிக்கப்பட்டனர். மழை காரணமாக கடும் குளிரால் கடலூர் பொதுமக்கள் அனைவரும் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் கூட்டம் அலைமோதியது .

    மேலும் கடலோர கிராமங்களில் உள்ள மீனவர்கள் மீன் பிடிக்க செல்லலாம் செல்லக்கூடாது என்ற அதிகாரிகளின் அறிவிப்பால் குழம்பினர். நேற்று முதல் திட்டவட்டமாக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லலாம் என்ற அதிகா ரிகளின் அறிவிப்பால் சந்தோஷமாக மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். இந்நிலையில் மாண்டஸ் புயல் கரையை கடந்தாலும் தற்போது அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்த காற்றழுத்த பகுதி எப்போது வேண்டுமானாலும் புயலாக மாறலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அவ்வப்போது மழை பெய்த வண்ணம் உள்ளது.

    கடலூரிலும் நேற்று மாலை முதல் வானில் கருமயங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை காலை வரை நீடித்தது. இரவு முழுவதும் கடலூரில் மழை பெய்தது. நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம், நடுவீரப்பட்டு ,திருவந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. கடலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் பின்வருமாறு:- கடலூர் - 46.8 தொழுதூர் - 46.0 சேத்தியாதோப்பு - 43.2 பரங்கிப்பேட்டை - 41.8 கலெக்டர் அலுவலகம் - 39.6 சிதம்பரம் - 28.8 பெல்லாந்துறை - 28.0 அண்ணாமலைநகர் - 26.0 கொத்தவாச்சேரி - 20.0 வடக்குத்து - 17.0 லால்பேட்டை - 17.0 வானமாதேவி - 13.6 காட்டுமன்னார்கோயில் - 13.0 லக்கூர் - 13.0எஸ்.ஆர்.சி. குடிதாங்கி - 10.0 புவனகிரி - 9.0 ஸ்ரீமுஷ்ணம் - 8.1 கீழ்செருவாய் - 8.0 பண்ருட்டி - 7.6 குறிஞ்சிப்பாடி - 6.0 குப்பநத்தம் - 1.2

    • மாண்டஸ் புயல் காரணமாக பலத்த காற்றுடன் கூடிய மழை கடந்த சில தினங்களாக பெய்து வந்தது.
    • பொதுமக்கள் உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு கடும் அவதி அடைந்து வருவதை காணமுடிந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர், நவம்பர் மாதம் மிக கனமழை பெய்து வந்தது. இதனைத் தொடர்ந்து டிசம்பர் மாதம் முதல் மாண்டஸ் புயல் காரணமாக பலத்த காற்றுடன் கூடிய மழை கடந்த சில தினங்களாக பெய்து வந்தது. மேலும் கடும் குளிரும் இருந்து வந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். இந்த நிலையில் நாளை மறுதினம் மார்கழி மாதம் தொடங்க உள்ள நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம் முழுவதும் அதிகாலையில் லேசான பனி மூட்டம் மற்றும் குளிர்ந்த காற்று வீசி வந்தது. கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை நேரம் தொடங்கிய குளிர்காற்று காலை வரை வீசி வருவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வந்தனர். இன்று அதிகாலை முதல் வழக்கத்தைவிட பனிமூட்டம் அதிகரித்து பனி பொழிவாக காணப்பட்டது.

    இதன் காரணமாக கடலூர், பாதிரிகுப்பம், திருவ ந்திபுரம், நெல்லிக்குப்பம், மேல்பட்டா ம்பாக்கம், நடுவீரப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் பனிப்பொழிவு இருந்து வந்த நிலையில் காலை 7.30 மணி வரை பனி குறையாமால் காணப்பட்டது. இதன் காரணமாக சாலை முழுவதும் பனி மூட்டம் சூழ்ந்து இருந்ததால் அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்கு எரிந்த படியும், ரயில்வே தண்ட வாளத்தில் பனிமூட்டம் சூழ்ந்து ள்ளதால் ரயில்களும் முகப்பு விளக்கு அணிந்தபடி சென்றதை காண முடிந்தது. மேலும் காலை நேரங்களில் கடும் பனி பொழிவும், பகல் நேரங்களில் சுட்டெரிக்கும் வெயில், திடீர் மழை, மீண்டும் மாலையில் குளிர்ந்த காற்று வீசி வருவதால் சீதோஷ்ண மாற்றம் உருவாகி பொதுமக்கள் உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு கடும் அவதி அடைந்து வருவதை காணமுடிந்தது.

    • வருசநாடு அருகே பெருமாள் கோவில் தெருவில் குறுக்கே சாக்கடை வடிகால் பாலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேதமடைந்தது.
    • பணிகள் நிறுத்தப்பட்டதால் இரவு நேரங்களில் நடந்து செல்லும் பொதுமக்கள் சாக்கடை வடிகாலில் விழுந்து காயமடைந்து வருகின்றனர்.

    வருசநாடு:

    வருசநாடு அருகே பெருமாள் கோவில் தெருவில் குறுக்கே சாக்கடை வடிகால் பாலம் கட்டப்பட்டிருந்தது. இந்த பாலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேதமடைந்தது. இதனை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    பொதுமக்களின் கோரிக்கையை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய பாலம் கட்டும் பணிகள் தொடங்கியது. முதற்கட்டமாக பழைய பாலம் இடித்து அகற்றப்பட்டது. பின்னர் ஒரு சில காரணங்களால் பாலம் கட்டும் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது.

    இதனால் தெருவின் குறுக்கே செல்லும் சாக்கடை வடிகால் பாலம் இல்லாமல் திறந்த வெளியில் காணப்படுகிறது. மேலும் அந்த பகுதியில் தெரு விளக்குகள் இல்லை. எனவே இரவு நேரங்களில் நடந்து செல்லும் பொதுமக்கள் சாக்கடை வடிகாலில் விழுந்து காயமடைந்து வருகின்றனர்.

    குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகள் சாக்கடை வடிகாலில் விழுவது போன்ற விபத்துகள் ஏற்படுகிறது. பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் நடைபெறும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாக்கடை வடிகால் பாலம் கட்டும் பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 10 மணிக்கு மேல் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
    • காரைக்கால் மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை.

    புதுச்சேரி:

    வங்க கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக, இன்று அதிகாலை முதல் லேசான தொடர் மழை காரைக்காலில் பெய்தது. தொடர்ந்து 10 மணிக்கு மேல் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

    அண்டை மாநிலமான தமிழகத்தில் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், காரைக்கால் மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை. இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

    • உடுமலை பழனி ரோட்டில் கழுத்தறுத்தான் பள்ளம் ஓடையில் கான்கிரீட் கரை அமைக்கும் பணி இரு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
    • பல இடங்களில் பாதையில் பணி காரணமாக 500க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிக்கும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    உடுமலை:

    உடுமலை பழனி ரோட்டில் இருந்து ஸ்ரீநகர் பூங்கா அருகே பாலம் கட்டுமானபணி காலதாமதமாவதால் குடியிருப்புகளுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.உடுமலை பழனி ரோட்டில் கழுத்தறுத்தான் பள்ளம் ஓடையில் கான்கிரீட் கரை அமைக்கும் பணி இரு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. பல இடங்களில் பாதையில் பணி காரணமாக 500க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிக்கும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆண்டாள் சீனிவாசன் நகர், ஸ்ரீநகர். பெரியார் நகர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு செல்லும் மெயின் ரோட்டில் ஓடையன் குறுக்கே புதிதாக பாலம் கட்ட ஒரு மாதத்தின் முன் குழி தோண்டபட்டது. மேலும் மெயின் ரோட்டில் ஆபத்தான நிலையில் தோண்டப்பட்ட குழி எந்தவிதமான எச்சரிக்கை அறிவிப்பும் பாதுகாப்பும் இல்லாமல் உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பாலம் கட்டும் பணியை உடனடியாக துவக்கி விரைந்து முடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • வழியை அடைத்து இருசக்கர வாகனங்களை நிறுத்தி விடுகின்றனர்.
    • இருசக்கர வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதை தடுக்க வேண்டும்.

    பல்லடம் :

    பல்லடம் பஸ் நிலையத்திற்கு தினமும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர். வேலை, கல்வி உள்ளிட்ட பணிகளுக்காக திருப்பூர், கோவை உள்ளிட்ட வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர். 

    இந்த நிலையில் பஸ் நிலையத்திற்குள் தாறுமாறாக இருசக்கர வாகனங்களை நிறுத்துவதால் பொதுமக்களுக்கு கடும் அவதி ஏற்படுகிறது. குறிப்பாக பஸ் நிலையத்திற்குள் கடைகள் அமைந்துள்ள பக்கவாட்டு பகுதியில் செல்லும் வழியை அடைத்து இருசக்கர வாகனங்களை நிறுத்தி விடுகின்றனர்.

    இதனால் பொதுமக்கள் வாகனங்களுக்கு இடையே புகுந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது.எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இருசக்கர வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதை தடுக்கவேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • மதுரையில் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
    • தர்ப்பூசணி-பழஜூஸ் விற்பனை சூடு பிடித்துள்ளது.

    மதுரை

    தமிழகத்தில் பனிக்காலம் முடிந்து கோடைகாலம் தொடங்க உள்ளது. ஆனால் அதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதை உணர முடிகிறது. மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாகி உள்ளது. கடந்த வாரம் வரை 30 முதல் 32 டிகிரி செல்சியசுக்கு பதிவான வெப்பத்தின் அளவு தற்போது 35 டிகிரி செல்சியசை தாண்டி பதிவாகியுள்ளது. இந்த அளவு வெயிலையே பொதுமக்களால் தாங்க முடியவில்லை. பங்குனி தொடக்கத்திலேயே கடும் வெயில் சுட்டெரிப்பதால் சித்திரை மாதத்தில் இதை விட அதிகமாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்பதால் மக்கள் கவனமுடன் இருக்கவேண்டும் என்றும், பகல் நேரத்தில் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் எனவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. பொதுமக்கள் தற்போதிருந்தே வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதை காண முடிகிறது.

    மதுரையில் இளநீர், குளிர்பானங்கள் விற்பனை சூடு பிடித்துள்ளது. கோடை வெயிலை மக்கள் சமாளிப்பதற்காக தர்ப்பூசணி பழங்கள் அதிகளவில் மதுரைக்கு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. சாலையோர கடைகள் மற்றும் பழக்கடைகளில் விற்பனைக்காக தர்ப்பூசணி பழங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. அவைகளை பொதுமக்கள் அதிகளிவில் விரும்பி வாங்கிச்செல்கிறார்கள்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பொதுவாக சித்திரை மாதத்தில்தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் பங்குனி தொடக்கத்திலேயே வெயில் வாட்டி வதைக்கிறது. பகல் நேரம் மட்டுமின்றி இரவில் புழுக்கம் அதிகமாக இருப்பதால் குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர் என்றனர்.

    • பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
    • திருவாரூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர்.

    திருவாரூர்:

    தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் அலுவலக உதவியாளர் முதல் வட்டாட்சியர் வரை உள்ள 412 வருவாய்த்துறை ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். நான்கு வருடமாக உள்ள துணை ஆட்சியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், பதவியிறக்கம் பெற்ற வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர்கள் முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் போன்ற பதவிகளுக்கு தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டவாறு பதவியிறக்கத்திலிருந்து பாதுகாத்திட வேண்டும், வருவாய் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் முதல் அனைத்து பணியிடங்களையும் உடனடியாக நிரப்பிட வேண்டும் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

    குறிப்பாக வருவாய் துறை அமைச்சர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் எனவும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்தப் போராட்டத்தின் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வருவாய் துறை பிரிவில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் வருவாய் துறை சார்ந்த பணிகள் முடங்கி உள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும் உடனடியாக வருவாய் துறை ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் அடுத்த கட்டமாக மனித சங்கிலி தொடர் வேலை நிறுத்த போராட்டம் போன்றவற்றில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில பொருளாளர் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.

    ×