என் மலர்
நீங்கள் தேடியது "sekarbabu"
- நெற்றியில் பொட்டு வைப்பதும், கைகளில் கயிறு கட்டுவதும் சங்கிகளின் அடையாளம்.
- யார் சங்கி, யார் திமுக-காரன் என வித்தியாசம் தெரியாமல் போய்விடும்
நீலகிரி மாவட்டம் உதகையில் மாநில மாணவரணி கருத்தரங்கில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான ஆ. ராசா பேசும்போது "கடவுளை வணங்க வேண்டாம் என கூறவில்லை. கடவுள் மீது எந்த கோபமும் இல்லை. நெற்றியில் பொட்டு வைப்பதும், கைகளில் கயிறு கட்டுவதும் சங்கிகளின் அடையாளம். கரை வேட்டி கட்டிக்கொண்டு பொட்டு வைக்க வேண்டாம். நீங்களும் பொட்டு வைத்து, கயிறு கட்டுகிறீர்கள். சங்கிகளும் இதைத்தான் செய்கிறார்கள். யார் சங்கி, யார் திமுக-காரன் என வித்தியாசம் தெரியாமல் போய்விடும்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், ஆ.ராசா பேச்சு தொடர்பாக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அவர், "ஆ.ராசா பேச்சு அவரது தனிப்பட்ட கருத்து. எங்கள் தலைவரின் கருத்து அதுவல்ல" என்று தெரிவித்தார்.
- உதயநிதி ஸ்டாலினுக்கு உரிய அங்கீகாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் வழங்குவார்.
- இந்தியாவிலேயே தலை சிறந்த சட்டசபை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின்.
சென்னை சிந்தாதிரிபேட்டை பகுதியில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளதாவது:
234 தொகுதிகளிலும் பாசறை கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்த ஒரு தலைவர் உண்டு என்றால், ஒரு அணிக்கு செயலாளர் உண்டு என்றால், அது உதயநிதி ஸ்டாலின்தான் என திமுக பெருமையோடு நெஞ்சை நிமிர்த்தி கூறிக் கொண்டிருக்கிறது. இயக்கப்பணி என்றாலும், மக்கள் பணி என்றாலும் தொடர்ந்து தன்னை அவர், முன்னிலை படுத்தி வருகிறார். வருங்காலங்களில் அவர் தமிழகத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார், அதற்கு உரிய அங்கீகாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெகு விரைவில் வழங்குவார். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய தயாநிதி மாறன் எம்.பி. தெரிவித்துள்ளதாவது: ஒன்றரை ஆண்டுகள்தான் முடிந்திருக்கிறது. இன்னும் மூன்றரை ஆண்டுகளில் தலைவர் தளபதி, உங்களுக்காக பல நல்ல திட்டங்களை செய்ய இருக்கிறார். அதற்கு உறுதுணையாக இருப்பவர் யார் என்றால், இந்தியாவிலேயே தலை சிறந்த சட்ட உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின்தான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- நம் முன்னோர்களால் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த புராதான சின்னங்களுக்கு இணையான இது போன்ற திருக்கோயில்களை காப்பாற்ற வேண்டும்.
- வெளிநாட்டிலே இருக்கின்ற 62 சிலைகள் கண்டறியப்பட்டு, அவற்றை மீட்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை:
அமைச்சர் பி.கே.சேகர் பாபு இன்று மயிலாப்பூர், சித்திரக்குளம் ஆதிகேசவ பெருமாள் கோயிலுக்கு சென்று அங்குள்ள சன்னதிகள், பசுமடம், திருத்தேர், திருத்தேர் கொட்டகை மடப்பள்ளி ஆகியவற்றை ஆய்வு செய்து திருப்பணிகள் மேற்கொள்வது தொடர்பாக அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் இறை தரிசனம் முடித்து, சுற்றுப்புற சன்னதிகள், பசுமடம், திருத்தேர், திருத்தேர் கொட்டகை, மடப்பள்ளி ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டோம்.
500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட இக்கோயிலுக்கு 18 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்திருக்கின்றது.
இக்கோயிலின் சித்திரக் குளம், ஏராளமான சொத்துக்கள் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு இருக்கின்றன. இதை இந்து சமய அறநிலையத்துறை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு இந்த கோவிலுடைய திருப்பணிகளை மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்துவது, திருக்கோவிலுக்கு வர வேண்டிய வருமானங்கள் தடையின்றி கொண்டு வந்து சேர்ப்பது, ஆக்கிரமிப்பில் இருக்கின்ற இடங்களை சட்டரீதியாக மீட்கின்ற நடவடிக்கைகளை முழு வேகத்துடன் மேற்கொள்வது, நிலுவையில் இருக்கும் வழக்குகளில் நீதிமன்றம் காட்டுகின்ற வழிகாட்டுதலுக்கு ஏற்ப நடவடிக்கைகளை துரிதப்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ள இருக்கின்றோம்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தினுடைய ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு நம் முன்னோர்களால் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த புராதான சின்னங்களுக்கு இணையான இது போன்ற திருக்கோயில்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஆண்டு 100 கோடி ரூபாயை வழங்கினார்கள்.
இந்து சமய அறநிலைத் துறை வரலாற்றில் இவ்வளவு பெரிய தொகையை அரசின் சார்பில் இதுவரையில் எந்த ஆட்சியும் வழங்கவில்லை. சுவாமி தரிசனம் செய்ய வருகின்ற பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி தருவது, ஆக்கிரமிப்பாளர்களிட மிருந்து சொத்துக்களை மீட்பது, திருக்கோவிலுக்கு வரவேண்டிய வருவாயை முறையாக கொண்டு வந்து சேர்ப்பது, ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்பட வேண்டிய திருப்பணிகள், கும்பாபிஷேக பணிகளை விரைவுப்படுத்துதல் என்று பல்வேறு கோணங்களில் இந்த துறைக்கு நல்ல பல அறிவுரைகளை வழங்கி வரும், முதல்-அமைச்சரின் ஆட்சிக் காலம் இந்து சமய அறநிலையத்துறைக்கு பொற்காலம் என்றே கூறலாம்.
நேற்றைய தினம் மதுரை அழகர்கோயில் இராக்காயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தமிழகமெங்கும் இருக்கின்ற திருக்கோயில்களில் இதுவரையில் 394 திருக்கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்திருக்கின்றது. எங்கு பார்த்தாலும் பக்தர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு பல்வேறு நாடுகளில் இருந்த 10 சிலைகள் மீட்கப்பட்டு, காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், வெளிநாட்டிலே இருக்கின்ற 62 சிலைகள் கண்டறியப்பட்டு, அவற்றை மீட்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
அதேபோல மீட்கப்பட்டுள்ள சிலைகளை அடையாளம் கண்டு அந்தந்த திருக்கோவிலுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் அதற்குண்டான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்துசமய அற நிலையத்துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
- நிலங்களை கையகப்படுத்துதல், தொடர்புடைய துறைகளின் அனுமதியை பெறுதல், விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சென்னை:
திருத்தணி, சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு மாற்றுப்பாதை அமைப்பது, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு பலமுறை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிலையில் இது தொடர்பாக நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் வருவாய்த்துறை, வனத்துறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் இந்துசமய அற நிலையத்துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் மாற்றுப்பாதைக்கான நிலங்களை கையகப்படுத்துதல், தொடர்புடைய துறைகளின் அனுமதியை பெறுதல், விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.
மேலும், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பெருந்திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும், ராஜகோபுர இணைப்புப் பாதை, புதிதாக கட்டப்படுகின்ற 5 திருமண மண்டபங்கள், பணியாளர் நிர்வாக பயிற்சி கட்டிடம், யானை மண்டபம், மலைப் பாதை நிழல் மண்டபங்களின் கட்டுமான பணிகள், தங்கும் விடுதிகளை புனரமைக்கும் பணிகள், புதிய வெள்ளித்தேர் உருவாக்கும் பணி, மலைப் பாதையில் மின் விளக்குகள் அமைக்கும் பணி, திருக்குளங்களை அழகுப்படுத்தும் பணி ஆகியவை குறித்தும் அமைச்சர் சேகர்பாபு விரிவான ஆய்வு மேற்கொண்டார்.
கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளீதரன், கூடுதல் ஆணையர்கள் திருமகள், ஹரிப்ரியா, தலைமைப் பொறியாளர் இசையரசன், திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், வேலூர் மண்டல இணை ஆணையர் லட்சுமணன், திருவள்ளூர் மாவட்ட வன அலுவலர் ராம் மோகன், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் ஹஸ்வத்பேகம், நெடுஞ் சாலைத்துறை கோட்டப் பொறியாளர் விஸ்வநாதன், உதவி கோட்டப் பொறியாளர் அன்பரசு, கோவில் துணை ஆணையர் விஜயா, வனச்சரக அலுவலர் அருள்நாதன் கலந்து கொண்டனர்.
- வாழ்த்தரங்கம் நிகழ்ச்சி அம்பத்தூர் கிழக்கு பகுதி செயலாளர் எம்.டி.ஆர்.நாகராஜ் தலைமையில் கொரட்டூரில் நடைபெற்றது.
- நடிகர், நடிகை கலந்து கொண்டு கருணாநிதியின் திரையுலக பணிகள் குறித்து பேசினர்.
அம்பத்தூர்:
கருணாநிதி நூற்றாண்டு நினைவு விழாவை முன்னிட்டு அம்பத்தூர் வடக்கு பகுதி தி. மு.க. சார்பில் "திருநாட்டின் அரும் தலைவர், "திசை மாற்றிய திரைக் கலைஞர்" என்ற தலைப்பில் வாழ்த்தரங்கம் நிகழ்ச்சி அம்பத்தூர் கிழக்கு பகுதி செயலாளர் எம்.டி.ஆர்.நாகராஜ் தலைமையில் கொரட்டூரில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சென்னை மாநகர மேயர் பிரியா, திரைப்பட இயக்குனர் மிஸ்கின், நடிகர் அஜய் ரத்தினம், நடிகை கோவை சரளா, பேராசிரியர் ஜெயவர்மன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கருணாநிதியின் திரையுலக பணிகள் குறித்து பேசினர்.
இதில் ஜோசப் சாமூவேல் எம். எல் ஏ., மண்டல குழு தலைவர் பி.கே.மூர்த்தி, தெற்கு பகுதி செயலாளர் டி.எஸ்.பி.ராஜகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்கு 20.11.2023 -க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
- விவரங்களுக்கு www.hrce.tn.gov.in என்ற துறையின் இணையதளத்தில் தெரிந்துக் கொண்டு பயன்பெறலாம்.
சென்னை:
அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
2022-2023-ம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை அறிவிப்பில், "ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோவிலில் இருந்து காசி விஸ்வநாதசுவாமி கோவிலுக்கு இவ்வாண்டில் 200 நபர்கள் ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லப்படுவர். இதற்கான செலவினத் தொகை ரூ.50 லட்சத்தை அரசே ஏற்கும்" என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, 200 நபர்கள் அரசு நிதியில் காசிக்கு ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, 2023-2024-ம் ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பில் "ஆன்மிகப் பயணமாக ராமேஸ்வரம், ராமநாத சுவாமி கோவிலில் இருந்து காசி விஸ்வநாதசுவாமி கோவிலுக்கு கடந்த ஆண்டு 200 நபர்கள் அழைத்துச் செல்லப்பட்டதைப் போல, பக்தர்கள் ஆர்வத்தை கருத்தில் கொண்டு, இவ்வாண்டு 300 நபர்கள் அழைத்துச் செல்லப்படுவர். இதற்கான செலவினத் தொகை ரூ.75 லட்சத்தை அரசு ஏற்கும்" என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இந்த ஆன்மிகப் பயணத்திற்கு அழைத்துச் செல்ல இந்து சமய அறநிலையத்துறையின் 20 இணை ஆணையர் மண்டலங்களில், மண்டலத்திற்கு 15 நபர்கள் வீதம் 300 நபர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர் இந்து மதத்தை சார்ந்தவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும், 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவங்களை சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்திலிருந்து நேரில் பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை உரிய இணைப்புகளுடன் மீள அதே மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்கு 20.11.2023 -க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
மண்டல இணை ஆணையர்கள் பரிந்துரைக்கும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மட்டுமே ஆன்மிகப் பயணத்திற்கு தேர்வு செய்யப்படுவர்.
மேலும் ஆன்மிக பயணம் குறித்த விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகம் அல்லது www.hrce.tn.gov.in என்ற துறையின் இணையதளத்தில் தெரிந்துக் கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நோய்தொற்று பரவாமல் தடுக்க மருத்துவ முகாம்கள் அமைத்தல் போன்ற பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகின்றன.
- மிச்சாங் புயல் கனமழையால் பாதிக்கப்பட்ட 4,000 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதி உதவிகளை வழங்கினார்.
சென்னை:
மிச்சாங் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் தமிழக அரசும், மாநகராட்சி நிர்வாகமும் மழைநீர் வெளியேற்றுதல், உணவு மற்றும் நிவாரண உதவிகள் வழங்குதல், நோய்தொற்று பரவாமல் தடுக்க மருத்துவ முகாம்கள் அமைத்தல் போன்ற பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று சென்னை, எழும்பூர் சட்ட மன்றத் தொகுதிக்குட்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி, 99-வது வார்டு, மெக் நிக்கல் சாலை, சர்வோதயா காப்பகத்தில் உள்ள பெண்களுக்கும், புதிய பூபதி நகர், ஓசங்குளம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு ஆகிய பகுதிகளில் வசிக்கும் 2,000 குடும்பங்களுக்கும், திருநங்கைகள் காப்பகத்தில் உள்ள திருநங்கைகளுக்கும் நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதி உதவிகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, சென்னை, ராஜா அண்ணாமலை மன்றத்தில் துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி, 59-வது வார்டை சேர்ந்த டி.என்பி.எஸ்.சி சாலை, நாராயணப்பா சாலை, என்.எஸ்.சி.போஸ் சாலை, தேவராஜ் முதலியார் தெரு, மெமோரியல் ஹால் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மிச்சாங் புயல் கனமழையால் பாதிக்கப்பட்ட 4,000 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதி உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகளில் மேயர் பிரியா ராஜன், தயாநிதி மாறன் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.ரவிச்சந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் இளம்சுருதி, ராஜேஸ்வரி ஸ்ரீதர், சுந்தர்ராஜன், பரிமளம் மற்றும் முரளி, ராஜசேகர், ஜெகதீஷ், பிரபாகரன், வேலு சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- நரேந்திர மோடி தனது கட்சியை நோட்டாவுக்கு இணையாக வாக்குகள் வாங்க வேண்டும் என்பதற்காக தான் மாதம் ஒரு முறையாவது தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறார்.
- அவருக்கு தான் தி.மு.க . ஆட்சியை பார்த்து புளியை கறைத்து கொண்டு உள்ளது.
அம்பத்தூர்:
மக்களின் முதல்வர் மனிதநேயர் திருநாள் என்னும் தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் நிகழ்ச்சி சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு முன்னிலையில் அம்பத்தூர் தெற்கு பகுதி செயலாளர் கவுன்சிலர் டி.எஸ்.பி.ராஜகோபால் தலைமையில் கொரட்டூரில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக நடிகர் சத்யராஜ், பாடலாசிரியர் பா.விஜய், மற்றும் தி.மு.க . வழக்கறிஞர் அருள்மொழி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறுகையில்,
நரேந்திர மோடி தனது கட்சியை நோட்டாவுக்கு இணையாக வாக்குகள் வாங்க வேண்டும் என்பதற்காக தான் மாதம் ஒரு முறையாவது தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறார். இந்தாண்டு மட்டும் 6 -வது முறையாக பிரதமர் தமிழகத்திற்கு வந்துள்ளார்.
யாருக்கு வயிற்றில் புளியை கறைத்து தன்னுடைய கட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ப தற்காக தமிழகத்திற்கு தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறாரோ அவருக்கு தான் தி.மு.க . ஆட்சியை பார்த்து புளியை கறைத்து கொண்டு உள்ளது. பேரிடர் காலங்களில் நிவாரண தொகை வழங்காமல் வஞ்சித்த பிரதமருக்கு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் தோல்வியை வழங்கி தக்க பாடம் புகட்டுவார்கள் என்றார். நிகழ்ச்சியில் ஜோசப் சாமுவேல் எம் .எல்.ஏ ., அம்பத்தூர் கிழக்கு பகுதி செயலாளர் எம்.டி.ஆர். நாகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- 100 வயதை கடந்த கலைஞரை கூட சில சமயங்களில் விமர்சிக்கிறார்கள்
- மு.க.ஸ்டாலினுக்கு உண்டான மரியாதையை ராமதாஸ், வயதில் மூத்தவர்களாக இருந்தாலும் தரவேண்டும்.
வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், முதல்வர் மு.க.ஸ்டாலினை ஒருமையில் பேசியது தி.மு.க.-வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் அமைச்சர் சேகர்பாபு பதிலளித்துள்ளார்.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற வகையில் மு.க.ஸ்டாலினுக்கு உண்டான மரியாதையை ராமதாஸ், வயதில் மூத்தவர்களாக இருந்தாலும் தரவேண்டும்.
தி.மு.க. எப்போதுமே சந்திக்காத ஏச்சுக்களும், பேச்சுக்களும் இல்லை. 100 வயதை கடந்த கலைஞரை கூட சில சமயங்களில் விமர்சிக்கிறார்கள். இப்படி விமர்சிப்பவர்களை சீர்தூக்கி பார்த்தால், தமிழக மக்களால் புறக்கணிக்கப்படுபவர்களாகவும், வெற்றி வாய்ப்பை இழப்பவர்களாகவும் இருப்பார்கள்.
முதல்வர் நெஞ்சிறத்துடனும், நேர்மையுடனும் இந்த ஆட்சியை நடத்தி வருகிறார். மக்களின் மனதில் நீக்கமற நிறைந்திருப்பதால், வஞ்சனை எண்ணத்தோடு ஏச்சுக்களையும், பேச்சுக்களையும் பற்றி முதல்வர் கவலைப்படுவது இல்லை. மக்களுடைய நலத்தையே குறிக்கோளாகக் கொண்டு அவர்களுடைய பயணத்தை தொடர்ந்து வருகிறார்.
- 42 கோடி ரூபாய் செலவில் முடிச்சூரில் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது.
- 120 பேருந்துகள் ஒரே நேரத்தில் நின்று செல்ல முடியும்.
அரசு பேருந்து நிலையம், ஆம்னி பேருந்து நிலையம் சென்னை கோயம்பேட்டில் இயங்கி வந்தன. அரசு பேருந்து நிலையம் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டது. ஆம்னி பேருந்துகளுக்கு பிரத்யேகமாக முடிச்சூரில் 42 கோடி ரூபாய் செலவில் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு நீண்ட நாட்கள் ஆகியும் முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. கிளாம்பாக்கத்திற்குள் வந்துதான் ஆம்னி பேருந்துகள் செல்கின்றன. கோயம்பேட்டில் இருந்து புறப்பட்ட செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஆயுதபூஜை மற்றும் தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் கிளாம்பாக்கத்தில் அரசு பேருந்து பயணிகள் மற்றும் ஆம்னி பேருந்து பயணிகள் குவிந்ததால் பேருந்து நிலையம் ஸ்தம்பித்தது. கடும் கூட்டல் நெரிசல் ஏற்பட்டது.
இந்த நிலையில் 42 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டள்ள முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் இம்மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இங்கு 120 பேருந்துகள் ஒரே நேரத்தில் நின்று செல்லும் வகையில் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் தங்குவதற்காக 2 Dormitory-கள், உணவகங்கள் என அனைத்து நவீன வசதிகளும் இடம் பெற்றுள்ளன. இது திறக்கப்பட்டபின் கிளாம்பாக்கத்தில் சற்று நெரிசல் குறையும் என அமைச்சர் சேகர்பாபு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
- கோவில் யானைகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
- பழனி கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஒரு மாதத்திற்குள் நியமிக்கபடுவார்கள்.
பழனி:
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியல்களில் பணம் மற்றும் தங்கம், வெள்ளி நகைகளை காணிக்கையாக செலுத்துகின்றனர். உண்டியல் காணிக்கைகள் கோவில் ஊழியர்களால் தரம் பிரித்து மாத மாதம் எண்ணப்படுகிறது. உண்டியலில் கிடைத்த நகைகளை பழனி கோவில் தலைமை அலுவலகத்தில் பாதுகாத்து வைத்துள்ளனர். இந்தநிலையில் பயன்படுத்த இயலாத தங்க நகைகளில் உள்ள கற்கள், அழுக்கு, அரக்கு மற்றும் பிற உலோகங்கள் நீக்கப்பட்டு மும்பையில் உள்ள மத்திய அரசு நிறுவனத்தின் உருக்காலையில் சுத்த தங்கமாக மாற்றம் செய்யவும், வங்கியில் தங்க பத்திரமாக முதலீடு செய்யவும் இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி பழனி முருகன் கோவிலுக்கு வரப்பெற்ற ரூ.136 கோடி மதிப்பிலான 192.984 கிலோ கிராம் தங்க நகைகளை சுத்த தங்கமாக மாற்றி தங்க முதலீட்டு பத்திரத்தில் முதலீடு செய்யும் வகையில் பாரத ஸ்டேட் வங்கியில் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் அர.சக்கரபாணி, பழனி எம்.எல்.ஏ. செந்தில்குமார், ஓய்வு பெற்ற நீதியரசர் மாலா ஆகியோர் பங்கேற்று வங்கி அதிகாரிகளிடம் நகைகளை வழங்கினர்.
அப்போது அமைச்சர் சேகர் பாபு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்தில் முதற்கட்டமாக 23 கோவில்களில் இருந்து காணிக்கை தங்கங்களை உருக்கி 443 கிலோ தங்கம் வங்கிகளில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.5 கோடியே 79 லட்சம் வட்டி கிடைக்கிறது. 2ம் கட்டமாக பழனி கோவிலில் 192.984 கிராம் தங்கமும், மாசாணியம்மன் கோவிலில் 28 கிலோ தங்கம், திருச்சி குணசீலன் கோவிலில் 12 கிலோ தங்கம் என 13 கோவில்களில் தங்க முதலீடு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது மும்பையில் உள்ள மத்திய அரசின் தங்க உருக்கு ஆலைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் 1000கிலோ தங்கம் முதலீடு செய்யப்பட்டு, ரூ.700 கோடி அளவிற்கு வைப்பு நிதியாக வைக்கப்படும். அதன்மூலம் ஆண்டுதோறும் ரூ.12 கோடி வட்டி வருமானம் பெறப்படும். 2007ம் ஆண்டு பழனி கோவிலில் 191 கிலோ தங்கம் முதலீடு செய்யப்பட்டு அதன்மூலம் ரூ.1 கோடியே 38 லட்சம் வருமானம் பெறப்படுகிறது.
அறங்காவலர் குழு தீர்மானத்தின் படி அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் வருகிற ஏப்ரல் மாதத்திற்குள் நிரப்பப்படும். கோவில் யானைகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. புதிய சட்டத்தின் படி யானை வாங்க இயலாது. புதிய யானையை வாங்கி பராமரிப்பு செலவையும் ஏற்கும் வகையில் புதிய யானையை பக்தர்கள் வாங்கிக் கொடுத்தால் அவை பெற்றுக்கொள்ளப்படும். பழனி கோவிலில் 2-வது ரோப்கார் மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் உள்ளதை போல நவீன முறையில் அமைக்கப்படும். பழனி கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஒரு மாதத்திற்குள் நியமிக்கபடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பழனி மலைக்கோவிலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற அறநிலையத் துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன், ஆணையர் ஸ்ரீதர், வங்கி அதிகாரிகள், கோவில் உயர் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.